வெள்ளி, 8 ஜூலை, 2011

தெய்வம்

பாட்டி: கதைக்களஞ்சியம், நடமாடும் வைத்தியசாலை
அம்மா: ஜீவனுள்ள அன்புத்தெய்வம்
சகோதரி: சரி நிகர் சமம்என்ற நோக்கில் அதிகாரம்செய்தே வாழும் குட்டிதேவதை
மனைவி: அன்புத்தெய்வம் தந்த பரிசு- சமயத்தில் இடித்துரைக்கும் நல்லாசிரியர்.
மகள்: மழலைமொழி பேசி ,வாழ்ந்துகொண்டிருக்கும்இவ்வுலகிற்குப் பொருள் சொல்பவள்.
தோழி : அலுவலக அன்புத்தொல்லை.பிரச்சினைகளைத்தீர்த்துவைக்கும் சமய சஞ்சீவி.

பெண்


வேறுபட்ட பரப்பும், முக்கியத்துவமும் உடைய இடங்களோடு, தொடர்புபடுத்தி ஒரு பண்பாட்டு கட்டத்தை விவரிக்கும் பொழுது, இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில், அடுத்தடுத்து பல பண்பாடுகளையுடைய மக்கள் முன்பு வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். சங்ககாலமும் இதற்கு விதிவிலக்கல்ல.

சங்ககாலத்தில் ஐவகை நிலங்களையும் ஐவகைப் பண்பாடுகளையும் காண்கிறோம். திணை என்பது நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. அகத்திணை ஒழுக்கங்களாக புணருதல் (குறிஞ்சி), இருத்தல் (முல்லை), ஊடல் (மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை) எனச் சங்கப் புலவர் மரபு வரையறை செய்துள்ளது. ஒழுக்கம் அல்லது நடத்தை அவர்களின் பொருளில் வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கிறது.

தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும், வேட்டையை மட்டும் பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம் பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே காண முடிகிறது. அக மணமுறையிலிருந்து புறமணமுறைக்கு நுழையும் பொழுது, அச்சமூகம் பண்பாடு என்ற எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் இருக்கவே செய்தன. வேட்டையின் பலன் நிச்சயமற்று இருந்ததால் பழங்கள், காய்கறிகள், தேன், கிழங்குகள் ஆகிய உணவுப்பொருட்களை சேமிக்கத் தொடங்கினர்.

கலையுணக் கிழித்த முழவு மருள் பெரும்பழம் / சிலை கெழு குறவர்க்கு அல்க மிசை வாகும்.” (புறம்:236). வேட்டையாடும் குறவர்கள் ஆண் குரங்கு கிழித்து உண்ட பெரிய பலாப்பழத்தை சிலநாட்கள் வைத்து உண்டனர். உணவு சேகரிக்க கற்றுக்கொண்ட மனிதன் மண்ணைக் கிளறி விதைக்கவும் கற்றுக்கொண்டான். இரும்பின் உபயோகம் இல்லை. நெருப்பை கண்டு பிடித்திருந்தான். எனவே புதர்களை நெருப்பிட்டு அழித்தான்

....