ஞாயிறு, 25 டிசம்பர், 2011

காலகணக்கு

1 ."கல்பம்" என்ற ஆண்டுக் கணக்கை பயன்படுத்திய இந்திய தத்துவ அறிஞர்களுக்கு, "ஒளி ஆண்டு" கணக்கு எப்படி வியப்பூட்டும் விஷயம் அல்லவோ, அதே போல "சார்பு கோட்பாடு " கண்டு பிடிப்பும் அவர்க்களுக்குப் புதிதல்ல.- ஆலன் வாட்ஸ் - ( 1915 - 1973 ),பிரிட்டன் தத்துவ அறிஞர். 2 .பிரபஞ்சம் ஆழ்ந்த , எண்ணற்ற பிறப்பு , இறப்புக்களைக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரே மதம் இந்து மதம் தான்.நவீன பிரபஞ்ச கோட்பாடுகளுடன் ஒத்துப் போகும் கால அளவுகளைக் கொண்ட ஒரே மதமும் அது தான்.-- டாக்டர் கார்ல் ஷாகன்( 1934 -1996 ), வான் இயற்பியலாளர். 3 .இந்தப் பூமியின் வயது, உலகின் கால அட்டவணை ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான சிந்தனைகளை பழங்கால ரிஷிகள் உருவாக்கினர்.-ஆர்தர் ஹோம்ஸ் (1895 - 1965 ), புவியியலாளர், துர்ஹம் பலகலைக் கழக பேராசிரியர்.இங்கிலாந்து. (மேற்கண்ட 3 மேற்கோள்கள், தினமலர்,மதுரை பதிப்பில், இது இந்தியா என்னும் தலைப்பில் முறையே அக். 28 ,நவ 17 ,மற்றும் 22 ஆகிய தேதிகளில் வந்தவை). ///கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம் கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம் கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம் கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம்///

யுகங்களும், இதிஹாச காலங்களும்.

யுகங்களும், இதிஹாச காலங்களும்.jeyasree சிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகும். ராமனை எங்கோ வடக்கில் இருந்த ஆரியன் என்று சொன்னால், அதே அடையாளம் சோழனுக்கும் பொருந்தும் - என்றெல்லாம் பார்த்தோம். ஒரு நூறு வருடங்களுக்கு முன்வரை இவர்களுக்குள் வேறுபாட்டினை, நம் மக்கள் எண்ணியும் பார்த்ததில்லை. ஆனால் என்றைக்குத் தமது பூர்வீக படிப்பான, குரு குலப் படிப்பையும், குடும்பம் அல்லது குலம் சார்ந்த தொழில் படிப்பையும் ஒதுக்கி விட்டு, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பில் முழுவதும் ஒன்றினார்களோ, அன்றிலிருந்து பாரதம் முழுவதும் நிலவிய பாரம்பரிய சரித்திரத்தையும், மற்றும் பல துறை அறிவையும் மறந்து விட்டனர். அப்படி மறந்ததில் ஒன்றுதான் காலம் பற்றிய அறிவு. அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் நம் பாரத நாட்டு மக்கள்தான் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர். அவர்கள் பலவிதமாகப் பகுத்த விவரங்கள், ஆங்கிலக் கல்வி முறையாலும், திராவிடவாதிகள் பிரசாரத்தினாலும் நாளடைவில் மறைந்து போனது. மறக்கடிக்கப்பட்டும் விட்டது. இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது. அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், நம்முடைய பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும் தெரிந்து கொள்ள முடியும். முதலில் ராமன் பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்பதை எடுத்துக் கொள்வோம். லட்சக்கணக்கான வருடங்கள் அளவில் சதுர் மஹா யுகம் என்ற பகுப்பு வழங்கி வருகிறது. இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது. இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம். இந்த சுழற்சிக்காகும் காலத்தை பின்வருமாறு நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்: - 12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம். அதாவது 1 வருடம் = 12 மாதம் 43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம் ) 71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம் இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். ) ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே 1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள் . 14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள் இதையே இப்படியும் சொல்லலாம் :- 4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம் 1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள் 4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = நான்முகப் பிரம்ம தேவனின் ஒரு பகல் பொழுது. அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும் ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்ம தேவனின் ஒரு நாள் = 8,64,00,00,000 வருடங்கள் இந்த நாட்கள் 360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம். அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள். அதாவது, மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு. இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 -ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5112 -ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம். , கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது என்றும், அதைத் தன் கொம்பினால், வராஹமானது வெளியே கொண்டு வந்தது என்றும் பரிபாடல் செய்யுள்கள் சொல்கின்றன. (பரிபாடல் - 2 & 4 ) ஒரு சமயம் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.. அப்படி நிலப் பகுதி வெளி வந்த காலத்தில் இந்தக் கல்பம் ஆரம்பித்தது. அன்று முதல் இந்தக் கட்டுரை எழுதும் இந்நாள் வரையில், 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவதுதான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும் அடக்கிய கால அளவு. சதுர் மஹா யுக அளவில், விண்வெளி சார்ந்த விவரங்களைத் தருவார்கள். உதாரணமாக, கலி யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்டால், நவகிரகங்களும் மேஷ ராசியில் பூஜ்யம் பாகையில் ஒன்றாகக் கூடினால் அன்று கலி யுகம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். இந்தக் கலி யுகத்தின் கால அளவு, 4,32,000 வருடங்கள். இது அடிப்படை அளவு. இதைப் போன்ற இரண்டு மடங்கு கால அளவு, அதாவது 8,64,000 வருடங்கள் உள்ளது துவாபர யுகம். கலி யுக அளவைப் போன்ற மூன்று மடங்கு கால அளவு கொண்டது த்ரேதா யுகம் (12,96,000 வருடங்கள்) கலி யுக அளவைப் போன்ற நான்கு மடங்கு கால அளவு கொண்டது கிருத யுகம் (17,28,000 வருடங்கள்) இந்த காலக் கணக்கின் அடிப்படையில், ராமன் த்ரேதா யுகத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று இன்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் ராமன் வாழ்ந்தான் என்பது கட்டுக் கதை என்றும் முடிவு கட்டுகின்றனர். பிரபஞ்ச அளவிலான கணக்கை, மக்கள் வாழ்க்கையுடன் முடிச்சு போடவே இந்தக் குழப்பம வருகிறது. ஆனால் இந்தப் பிரபஞ்சக் கணக்கு, சூரியனும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களும் அவ்வப்பொழுது ஒவ்வொருவிதமான சேர்க்கையில் வருவதன் அடிப்படையில் எழுந்தது. கலி யுகம் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட சேர்க்கை இருக்கும் என்று பார்த்தோம், அது போல ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கும் போதும், நம் கலக்சீக்கு அப்பால் உள்ள மண்டலத்தின் அடிப்படையிலும் சேர்க்கை நடப்பதைக் கொண்டு சொல்லியுள்ளார்கள். உதாரணமாக, கிருத யுகம் ஆரம்பிக்கும் போது, இந்தச் சேர்க்கை மேஷ ராசியில் நடப்பதில்லை. கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்துக்கு நேராக அமைகிறது. யுகம் என்று, பொது வார்த்தையாகச் சொல்வதனால், குழப்பம் வந்து விட்டது எனலாம். எனவே யுகம் என்றால் என்ன என்று பார்ப்போம். 'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள். யோகா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சொல்லும் யுக்மா என்பதிலிருந்துதான் வந்தது. யோகாசனம் செய்யும் போது, உடலும், உள்ளமும் ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டும். அதனால்தான் சாதாரண உடற்பயிற்சியிலிருந்து யோகாசனம் வேறுபடுகிறது. இப்படி உடல், உள்ளச் சேர்க்கை இருப்பதால் அது யோகா என்றாயிற்று. இப்படிச் சேர்வதைப் பலவிதமாகக் காணலாம். வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள். இதற்கு ஆரம்பம் மேஷ ராசியின் பூஜ்யம் பாகை என்று எடுத்துக் கொண்டார்கள். அந்தப் புள்ளியில் சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர். இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு. இதைப் பஞ்ச வருஷாத்மிக யுகம் என்றனர். இந்தக் கால அடிப்படையில்தான் வேத யாகங்கள், ஹோமங்கள் போன்றவற்றைச் செய்தனர். இந்த அடிப்படைக் கால அளவீட்டினை படிப்படியாக ஒவ்வொரு நிலைக்கும் கொண்டு போய, நாம் மேலே பார்த்தோமே அப்படிப் பிரபஞ்ச அளவிலான யுகங்கள், காலம் என்று பகுத்தனர். அப்படி ஐந்து வருடங்கள் கொண்ட யுகங்கள் 12 - ஐக் கொண்டது வியாழன் அல்லது ப்ரஹச்பதி என்று சொல்லப்படும் குருவின் காலச் சுற்று. அதன் மொத்த அளவு 5 X 12 = 60 வருடங்கள். பிரபவ, விபவ என்று ஆரம்பிக்கும் வருடங்களின் பெயர்கள் இருக்கின்றனவே, அவை குருவின் அறுபது வருட காலத்திற்குத்தான் முதலில் இருந்தது. ஆனால் அது பிரபவ என்னும் பெயரில் ஆரம்பிக்கவில்லை. 'விஜய' என்னும் வருடத்தின் பெயரில் ஆரம்பித்தது. இதைப் பற்றிய விவரங்களை ஜோதிட நூல்களில் காணலாம். மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான் இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம், கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு, சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு. குருவின் சுற்றுக்கான வருடப் பெயர்கள், மனித வாழ்கையின் கால அளவுக்கும் பொருந்தும். நாம் சூரியனது சுழற்சியின் அடிப்படையிலான வருடக் கணக்கைக் கொண்டுள்ளதால் அந்தப் பெயர்கள் சூரிய வருடத்துக்கும் வந்தன. இதில் ஆரியத் தனம் எதுவும் கிடையாது. என்றைக்கு ஆரம்பித்தது என்று தெரியாமல், என்றென்றும், பாரதம் முழுவதும், தமிழ் நாடு உட்பட- இந்தக் கால அளவீடு நடை முறையில் இருந்திருக்கிறது. இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன், மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில் ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60 + 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள் 120 வருடங்களுக்கு வருகின்றன. 120 வருட அடிப்படையில் அடுத்த அளவு காலக் கணக்கு வருகிறது. 120 X 120 = 14,400 வருடங்கள் ஒரு ஏறு முகம். இந்தக் காலத்தை மார்கண்டேய முனிவர் நான்கு யுகங்களாகப் பிரித்துள்ளார். இதுவே மானுட யுகத்திற்கு அடிப்படை. மகாபாரதத்தில் (3-187) மார்கண்டேய முனிவர் பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் யுகக் கணக்கு பின் வருமாறு. அவரும், கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களைப் பற்றிச் சொல்கிறார். கிருத யுகம் = 4,000 வருடங்கள். இதில் சந்தி வருடங்கள் முன்னும் பின்னும் வரும். கிருத யுகத்துக்கு சந்தி = 400 +400 வருடங்கள். த்ரேதா யுகம் = 3,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 300 + 300 வருடங்கள். துவாபர யுகம் = 2,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 200 + 200 வருடங்கள். கலி யுகம் = 1,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 100 + 100 வருடங்கள். இவற்றைக் கூட்டினால் 400 + 4000 + 400 = 4,800 300 + 3000 + 300 = 3,600 200 + 2000 + 200 = 2,400 100 + 1000 + 100 = 1,200 = 12,000 + 10 % சந்தி முன்னும் , பின்னும் = 1,200 + 1,200 = 2,400 மொத்தம் = 12,000 + 2,400 = 14,400 வருடங்கள். இதுவே மார்கண்டேயர் தரும் மானுட அளவிலான சதுர் யுகக் கணக்கு. முன்னம் நாம் பார்த்த 120 X 120 = 14,400 வருடங்கள் இதுவே. இது ஏறு முகம். இதன் இறங்கு முகம் இன்னுமொரு 14,400 வருடங்கள் மொத்தம் 14,400 + 14,400 = 28,800 இது ஒரு சுற்று. மனித குலத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் காட்டும் ஒரு சுற்று இது. 28,800 வருடங்கள் கொண்ட இந்த சுற்று, முன்பு பார்த்தோமே, விண்வெளி அளாவிய சதுர் யுகம் - அதன் கலி யுகத்தில் 15 முறை வரும். (15 X 28,800 = 4,32,000 = கலி யுக அளவு ) சதுர் மஹா யுகத்தில் 150 முறை வரும். (150 X 28,800 = 43,20,000 = சதுர் மஹா யுக அளவு) ஒரு கல்பத்தில் 150,000 முறை வரும். ( 150,000 X 28,800 = 432,00,00,000 = ஒரு கல்பத்தின் அதாவது பிரம்மனின் ஒரு பகல் பொழுது அளவு) இந்த ஒரு சுற்று சூரியன் வான் மண்டலத்தை precession என்று சொல்லபப்டும் பின்னோக்கு வழியில் செல்ல எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஆகும். இது என்ன என்று விளக்குவோம். சூரியன் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தைச் சுற்றி வருகிறது. 20 சுற்றில் ஒரு கல்பம் முடிகிறது என்று பார்த்தோம். இப்படிச் சுற்றும்போது, அதன் பின் புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலம் ஒரே மாதிரி இருக்க முடியாது. சூரியனும் அதனுடன் நாம் இருக்கும் சூரிய மண்டலமும் நகர, நகர, அதன் பின் புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களின் ஊடே இடம் பெயர்வது தெரியும். இன்றைக்கு அறிவியல் கணக்கிட்டுள்ளபடி இந்த நகர்வு ஓர் இடப் பெயர்வு நிகழ ஒரு டிகிரிக்கு 72 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரீதியில் 360 சுற்றளவுள்ள வான் மண்டலத்தைக் கடக்க ஏறத்தாழ 26,000 வருடங்கள் ஆகும். இந்தக் கால அளவு நம் பாரதீய சித்தாந்தப்படி முன் சொன்ன 28,800 வருடங்கள். இந்தக் கால அளவு அடிப்படை அளவு என்று பார்த்தோம். அறிவியலுக்கும் சித்தாந்தத்துக்கும் வேறுபாடு இருப்பதற்குக் காரணம், சூரியனின் இந்த வேகம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருக்காது, இருந்ததில்லை. இதைப் பற்றிய விவரங்கள், நிறைய இருக்கின்றன. அவற்றை இங்கே விளக்க இடமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இந்த சுழற்சியின் கால அளவே. இந்தச் சுழற்சியை வேறு ஒரு பெயராலும் அறிகிறோம். அது, சப்த ரிஷி மண்டலச் சுழற்சி அல்லது சப்த ரிஷி யுகம் என்பதே. சப்த ரிஷி மண்டலம் என்பது வானின் வட பகுதியில் தென்படுவது. அதன் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டு துருவ நட்சத்திரத்தை அறிகிறோம். நமது பூமியின் அச்சானது துருவ நட்சத்திரத்தை நோக்கியே சுழல்கிறது. சூரியனுடன் நாமும் சேர்ந்து வான மண்டலத்தின் பின்னணியில் நகர்வதை, துருவ நட்சத்திரத்தை நோக்கியுள்ள நம் அச்சு காட்டும் இடத்தைப் பொறுத்தே அறியலாம். இதையே வராஹமிஹிரர் வேறு விதமாகச் சொன்னார். (பிருஹத் சம்ஹிதா - அத்தியாயம் 12 ). மகாபாரதப் போர் நடந்து முடிந்து யுதிஷ்டிரர் அரசரான போது, சப்த ரிஷிகள் மகம் நட்சத்திரத்தில் இருந்தனர். அந்த அமைப்பு இப்படி இருந்திருக்கும். தற்சமயம் சப்த ரிஷிகள் சுவாதி நட்சத்திரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டுவித அமைப்புகளையும் மேல் காணும் படத்தில் காணலாம். இந்த வேறுபாடு, நட்சத்திரங்களின் பின்னணியில், நாம் நகர்வதால் வருகிறது. மகம் மமுதல் சுவாதி வரை உள்ள தூரம் 80 டிகிரி. ஒரு டிகிரிக்கு இன்றைய அறிவியல் கணக்கின் படி 72 வருடங்கள் ஆகின்றன என்று எடுத்துக் கொண்டால், 80 டிகிரிகள் கடக்க 5760 வருடங்கள் ஆகின்றன. அதாவது மஹா பாரத யுத்தம் முடிந்து 5760 வருடங்கள் ஆகி உள்ளன. இதுதான் சபதரிஷி யுகம் செல்லும் வழக்கு. இதை காஷ்மீரப் பகுதிகளில் 'லௌகீக யுகம்' என்று வழங்கி வந்தார்கள். காஷ்மீரப் புத்தகமான 'ராஜ தரங்கிணி'யில் இந்த லௌகீக யுகத்தின் அடிப்படையில்தான் வருடக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் ஆட்சி வந்தது முதலே, இந்த வழக்குகள் அழிந்து விட்டன. அதனால் இந்த யுகத்தின் விவரங்கள் மறைந்து விட்டன. இந்த யுகக் கணக்கு எப்படி இருந்தது என்று சரிவரத் தெரிந்தவர்கள் யாருமே இன்று இல்லை. ராஜ தரங்கிணி சொல்லும் லௌகீக யுகம் யுதிஷ்டிரன் வானுலகம் சென்றவுடன். ஆரம்பித்தது . அந்த வருடம் கி. மு. 3076 ஆகும். அந்த வருடம் லௌகீக யுகம் ஆரம்பித்தது என்று ராஜ தரங்கிணி கூறுகிறது. அதைத் தொடர்ந்து கி.பி. 11,324 வரை இறங்கு முகமாக இருக்கக் கூடும். அதற்கு முந்தின ஏறு முகம், கி-மு. 17,476 -இல் ஆரம்பித்திருக்க வேண்டும். அதுவே நாம் இப்பொழுது இருக்கும் மனித குலத்தின், அல்லது லௌகீக யுகத்தின் ஆரம்பம். இந்தக் காலக்கட்டத்தை 4:3:2:1 என்ற விகிதத்தில் கிருத யுக, திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று பிரிக்கலாம். அவை முறையே, கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம் கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம் கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம் கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம் கிருஷ்ணன் உலகை விட்டு நீத்த பிறகு வந்ததாகச் சொல்லப்படும் கலி யுகம், பிரபஞ்ச அளாவிய சதுர் மஹா யுகத்தில் உள்ள கலி யுகம். அது ஆரம்பித்து 5,112 ஆண்டுகள் ஆகின்றன. சப்த ரிஷி யுகத்தின்கண் வரும் த்ரேதா யுகம் ராமன் பிறந்த யுகமாக இருக்கக்கூடும். முன் பகுதியில் புஷ்கர் பட்நாகர் என்பவர் தந்துள்ள ராமனது கால நிலவரம், இந்தத் த்ரேதா யுகத்திற்கு இரண்டாயிரம் வருடங்கள் பின்னால் வருகிறது. ஆனால் வார்தக் என்னும் மற்றொரு ஆராய்ச்சியாளர் விண்வெளி மென்பொருளில் ராமனது பிறந்தநாளைக் கண்டுபிடுத்துள்ளார் அவர் கொடுத்துள்ள ராமனது காலம் இங்கு சொல்லப்பட்டுள்ள த்ரேதா யுகத்தில் வருகிறது. இந்த விவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில கருத்துக்கள்:- • யுகம் என்று சொல்லப்படுவதில் பல விதங்கள் உள்ளன. அவற்றுள் லௌகீக யுகம் எனப்படும் சப்த ரிஷி யுகம் மனித வர்க்கம் வாழ்க்கையை ஒட்டி அமைந்துள்ளது. அதன் அடிப்படையில், சோழர் சொல்லும் பரம்பரையும் , ராமன் சொல்லும் பரம்பரையும், பல ஆயிரம் வருடங்களுக்கும் மேலானவை. • லட்சக்கணக்கான ஆண்டுகளில் வரும் மஹா யுகம் விண்வெளியில் சூரியன் செல்லும் சுழற்சி சம்பந்தப்பட்டவை. • சமீபத்திய லௌகீக யுகம் கி.மு. 17,476 ஆண்டு ஆரம்பமாகியது. அது முதல் கொண்டு வரும் மனித நாகரீகத்தின் அம்சங்களே ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். • இந்த ஆரம்பம் வேறொரு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று அறிவியலார் ஆராய்ச்சியின்படி ஏறத்தாழ அந்த காலக்கட்டத்தில்தான், பனி யுகம் முடிந்து, இன்றைய மனித நாகரீகம் வளர ஆரம்பித்தது. ரிக் வேத, இராமாயண, மகாபாரத , புராணக் கதைகள் ஆரம்பமானது இதற்குப் பிறகுதான். • கிருத யுகம் என்று மேல சொலல்ப்பட்ட காலக்கட்டத்தில், மக்கள் சாதுக்களாக, ஆன்மீக வளர்ச்சி அடைந்தவர்களாய் இருந்திருக்கின்றனர். மகாபாரதத்தில் அனுமன், பீமனைச் சந்திக்கும் சம்பவம் ஒன்று வருகிறது. (மஹா பாரதம் - 3- 148) . அதில் அனுமன் யுகங்களை விவரிக்கிறார். அவர் சொல்லும் கிருத யுகத்தில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என்ற பிரிவுகள் இல்லை. பணமோ, பொருளோ கொடுத்து சாமான்களை விற்பதும், வாங்குவதும் இல்லை. இயற்கையில் கிடைத்ததைக் கொண்டு மக்கள் திருப்தியுடன் இருந்தனர். எல்லா மக்களும், ஆன்மீகத்தில் நிலை பெற்றிருந்தனர். ரிக் வேதம் அப்பொழுது எழுந்தது. அதன் பிறகு வந்த த்ரேதா யுகத்தில் இந்த மக்கள் பிரிவுகள் வந்தன. அப்போழுது சாம, யஜூர் வேதங்கள் வந்தன. அதற்குப் பிறகு வந்த துவாபர யுகத்தில் வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன என்கிறார். • ஐரோப்பியப் பகுதிகளில் பனி உருகியதால், மக்கள் ஆங்காங்கே இடம் பெயர்ந்துள்ளனர். உதாரணமாக, இங்கிலாந்தும் பிரான்சும் முன்னாளில் நிலத் தொடர்பு கொண்டிருந்தது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கி-மு- 6,500 வாக்கில் கடல் எழும்பி வரவே அந்த நிலத் தொடர்பு வழி கடலுக்குள் மறைந்து விட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. • பனி யுகம் முடிந்ததால், உலகெங்கும், பனி உருகி, நிலப் பகுதிகள் தெரிய ஆரமபித்தன. பனி உருகியதால், கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. அதனால் கடலை ஒட்டிய நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகள் இந்தியாவைப் பொறுத்த மட்டில், குஜராத், தென்னிந்தியா ஆகிய பகுதிகள் ஆகும். இது அறிவியல் செய்தி. • அதில் முக்கிய இடம் பூம்புகார். • மற்ற பகுதிகள் குமரிக் கண்டம் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. • ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பே ராமாயண, மகாபாரதம் நடந்து விட்டது என்பது வராஹ மிஹிரர் கொடுக்கும் சப்த ரிஷி அமைப்பின் மூலம் தெரிகிறது. • சிந்து சமவெளி நாகரீகம் ஆரம்பித்தது என்று மாக்ஸ் முல்லர் அவர்களால் சொல்லப்பட்டது கி-மு- 3000 ஆண்டுகளில். அந்தக் காலக் கட்டத்தில் மகாபாரதப்போர் முடிந்து விட்டிருக்கிறது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் என்பது மகாபாரதக் காலத்திற்குப் பிற் பட்டது அல்லது அப்பொழுது இருந்த மக்களின் தொடர்ச்சியே என்றும் தெரிகிறது.

குருக்கத்தி

குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின் 5-9 அடிகள் ..................................................மதனின் துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தியென பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என வண்டுசூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனிமட மகளே! என அருமையான காட்சியொன்றை விவரித்துச் செல்லும். மேலே மதன் (= மயக்கம்) என்பதைப் பார்த்தோம் இல்லையா? முதிர்ந்த பச்சை இலைப் பின்புலத்தில், ”மயக்கும் துய்த்தலை இதழோடு (=பஞ்சு போன்ற தூய வெள்ளை நிறம்) காட்சியளிக்கும் குருக்கத்தியையும், பித்திகைப் பூவையும் (=பிச்சிப்பூ, சிறு செண்பகம்) கலந்து வண்டுகள் சூழும் வட்டிலில் வைத்துக் கொண்டு “பூ வாங்கலையோ, பூவு?” என்று கூவிப் போகிறாளே, அந்த உழத்தி!” என்று தலைவி சொல்கிறாளாம். ”துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தி” - என்ன அருமையான தொடர்! இன்னொரு செய்தியையும் சங்க இலக்கியம் சொல்கிறது. எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்காவாம். பரிபாடல் 15 ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம். இனி நான்மணிக் கடிகையின் 38 ஆம் பாட்டு, மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது. இதே செய்தியைக் கார்நாற்பது 27 ஆம் பாடல், . முருகியம் போல் வானம் முழங்கி யிரங்கக் குருகிலை பூத்தன கானம் - பிரிவு எண்ணி உள்ளாது அகன்றார் என்று ஊடியாம் பாராட்டப் புள்ளியுள் பாயும் பசப்பு. என்று சொல்லி “குறிஞ்சிப்பறை போல வானம்முழங்க, இடியிடிக்க, மழை கொட்ட, காட்டில் இளஞ்சிவப்புக் குருகிலை பூத்ததை” அறிவிக்கும். திணைமொழி ஐம்பதின் 30 ஆம் பாடலோ, அருவி அதிரக் குருகிலை பூப்பத் தெரியா இனநிறை தீம்பால் பிலிற்ற வரிவளைத் தோளி வருவார் நமர்கொல் பெரிய மலந்தது இக் கார். என்று சொல்லி, ”அருவி அதிர, இளஞ்சிவப்புக் குருகிலை பூத்துப் போகும்” என்று உரைத்துக் கார்கால மலர்ச்சியை வியக்கும். இதே திணைமொழி ஐம்பதின் 21 ஆம் பாட்டோ, அஞ்சனக் காயா மலரக் குருகிலை ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத் தண்கமழ் கோடல் துடுப்பீனக் காதலர் வந்தார் திகழ்கநின் தோள். என்று சொல்லி, காயாம்பூ மலர்வதையும், ஒளிரும் பெண்களின் முறுவலைப் போல இளஞ்சிவப்புப் குருகிலை பூப்பதையும், குளிர்ந்த, நறுமணம் பொருந்திய வெண் காந்தள் பூப்பதையும் உரைத்து, “உன் காதலர் வந்து விட்டார், இனி உன் தோள்கள் திகழட்டும்” என்று தோழியின் கூற்றைப் பதிவு செய்யும். இதனினுஞ் சிறப்பான பதிவு, தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-379 ஆம் வரிகளில் வரும். குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப் ”குட்டையான அடிமரம் கொண்ட கரிய காஞ்சி மரத்தைச் சுற்றி, நெடிய குருக்கத்திக் கொடி முதிர்ந்த பச்சை இலைகளோடு படர்ந்திருக்கிறது, முன்னே சொன்னது போல் பூவின் வெளிப்புறத்தில் வரிவரியாய் பூஞ்சை நிறம் படர்ந்திருக்கும் பூக்கள் உதிர்ந்து, கீழே காஞ்சியின் நிழல் படியும் ஆற்றுமணல் நீர்முகத்தில், கிடக்கின்றன. இந்தக் காட்சி எப்படி இருக்கிறதாம். இடியாப்ப வணிகர் பாகொடு பிடித்த இடியாப்ப வட்டம் பாலில் மிதக்கக் காட்சியளிக்கும் கரிய அகலைப் போன்று இருக்கிறதாம். கூடவே திருவெஃகாவின் கிடந்த திருக்கோலத் திருமாலையும் இங்கு நினைவு கொள்ளுவார். இந்த விவரிப்போடு குருக்கத்தி பற்றிய எல்லா இணையதளங்கள், பொத்தகச் செய்திகள் ஆகியவை ஆர்வத்தோடு குறிப்பிடும் காளிதாசனின் சாகுந்தல விவரிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் மாமரத்தின் மேல் சுற்றியிருக்கும் குருக்கத்தி, காதலனின் மேல் தழுவியிருக்கும் காதலி போல் தோற்றமளிக்கிறதாம். குருக்கத்திக் கொடியை மாமரத்திற்கு மணஞ் செய்வதாய் முனிபுங்கவர்கள் உருவகஞ் செய்வார்களாம். துசியந்தனைச் சகுந்தலை சந்தித்த பின்னால், ”என் மகளே. நான் தேடிக் கொண்டிருந்த ஆண்மகனை நீ காதலனாகப் பெற்றாய், குருக்கத்திக் கொடிக்குச் சாய்ந்து கொள்ள, எழிலான மாமரத்தைத் தோளாக ஆக்கி மணஞ்செய்து கொடுப்பேன்” என்று கண்வ முனிவர் சொன்னாராம். [குருக்கத்தி என்று சொன்னவுடனே, சகுந்தலையும், காளிதாசனும் பற்றி இடைவிடாது ஒருசிலர் சொல்லுவதை நான் குறையென்றும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு 200/300 ஆண்டுகளுக்கு முந்திய பெரும்பாணாற்றுப் படையும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரும் திருவெஃகா விவரிப்பும் எத்தனை பேருக்குத் தெரிகிறது, சொல்லுங்கள்? குருக்கத்திக் கொடி, மாமரத்தை மட்டும் சுற்றிக் கொள்ளாது. காஞ்சி மரத்தையும் சுற்றிக் கொள்ளும். ஏன், அருகில் வேறு மரங்கள் இருந்தாலும் அவற்றையும் சுற்றத்தான் செய்யும். ஆனாலும் பாருங்கள் தொன்மம், காளிதாசன், வடமொழி ...நாவலந்தீவில் இப்படிப் பாடுவதே பழக்கமாயிற்று. . இனிக் குருகின் மற்ற தமிழ்ப்பெயர்களைப் பார்ப்போம். குருகு என்னும் பெயரைப் பெண்ணாக்கிக் குருக்கத்தி என்று சொல்வது சொல்வளர்ச்சியின் அடுத்தநிலை. ”குடந்தைக் கிடந்த கோவே! குருக்கத்திப்பூச் சூட்ட வாராய்” என்று சாரங்கபாணியைப் பெரியாழ்வார் (நாலா. 2.7.7) அழைப்பார். ”குருங்கு, குருந்து, குருந்தை” என்ற சொற்கள் குருகின் திரிவு. [குருந்தம் என்னும் வேறொரு மரம் மாணிக்கவாசகரோடு திருப்பெருந்துறைத் தொடர்பு கொண்டது; அதனை இதனோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.] குருங்கொடி, குருதக் கொடி என்பவை குருகில் கிளைத்த வேறு சொற்கள். ”குரிஞ்சான், சிறு குரிஞ்சான்” ஆகியவை இன்னும் மேலெழும் திரிவுகள். ”குருகுக் கோதை” என்பது குருக்கத்தியைப் பெண்ணாக்கும் இன்னொரு சொல் உத்தி, கோதை மாதவி என்பது இரட்டை வழக்கு. மாதவி பற்றி ஏற்கனெவே சொல்லிவிட்டேன். குருக்கத்திப்பூ தன் அழகால், மணத்தால், நிறத்தால், சுவையால் மயங்க வைப்பது. பூ ஊறிய நீர் நொதித்த பின்னால் மது மயக்கம் ஊட்டியதா என்பதைப் புதல்வேதியல் (Phytochemistry) மூலம் தான் சொல்லமுடியும். ஏதேனும் ஆய்வுகள் இருந்தால் தெரியப் படுத்துங்கள். பழம் அறிவைப் புதுப்பிக்கும் தேவை நெடுகவே உண்டு. குருக்கத்தி மார்ச்சு மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ருவரியிலேயே வெள்ளெனப் பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள். [முல்> மல்> மல்லி> மல்லிகை = வெள்ளை நிறப்பூ. முல்லை என்னும் விதப்புப் பெயரையும், மல்லிகை என்னும் பொதுப்பெயரையும் குழப்பிக் கொண்டு ஒரு சிலர் சொல்லுவது உண்டு. முல்லையும் மல்லிகையும் மாறி மாறிப் பகரியாய் நாட்டு வழக்கில் உண்டு என்றாலும், மல்லிகை என்னும் பொது மலரினத்தில் முல்லை என்பது ஒரு விதப்பான வகை என்பதை மறக்கக் கூடாது. முல்லையின் மொட்டு, முல்லிக் கொண்டு (முனைந்து கொண்டு) இருப்பதால் அது முல்லை ஆயிற்று. அதை ஊசிமல்லிகை என்று நாட்டுப் புறங்களிற் சொல்லுவதும் இதையே உணர்த்தும். முல்லை என்னும் சொல்லில் வெள்ளை என்னும் பொருள் கிடையாது.] வசந்த கால மல்லிகை என்பது குருக்கத்தியைப் போல முதற் பெயரல்ல. இன்னொன்றை ஒப்பிட்டு எழும் இரண்டாம் வழிப் பெயர். வசந்த கால மல்லிகையைச் சுருக்கி வசந்தி, பின் நீட்டி வாசந்தி என்ற பெயர்களும் குருக்கத்தியையே குறிக்கின்றன. புண்டரம், புண்டரவம் என்பவை வெள்நீற்று நிறத்தை ஒட்டி எழுந்த சொற்கள். புடம்> புண்டம்> புண்டரம்> புண்டரவம் என்று விரியும். புடம்போடுதல் என்பது எரித்து நீறாக்குதலைக் குறிக்கும். வாலாகினி என்பது வால் என்னும் வெள்ளை நிறத்தில் எழுந்த சொல். வெள்நலங் கொடி என்பதன் பொருள் வெள்ளிடை மலை. நான் சொல்ல வேண்டியதில்லை. எருக்கம் பூவும் வெள்ளை நிறந்தான், எருக்கம் பூவிற்கு ஒப்பிட்டெழும் எருக்கத்தி என்ற சொல்லும் குருக்கத்தியைக் குறிக்கும். அடுத்த சொல் சோகை நீக்கி. இதைப் பார்த்துத்தான், ”குருக்கத்திப்பூவில் ஏதோ ஒரு போதைப் பொருள் இருக்கக் கூடுமோ?” என்று தோன்றுகிறது. புதல்வேதியல் (Phytochemistry) தான் இதற்கு விடை சொல்லவேண்டும். குருக்கத்திப்பூவில் ஈர்க்கும் வேதிகள் (chemicals) இருப்பதால் தான் காமுகம், காமகாந்தம் என்ற சொற்கள் ஏற்பட்டனவா என்பதும் ஆய்விற்கு உரியது. அடுத்த வரிசைச் சொற்கள், குருக்கத்தி இணர்களாய் (=கொத்துக்களாய்) இருப்பதை வைத்து எழுந்த சொற்களாகும். கொத்து>கத்து>கத்தி>கத்திகை, அதித்த கத்திகை அதிகத்தியாகும். மூக்கொலி ஏற்பட்டு அதிகாந்தியும் ஆகும். சுருங்கிப் போய் அதிகம் என்றும் அமையும். இனி மிகுந்த மயக்கத்தைக் கொடுப்பதால் அதிமத்தம், அதிகமாலி என்ற சொற்கள் எழும். மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் குருக்கத்திக்கு முத்தகம், அதிமுத்தம், அதிமுத்தகம் என்ற சொற்கள் ஏற்பட்டன. இன்னும் ”அயந்தனைச் சிந்தூரமாக்கி, கரிப்பாக்குக் கொடி, நாகரி, நாகரு, பன்றிமொத்தை” என்ற சொற்களும் சித்த மருத்துவ அகரமுதலிகளில் இருக்கின்றன. பெயர்க் கரணியம் நான் அறிந்தேனில்லை. குருக்கத்தியின் பெயர்களை இதுவரை விரிவாகப் பார்த்தோம். ”மாதவி என்ற பெயர் குருக்கத்தியையே குறிக்கிறது என்று எப்படி அறுதியிட்டுக் கூறுமுடிகிறது?” எனில் நாம் சிலம்பில் புறஞ்சேரியிறுத்த காதைக்குப் போகவேண்டும். மதுரையின் புறத்திருந்த பார்ப்பனச்சேரிக்கு வந்த சேர்ந்தபின், கண்ணகியையும், கவுந்தியையும் முள்வேலி சூழ்ந்த காவலில் இருக்கச் செய்து, ஒரு நீண்ட பாதையில் போய் அங்கிருந்த நீர்நிலையில் கோவலன் காலைக்கடன் கழிக்க முற்படுகிறான். இதே நீர்நிலைக்கு, ”வருந்துயர் நீக்கு” எனச் சொல்லி மாதவி ஓலை கொடுத்து அனுப்பிய கோசிகனும் வந்து சேருகிறான். கோசிகன் கோவலனை ஏற்கனவே பார்த்திருக்க வேண்டும். ஆனால் கோவலன் கோசிகனை அறியான் போலும். மனத் துயரம், புகாரில் இருந்து மதுரைக்கு நடந்த உடலயர்ச்சி, ஊதுலைத் துருத்தி போன்ற பெருமூச்சு, அழுக்கான மெய், உடை என எல்லாம் சேர்ந்து, கோவலனின் தோற்றுருவை மாற்றிய கரணியத்தால், கோசிகனால் கோவலனைச் சட்டென்று அடையாளம் காணமுடியவில்லை. உறுதிசெய்து கொள்ளும் முகத்தான், கோவலன் கேட்குமாறு ஓர் உரையாடலைத் தான் சாய்ந்திருக்கும் குருக்கத்திக் கொடியோடு கோசிகன் எழுப்புகிறான். ”கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று இவ் அருந்திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே வருந்தினை போலுநீ மாதவி!” என்று ஓர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக் கோசிக மாமணி கூறக் கேட்டே (48-53) என்று புறஞ்சேரியிறுத்த காதையில் வரிகள் வரும். ”குருக்கத்திக் கொடியே! கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாதவி போன்று, இந்தக் கொடிய வேனிலில் மலர் களைந்து நீயும் வருந்தினாயோ?” என்று பாசிலைக் குருக்கத்தியின் பந்தரில் சாய்ந்து கோசிக மாமணி கூறக் கேட்டான்.” இங்கே “பாசிலைக் குருகு” என்ற சொல்லாட்சி “பைங்குருக்கத்தி” என்ற சங்க இலக்கியச் சொல்லாட்சியை அப்படியே ஒத்திருப்பதைப் பார்க்கலாம். மாதவி என்ற பரத்தைப் பெயரையும், குருக்கத்தி என்ற கொடிப்பெயரையும் அப்படியே இங்கு பொருத்திச் சொன்ன பிறகும் நண்பர் நா. கணேசன் மாதவிக்கு எப்படி முல்லையைப் பின்புலமாய்ச் சொல்லுகிறார் என்று புரியவில்லை [அதுவும் கிட்டத்தட்ட 8, 9 ஆண்டுகளாக அவர் இந்த ஒப்புமையைப் பல்வேறு குழுமங்களில் சொல்லுகிறார்.] கோவலன் ~ க்ருஷ்ணன், கண்ணகி<கர்ணகி ~ இலக்குமி என்ற முன்முடிவுடன் வந்து சேரும் நண்பருக்கு, மாதவியை முல்லைக்கு ஒப்பிடுவது ஒருவேளை இயல்பாகத் தெரிகிறது போலும். ஆனால் மாதவி என்ற சொல் முல்லையைக் குறிக்கிறதா? [மோனியர் வில்லியம்சு வடமொழி அகரமுதலி மாதவி என்ற சொல்லால் குருக்கத்தியையே குறிக்கிறது. பெருவாரியான இலக்கியக் குறிப்புக்களும் அப்படியே இருக்கின்றன. முல்லை என்று குறிப்பது யாரோ செய்த தவறான குறிப்பு என்றே நான் எண்ணுகிறேன். ”முல்லை என்பதை மாதவி என்று வடமொழியில் மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்: திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி - அப்பர் தேவாரம்” என்ற கணேசனாரின் கூற்றுக்கு என் மறுப்பு இதோ. முல்லையையும் முருகன்பூண்டியையும் சுந்தரர், அப்பர் ஆகியோர் இணைத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பது உண்மை தான். [அப்பர் ஆறாம் திருமுறை 700 ஆம் பாடல் பொது - வெவ்வேறு தலங்களைக் கோத்துச் சொல்லும் திருத்தாண்டகம் “முல்லைப் புறவம் முருகன்பூண்டி”; சுந்தரர் ஏழாம் திருமுறை திருமுருகன் பூண்டி பற்றிய 499 ஆம் பாடல் “முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்”.] இது ஒரு பக்கம். அதே பொழுது முல்லை என்பதை மாதவி என்று யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள் -. தேவாரத்தில் மயிலாடுதுறை இறைவி அஞ்சொலாள் என்று சொல்லப்படுகிறாள். (சில பதிப்புக்களில் அஞ்சலாள் என்றும் இருக்கிறாள்.) - அவிநாசியில் இருந்து 5. கி.மீ. தொலைவுள்ள முருகன் பூண்டியின் தல வரலாற்றில் ஒரு தொன்மச் செய்தி வருகிறது. ”துர்வாசர் என்ற முனிவர் கற்பகவுலகில் இருந்து மாதவிச் செடியை (குருக்கத்தியை) இங்குக் கொண்டு வந்தார். எனவே மாதவி வனம்.” [பக்கம் 793-795, திருமுறைத் தலங்கள் - பு.மா. ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 2001 - அருமையான விவரமான நூல்] எனவே மாதவி வனம் என்ற காரணப் பெயர் குருக்கத்தியை வைத்தே வந்திருக்கிறது. முல்லையை வைத்து அல்ல. குருக்கத்தியும், முல்லையும் ஒரே ஊரில் பூத்துக் கிடந்த காலம் போய், தேவாரக் காலத்தில் குருக்கத்தி அருகி, முல்லை பெருகிப் பூத்திருக்கலாம். அதனால் அப்பரும், சுந்தரரும் முல்லையையே சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். தேவார காலத்திற்குப் பிற்பட்ட யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) முன்னால் இருந்த குருக்கத்திப் பெருமையை அறியாமல், முல்லைக்கும் மாதவிக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறான். திருக்கருகாவூர் (தஞ்சையில் இருந்து 20 கி.மீ. கும்பகோணம் போகும் வழியில் ஆவூருக்கு அருகில் உள்ள ஊர்) முல்லைவனம் என்றும், கூடவே மாதவிவனம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அதே பொழுது முதலாம் இராசராசனின் கல்வெட்டில் “நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்” என்று இந்தத் தலம் குறிக்கப் படுவதைப் பார்த்தால் ஆவூர்க் கூற்றத்தில் உள்ள குருகு + ஆவூர் = குருகாவூர்>கருகாவூர் என்றாகியிருக்கும் பட்டுமை (possibility) தெரிகிறது. இந்தத் திரிவு தேவார காலத்திற்கு முன்னேயே ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பட்டுமை மற்ற சான்றுகளால் உறுதி செய்யப் படவேண்டும். இன்னுமொரு கோயில் திருவாரூருக்கு அருகில் உள்ள நன்னிலம் பெருங்கோயில். இங்கே ”வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்” ஆகியவை தலமரங்களாய் இருந்ததாகவும், இப்பொழுது வில்வம் மட்டுமே உள்ளதாகவும் சொல்லப் படுகிறது. ஆனாலும் ஊருக்கு மதுவனம் என்ற பெயர் இருக்கிறது. மதுவுக்கும் குருக்கத்திக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தால், சற்று ஓர்ந்து பார்க்க வைக்கிறது. என்றாலும் முடிவிற்கு வர அதிகத் தரவுகள் வேண்டும். [ஆனாலும் முல்லை இங்கு சற்றும் சொல்லப் படவே இல்லை.] முடிவாக, மாதவி = குருக்கத்தியின் இணை பல்வேறு கூறுகளில் வெளிப்படுவதால், பிறந்த போது “வெளிறிய சிவப்பு அல்லது பூஞ்சை நிறத்தவளாய்” மாதவிப் பெண்ணாள் இருந்திருக்க வேண்டும், எனவே ”நிறத்தையும் பார்த்துக் குருக்கத்தியை நினைத்து மாதவியென்று பெயரிட்டார்களோ?” என்றும் சொல்லத் தோன்றுகிறது. முல்லைத் திணையில் குருக்கத்திப்பூ விதப்பானது. முல்லைத் திணையில் காதல் வயப்படும் பெண்டிருக்கு குருக்கத்தி நினைவு வராமற் ஓகாது. மயக்கம் தருபவள் என்னும் பொருளும் மாதவி என்னும் பெயருக்கு அணி சேர்க்கிறது. இளஞ்சிவப்புக் குருகிலை, ஒலி ஆரவாரத்தில் சட்டென்று பூப்பது, தளிர்ப்பது, எனப் பல புதலியற் செய்திகளும் இதையே குருக்கத்தியைப் பரத்தைப் பெண்ணுக்கு ஒப்பிட்டு நினைவூட்டுகின்றன. இராம.கி.

விளையாட்டு

கிலி கிலியாடல் கிலியாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒலியெழுப்பிக் மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. சிறுபாணாற்றுபடை என்ற இலக்கியத்தில்.. கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலியாடும் என்று வருகிறது. இன்று முதல் செல்வந்தர் வீடுகளில் உள்ள குழந்தைகளின் அழுகையை அடக்க தம் தகுதிக்கேற்பவோ, தகுதிக்கு மீறியதாகவோ கிலுகிலுப்பைகளை வாங்கிக் குழந்தைகள் கைகளில் கொடுக்கப்படுவது நம் கண்கூடு. கோழிப்போர் தமிழர்கள் விலங்குகள்,பறவைகள் போன்றவற்றுக்கும் இடையே வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர். சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் (305) குப்பைக் கோழித் தனிப்போர் போல என்று குறிப்பிடுவதிலிருந்து கோழிப்போர் சங்க காலம் தொட்டு வழக்கிலிருந்தமையை அறிய முடிகிறது. இவ்விளையாட்டு இன்று பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. கழங்காடுதல் மகளிர் விளையாட்டுகளில் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது மேடான பகுதிகளில் “கழங்கினை“ (கழங்கு-சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) வைத்து ஆடுவர். இப்பொழுது இது பாறைகளித்தல் அல்லது சுட்டி பிடித்தல் என்று வழங்கப்படுகிறது. கழங்கிற்குப் பதில் சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. “செறியரிச் சிலம்பின் குறுந்தொடிமகளிர் பொலஞ்செய் கழங்கிற் தெற்றியாகும் வட்டாடல் தமிழர் விளையாட்டில் மிகவும் சிறப்புற்றிருந்த விளையாட்டு வட்டாடல் ( வட்டாடல்-வட்டை உருட்டி சூதாடுதல்) இதற்காக இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம் ஒருவகைசூதாட்டத்தை ஒத்தது. இவ்விளையாட்டை திருவள்ளுவர் அரங்குஇன்றி வட்டுஆடி அற்றேநிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்( 401) ஆகவே இந்த வட்டாடல் விளையாட்டு குறள் காலத்து விளையாட்டு என்பது தெரிய வருகிறது. எனவே பழந்தமிழரும் விளையாட்டுகளிலும் அறிவியல் வழி சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே தமிழருக்கு மரபு சார்ந்த பெருமையாகிறது

ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.

ஆரியர்கள் கடந்த 7 நதிகள். jeyasree மொழி ஆராய்ச்சி செய்யக் கிளம்பி, வரலாற்று ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு ரிக் வேதம் ஒரு சவாலாக இருந்தது. அதன் சமஸ்க்ருத மொழிபெயர்பு குழப்பமாக இருந்தது. அவர்களைக் குழப்பிய ஒரு சொல் சப்தசிந்து என்பதாகும். இது அடிக்கடி ரிக் வேதத்தில் வருகிறது. சப்த சிந்துவைத் தாண்டிச் சென்று போர் புரிந்த வர்ணணைகள் வருகின்றன. மேலும், நதி நீரில் எதிரிகளை மூழ்கடிப்பதும், அணைகளை உடைத்து நீரை ஓட விடுவதுமான விவரங்கள் ஆங்காங்கே வருகின்றன. எனவே சப்த சிந்து என்பது ஒரு பூகோளப் பகுதியைக் குறிக்கிறது, அந்தப் பகுதி எது என்று கண்டு பிடித்துவிட்டால், படையெடுத்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள். சிந்து என்ற நதிப் பெயர் அவர்களுக்குத் தெரியும். சப்த என்றால் ஏழு என்று பொருள். சிந்து நதி ஏழு நதிகளாக இல்லை. எனவே சிந்து நதியுடன் சேர்த்து மொத்தம் ஏழு நதிகள் சிந்துவின் மேற்கே இருப்பவற்றைக் குறித்து இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களது பைபிள் சொல்லும் மனிதனது தோற்றமும், தோற்றம் நடந்த இடமும் ஐரோப்பியப் பகுதிகளில் நடந்தன என்று நம்பினார்கள். மேலும் இந்திரன் வெள்ளை நிறத்தவர்களுக்கு உதவின கதையைப் பிடித்துக் கொண்ட அவர்களுக்கு, ஐரோப்பியரது வெள்ளை நிறம்தான் கவனத்தில் இருந்தது. மேலும் அவர்களது ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். உதாரணமாக சமஸ்க்ருதத்தில் மாதா – பிதா என்று தாய், தகப்பனுக்குச் சொல்வார்கள். ஆங்கிலத்தில் மதர், ஃபாதர் என்பார்கள். ஜெர்மானிய மொழியிலும் இதே போன்ற ஒசையுடன் இந்தச் சொற்கள் உள்ளன. இப்படிப்பட்ட மொழி ஒற்றுமைகள் உள்ளதால், சம்ஸ்க்ருதம் ஐரோப்பாவில் தோன்றியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த காரணங்களினால் சப்த சிந்துவை ஐரோப்பாவில் தேடினார்கள். இந்த நதிகள் மாபெரும் நதிகளாக இருக்க வேண்டும், கடப்பதற்கு அரிதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஏனென்றால், சப்தசிந்துவைக் கடப்பதைப் பற்றி அவ்வளவு முக்கியத்துவம் ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. அப்படி இவர்கள் கண்டுபிடித்த நதிகள் எவை தெரியுமா? அட்லாண்டிக் கடலில் கலக்கும் ரைன் நதியில் ஆரம்பித்தார்கள். அங்கிருந்து படிபடியாக இந்தியா நோக்கி வரும் வழியில் உள்ள நதிகளைக் கணக்கிட்டார்கள்.. ரைன், அதைத் தொடர்ந்து டனுபே, அங்கிருந்து மெசபடோமியாவில் உள்ள யூப்ரடிஸ், டைகிரிஸ் என்று நான்கு நதிகளைத் தாண்டினால், ஐந்தாவதாக சிந்து நதி வந்துவிடுகிறது. சிந்து நதிக்கு ஐந்து கிளை நதிகள் உள்ளன. அந்தக் கிளை நதிகளில் சட்லெஜ், பியாஸ் நதிகளைச் சேர்த்துக் கொண்டு ஏழு நதிகள் என்று கணக்கு சொன்னார்கள். இந்தப் படத்தில் இவர்கள் சொன்ன நதிகளில் ஐந்தைக் காணலாம். 1. ரைன் நதி 2. டனுபே நதி 3. யுப்ரடீஸ் நதி (இது ஈரான், ஈராக் பகுதியாகும். இங்கு சுமேரிய நாகரீகம் இருந்தது. சிந்து சமவெளி நாகரீகம் ஆரம்பித்தது என்று இவர்கள் கருதிய கி-மு- 3000 ஆண்டில் இந்த நாகரீகம் இந்த நதிக்கரையில் இருந்தது.) 4. டைகிரிஸ் (இதுவும் சுமேரிய நாகரீகப் பகுதி) 5. சிந்து நதி. மீதி இரண்டும் படத்தில் காண்பிக்கப்படவில்லை. அவை சிந்துவின் கிளை நதிகள். இந்த நதி ஆரம்பிக்கும் இமயமலைப் பகுதியில் அவை உள்ளன. சப்தநதி ஆராய்ச்சி இத்துடன் நின்றுவிடவில்லை. இந்த ஏழு நதிகளை ஒருமுகமாக அனைவரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு சிலர் ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதியில் ஆரம்பித்து எழு நதிகளைக் கணக்கிட்டார்கள். ஆப்பிரிக்கா என்றால் கருப்பர்கள் நாடு. அதனால் அது வெள்ளையர் படையெடுப்புக்கு ஒத்து வரவில்லை. ஆயினும் நாளடைவில், பிற ஆராய்ச்சியாளர்கள், சப்த சிந்துவை சிந்து நதி தீரத்திலேயே தேட ஆரம்பித்தார்கள். சப்தசிந்து என்று வேதம் கூறுவது சிந்து நதியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் ஏழு நதிகள் எவை என்று அவர்களால், ஏன் இன்று வரை யாராலும் சொல்ல முடியவில்லை. இப்படி ஏழு நதிகளைத் தாண்டி வந்தவர்கள் நாடோடிகள் என்றார்கள். அவர்கள் ஆரியர்கள் என்றார்கள். அவர்கள் மேற்கு ஐரோப்பாவில் இருந்திருக்க வேண்டும் என்றும், வட ஐரோப்பாவில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவ்வப் பொழுது சொல்லிக் கொண்டார்கள். நாடோடிகளான இந்த மக்கள், குதிரைகளின் மீதும், தேர்ப்படையுடனும் வந்து சிந்துவையும் கடந்து கொடிய போர் புரிந்தனர் என்கிறார்கள். இவ்வளவு தொலைவு பயணப்படாமல், கிரேக்கப் பகுதியிலிருந்து வந்த அலெக்ஸாண்டர் என்னும் கிரேக்க மன்னனாலேயே, சிந்துவைத் தாண்டி முன்னேற முடியவில்லை. அலெக்ஸாண்டர் காலத்தில் சிந்து நதி பரந்த நதியாக இருந்திருக்கிறது. தேர்ச்சி பெற்ற படை பலத்தைக் கொண்ட அவரே திக்கு முக்காடிப் போய் திரும்பி விட்டார். அப்படி இருக்க முறையான படைத்திரளுடன் வராத ஆரியர்கள் சிந்து நதியை எப்படிக் கடந்திருப்பார்கள்? இங்கு இடைச் செருகலாக, அலெக்ஸாண்டர் படையெடுப்பை ஆங்கிலேயர் திரித்தவிதத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இன்றுவரை நம் நாட்டுக் குழந்தைகள் படிக்கும் சரித்திரப்பாடம், ஆங்கிலேயர்கள் எழுதியதுதான். கிரேக்க சரித்திரத்தில் அலெக்ஸாண்டர் கிழக்கு நோக்கி செய்த படையெடுப்பு விவரங்கள் இருக்கின்றன. அவற்றுள் உள்ள விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், அலெக்ஸாண்டர் பாரதப்பகுதிக்குள்ளேயே நுழையவில்லை. பாரதத்தின் பூகோள அமைப்பைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதியை அடைந்தபோதே, அதுவே பாரதம் என்று நினைத்து விட்டனர். அங்கே அலெக்ஸாண்ட்ரியா நகரை அவர் நிர்மாணித்தார். அங்கிருந்து கிழக்கு நோக்கி அவர் வந்தபோது சிந்து நதி காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஜீலம் பகுதியை ஆண்ட புருஷோத்தமன் என்னும் அரசன் அலெக்சாண்டரை எதிர் கொண்டார். இதுவரை சொன்ன கதையை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் புருஷோத்தமனுடன் செய்த போரின் முடிவு என்ன? ஆங்கிலேயர்கள் சொன்ன கதை – இன்று வரை நம் சரித்திரப்பாடப் புத்தகத்தில் இருக்கும் கதை – புருஷோத்தன் தோற்றான் என்பது. ஆனால் தோற்ற பின்னும், அவனுக்கே அவனது நாட்டை அலெக்ஸாண்டர் தந்துவிட்டார் என்று ஆங்கிலேயர்கள் சொன்னதற்கு ஆதாரம் இல்லை. அலெக்ஸாண்டர் போர் வெறி பிடித்து, இந்த உலகையே தன் குடை கீழ் கொண்டு வரவேண்டும் என்று புறப்பட்ட மன்னன். அவன் தான் வென்ற நாட்டை விட்டுவிடுவானா? உலகையே தன் குடையின் கீழ் கொண்டுவர விரும்பிப் படையெடுத்த அலெக்ஸாண்டரது கேரக்டருக்கு இது ஒத்துவரவில்லை. மேலும், இப்படி ஒரு போர் நடந்து அதில் இந்திய மன்னன் ஒருவன் தோற்றான் என்பது இந்தியக் கதைகளிலும் இல்லை, கிரேக்கக் கதைகளிலும் இல்லை. அலெக்ஸாண்டர் போர் நிறுத்தத்தை விரும்பினார் என்றும், அதனால் புருஷோத்தமன் அவனைத் திரும்பிப் போக விட்டார் என்றே சொல்லப்படுகிறது. அலெக்ஸாண்டர் இந்தியப் பகுதியை அல்லது இந்திய மன்னனை வென்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் அப்படி ஒரு கதையை உருவாக்கினார்கள். இந்தியர்கள் நாதியற்றவ்ர்கள், படையெடுத்தவன் முன்னால் அடங்கிப் போனவர்கள் என்ற கண்ணொட்டத்துடன் ஆங்கிலேயர்கள் நம்மைப் பார்த்தார்கள். அன்று அலெக்ஸாண்டரிடம் தோற்றவர்கள் அதற்கு முன் தங்கள் மூதாதையரான ஆரியர்களிடம் தோற்றார்கள் என்று இந்தியர்களை மூளைச் சலவை செய்ய அலெக்ஸாண்டர் கதை அவர்களுக்கு உதவியது. அலெக்ஸாண்டருக்குப் பின் இந்தியாவுக்கும், கிரேக்கத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் அதில் நட்புணர்வு மேலோங்கி இருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவுக்குப் படிப்பதற்கும் யாத்திரிகர்களாகவும் வந்தனர். அப்படி வந்தவர்களுள் ஒருவர் மெகஸ்தனிஸ் என்பவர். அவர் அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு 35 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்ததார். அவர் அலெக்ஸாண்டர் படையெடுத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. தன் நாட்டு மன்னன் போரில் வென்று, அத்துடன் நில்லாமல், தான் வென்ற நாட்டைப் பெருந்தன்மையுடன் எதிரிக்கே கொடுத்தான் என்பது உண்மையாக இருந்தால், அதை மெகஸ்தனிஸ் அவர்கள் பெருமையாகப் பேசி இருப்பாரே? அப்படிப் பேசாமல், இந்தியாவின் மீது தொன்று தொட்டு யாரும் படையெடுத்து வந்ததில்லை. இந்தியர்களும், வேறு நாட்டின் மீது படையெடுத்தில்லை என்று கூறியுள்ளார். இதை ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை. இன்று வரை இந்திய அரசும் இதன் அடிப்படையில் அலெக்ஸாண்டர் படையெடுப்பைப் பற்றிய உண்மையை வெளிக் கொண்டுவர முயற்சிக்கவில்லை. அலெக்ஸாண்டருக்கு 1,150 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பது ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அந்தப் படையெடுப்பு நடந்திருந்தால் மெகஸ்தனிஸ் அவர்கள், இந்தியாவின் மீது யாருமே படையெடுத்து வரவில்லை என்று எப்படி சொல்லியிருக்க முடியும்? அல்லது படையெடுத்தது உண்மை என்றால், தனது நாட்டுப் பகுதிகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்ற பெருமித உணர்ச்சியையோ, அல்லது அப்படி ஒரு உறவையோ சொல்லி இருக்கலாமே? மாறாக அவர் இந்தியாவில் பார்த்த மக்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் எல்லாமே அவருக்குப் புதியதாக இருந்தது. ஒரு 1000 வருட இடைவெளியில், இந்தியாவை ஆக்கிரமித்த மக்களது முந்தின பழக்க வழக்கங்கள் எப்படி உருத்தெரியாமல் மாறிப்போகும்? பயிற்சி பெற்ற போர்ப்படையுடன் வந்த அலெக்ஸாண்டரால் கடல் போன்று விரிந்திருந்த சிந்து நதியைக் கடக்க முடியவில்லை. அப்படி இருக்க, நாடோடிகளாக வந்ததாகச் சொல்லப்படும் ஆரியர்கள், ஐரோப்பிய நதிகளைக் கடந்து, சிந்துவையும் கடந்து போர் பலத்தால் எப்படி வெற்றி பெற்றனர் என்பதைப் பற்றி, ஆரியப் படையெடுப்புவாதிகள் யோசிக்கவில்லை. இப்படி அவர்கள் சிந்திக்காத காரணத்தால், தங்களுக்குப் பிடித்தவாறு இருப்பதை மட்டும் ஆராயப் புகுந்தார்கள். உண்மையில் ரிக் வேதம் என்ன சொல்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. சப்தசிந்து என்ற பதம் ரிக் வேதப்பாடலில் இருக்கிறது. ஆனால் அதன் மீது ஒரு தனிப்பாடல்கூடப் பாடப்படவில்லை. ஆனால் புராணக் கதை என்று இவர்கள் ஒதுக்கிய சரஸ்வதி நதியின் மீது பல தனிப்பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களில் 9 மண்டலங்களில் சரஸ்வதி பற்றிய செய்தியும், துதியும் வருகிறது. நதிஸ்துதி சூக்தம் என்னும் பாடலில் (10-75) வட இந்தியாவில் உள்ள 10 நதிகள் துதிக்கப்படுகின்றன. கிழக்கில் கங்கையில் ஆரம்பித்து, யமுனா, சரஸ்வதி என்று மேற்கு நோக்கி மொத்தம் பத்து நதிகளை வணங்கிப் பாடும் ரிக் வேதப்பாடல் இது. இந்தப் பத்து நதிகளில் சிந்து நதி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிந்து நதியைக் கடப்பது ஒரு பெரும் சவாலாக இருந்து அதையே சப்த சிந்து என்று படையெடுத்து வந்த ஆரியர்கள் ரிக் வேதத்தில் பாடியிருந்தால், நதிஸ்துதி கூறும் வணக்கத்துக்குரிய பத்து நதிகளில் அதை ஏன் சேர்க்கவில்லை. சிந்து நதியைத்தான் விட்டார்கள். ஐரோப்பாவில் இருந்த ரைன் நதி முதல் பிற ஐரோப்பிய நதிகளோடு அவர்கள் தொடர்பு கொண்டிருந்தால், அந்த நதிகளைப் பற்றி ரிக் வேதத்தில் எங்காவது சொல்லி இருக்க வேண்டும் அல்லவா? இல்லையே? ஐரோப்பிய பூகோளப் பகுதி எதுவுமே ரிக் வேதத்தில் காணப்படவில்லையே? ஏன்? சப்த சிந்துவில் உள்ள ஏழு எவை என்பதற்கு விளக்கம் இல்லை. ஆனால் சரஸ்வதி நதியுடன் ஏழு என்ற எண்ணைத் தொடர்பு படுத்தி ரிக்வேதம் கூறுகிறது. ஏழு சகோதரிகளுடன் கூடிய சரஸ்வதி என்று சரஸ்வதி வர்ணிக்கப்படுகிறது. ’சரஸ்வதி சப்தாதி சிந்துமாதா’ என்று சிந்துவைச் சேர்த்துக் கொண்டு வருகிறது. ( 7-36-6) இங்கு சிந்து என்ற சொல்லின் சூட்சுமம் தெரிகிறது. சிந்து என்றால் வடமொழியில், வெள்ளம் அல்லது கடல் என்று பொருள். கடல் போல விரிந்து இருப்பதாலும், வெள்ளப்பெருக்குடன் இருப்பதாலும் சிந்து நதி என்னும் பெயர் வந்திருக்க வேண்டும். சரஸ்வதி நதியை சிந்துமாதா என்றது, வெள்ளப் பெருக்குடன் கூடிய எழுவரைக் கொண்ட சரஸ்வதி என்ற பொருளில் வருகிறது. சரஸ்வதி மாபெரும் நதியாக இருந்தது என்று ரிக் வேதம் கூறுகிறது. சரஸ்வதி நதியை ‘சப்தஸ்வஸா’ என்றும் ரிக் வேதம் அழைக்கிறது. (6-61-10). அதாவது சரஸ்வதி ஏழு கிளைகளுடன் கூடிய நதியாக இருந்திருக்கலாம். ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு ரிஷிகள், படைப்புக் கடவுளின் மானஸ புத்திரர்கள் என்ப்படுகிறார்கள். இவர்கள் மூலமாக மனிதப் படைப்பு நடந்தது என்பது ஹிந்து மதம் கூறும் படைப்புக் கொள்கை. இதன் அடிப்படையில், சப்த ரிஷி மண்டலம் என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் வானில் சுட்டிக் காட்டபடுகிறது. ரிஷிகள் ஏழு. தீவுகள் ஏழு (அவற்றுல் நாம் வாழும் நாவலந்தீவு ஒன்று). கடல்கள் ஏழு. உலகங்கள் ஏழு. மேலுலகம் ஏழு. கீழுலகம் (நரகங்கள்) ஏழு. வேத மதம் கூறும் இது போன்ற ஏழு ஏழான தொகுதிகள், சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன. பரிபாடல் 5 –இல் சப்த ரிஷிகள் பற்றிய ஒரு செய்தி வருகிறது. பரிபாடல் 3- இல் மூவேழ் உலகங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. அதாவது ஏழு வகைபட்டுள்ள மூன்று உலகங்கள் என்று கூறுகிறது. ஆனால் இவை எதிலும் சப்த சிந்து வரவில்லை. சப்த சிந்து என்பது தத்துவக் கருத்து. இந்திரியங்களை வெல்ல இந்திரன் துணையுடன், சுதாஸ் போன்றவர்கள் சப்த சிந்துவைக் கடந்தார்கள் என்றால், தவ வலிமையால், உடலில் உள்ள எழு நாடிச் சக்கரங்களையும் கடந்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம். சப்த சிந்துவில் எதிரிகளை அழுத்தி கொன்றார்கள் என்றால், யோக வலிமையில், படிப்படியாக ஒவ்வொரு நாடியையும் வென்று முன்னேறுவதைக் குறிக்கிறது. நாடி என்பதும் நதி என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவை நத் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து எழுந்தவை. நத் என்றால் ஓடுவது என்று பொருள். ஓடிக்கொண்டே இருப்பதால் ஆறுக்கு நதி என்று சமஸ்க்ருதத்தில் பெயர். நம் உடலில் உள்ள நாடியிலும், ஒரு ஓட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. இறக்கும் தறுவாயில் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது என்கிறோம். இதை ரிக் வேத பாணியில் சப்த நதி, அல்லது சப்த சிந்துவும் அடங்கி விட்டது எனலாம். சிந்து என்றால் வெள்ளம் என்று பொருள். சப்த நாடிகளிலும் வெள்ளப்பெருக்காக இந்திரிய சக்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தி, வெல்ல வேண்டும் என்பது தவ ஞானிகள் சொல்லிக் கொடுத்துள்ள பாடம். இப்படி தத்துவமாக ரிக் வேதம் இருக்கிறது. ஜோதிடத்திலும் ஏழு வருகிறது. கேது கிரகத்தின் எண் ஏழு ஆகும். கேது கிரகம், ஆன்மீகத்துக்கு உறுதுணையாவது. மோட்சத்துக்கு உதவுவது. சப்த என்னும் ஏழுக்குப் பின் இப்படி ஒரு உயர்ந்த தத்துவம் இருக்கிறது. எனவே சப்தசிந்து என்றது, சிந்து நதி என்னும் நதியை இது குறிக்கவில்லை. சப்த சிந்துவின் கதை இப்படி இருக்க, நம் திராவிடவாதிகள் என்ன செய்தார்கள்? சிந்து என்ற ஒரு சொல் அவர்கள் மண்டையில் மணி அடித்தது போல இருந்தது. சப்தசிந்து என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டு, சமீபத்தில் கூட்டிய செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளிப் பகுதியில் காணப்படும் ஏழு முத்திரைச் சின்னங்களை செம்மொழிச் சின்னத்தில் அமைத்து விட்டார்கள். செம்மொழி மாநாட்டுச் சின்னத்தைப் பற்றிய அரசு விளக்கத்தில், சப்தசிந்துவை முன்னிட்டும், தமிழிலும் ஏழு ஏழான தொகுதிகள் உள்ளன என்பதாலும் (மேலே பரிபாடல் போன்ற நூல்களில் வேத மரபை ஒட்டிக் கூறப்பட்டவை) சிந்து சமவெளியின் ஏழு சின்னங்களை அமைத்ததாகக் கூறப்பட்டது. சப்த சிந்து என்பது ரிக் வேதத்தில் வருவது. மாக்ஸ் முல்லர் முதலான ஆங்கிலேயர்கள் சப்த சிந்துவை சிந்து நதியில் காணவில்லை. ஐரோப்பாவில் இருக்கும் ரைன் நதி முதற்கொண்டு சப்த சிந்துவைக் கண்டார்கள்.

சோழர்கள்'-தூங்கெயில் எறிந்த' செம்பியர்கள்

மனுவில் ஆரம்பித்து, இக்ஷ்வாகு, சிபி போன்ற மன்னர்கள் பரம்பரையில் சோழர்கள் வந்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது. சிபியின் வம்சத்தில் வந்தவர்கள் ஆதலால் சோழர்கள் செம்பியன் என்றழைக்கப்பட்டனர். சிபி என்னும் அரசன் யார், அவனைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்த்தால், பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவற்றுள் முக்கிய ஆச்சரியம், சிபியுடன் மட்டுமல்ல, அயோத்தி ராமனுடனும், சோழர்களின் வம்சத்துக்குத் தொடர்பு உள்ளது என்பதாகும். அவனை முன்னிறுத்தி சோழ மன்னர்கள் பெருமை அடைந்தனர். பல கோணங்களிலிருந்தும், இதை மெய்ப்பிக்க முடியும். சிபியைப் பற்றிய கதை பல பழம் நூல்களில் உள்ளது. மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், புராணங்கள் போன்றவற்றில் உள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது. போதிசத்துவரே ஒரு முறை சிபியாகப் பிறந்தார் என்று புத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. மேலும் சிபி என்ற பெயர் பல வேறு இடங்களில், வெவ்வேறான காலக் கட்டத்தில் வருகிறது. பாகிஸ்தானத்தில் உள்ள பலுச்சிஸ்தானத்தில் சிபி என்ற பெயரில் ஓரிடம் உள்ளது. அங்குள்ள மக்கள் சிபி மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள சிபி என்னும் இடத்தை சிபி அரசாண்டான் என்றும் மகாபாரதம் கூறுகிறது. அது போல கங்கைக் கரையில் உள்ள காசி நகரையும் சிபி என்ற பெயருள்ள அரசன் ஆண்டான் என்றும் வருகிறது. இப்படிப் வேறுபட்ட விவரங்கள் சிபியைப் பற்றி உள்ளன. ஆனால் சிபியின் பெருமையைப் பற்றி தமிழில் சொல்லப்பட்ட அளவுக்கு, வேறு எந்த மொழியிலும், புராண, மகாபாரத, ஜாதகக் கதைகளிலும், சொல்லப்படவில்லை.தமிழ் காட்டும் விவரங்கள் மூலம் சில குழப்பங்களையும் தீர்க்க முடிகிறது. சிபியைப் போற்றும் இடங்களில், மூன்று மதில்களை உடைய தூங்கெயிலை வெற்றி கொண்டவன் என்று இன்னொரு அரசனையும் பற்றி தமிழ் கூறுகிறது. சிபியின் பெருமை, ஒரு புறாவுக்காகத் தன் சதையை வெட்டிக் கொடுத்தவன் என்பது. இது பல இடங்களிலும் சொல்லப்படுகிறது. அவன் வம்சத்தில் வந்தவர்கள் என்று சோழ மன்னர்களைப் போற்றும் பாடல் ஒன்று சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதில் வேறு விவரங்களும் வருகின்றன. அந்த விவரங்களில் ஒன்று தூங்கெயில் வெற்றி கொண்ட அரசனைப் பற்றியது. அப்பாடல் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியில் வருகிறது. அம்மானை என்பது பெண்கள் பாடும் பாடல். அதில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி அம்மானை என்பார். மற்றொருவர் அதற்குப் பதில் தர வேண்டும். அப்படிக் கேட்கப்படும் கேள்வியிலேயே, சோழர்கள் பெருமை சொல்லப்படுகிறது. அதில் முதல் கேள்வி, இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார்? அதற்குப் பதில் நமக்கும் இப்பொழுது தெரியும். அது முசுகுந்தன் என்னும் முன்னாள் அரசன். இவன் சோழவர்மன், சோழர் ஆட்சியைத் தமிழ் நாட்டில் ஸ்தாபிப்பதற்குப் பல தலைமுறைகள் முன்பே தோன்றினவன். ஆனால் அந்த அம்மானைப் பாடலில் வரும் பதில் இப்படி இருக்கிறது :- வானின் கண் அசைகின்ற மூன்று மதில்களை அழித்தவனே அவன். இந்திரன் மதிலைக் காத்தவன் முசுகுந்தன். அவன் அழிக்கவில்லை. ஆகவே இந்தப் பதில் அவனைப் பற்றியது அல்ல. இது வேறொரு அரசன் மதிலைகளை அழித்த கதையைச் சொல்கிறது. இந்த வர்ணனை சங்கத் தமிழில் பல இடங்களில் வருகிறது. அடுத்த கேள்வி, புறாவுக்காகத் தன் உடம்பை அரிந்தவன் யார் அம்மானை, என்கிறது. அதற்குப் பதில் சிபி என்று சொல்லவில்லை. மாறாக, அரண்மனை வாயிலின் முன் ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காகத் தன் மகன் மீது தேர்க்காலை ஒட்டினவன் என்று அம்மானை பாடப்படுகிறது. அதாவது கேள்வி ஒருவரைப் பற்றி, ஆனால் அதற்கான நேரிடையான பதில் கிடையாது. மற்றொரு சோழ மன்னனின் பெருமையைப் பறை சாற்றிச் சொல்லி, சோழ மனனர் அனைவரையுமே பெருமைப் படுத்தி சொல்லப்பட்டுள்ளது. கேள்வியில் சுட்டிக் காட்டப்படும் அரசன் வேறு, பதிலில் வரும் அரசன் வேறு என்று இந்த அம்மானையில் தெரிகிறது. முதல் கேள்வியில் வந்த அரசன் முசுகுந்தன். அதற்கான பதிலில் வந்தவன் அவனில்லை. அவையாவன:- மூன்று மதில், வானின் கண் தென்படும் மதில், அந்த மதிகளை அழித்த ஒருவன். இதுவரை பாரத நாட்டில் வழங்கி வந்துள்ள கதைகளில், வானின் கண் தென்படும் மதில் இரண்டு இடங்களில்தான் உள்ளன. ஒன்று, தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம். இதனைக் காத்தவன் முசுகுந்தன். மற்றொன்று ராவணன் ஆண்ட இலங்கை நகரம் - அது திரிகூட மலை மீது அமைந்திருந்தது. இந்த மலையைத் திரிகோண மலை என்றும் கூறுவார். மூன்று சிகரங்கள் அல்லது மூன்று மதில்கள் சூழ்ந்திருப்பதன் காரணமாக ராவணனது நகரம் மூன்று மதில்கள் கொண்ட 'தூங்கெயில்' அதாவது, 'தொங்கும் நகரம்' அல்லது "தொங்கும் மதில்" என்று அழைக்கப்பட்டது. அது தேவர்களது அமராவதி போன்றது என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அமராவதியும், இலங்கையையும் தொங்கும் நகரம் என்று ஏன் சொன்னார்கள்? அவை இரண்டும் மேகங்கள் தவழும் மலை மீது அமைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்பதற்கு மேகங்களுக்கிடையே வானிலிருந்து தொங்கும் நகரம் போலத் தெரியுமாம்.அந்த நகரங்களின் செழிப்புக்கும் , வளத்திற்கும் குறைவே கிடையாது. அதனால் இலங்கையை அமராவதியுடன் ஒப்பிட்டு ராமாயணத்தில் விவரங்கள் வருகின்றன. சமீபத்திய சில அகழ்வாராய்ச்சிகளும், இராமாயண விவரங்கள் சிலவும், அமராவதி என்று ஒரு பட்டணம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொடுக்கிறது. மூன்று மதில்களைக் கொண்ட நகரத்தை உடைய ஒருவனை வென்ற அரசன் சோழர்களது வம்சத்துடன் தொடர்பு கொண்டவன் என்பது. இதே கருத்தை மணிமேகலை முதல் அத்தியாயத்தில் நான்காவது வரியில் காண்கிறோம். ஐம் பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புகார் நகரில் நடந்த இந்திர விழா பற்றியே ஆரம்பிக்கிறது. 'தூங்கெயில் எறிந்த' செம்பியர்கள் வழி வந்த சோழ மன்னன், அகத்திய முனிவர் சொன்னபடி, இந்திரனை வணங்கி இந்திர விழாவை ஆரம்பித்தான் என்கிறது மணிமேகலை. சிபியையும், தூங்கெயில் எறிந்த மன்னனைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்திலும் பார்க்கிறோம். கண்ணகிக்குச் சிலை வடிக்க, சேர மன்னன் செங்குட்டுவன் இமயமலை சென்று, கல் எடுத்து அங்கிருந்து கங்கைக் கரைக்கு வந்து, கங்கையில் அந்தக் கல்லை நீராட்டி, அங்கு தங்கியிருக்கிறான். அத்துடன் அவன் வஞ்சி நகரை விட்டுக் கிளம்பி முப்பத்தி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன என்று அவனது ஜோதிடர் கூறுகிறார். அந்தக் காலக் கட்டத்தில், தமிழ் நாட்டிலிருந்து மாடலன் என்னும் அந்தணன் கங்கையில் புனித நீராட வருகிறான். வந்த இடத்தில் சேர மன்னனைப் பார்க்கிறான். சேரனும், மாடலனிடம் தமிழ் நாட்டு நிலவரங்களைக் கேட்கிறான். சோழ நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்ட, ஒருவருக்கொருவர் உறவினர்களான ஒன்பது சோழ மன்னர்களும், அவர்களுக்கும் உயர்ந்த நிலையில் சக்கரவர்த்தி போல ஆண்ட வளவன் கிள்ளியை எதிர்த்தனர். ஆனால் வளவன் கிள்ளி ஒரே பகல் பொழுதில் அவர்கள் அனைவரையும் அடக்கி விட்டான். இதைச் சொன்ன மாடலன் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறான். தூங்கெயில் மூன்றினை எறிந்தவனும், புறாவுக்காகத் தன் உடம்பை தராசுக் கோலில் இட்டவனும் வளர்த்த அறம் கொண்ட செங்கோல் திரிந்து போகுமா? போகாது. சோழன் செங்கோல் எந்தக் குறைவும் இல்லாமல் இருக்கிறது என்று . தூங்கெயில் கதையையும் நினைவு கூர்கிறான். தூங்கெயில் கதை புறநானூறிலும் வருகிறது.(புறநானூறு 39 ). சோழ மன்னன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, மாறோக்கத்து நப்பசலையார் வாழ்த்துகிறார். அந்த மன்னன் உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டவன். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டுமென்று அவன் இரக்கத்தைக் காட்டுபவனில்லை. அவன் முன்னோனான புறாவுக்காத் தன் உடம்பை அரிந்து கொடுத்தவன் மரபில் வந்துள்ளவன் ஆதலால், அவனுக்கு இரக்கம் காட்டுதல் என்பது இயல்பாக உள்ளது. இந்த மன்னன் பகைவரை வெல்பவன். அது புகழுக்காகச் செய்வது அல்ல. இவனது முன்னோன் ஒருவன், தேவர்கள் நெருங்குவதற்குப் பயப்படும் ஆகாயத்திலிருந்து தொங்கும் தூங்கெயிலை வென்றவன். அதனால் அப்படிப் பகைவரை வெல்லுதல் என்பது இவனுக்கு இயல்பாக உள்ளது என்கிறார் புலவர். இந்தத் தூங்கெயில் எறிந்த விஷயம், சிறுபாணாற்றுப் படை (79 -82 ), கலிங்கத்துப் பரணி (17 ) ராஜா ராஜா சோழன் உலா (13), விக்கிரம சோழன் உலா (8-9) போன்றவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்படி வென்ற அரசன் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படிப் பார்த்தால், சிபியின் பெயரும் , மனு நீதிச் சோழனின் பெயரும், முசுகுந்தனின் பெயரும் எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் செயலைச் சொல்லிச் சொல்லியே புளகாங்கிதம் அடைந்திருக்கின்றனர். மேலும், சங்கப் புலவர்கள் பொதுவாகவே, அரசன் பெயரைச் சொல்வதில்லை. அந்த அரசர்கள் செய்த செயல்களது அடிப்படையில், பிற இடங்களில் வரும் அவர்களது கதைக் குறிப்புகளைக் கொண்டு நாம் அவர்கள் பெயரை அறிகிறோம். உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் வரும் முசுகுந்தனைப் பற்றி உரை ஆசிரியரான, அடியார்க்கு நல்லார் வாயிலாகத் தான் நாம் அறிகிறோம். செப்பேடுகளிலும் அந்தப் பெயர் வந்துள்ளதாலும், அந்த மன்னனைப் பற்றி மகாபாரதத்திலும் விவரங்கள் வருவதாலும் அவனைப் பற்றிய ஒரு முழுமையான தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படியே சிபி என்னும் மன்னனைப் பற்றியும், தகவல்கள் தெரிகின்றன. செப்பேடுகளிலும் அவன் பெயர் இடம் பெற்றுள்ளதால், செம்பியன் என்று சங்கப் புலவர்கள் புகழாரம் சூட்டுவதற்குக் காரணம், சிபியை முன்னிட்டு அந்த அளவுக்கு சோழர்கள் பெருமை நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதில் 'தூங்கெயில்' எறிந்தவன் யார் என்பது பற்றி செப்பேடுகளில் சொல்லப்படவில்லை. ஆனால் சங்கப் புலவர்கள் அந்தத் தகவலை அடிக்கடி நினைவு கூர்ந்துள்ளனர். தூங்கெயில் என்பப்படுவது ராவணனுடைய இலங்கை என்பதாலும், அதை அழித்தவன் ராமன் என்பதாலும், நாம் ராமனது பரம்பரையைப் பார்க்க வேண்டும். இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எந்த மனு மற்றும் இக்ஷ்வாகு பரம்பரையிலிருந்து தாங்கள் வந்தவர்கள் என்று சோழர்கள் சொல்லிக் கொண்டார்களோ, அதே மனு மற்றும் இக்ஷ்வாகு பரம்பரையில் வந்தவன் ராமன்! செப்பேடுகளில் காணப்படும் சோழர் பரம்பரையை 11 -ஆம் பகுதியில் பார்த்தோம், அதில் ககுஸ்தன் என்னும் மன்னன் பெயரும் வருகிறது. ராமனது முன்னோனும் ககுஸ்தன் ஆவார். அதனால் ராமனுக்கும் ககுஸ்தன் என்னும் பெயரும் உண்டு. ராமன் சூரிய குளத்தில் தோன்றியவன். சோழர்களும் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, ராமனது பரம்பரைச் சங்கிலியை நாம் தெரிந்து கொண்டால், ராமனுக்கும், சோழனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று தெரிய வரும். ராமனது பரம்பரையில் வரும் முன்னோர்கள் பெயர் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இப்பொழுது புழக்கத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன என்கிறார்கள். ஆனால் வால்மீகி அவர்கள் எழுதின ராமாயணத்தைத்தான் ஆதாராமாக எடுத்துக் கொள்கிறோம். ஏனென்றால் ராமனின் சமகாலத்தில் வாழ்ந்தவர் வால்மீகி. ராமனின் சரித்திரத்தை அவர் எழுத, அதை ராமனின் மகன்களான லவனும், குசனும் கற்றுக் கொண்டு, அப்படியே அதை ராமனுக்கு முன்னிலையில் பாடினார்கள். அந்தக் கதையில் ஏதேனும் தவறு, குறை இருப்பின், அப்பொழுதே அவை சரி செய்யப்பட்டு அல்லது சரி பார்க்கப்பட்டிருக்கும். எனவேதான் வால்மீகி ராமாயணம் நம்பத் தகுந்தது, ஆதாரபூர்வமானது. அதில், ராமன்- சீதை திருமணம் நடப்பதற்கு முன், ராமனது குல குருவான வசிஷ்டர் ராமனது பரம்பரையில் வந்த மன்னர்கள் பெயரையும் அவர்கள் பெருமையையும் பற்றியும் பேசுகிறார். ராமனுக்கு முன் வந்த மன்னர்கள் பெயரை வரிசையாகச் சொல்கிறார். அதாவது இன்னார் மகன் இன்னார் பட்டத்துக்கு வந்தார் என்று அடுத்ததடுத்து வரிசையாகச் சொல்கிறார். அந்த மனனர்கள் பெயரைப் பார்த்தால் நமது புதிருக்கு விடை கிடைக்கிறது. 1- பிரம்மா 2-மரீசி 3- காஷ்யபர் 4- சூரியன் (சோழர் பரம்பரை இங்கிருந்து ஆரம்பிக்கிறது) 5- மனு 6- இக்ஷ்வாகு (வசிஷ்டர் இவரை அயோத்தியின் முதல் அரசன் என்று சொல்கிறார். ) 7- குக்ஷி 8- விகுக்ஷி 9 -பாணன் 10- அனரண்யன் 11- ப்ரீது (சோழர் பரம்பரையில் வருகிறார்) 12- திரிசங்கு 13- துந்துமாரன் (சோழர் பரம்பரையில் வருகிறார்) 14- யுவனாஷ்வன் (சோழர் பரம்பரையில் வருகிறார்) 15- மாந்தாதா (இதுவரை சோழன் பரம்பரையும், ராமன் பரம்பரையும் ஒத்து இருக்கிறது.) 16- சுசந்தி 17- த்ருவசந்தி 18- பரதன் 19- அசிதன் 20- சகரன் 21- அசமஞ்சன் 22- அம்ஷுமான் 23- திலீபன் 24- பாகீரதன் (கங்கையைக் கொண்டு வந்தவன்) 25- ககுஸ்தன் (சோழர் பரம்பரையில் இக்ஷ்வாகுவுக்கு அடுத்து இந்த அரசன் வந்து விடுகிறான்) 26- ரகு 27- பிரவ்ரித்தன் 28- சங்கனன் 29- சுதர்ஷணன் 30- அக்னிவர்ச்ணன் 31- ஷீக்ருகன் 32- மரு 33- ப்ரஷுஸ்ருகன் 34- அம்பரீஷன் 35- நஹுஷன் 36- யயாதி 37- நாபாகன் 38- அஜன் 39- தசரதன் 40-ராமன் சோழர் பரம்பரையையும், ராமன் பரம்பரையையும் ஒப்பீடு செய்யும் போது சில விஷயங்கள் தெளிவாகின்றன. மாந்தாதா வரை, இருவர் பரம்பரையும் ஒத்ததாக உள்ளது. மாந்தாதாவுக்குப் பின் சோழர் பரம்பரையில் முசுகுந்தன் வருகிறான். ராமன் பரம்பரையில் சுசந்தி வருகிறான். அவனுடைய இரண்டு பிள்ளைகளில் முதல் மகன் இக்ஷ்வாகு சிம்மாசனத்துக்கு வருகிறான் என்று வசிஷ்டர் கூறுகிறார். மற்றொரு பிள்ளையைப் பற்றி ராமாயணத்தில் ஒரு குறிப்பும் இல்லை. இதைக் காணும் போது ஒரு அரசனின் பிள்ளைகள் பலர் இருந்தால், அவர்களில் ஒருவர் இக்ஷ்வாகு பரம்பரையில் தொடர்கிறார். மற்றவர்கள், வேறு வேறு இடங்களில் அரசு ஸ்தாபனம் செய்து ஆண்டிருக்க வேண்டும். அவர்கள் வழியில் தனித் தனி பரம்பரை தொடர்ந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ராமனது சகோதரர்களைச் சொல்லலாம். ராமன் அயோத்தியின் பட்டத்திற்கு வந்தாலும், மற்ற சகோதரகளுக்கு ஆங்காங்கே அரசுரிமை கொடுத்திருக்கிறான். அதிலும் அடுத்த தலைமுறை மகன்கள் வேறு வேறு இடங்களில் நாட்டி ஸ்தாபித்து ஆண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பாகிஸ்தானத்தில் இருக்கும் பெஷாவர் என்பது பரதனது மகன் புஷ்கலனது பெயரில் புஷ்கலாவதி என்று ஸ்தாபிக்கப்பட்டு, அந்த மகனிடமே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு மகனான தக்ஷன் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டதே தக்ஷசீலம் என்னும் நகரம். அதுவும் அந்த மகனிடம் கொடுக்கப்பட்டு அவனை அடுத்து அவன் பரம்பரையினர் ஆண்டு வந்தனர். அது போலவே லக்ஷ்மணன், சத்ருக்னன் மகன்களுக்கும், வேறு வேறு இடங்களில் ஆட்சிப் பொறுப்பு கொடுக்கப்பற்றிருக்கிறது என்று மகா கவி காளிதாசர் தான் எழுதிய 'ரகு வம்சம்' என்னும் நூலில் எழுதி உள்ளார்.ராமனுக்குப் பிறகு அயோத்தி சிம்மாசனத்துக்கு வந்தது ராமனின் மகனான குசன், அவனைத் தொடர்ந்து அவன் சந்ததியினர் என்று காளிதாசர் அவர்கள் பெயரைப் பட்டியலிடுகிறார். எனவே ராமன் பரம்பரை காட்டுவது, ஒரு மகனின் வழியில் வந்தவர்களை மட்டுமே. மற்ற மகன்கள் ஆங்காங்கே சென்று தங்களுக்கென்று அரசுரிமை நாட்டி தங்கள் பரம்பரையை ஸ்தாபித்திருக்க வேண்டும். அதனால்தான் வால்மீகி ராமாயணத்தில் வரும் ராமன் பரம்பரையில் மனுவில் ஆரம்பித்து 36 அரசர்கள் ராமன் வரை சொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதே காலகட்டத்தில் புராணங்கள் கூறும் அரசர்கள் 63 ஆவர். அந்த அரசர்களும் இக்ஷ்வாகு பரம்பரையினர்தாம். ஆனால் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்க மாட்டார்கள். வேறு வேறு இடங்களில் பரவி இருப்பார்கள். இங்கே நமக்குத் தேவையான சிபியின் சரித்திரத்தைப் பல்வேறு இலக்கியங்களிலிருந்து ஆராய்ந்தால், அவன் தந்தை உசீனரன் என்று தெரிகிறது. சோழர் செப்பேடுகளும் அதையே தெரிவிக்கின்றன. உசீனரன் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவன் என்று மகா பாரதத்தில் வருகிறது. ராமன் பரம்பரையில் வந்த யயாதியின் மகளான மாதவிக்கும் உசீனரனுக்கும் பிறந்தவனே சிபி என்பது முக்கியச் செய்தி. அதாவது, மனுவில் ஆரம்பித்து மாந்தாதா வரை சோழர்கள் குலமும் சூரிய குலத்திலிருந்து வேறுபடவில்லை. அதற்குப் பிறகு, பங்காளிகளாகப் பிரிந்து மாறியிருக்க வேண்டும். அப்படி மாறினதில் சூரிய வம்சத்தை விட்டு விலகியும் போயிருக்கிறார்கள். ஆண் சந்ததி நின்று போய், பெண் சந்ததி மூலமாக குலம் மாறியிருக்க வேண்டும். எனினும் யயாதியின் மகள் மூலம், மீண்டும் சூரிய குல சம்பந்தம் வந்திருக்கிறது. யயாதி என்னும் அரசன், ராமனது தந்தையான தசரதனுக்குக் கொள்ளுத் தாத்தா. அவனது மகள் வழியில் வந்த சந்ததியில் சிபி வருகிறான். இப்படி சிபிக்கும், ராமனுக்கும் ரத்த சம்பந்தம் இருந்திருக்கின்றது. சிபி யயாதியின் பேரன். அவர்கள் இருவரைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது. யயாதி ஒரு காரணமாக தேவ லோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு விடுகிறான். அப்பொழுது தன்னை சிறந்த தவம் உடையவர்களுக்கிடையே தள்ளிவிடுமாறு கேட்டுக் கொள்கிறான். அதன்படி அவன் சென்றடைந்தவர்களுள் ஒருவன் அவன் பேரனான சிபி என்கிறது மகா பாரதம். இதை ராமாயணத்திலும் சொல்லக் காணலாம். ராமனை வன வாசத்திற்கு அனுப்பும் போது, தசரதனுடைய தேரோட்டியான சுமந்திரன் அவர்களை கங்கைக் கரையில் விட்டு விட்டுத் திரும்பினவுடன் தசரதன் அவர்களது நலனைப் பற்றி விசாரிக்கிறார். ராமனது நலத்தைப் பற்றிக் கேட்டால், எப்படி யயாதி தவஸ்ரேஷ்டர்களுடைய மத்தியில் ஆறுதல் அடைந்தானோ , அது போல தானும் ஆறுதல் அடைவேன் என்று சொல்கிறார். அதாவது ராமாயணம், மகா பாரதம் இவற்றுள் வரும் விவரங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடில்லாமல் இருக்கின்றன. உண்மையாக நடந்த சரித்திரத்தை அவை சொல்லியிருந்தாலே இப்படி மாறுபாடில்லாமல் இருக்க முடியும் இப்பொழுது முக்கிய விஷயத்துக்கு வருவோம். சிபிக்கும், ராமனுக்கும், ரத்த சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது. சோழர்கள் தங்கள் சூரிய குல அடையாளத்தையே வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆண் வாரிசு அளவில் மீண்டும், சிபிக்குப் பிறகு சூரிய குல சம்பந்தம் அவர்கள் பரம்பரையில் வந்திருந்தால்தான் தாங்கள் சூரிய குலம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியும். வெறும் வெத்துப் பேச்சுக்காக அவர்கள் சூரிய குலத்துடன் தங்களைத் தொடர்பு படுத்தியிருக்க மாட்டார்கள். மேலும் ராமன் வம்சாவளியில் வந்ததைப் போல, எல்லா மன்னர்கள் பெயரையும் சோழர்கள் செபெப்டுகளில் பொறிக்கவில்லை என்பதையும், உபரி சர வஸு பற்றிய குறிப்பில் கண்டோம். புறாவுக்கு இரங்கிய சிபியின் கதை மிகவும் பிரசித்தமானது. ராமனின் கதை தூங்கெயில் சம்பந்தப்பட்டது. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆதலால் இவர்கள் இருவரையுமே சோழப் பரம்பரையுடன் இணைத்து, சங்கப் புலவர்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிகிறது. இதில் ஒவ்வொரு தமிழனும், திராவிடம் பேசுபவனும், தெரிந்து கொள்ள வேண்டிய விவரம் என்னவென்றால், எந்த யயாதியின் மகள் வயிற்றில் சிபி பிறந்தானோ, எந்த யயாதி ராமனுக்கு எள்ளுத் தாத்தாவோ, அந்த யயாதியை முன்னிட்டு வரும் ரிக் வேதப் பாடல்களில்தான் ஆரிய- தஸ்யு போராட்டம் வருகிறது . அதி மேதாவித்தனமாக மாக்ஸ் முல்லர் 'கண்டு பிடித்த' ஆரிய - திராவிட சண்டை யயாதியின் மகன்கள் காலத்தில் நடந்திருக்கிறது. அது முடிந்து, இரண்டு தலைமுறை கழித்து ராமன் பிறந்து, அவனுக்கு முன் 36 தலைமுறைகள் எந்த அயோத்தியைத் தங்கள் நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்களோ, அதே அயோத்தியில் ஆட்சி புரிந்துள்ளான். அந்த அயோத்தி இன்றைய உத்தரப்ப்ரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் உள்ளது. இவர்கள் சொல்லும் ஆரியப் படையெடுப்பு நடந்தது, இன்றைய பாகிஸ்தானத்தில். ஆனால் அயோத்தி ராமன் ஆரியன் என்பது நம் திராவிடவாதிகள் கருத்து. ராமன் ஆரியன் என்றால், யயாதியின் மகள் வழி வம்சாவளியில் வந்த சிபியும் ஆரியன் அல்லவா? சிபியை முன்னிட்டுத் தங்களைச் செம்பியன் என்று அழைத்துக் கொண்ட சோழர்களும் ஆரியர்கள் அல்லவா? அவர்கள் எங்கிருந்து இந்தியாவில் நுழைந்து, எந்த மக்களை விரட்டி, எங்கே ஆக்கிரமிப்பு செய்தார்கள்? இன்னும் ஒரு விஷயம். மாக்ஸ் முல்லர் தரும் ஆரியப் படைஎடுப்புக் காலம், இன்றைக்கு 3,500 வருடங்களுக்கு முன்னால். அது யயாதியின் மகன்கள் காலத்தில் நடந்தது. யயாதியின் பேரனான சிபிக்குப் பிறகுதான் காவேரி நதியே தமிழ் நாட்டில் ஓடியது என்பது செப்பேடுகள் தரும் செய்தி. அப்படியென்றால், கடந்த 3,500 வருடங்களுக்குள்தான் காவேரி நதி பிறந்திருக்கிறதா?

மோஹஞ்சதாரோ

மொஹஞ்சதாரோ அல்லது மோஹனஸ்ய தரு? ஏறு தழுவும் வழக்கம் தமிழ் நாட்டு மதுரையிலும் இருந்திருக்கிறது. கிருஷ்ணன் வாழ்ந்த மதுராவிலும் இருந்திருக்கிறது. அந்த வழக்கம் சிந்து சமவெளிப்பகுதியிலும் இருந்திருக்கிறது என்பதை, மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள சின்னம் மூலம் அறிகிறோம். மொஹஞ்சதரோ என்னும் இடம் இன்று பாகிஸ்தானில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு பழைய நாகரிகம் இருந்தது என்று 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் சிந்து நதிக் கரையில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் சிந்து நதியின் ஒரு கிளை நதியான ராவி நதிக்கரையில் ஹரப்பா என்னும் இடத்திலும், இதே நாகரிகம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து நதிக்கரையில் இவை காணப்படவே, இங்கு காணப்பட்ட நாகரிகத்தைச் சிந்து சமவெளி நாகரிகம் என்கின்றனர். இந்தப் படத்தில் அந்த இரு இடங்களும் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. இங்கு காணப்படும் நாகரிகத்தின் காலம் சுமாராக, இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களது கருத்து. அதாவது கி.மு.3000 வருட காலத்தில் இந்த நாகரிகம் இங்கு இருந்திருக்கிறது. அதே காலக்கட்டத்தில் ஆரிய- திராவிடப் போரைப் பற்றி உச்சக் கட்டமாக ஆங்கிலேய மொழியியலார் பேசிக் கொண்டிருக்கவே, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் திராவிடர்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்றும், மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் அவர்களை வென்று, விரட்டி விட்டு, அவர்கள் இடங்களில் தாங்கள் குடியேறினார்கள் என்றும் சொன்னார்கள். அப்பொழுது அவர்களிடமிருந்து தப்பிய மக்கள் தமிழ் நாட்டுப் பகுதிகளில் குடியமர்ந்தார்கள். அதனால் சிந்து சமவெளி மக்களான திராவிடர்களே, தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்பது ஐரோப்பியர்கள் செய்த ‘கண்டுபிடிப்பாகும்’. அதை அப்படியே நம்பினவர்கள் நம் தமிழ் நாட்டு திராவிடவாதிகள். நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள கதைகளை அலட்சியப்படுத்திய அவர்கள், தமிழில் இல்லாத திராவிடம் என்னும் சொல்லைப் பிடித்துக் கொண்டு, ஆங்கிலேயன் சொன்ன திராவிடக் கதையை நம்பி, திராவிடர் சங்கம், திராவிடர் இயக்கம் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். முதன் முதலாக திராவிடர் என்ற பெயரைக் கொண்ட ’திராவிடர் சங்கம்’ என்னும் ஒரு அமைப்பு 1912 இல் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் திராவிடன் என்றால் யார், திராவிடம் என்பது என்ன என்ற எந்த ஒரு விவரத்தையும் ஆராயாமல், ஆராயும் முயற்சியும் இல்லாமல், சமூகத்தைப் பிரித்தாளும் ஒரு கருத்தாகவே திராவிடவாதிகள் பயன்படுத்தி வந்தனர். அதன் தாக்கத்திலிருந்து இன்னும் பலர் விழித்தெழவில்லை. ஆங்காங்கே சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சில விவரங்களைக் கொண்டு, அவற்றுக்கும், தமிழ் வழக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு அங்கிருந்துதான் தமிழன் வந்தான் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைக்கச் செய்யும் ஒரு விவரம், ஏறு தழுவுதல் ஆகும். ஏறு தழுவும் முத்திரை கிடைத்த இடம் மொஹஞ்சதாரோ ஆகும். இதைக் கொண்டு மொஹஞ்சதாரோவில் அதாவது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த ஒரு வழக்கம்தான், கிருஷ்ணன் கதையில் வரும் வழக்கம் என்று சொல்லலாமல்லவா என்றும், இதன் மூலம் கிருஷ்ணாவதாரத்தையே சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின்னால் தள்ளவும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கருத்து தவறு என்று காட்டும் விதமாக ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அதிலும் மொஹஞ்சதாரோவில் கிடைத்த ஆதாரங்கள் சுவாரசியமானவை. ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த அதே மொஹஞ்சதாரோ பகுதியில் கிருஷ்ணாவதாரத்தைப் பறை சாற்றும் இன்னொரு ஆதாரம் கிடைத்துள்ளது. அது ஒரு குழந்தை உருவம் கொண்ட முத்திரை ஆகும். இது கிருஷ்ணன் உருவமாகும் என்று ஆராய்ச்சியாளார் திரு என்.எஸ். ராஜாராம் அவர்கள் கூறுகிறார். இ,ஜெ,ஹெச். மாக்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்திரையில் ஒரு சிறுவன் இரண்டு மரங்களைப் பிளப்பது போலவும், அதிலிருந்து இரண்டு மனிதர்கள் வெளி வருவது போலவும் இருக்கிறது. இதைப் போன்ற ஒரு சம்பவம் கிருஷ்ணன் கதையில் இருக்கிறது. உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன், மரங்களில் சிறைப்பட்டிருந்த நளகூபரன், மணிக்ரீவன் என்னும் இருவரை சாப விமோசனம் செய்த காட்சியை இது ஒத்திருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். http://kurukshetra.nic.in/museum-website/archeologicaltreasure.html கி.மு 2600 ஆண்டில் இந்த முத்திரை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குழந்தை கிருஷ்ணன் மரத்தைப் பிளந்த நிகழ்ச்சி. சிந்து சமவெளி நாகரிக காலம் என்பது கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, அதாவது மஹாபாரதப் போர் முடிந்த பிறகு தொடங்கிய நாகரிகமாக இருந்தால்தான் இப்படிப்பட்ட சின்னத்தை உருவாக்கியிருக்க முடியும். ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த, அதே மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிலையைப் பாருங்கள். இந்தப் படத்தை, திராவிட ‘இன’த்துக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ‘திராவிடத்’ தலைவர்களிடம் காட்டுங்கள். பூணூல் போட்ட பார்ப்பான் படத்தை ஏன் காட்டுகிறீர்களே என்பார்கள் அல்லவா? முகத்தில் தாடி, தலையில் ஒரு பட்டை, கையில் தாயத்து போல ஒரு கயிறு, தோளில் அங்கவஸ்திரம் இவற்றையெல்லாம் பார்த்தால் இந்த உருவம் ஒரு அர்ச்சகர் போல இருக்கிறது. திராவிடவாதிகள் நோக்கில் சொன்னால் இது ஒரு ’ஆரியன்’ உருவம்! இந்த உருவத்தின் பின்புறத்தைப் பாருங்கள். தலையில் ஒரு கொண்டை போன்ற அமைப்பு இருந்த அடையாளம் தெரிகிறது. காதருகே மாலை செருகவென்று ஓட்டை இருக்கிறது. இந்த உருவம், ஒரு முனிவராகவோ, அல்லது மதிப்புக்கிரியவராகவோ, அல்லது ஒரு குருவாகவோ இருக்க வேண்டும். இந்த உருவத்துக்கும், திராவிடவாதிகள் உண்டாக்கி வைத்துள்ள திராவிட உருவகத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? இன்னொரு விவரத்தையும் பார்ப்போம். மொஹஞ்சதாரோ என்ற பெயரைப் பாருங்கள். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? இதை மோஹஞ்ஜ- தாரோ (Mohanjo- daro) என்றும், மோயென்ஞ-தாரோ (Moenjo – daro) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம் என்று சிந்து சமவெளிக் கண்டுபிடுப்புகளைப் பதிவு செய்துள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மோஹஞ்ஜ- தாரோ (Mohanjo- daro) என்றால் ‘மோஹனுடைய மேடு’ என்றும் மோயென்ஞ-தாரோ (Moenjo – daro) என்றால் ’இறந்தவர்களது மேடு’ என்றும் பொருள் கொள்கிறார்கள். விவ்ரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும். http://www.mohenjodaro.net/mohenjodaroessay.html இறந்தவர்களது மேடு என்ற பெயர் தோன்றியிருக்க முடியாது. இங்கு இறந்தவர்களது கல்லறைகளும் இல்லை, பலரும் இறந்ததற்கான அடையாளங்களும் இல்லை. ஆனால் மொஹஞ்சதாரோ என்னும் பெயரில் மோஹன் என்ற சொல் இருப்பதை மறுக்க முடியாது. மோஹன் என்பது கிருஷ்ணனது ஒரு பெயர். மோஹன் என்றால் வசீகரிப்பவன் என்பது பொருள். வட மதுரையிலும், பிருந்தாவனத்திலும் சுற்றிக் கொண்டிருந்த பால கிருஷ்ணனுக்கு மோஹன் என்ற பெயரும், கோபால் என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணனது கொள்ளுப் பேரனான வஜ்ரன் என்பவன் கிருஷ்ணனைப் போலவே 16 உருவங்கள் செய்து கோவில் கட்டி ஸ்தாபித்திருக்கிறான். அதில் மோஹன் என்ற பெயர் கொண்ட உருவமும் இருக்கிறது. இங்கு இந்த வஜ்ரனைப் பற்றி ஒரு விவரத்தைச் சொல்ல வேண்டும். கிருஷ்ணன் தமிழ் நாட்டு மாப்பிள்ளை என்று முந்தின கட்டுரையில் சொன்னோம். இந்த வஜ்ரன், தமிழ் நாட்டின் பேரப்பிள்ளை ஆவான். அது எப்படி என்றால், கிருஷ்ணனுக்கும், ருக்மிணிக்கும் பிறந்த மகனான ப்ரத்யும்னனது மகன் வழிப்பேரன் வஜ்ரன் ஆவான். ப்ரத்யுமனது மகனது பெயர் அநிருத்தன். இவன் மனைவி மஹாபலிபுரம் பகுதியைச் சேர்ந்தவள். இவர்களுக்குப் பிறந்த மகனே வஜ்ரன் ஆவான். மஹாபலிபுரம் என்பது மஹாபலியின் ஊராகும். மஹாபலியின் வழி வந்த பாணாசுரனது மகளான உழை (உஷா) என்பவளை அநிருத்தன் காதலித்தான். அதை ஒத்துக் கொள்ளாத பாணாசுரன், அநிருத்தனைச் சிறையில் அடைத்தான். தன் பேரனான அநிருத்தனை விடுவிக்க கிருஷ்ணன் பாணாசுரனது நகருக்கு வந்தான். பாணாசுரனது தலைநகரமான ‘சோ’ என்னும் நகர வீதியில், உலோகத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட குடங்களைத் தலை மீது வைத்துக் கொண்டு நடனம் ஆடினான். இந்த நடனம் குடக் கூத்து என்ற பெயர் பெற்றது. வினோதமான இந்த ஆட்டத்தை அனைவரும் தம்மை மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது, அநிருத்தனை மீட்கிறான். பிறகு அவனுக்கும், உழைக்கும் திருத்தங்காலில் மணம் செய்து வைக்கிறான். இந்த அநிருத்தனுக்கும், உழைக்கும் பிறந்த மகனே வஜ்ரன் ஆவான். கிருஷ்ணன் உலகை விட்டு நீங்கிய பிறகு கிருஷ்ணனது வாரிசாக வட மதுரை நகர் உள்ளிட்ட பகுதிகளை இந்திரப் பிரஸ்த்தத்திலிருந்து (இன்றைய டில்லி) வஜ்ரன் ஆண்டான். இங்கு சொன்ன பாணாசுரன் கதை உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடந்ததாக ஆங்காங்கே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்தக் கதையுடன் தொடர்பு கொண்ட இடங்களெல்லாம் தமிழ் நாட்டில்தான் உள்ளன. பாணாசுரன் என்பவன் மஹாபலியின் வம்சத்தில் வந்தவன். இவன் நரசிம்ம அவதாரத்தில் வரும் பிரஹல்லாதன் வம்சத்தில் வந்தவன். மஹாபலி ஆண்டதால் அந்த இடம் மஹாபலிபுரம் என்ற பெயர் பெற்றது. அதைக் கடல் கொண்டது என்றும், பாணாசுரன் காலத்திலும், கடல் ஊழி ஏற்பட்டது என்றும் புராணச் செய்திகள் உள்ளன. இதனால் பாணாசுரனது நகரம் கடற்கரையை ஒட்டி இருந்தது என்று தெரிகிறது. அது உத்தரப் பிரதேசமாக இருக்க முடியாது. கடல் ஆராய்ச்சி செய்து வரும் க்ரஹாம் ஹான்காக் அவர்கள், இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் மஹாபலிபுரப் பகுதிகள் கடலுக்குள் அமிழ்ந்தன என்கிறார். கடல் மட்ட ஆராய்ச்சி செய்து வரும் க்ளென் மில்னே அவர்களது ஆராய்ச்சியும், இன்றைய மஹாபலிபுரம் பலமுறை கடல் அழிவைச் சந்தித்திருக்கிறது எனபதை உறுதிபடுத்துகிறது. கிருஷ்ணன் குடக்கூத்து ஆடிய மஹாபலிபுரம் இன்று கடல் கொண்ட இடத்தில் இருக்க வேண்டும். மஹாபலிபுரம் பகுதியில் ஆறு கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கடலில் இருக்கின்றன என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. க்ரஹாம் ஹான்காக் அவர்கள், அந்தப் பகுதி மீனவர்கள் உதவியுடன், கடலுக்குள் சென்று முழுகின அடையாளங்களைப் பார்த்த்தாகச் சொல்கிறார். பாணாசுரன் பேரூரில் கிருஷ்ணன் ஆடிய குடக் கூத்தைச் சிலப்பதிகாரமும் சொல்கிறது (கடலாடு காதை - “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்’) அது மட்டுமல்ல, இந்த நடனம், தமிழ் மரபில் உள்ள 11 நடனங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. முந்தின கட்டுரையில் கண்ணன் ஆடிய அல்லியக் கூத்து என்பது, தமிழ் நாட்டுக் கூத்து என்று பார்த்தோம். கிருஷ்ணன் ஆடிய இன்னொரு கூத்தான குடக்கூத்தும், தமிழ்க் கூத்துகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. அதை மாதவி ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. தமிழ் நாட்டுக்கே உரிய கரகாட்டம் எனப்படும் நடன வகை இந்த குடக் கூத்திலிருந்து உருவானது. இந்தக் கூத்து, இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. கிருஷ்ணனும், வஜ்ரனும் இவ்வாறு தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அந்த வஜ்ரன் ஆட்சியில் அமர்ந்தபோது, அவன் மனம் வருத்தத்தில் இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், கிருஷ்ணன் இருந்தபோது மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த வட மதுரையில் வஜ்ரன் காலத்தில் மக்கள் இல்லை. அதனால் அவன் வருத்தமுடன் இருந்ததைப் பார்த்த பரீக்ஷித்து அரசன் (அர்ஜுனன் பேரன். இவனே பாண்டவர்கள் வாரிசாக ஹஸ்தினாபுரத்தில் ஆட்சியில் அமர்கிறான்) சாண்டில்ய மஹரிஷியை அழைக்கிறான். . பகுதி 64 இல், கடம்பனூர்ச் சாண்டில்யன் என்பவர் எழுதிய பாடல் (307) குறுந்தொகையில் இருக்கிறது என்று கண்டோம். சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு. இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்த கோபனது குடும்ப குரு என்று புராணங்கள் சொல்கின்றன. வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல சாண்டில்ய ரிஷியை அழைத்ததால், இந்தத் தொடர்பு உறுதியாகிறது. இந்தத் தொடர்பு உறுதியாவதால், நமக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார் என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் இது. இந்த ஆலயம், நாம் இந்தத் தொடரில் தேடுகிறோமே, தமிழர்கள், மற்றும் எல்லா பாரதீயர்களது மூலம்- அது வந்த வழியைக் காட்டும் ஒரு ஆதாரத்தைக் கொண்டுள்ளது. இங்கு நாம் சொல்லவருவது, சாண்டில்ய ரிஷி, இந்தக் கோவிலை அமைத்தார் என்பதே. தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி, சாப விமோசனம் பெறுகிறான். சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான். சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே, சோமநாதர் என்றழைக்கப்பட்டது. இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம். இதில் நமக்கு ஆச்சரியம் தரும் விவரம் என்னவென்றால், குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில் இடம் பெற்றுள்ள பாடலில், பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே. “வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச் செவ்வாய் வானத் தையெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா” (கு-தொ 307) என்னும் அவரது பாடலில் பெண்களது உடைந்த வளையலைப் போல உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும், அதைப் பெண்கள் வழிபட்டதையும் உவமையாகச் சொல்கிறார். சாண்டில்யருக்கும், சந்திரன் வழிபட்ட சோமநாதருக்கும் தொடர்பு இருக்கவே, சாண்டில்யர் பெயரில் இயற்றபட்டுள்ள இந்தப் பாடலிலும், பிறைச் சந்திரனைப் பற்றிய விவரம் வருவது தற்செயலானது என்று நம்ப முடியவில்லை. அந்தச் சாண்டில்ய மஹரிஷி வஜ்ரனுக்கு ஆலோசனை சொன்னார். அவர் சொன்னவாறு கிருஷ்ணனைப் போன்ற தோற்றம் கொண்ட சிலைகள் பதினாறினை வஜ்ரன் உருவாக்கினான். அவற்றுள் ஒன்று மதன் மோஹன் என்ற பெயர் கொண்டது! அதாவது, மதுரா மக்கள் அறிந்த இளம் வயது கிருஷ்ணனுக்கு மோஹன் என்பது பெயர். அந்த மதுரா நகர மக்கள் துவாரகைக்குக் கிருஷ்ணன் சென்ற போது, அவனுடன் சென்றார்கள். துவாரகை, மற்றும் அந்த நகரம் இருக்கும் குஜராத் மாநிலமெங்கும், சிந்து சமவெளி நாகரிக அடையாளங்களே தென்படுகின்றன. மதுராவிலிருந்தோ, அல்லது துவாரகையிலிருந்தோ, ஒரே மூலத்திலிருந்து வந்த மக்கள், சிந்து நதியைக் கரை ஓரத்திலும் குடியமர்ந்திருக்கின்றனர். கிருஷ்ணன் உலகை விட்டு நீங்கிய பிறகு, அவன் நாட்டு மக்கள், சிந்து நதிக் கரையில் குடியமர்ந்திருக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. மொஹஞ்சதாரோ என்னும் பெயரை ஆராயும் போது, மோஹன் எனப்பட்ட கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட மக்கள் குடியமர்ந்ததால் மொஹஞ்சதாரோ என்ற பெயர் பெற்றதோ என்ற சந்தேகம் எழுகிறது. மொஹஞ்சதாரோ என்ற பெயரில் மோஹன் என்ற சொல் எப்படி வந்தது? கிருஷ்ண லீலைகளான ஏறு தழுவுதலும், மரத்தைப் பிளந்ததும் முத்திரைகளில் எப்படி இடம் பெற்றன? அது மட்டுமல்ல, மொஹஞ்சதாரோ என்னும் பெயருக்கான சமஸ்க்ருத அர்த்த்த்தைப் பாருங்கள். அந்தப் பெயர், மோஹனஸ்ய தாரு (Mohanasya daaru) அல்லது மோஹனஸ்ய தரு (Mohanasya tharu) என்று சொல்லப்பட்டிருக்கலாம். மோஹனஸ்ய தாரு எனபது, நாளாடைவில் மோஹனச தாரு என்றாகி, மொஹஞ்சதாரோ என்றாகி இருக்க சாத்தியம் இருக்கிறது. ’அஸ்ய’ என்னும் 6 ஆம் வேற்றுமை உருபு (சமஸ்க்ருத மொழியில் உள்ளது), பிராகிருதத்தில் ‘ச’ என்று உருமாறும் என்று மொழியியலார் கூறுகிறார்கள். மோஹனுடைய என்னும் பொருள் கொண்ட மோஹனஸ்ய என்னும் சொல், நாளடைவில் அதே பொருளில் ‘மோஹனச’ என்றாகி ‘மொஹஞ்ச’ என்றாகி இருக்கிறது. என்பதில் தாரு என்பதும், தரு என்பதும் சமஸ்க்ருத்த்தில் ஏறத்தாழ ஒரே பொருளில் வருவது. தாரு என்றால் மரத்துண்டுகள். (timber, lumber) தரு என்றால் மரம். இந்த இரண்டு சொற்களுமே பொருந்தும் வண்ணம் மொஹஞ்சதாரோவில் விவரங்கள் இருக்கின்றன. உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன், மரத்தை இரண்டாகப் பிளந்த அமைப்பில் முத்திரை ஒன்று மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளது என்று பார்த்தோம். அதைத்தான் மோஹனுடைய மரத்துண்டுகள் என்னும் பொருளில் மோஹஞ்சதாரு என்றிருக்கலாம். அது நாளடைவில் ‘மொஹஞ்சதாரோ’ என்றாகி இருக்கலாம். தரு என்ற சொல்லையும் பாருங்கள். மோஹஞ்சதரு என்றால் மோஹனுடைய மரம் என்னும் பொருள் தரும். இதைக் காட்டுகின்ற ஒரு சான்று மொஹஞ்சதாரோவிலும், மற்றொரு சான்று அகநானூற்றுப் பாடலிலும் இருக்கிறது.

கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள்

கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள் (Pure Thamizh(Tamil)) words from kanniyakumari கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய தமிழ் சொல்கள் நாம் பல நேரத்தில் இவற்றை மலையாளம் என்று கருதுவோம். சாடு – பாய் (பாய்தல்) ஆதாரம்: காண்க பாடல் 1 (அரிச்சந்திர புராணத்திலிருந்து) உணக்கல் – காய செய்தல் ஆதாரம்: காண்க பாடல் 2 (திருக்குறள்) தகராறு – (ப்ரச்சனை என்று வடமொழியில் பலர் இதை கூறுவார்) அலத்தல், அலப்பு – பேராசை, ஆசைநோய் – ஆதாரம்: காண்க பாடல் 3 (திருக்குறள்) பீடு – பெருமிதம் ஆதாரம்: காண்க பாடல் 4 (திருக்குறள்) பீலி – மயிலிறகு, இறகு ஆதாரம்: காண்க பாடல் 5 (திருக்குறள்) ஓர்மை – உணர்வு, கருத்து, ஞாபகம். ஆதாரம்: காண்க பாடல் 6 (திருக்குறள்) உறைப்பு – திண்ணம் (நிச்சயம்), ஆதாரம்: காண்க பாடல் 7 (பெரியபுராணம்) அற்றம் – இறுதி, முடிவு, கரை ஆதாரம்: காண்க பாடல் 8 (திருக்குறள்) அங்கணம் – உள்முற்றம், கழிவுநீர் மடை ஆதாரம்: காண்க பாடல் 9 (திருக்குறள்) வெதுப்பு – சூடாக்கு ஆதாரம்: காண்க பாடல் 10 (கம்பராமாயணம்) பாடல் 1 அதிபார தனபார அதிரூப மலர்மானை அனையாய் இவன் நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத சிறை வாவியில் மதியாமல் வலைபீறி வேடிபோன பருவாளை வளைபூ கமேல் குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு குடநா டனே - அரிச்சந்திர புராணம் 322 பாடல் 2 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். - திருக்குறள் பாடல் 3 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - திருக்குறள் 1303 பாடல் 4 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை - திருக்குறள் 1014 பாடல் 5 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். - திருக்குறள் 475 பாடல் 6 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. பாடல் 7 நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய் நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன் ஒன்ரியாயமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி நுறைப்பாலே வென்றவர்தந் திருபேரோ வேறொருபேர் எனவெகுள்வார் - பெரியபுராணம் 1795 பாடல் 8 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - திருக்குறள் 421 பாடல் 9 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள - திருக்குறள் 720 பாடல் 10 வந்து கார் மழை தோன்றினும், மா மணிக் கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்; இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும் வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள் - கம்பராமாயணம் 2811 திரிந்த தமிழ்சொல்கள் சவுட்டு = சுவட்டு(சுவடு ஏற்படச்செய்) –> சவுட்டு(அகர உகர இடமாற்றம்) • போல்மம்: மிஞிறு = ஞிமிறு; ஒலுங்கு = கொசுகு துறையல் = திறவுகோல் –> துறையல் தாக்கோல் = தாழ்கோல் –> தாக்கோல் சாணாங்கி = சாணகம் –> சாணாங்கி உச்சை = உச்சி பொழுது –> உச்சை பொழுது –> உச்சை வெள்ளனே = காலையிலே சால்ரா வண்ணம் = பருமன் (நிறம் எனும் பொருள் தவறானது வடமொழியான வர்ணத்திலிருந்து வந்தது) • இதற்கு பொருட்டு என்று பொருள் உண்டு • பொருட்டாக கொள்ளப்படும் அளவிற்கு பருமன் உடையது எனும்பொருளில் வண்ணம் எனும் கையாளப்படுகிறது • ஓரளவிற்கு பருமனோ மதிப்போ இருந்தாலொழிய மக்கள் எதையும் பொருட்டே கொள்ளார் .... இங்கே பதியப்பட்டது கசடற தமிழ் கற்போம்

வெள்ளி, 9 டிசம்பர், 2011

நாரதர் கண்டுபிடித்த - கையாண்ட- விமானம்.

http://rbala-rbalarbalagk.blogspot.com/2010/08/aviation-in-ancient-india.html பழங்கால விமான இயல் (Aviation in ancient India). நாரதர் கண்டுபிடித்த - கையாண்ட- விமானம். வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது, அயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா? அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா? அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றம் சரித்திரக் குறிப்புகளில் உண்டா? என்று கேட்டார், ராமாயணத்தில் இலங்கையின் அரசன் குபரனோடு போர் புரிந்து அவனது புஷ்பக விமானத்தை கைப்பற்றிய விதமும் அந்த புஷ்பக விமானத்தில் ஏறி இலங்கை வேந்தன் பல உலகங்களை வெற்றி கொண்டதையும் அதே போன்று மஹாபாரதத்தில் பாசுபதாஸ்திரத்தை பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற காண்டீபன் ஒரு விசித்திரமான பறக்கும் வாகனத்தில் ஏறி தேவலோகம் மற்றும் பல உலகங்களுக்கு சென்று வந்ததைப் பற்றியும்குறிப்புகள் இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன் எனது பதிலால் அவர் ஓரளவு திருப்தி அடைந்தாலும் அந்த பதில். எனக்கு அவ்வளவாக திருப்திகரமாக தோன்றவில்லை, எனவே பூமி வாசிகளின் அயல்கிரக பயணத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது. பலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன, இதில் பெரும்பாலனவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கி விடுகிறோம் இந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து இருக்கின்றோம், புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்யமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன, அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, இந்தப்படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது, ஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது, இதே போன்று டில்லிக்கு அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்யககூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள் இது அந்தக்கால அஸ்த்திர வல்லுநர்கள் அணு ஆற்றலை பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது, இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை மாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி எஞ்சின். மின்சாரம். வயர்லெஸ் ஆகியவவைகள் வேதகாலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாக தெரிந்து இருந்தது, வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம், அவர்கள் கண்டுபிடித்து கையாளத நவீன சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார், மாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கை வாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல, மிகச்சிறந்த ஆராயச்சியாளர் வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர் எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் நமது வேதங்களிலும் வெறுமனே இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை, விவசாயம் ரசாயனம் வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறியுள்ளார்கள். ருக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்யாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நம் இஷ்டப்படி ஒட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது வேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன, ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை ஷப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறைப்பற்றியும் அவைகளின் செயல்திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார், அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் “சக்தி சூக்தம்” என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் “கௌதாமினி காலா” என்ற நூலும் ஷக்கானந்தரின் “வாயுதத்துப் பிரகரணம்” நாரதரின் “வைஸ்வனா தந்திரம்” மற்றும் “ஆகாச தந்திரம்” போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் “விமானச் சந்திரிகா” “யந்திர கல்பம்” “யானபிந்து சேதாயன” “பிரதிபிகா வியோமயானர்ஹா” “பிரகாலம்” ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்ககள் பற்றி விரிவாக கூறுகிறது, இதில் சிலவற்றை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதாலேயே பூமிவாசிகளின் அயல்கிரக பயணம் உண்மைதான் என்பதை உறுதியுடன் புரிந்து கொள்வீர்கள், மேலும் இதில் ஒரு விந்தையான உண்மையையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ். மகிரிஷி இரண்டு அத்யாயங்களில் விரிவாக கூறுகிறார், விமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாக கற்றுத் தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறவது இன்றும் பொருந்தும் அல்லவா, இனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம் 1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது, 2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம், 3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாக கொண்டு இயக்கக் கூடிய விமானம், 4. கிதோகமா : சிகி. சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெறும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம், 5.ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம், 6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம், 7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய. பாத்ரா. ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக கூடிய விமானம், 8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம், இது தவிர “ஷக்டிங்கர்ப்பம்”, “விக்யுதம்”. “துருபதம்” “குண்டலிகமும்” போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார் இன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம். லோபகர்ப பிரசரணம். அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலேயே நிலையாக நின்று பூமியில் ஏற்படும் சீதோஷண மாற்றங்கள் கணிம வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசர்களுக்கு தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது இது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமனாத்திற்கு தகவல் சொல்லும் “அநுக்கிரம ஷாபிதா” என்ற கருவி இருந்ததாக கௌதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார் “ரூப கார்ஷண ரகசியம்” என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின் வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத்துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார் “தீஷமபதி” என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே “சதபிதா” என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள “அபஸ்மாராதாபம்” என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி “ஷர்ஷன்” என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பதில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் “திக்பிர தர்ஷண” ரகசியம் என்ற நூல் கூறுகிறது இன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன பழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவே நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா? என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும். அதற்கான பதில் எந்த புறக்கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம் அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும் பின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது, அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் , பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்தில் ஐயமில்லை அந்த மந்திரத்தில் எனக்கு நல்ல பயிற்சிகளையும் அனுபவமும் குருஅருளால் உண்டு என்றாலும் அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை, இதை நான் இங்கே குறியிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன என்பதாலேயோ குருமார்கள் கூறுகிறார்கள் என்பதாலேயோ நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை அதை நடைமுறைப்படுத்தி முழுமையான அனுபவம் பெற்று திருப்தியுண்டான பின்னரே ஏற்றுக் கொள்வது என் வழக்கம் இதன் அடிப்படையில் ஆகாசாகாமினியை பிரயோகப்படுத்தி நான் சுயமாக அனுபவம் பெற்றதனால் சூட்சம சரீரத்தில் அயல்பிரதேசபயணம் என்பது அப்பழுகற்ற உண்மை என்பதை உறுதிப்பட என்னால் கூற இயலும் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தேடுவதில் முனைப்பாக இருக்கும் நமது ஆராய்ச்சியாளர்கள். நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

திங்கள், 5 டிசம்பர், 2011

நாளைய இந்தியா-அறிஞனின் அற்புதப்பேச்சு

“நீ தனித்துவமானவன், என்பதை நீ உணரவேண்டும். உன்னை பற்றி நீ உணர்ந்ததை காட்டிலும், நீ மேலானவன் என்பதை உணர் உன்னை பற்றி நீ அறிந்த அடுத்த வினாடி, உனது செயல் நீ எண்ணியதை காட்டிலும் மேலாக சாதிக்க வைக்கும் நல்வாழ்வும், நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம் அறிவு அற்றம் காக்கும் இந்த கட்டுரைகளின் படைப்பாளிகள் தமிழ் திறனை, ஆராய்ச்சியை, கவிதை நடையை, மொழியின் திறனை, கற்பனை வளத்தை, வாழ்வின் சூழலை, இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களை, உலகமயமாகும் தமிழை, கணினித்துறையில் பல்வேறு பரிணாமம் பெற்ற தமிழை, பிற மொழிகளுடன் தமிழ் எவ்வாறு சமூக மாற்றத்தில் பங்கு பெற்றுள்ளது என்பதைப் பற்றியும், அழகாக தொகுப்பாசிரியர் திரு கோ. பாலச்சந்திரன், IAS, அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள். இங்கு கணிணித்தமிழில் எப்படி பல்வேறு வடிவங்கள் பெற்று இன்றைக்கு யுனிகோடாக வடிவம் பெற்றுள்ளது என்பதை பற்றியும், இன்றைக்கு உள்ள Level 2 Complex Script என்ற முறையில் தமிழ் யுனிகோடும், அதன் பயன்பாடும் மற்றும் அதில் உள்ள குறைபாடுகளையும், TACE-16 என்ற முறையில் உருவாக்கினால் அது எப்படி கணிணி மட்டுமல்ல, ipad, iphone, smart phone, android போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்பதைப்பற்றியும் ஓரு விவாதத்தை தொடங்கி இருக்கிறது. இதன் முடிவு 6 கோடி மக்களின் பயன் பாட்டுக்கு உபயோகமானதாக மாறும் என்பது திண்ணம். எனவே இப்படிப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை படைத்த அத்துனைபடைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில், “இதுவரை, இன்று, இனி...” என்ற புத்தகத்தின தொகுப்பாளார் திரு கோ.பாலச்சந்திரன் அவர்களிடம், நான் ஓர் எண்ணத்தைபகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தமிழ் 2010 என்ற கருத்தரங்கத்தில் கொடுக்கப்பட்ட 7 தலைப்புகளில், இனிவரும் கருத்தரங்களில், இன்னும் இரண்டுதலைப்புகளை நீங்கள் சேர்க்க வேண்டும், அதாவது, ஒன்று தமிழ் மக்களின்வாழ்க்கை தரத்தையும், தமிழ் மக்களின் சிறப்பியல்புகளையும் சித்தரிப்பாக அமையவேண்டும், இரண்டாவது தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் பத்துஆண்டுகளில் எவ்வாறு மேம்பட வேண்டும், எப்படி ஓரு வழமான தமிழகத்தைநாம் காண முடியும் என்ற ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட வேண்டும்.அதை திரு கோ.பாலச்சந்திரன் அவர்கள் அடுத்த புத்தகமாக வெளியிடவேண்டும்.இம்முயற்ச்சிக்கு தில்லி தமிழ் சங்கம் உறுதுணையாக இருக்க வேண்டும். உலகின் கலங்கரை விளக்கம் அதற்கு முன்பாக, இங்கு தில்லி தமிழ் சங்கத்தில் கூடியிருக்கும் தமிழ் பெரியோர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், ஓரு நிகழ்ச்சியை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்று தைவான் நாட்டின் தலைநகரம், தைபேயிற்கு சென்று இருந்தேன். அங்கு நடைபெற்ற 30 வது உலக கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்தும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். சீனா நாட்டை சேர்ந்த கவிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். அதில் நான் கண்ட நிகழ்ச்சியை தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்ன ஓரு நிகழ்ச்சி. அதாவது என்னுடைய நண்பர் கவிஞர் யூசி, அவர்கள் மேடையேறினார். அவர் சொன்னார், நான் 2005 ம் வருடம் இந்தியாவிற்கு சென்றேன், அங்கு என் நண்பர் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்தார். அவரிடம், கவிதையை பற்றி உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, காலம் என்னிடம் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பிறந்து, இந்த உலகத்திற்கு உலக திருமறை வழங்கிய திருவள்ளுவரின், திருக்குறளை எனக்கு வழங்கினார். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை எனக்கு வழங்கினார். அதை கடந்த 5ஆண்டுகளாக படித்து உள்வாங்கி, பல்வேறு திருக்குறளின் ஆங்கில உரை நடைகளை படித்தேன், எவ்வளவு ஓரு அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் அவை. அறம், பொருள், இன்பத்தை பற்றி அவர் எழுதிய 2 வரி கொண்ட குறள், 2200 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த தமிழ் சமுதாயத்தின் மாட்சிமையை, அறிவார்ந்த சமூகத்தின் மகிமையின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது, நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பற்றியும், முழு உலகத்திற்கும் பொருந்தும் வகையிலும், அது இக்கால உலகத்திற்கும் முக்காலும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன் என்றார். அதற்கு அடுத்து சொன்னார், 2005ல் எனது நண்பர் கலாம், திருக்குறளை பரிசளித்து சொன்னார், இதை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்று. ஆனால் திருக்குறளை படிக்க படிக்க, எனது நண்பர் கலாம் சொன்னது என்னை தூங்க விடவில்லை, இது சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக அதை சீன மொழியில், மொழிபெயர்த்து இருக்கிறேன், அதை இன்றைக்கு எனது நண்பர் கலாம் முன்னிலையில், இந்த 30வது உலக கவிஞர்கள் மாநாட்டில் வெளியிடுகிறேன் என்று சொன்னார். உடனடியாக, அங்கு கூடியிருந்த அத்தனை உலக கவிஞர்களும், அறிஞர் பெறுமக்களும், ஆரவாரத்துடன் திருக்குறளின் சீன மொழி பெயர்ப்பை வரவேற்று அங்கிகரித்தார்கள். இது புத்தகமாக 2011ஜனவரியில் சீனா முழுவதும் மற்றும் எங்கெல்லாம் சீனா மொழியில்பேசுபவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அதன் மகிமையைவெளிப்படுத்தி மக்களின் வாழ்வை வளப்படுத்தும். இந்த நிகழ்ச்சி ஓன்றே எப்படிதமிழ் மொழியால் தமிழர் படைத்த திருக்குறள் உலகத்திற்கு ஓரு கலங்கரைவிளக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படி பட்ட தமிழ் வளர்த்த தமிழர்கள்,எப்படி இருக்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் கூடிய உழைப்பே உயர்வு தரும் அதாவது இன்றைய சூழலில், தமிழர்களின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும். எப்படிப்பட்ட வாழ்வு தமிழுக்கும், தமிழர்க்கும் ஏற்றும் தரும். இன்றைக்கு இருக்கும் 6 கோடி தமிழ் மக்கள், 2020ல் 10 கோடிக்கு மேலாக உயர்ந்து இருப்பார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை உயர்ந்து சிறப்பான வாழ்க்கை வாழவேண்டுமானால், என்ன வேண்டும். சிறப்பாக வாழ முதலாவதாக சிறந்த கல்வி அவசியம், கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு அவசியம், வேலை வாய்ப்பு மட்டுமல்ல, பண்டைத்தமிழர்களுக்கிருந்த நற்பண்புகள் அவசியம், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற இலட்சியம் வேண்டும், தனது செயலில் நேர்மை வேண்டும், பகைக்கு அஞ்சா விவேகத்துடன் கூடிய வீரம் வேண்டும், அனைவரையும் மதிக்கும் பண்பு வேண்டும், வாழ்க்கையில் கோபத்தை தவிர்க்க வேண்டும், பயணற்ற வார்த்தைகளை சொல்லாமல் இருக்க வேண்டும், அரசியலில் நேர்மை, நாணயம் வேண்டும், தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுக்கும் தலைமைப் பண்பு வேண்டும், நமது முன்னோர்கள் காட்டிய அறவழியை நமது குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும், வாழ்க்கையில் உழைத்து செல்வம் சேர்த்தோர்களுக்கு ஈகைப்பண்பு வேண்டும், ஈகை அறிவுச்செல்வத்தை தருவதாக அமையவேண்டுமேயல்லாம், தானமாக கூடாது. இதற்கெல்லாம் ஓரு அடிப்படை பண்பு வேண்டும். என்ன அந்த அடிப்படைப்பண்பு அது. அது தான் நல்லொழுக்கம். நல்லொழுக்கம் என்றால் என்ன? நல்லொழுக்கம் எண்ணத்திலே நல்லொழுக்கம் இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும் நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும் குடும்பத்தில் சாந்தி நிலவினால் நாட்டில் சீர் முறை உயரும் நாட்டில் சீர் முறை உயர்ந்தால் உலகத்தில் அமைதி நிலவும். எல்லாவற்றிற்கும் அடிப்படை நல்லொழுக்கம் என்பது இந்த சிறு கவிதை மூலம் உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன். நல்லொழுக்கத்துடன் உழைத்தால், நல்ல எண்ணங்கள் உண்டாகும், நல்ல சிந்தனையால், நல்ல கவிதைகள் பிறக்கும், தமிழ் மொழி இலக்கியம் வளரும், தமிழ் விஞ்ஞானம் வளரும், தமிழர் தம் தொழிலில் சிறந்து விளங்குவர், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கும். நல்லொழுக்கும் உள்ள தமிழகம் உழைப்பால் சிறப்பாக வளரும். திருவள்ளுவர் கண்ட திருக்குறள் போல் மற்றுமொறு மறுமலர்ச்சிக்காவியம் பிறக்கும், தொல்காப்பியத்தைப்போல் தமிழ் இலக்கிய படைப்புகள் பலபல உண்டாகும். ஐம் பெரும் காப்பியங்கள் கண்ட தமிழகம் பல அறிய காப்பியங்களை வடிக்கும், தமிழ் மொழி சிறக்கும். அப்படிப்பட்ட தமிழகம் உருவாக வேண்டுமானால் நாம் ஓவ்வொருவரும் நல்லொழுக்கத்தை நமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளுக்கு கற்று தரவேண்டும். வளர்ந்த நாடும் மக்களின் நல்ல பண்புகளும் நம் நாடு மிக வேகமாக வளர்ந்த நாடாக உருவாக எல்லாத் திறமைகளும், இயற்கை வளங்களும் உள்ளன. அரசியலில் இருப்பவர்கள், பதவியில் இருப்பவர்கள், அறிவு ஜீவிகள், தொழில் நிறுவனர்கள், செய்தி தொழில் நிபுணர்கள் இப்படிப் பலர் தங்கள் முழுத் திறனயும் கொண்டு இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தால், வளர்ந்த நாட்டைச் சீக்கிரமே உருவாக்க முடியும். நல்ல எண்ணங்கள மட்டுமே நாம் விதைப்போம். நல்லவைகளைப் பற்றியே நாம் சிந்திப்போம். நல்ல சமுதாயம் உருவாகும். இதுதான் நாம் இளய சமுதாயத்திற்கு உருவாக்கித்தரும் சொத்து.. இத்தருணத்தில்,, நாட்டின் பரம்பரை சொத்தாக திகழும் நல்ல எண்ணங்களை, இலக்கியத்தின் வாயிலாக எப்படி நாம் அறிகிறோம் என்பதை பற்றி நாம் பார்ப்போம். தொல்காப்பியரின் ஓர் அறிவுரை இன்றைய சூழலில் நாட்டிற்கு, தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது. அதாவது எப்படிபயனுள்ளவற்றை பேசவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும் என்றுஅழகாக கூறுகிறார். தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா 109 இல் ஒரு அழகான விடை கண்டேன். ”சிதைவு எனப்படுவவை வசை அற நாடின் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள் இலமொழிதல், மயங்கக் கூறல், கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல் பழித்த மொழியான் இழுக்கம் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனக்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்” ---------(பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா-109). இந்த நூற்பாவின் கருத்து என்னவென்றால் (தொல்காப்பிய பூங்காவிலிருந்து ) முன்பு கூறியதையே பின்பும் கூறுவது என்ற கூறியது கூறல், முதலில் ஒன்றைக் கூறி விட்டுப் பிறகு அதற்கு முரணாகக் கூறல், கூற வேண்டியதை நிறைவாகக் கூறாமல் குறைவாகக் கூறல், ஒன்றை மிகைப்படுத்திக் கூறல், பொருளற்ற செய்திகளைக் குறிப்பிடுதல், கேட்போரோ, படிப்போரோ குழப்பமடையுமாறு விளக்குதல், கேட்போர் செவிக்கு இனிமை கிட்டாத வண்ணம் சொல்லுதல், பெரியோர் பழித்திட்ட சொல்லை; அதன் இழிந்த நிலை கருதாமல் எடுத்தாளுதல், நூலின் வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய அறிவுரை பற்றிக் கவலையுறாமல், தன் கருத்தை எப்படியும் புனைந்துரைத்து இடைச் செறுகலாற்றுதல், படிப்போரும், கேட்போரும் சுவைத்திட முடியாத பழுதுற்ற நிலையில் படைத்தளித்தல் இந்தப் பத்து குற்றத்தைப் பேச்சிலும், எழுத்திலும், வாழ்விலும் நீக்கி விடவேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதுவும் இச்சமயத்தில், நம் நாட்டிற்கு மிகவும் முக்கியம். திருவள்ளுவர் 2200 ஆண்டுகளுக்கு முன், சொல்கிறார். சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (200) பொருள்: நாம் சொல்லும், ஒவ்வொரு சொல்லும், நமக்கும், பிறருக்கும்நன்மையையும், பயனும் தருவதாக அமைய வேண்டும். பயன் இல்லாதசொற்களை ஆராய்ந்தறிந்து, விலக்கிவிட வேண்டும். ஓரு அரும்பெரும் விஞ்ஞானி பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் அவர்களுடன், நானும் எனது சக நண்பர்களும் ஓரு முக்கியமான பணி செய்து கொண்டு இருந்தோம். ஓவ்வொருநாளும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அவர் எங்களிடம் ஓரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார், ஆனால் அவர் பேசுவது ஓரு சில வார்த்தைகளே என்றாலும், அதன் முடிவு வெளிப்பட்டுவிடும். ஆனால் நாங்கள் பேசுவதே மிகவும் அதிகம். எனவே ஓரு விஷயத்தை பற்றி பேசும் முன்பு சிந்தித்தால், அதைப்பற்றி ஞானம் வந்தடையும், ஞானம் உண்டானால் பயனற்ற சொற்கள் தோன்றாது, பயனற்ற சொற்கள் இல்லையென்றால் அங்கு காரியம் நடக்கும், செயல் நடக்கும், மிகப்பெரிய அரும் பெரும் செயல்கள் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை ஏடுத்து செல்லும். அதனால் எல்லோருக்கும் நன்மை விளையும். எனவே நாம் பயனற்ற வார்த்தைகளை பேசாமல், நமக்கும்,நாட்டிற்கும் பயனுள்ள விஷயங்களை மட்டும் சிந்திக்க வேண்டும், பேசவேண்டும் அதை திறம்பட செயல் படுத்த வேண்டும். அப்படிப்பட்ட இளைஞர்களால் மட்டுமே, இந்தியாவின் 2020க்குள் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நனவாக்க முடியும். இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும் ,இந்தியா 2020ல் வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்பதே நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால், பொருளாதாரம் வளமிக்க, 100 கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமென்பதே நமது நாட்டின் இலட்சியம். வேலை இல்லை என்ற நிலைமை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை. இதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இளைய சமுதாயம், எண்ண எழுச்சியுள்ள இளைய சமுதாயம் நாட்டின் ஒரு அரும்பெரும் செல்வமாகும். 2020ல் எப்படி இந்தியா ஓரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை நான் பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால் இலட்சியம் நிறைவேறும். 1. கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 2. சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 3. விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 4. பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 5. விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லூநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு இடமாக, நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 6. தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைபடுத்தப் பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 9. ஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறுநடைபோடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். மன எழுச்சியடைந்துள்ள 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். பூமியில் பிறக்கும் எந்தக் குழந்தையும் வாழ்க்கையில மிகப் பெரிய அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும், விளையாட்டு வீரனாகவும், கை தேர்ந்த கலைஞனாகவும், மிகச் சிறந்த எழுத்தாளனாகவும், கவிஞனாகவும், ஓர் தலைசிறந்த தலைவனாகவும், எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல மனிதனாக வரவேண்டும் என்பது தான் பெற்றோர்களது கனவாகும். அந்தக்கனவு நனவாவதற்கு அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும், அந்தக் குழந்தைக்கு அறிவூட்டி, ஆற்றல் உற்றி வளர்க்க கூடிய சூழல் தான் அந்தக் குழந்தையை நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும், விவேகமானவர்களாகவும் மாற்றுகிறது. அதற்கு அடிப்படை காரணமாக அமைவது தான் புத்தகங்கள். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும். சிலப்பதிகாரம் கூறுகிறது, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும். ஆட்சி பீடத்தில் இருந்து அரசாட்சி நடத்துபவர்கள், நாட்டை நிர்வகிப்பவர்கள், நீதி பாரிபாலனம் செய்பவர்கள், தவறு இழைத்தால், அந்த அறமே, (தர்மம்) எமனாக மாறி விடும் என்று தமிழ் இலக்கியம் நமக்கு முன்பே வழி காட்டியிருக்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர்,இளங்கோவடிகள், இந்தமூவரும் வெவ்வேறு, காலங்களில், மக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்க்கும்,மிகவும் நல் ஒழுக்கத்துடன் இருப்பதற்க்கும், நல்ல செயல்களை செய்வதற்கும்,அருமையாக மக்களுக்கு புரியும் படி அறிவுரைகள் கூறியுள்ளார்கள். அதாவதுநேர்மை, நல்லொழுக்கம், தெளிவான எண்ணம், நாம் செய்யும் செயலில் நேர்மைஇருக்க வேண்டும் என்பதை விளக்கி கூறியுள்ளார்கள். அதாவது ஒரு வளமானஇந்தியா, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், அறிவு, மற்றும்நல்லொழுக்கத்திலும் உயர்ந்து, ஒரு நல்ல மேன்மையான மக்களாக வாழ்ந்துகாட்ட வேண்டும். மனசாட்சியின் மாட்சி இன்றைய நம் நாட்டின் சூழ்நிலையை பார்க்கும் பொழுது நாம் ஓவ்வொருவருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றும், நம் நாடு இன்னும் 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வளமான நாடாக மாறலாம். ஆனால் நம் இளைய சமுதாயம் எல்லோரும் நல்லொழுக்கம் உள்ள நல்ல சமுதாயமாக மாறவேண்டும், அப்படி உழைத்து, நல்லொழுக்கத்துடன் வாழும் சமுதாயம் மட்டுமே, நம் எதிர்கால சந்ததிகளுக்கு ஓரு நல்ல நாட்டை, அமைதியான தேசத்தை, வளமான தேசத்தை விட்டு செல்ல முடியும். இந்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக, நான் படித்த புத்தகத்தில் இருந்து ஓரு சம்பவத்தை உங்களுக்கு விளக்குகிறேன். சமீபத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை சேர்ந்த துறவி சமர்பண் எழுதிய “Tiya : A Parrot’s Journey Home” என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தக்ம் தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நாம் ஓவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் துறவிசமர்பண். அதாவது தியா என்ற பச்சைக்கிளியின் வாழ்க்கை பயணத்தில், நடந்தபல சுவையான நிகழ்ச்சிகளை, அருமையாக விளக்கி உள்ளார். அதை நான்உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை பச்சைக்கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் உணர்வார்கள். அதில் என்னை கவர்ந்த ஓரு முக்கியமான செய்தி என்னவென்றால், “நீ தனித்துவமானவன், என்பதை நீ உணரவேண்டும். உன்னை பற்றி நீ உணர்ந்ததை காட்டிலும், நீ மேலானவன் என்பதை உணர் உன்னை பற்றி நீ அறிந்த அடுத்த வினாடி, உனது செயல் நீ எண்ணியதை காட்டிலும் மேலாக சாதிக்க வைக்கும்”. இப்பொழுது எனக்குள் ஓரு எண்ணம் தோன்றுகிறது. எப்படி நாம் நமது மனசாட்சியை பக்குவப்படுத்துவது. என்று என்னை நானே கேட்டேன். மனசாட்சி நம்மை நல்வழிக்கும் இட்டுச்செல்லும், இல்லை என்றால் அது விரும்பிய வழிக்கும் இட்டுச்செல்லும், என்பதை இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் விளக்குகிறது. அதாவது அதில் அடிமைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கு கிடைத்த அருமையான செய்தி என்னவென்றால் “நீ தனித்துவமானவன், என்பதை நீ உணரவேண்டும். உன்னை பற்றி நீ உணர்ந்ததை காட்டிலும், நீ மேலானவன் என்பதை உணர் உன்னை பற்றி நீ அறிந்த அடுத்த வினாடி, உனது செயல் நீ எண்ணியதை காட்டிலும் மேலாக சாதிக்க வைக்கும்”. இப்பொழுது எனக்குள் ஓரு எண்ணம் தோன்றுகிறது. எப்படி நாம் நமது மனசாட்சியை பக்குவப்படுத்துவது. என்று என்னை நானே கேட்டேன். மனசாட்சி நம்மை நல்வழிக்கும் இட்டுச்செல்லும், இல்லை என்றால் அது விரும்பிய வழிக்கும் இட்டுச்செல்லும், என்பதை இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் விளக்குகிறது. அதாவது அதில் அடிமைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கு கிடைத்த அருமையான செய்தி என்னவென்றால். “அற்ப காரண, காரியங்களுக்கு கண்ணீர் விட்டு பொழுதை கழிப்பதைக்காட்டிலும், வாழ்க்கையில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் அதிகம். இப்படி பட்ட இடத்தை விட்டு வெளியேறு சீக்கிரம்.” என்ன ஓரு அருமையான செய்தி. எண்ணம் பெரிதாக இருந்தால் நம்மால் சாதிக்க முடிவது அதிகம். இந்த புத்தகம் எதைப் பற்றி பாடுகிறது “வாழ்வின் கசப்பான மற்றும் இனிப்பான அனுபவங்களுக்கும், வாழ்வின் சந்தோஷத்திற்கும், துக்கத்திற்கும், வாழ்வின் சிரிப்பிற்கும், கண்ணீருக்கும், வாழ்வின் இன்பத்திற்கும், வலிக்கும் துன்பத்திற்கும், கடலின் பேரலைகள் எப்படி கடலின் ஆழத்தை கண்டதில்லையோ அதைப்போல் இவை எல்லாவற்றிற்கும் நாம், நாம் மட்டுமே, காரணம்” முடிவுரை தியா என்ற புத்தகத்தில் ஓரு முக்கிய கருத்து என்னவென்றால், அந்த பச்சைக்கிளியின் கருத்தாக, துறவி சமர்ப்பண் சொல்லுகிறார், நீ உன்னதமானவன் என்பதை உணரவேண்டும் என்று. துறவி சமர்பண் எழுதிய “Tiya : A Parrot’s Journey to Home” என் மனதை மகிழப்படுத்தியது, மனசாட்சியின் மனதை பற்றி அறிந்து கொள்ள உதவியது. மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர் விட்டு வழிகாட்டும் ஓரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்கு புறம்பாக சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக்காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஓன்று, தப்பையும், சரியான வற்றையும் நமக்கு சரியான நேரத்தில் உணர்த்தும் ஓரு அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களை பதிவு பண்ணும் ஓரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மை பயமுறுத்தும், நம்பிக்கையை கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மை கட்டுக்குள் வைக்கும். ஓரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை, மறுமுறை உறுத்தினால் தண்டனை. கோழை கேட்பான், இது பாதுகாப்பானதா, பேராசாக்காரன் கேட்பான் – இதனால் எனக்கு என்ன லாபம் என்று, தற்பெறுமைக்காரன் கேட்பான், நான் மகானாக முடியுமா என்று, இச்சையானவன் கேட்பான், அதில் என்ன சந்தோஷம் உண்டு என்று, ஆனால் மனசாட்சி ஓன்று தான் கேட்கும், அது சரியா என்று, ஆனால் ஓட்டு மொத்தமான பதில் என்ன – தன் மனசாட்சி படி நேர்மையாக நடப்பது ஓன்று தான். எனவே இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள் தன் மனசாட்சி படி நேர்மையாக நடப்பது ஓன்றுதான், நாளைய இந்தியாவை நிர்மாணிக்கமுடியும். அப்படிப்பட்ட மனசாட்சி கொண்ட இளைஞர்களால், தலைவர்களால் மட்டுமே இந்த நாட்டை வளமான நாடாக மாற்ற இயலும். எனவே தமிழ் 2010 என்ற கருத்தரங்கம் போன்று பல்வேறு கருத்தரங்கள், முயற்சிகள், விழிப்புணர்ச்சி முகாம்கள் நாடெங்கும் நடந்து, தமிழ் மக்களை சமுதாயமாற்றத்திற்கு வித்திடவேண்டும், அப்படிப்பட்ட அறிவார்ந்த முயற்சியை ஆக்கமும் ஊக்கமும் அளித்து, வளப்படுத்த வேண்டும் என்று இங்கு கூடியுள்ள தமிழாய்ந்த ஆன்றோர்களையும், சான்றோர்களையும் கேட்டுக்கொண்டு, உங்களை அனைவரையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.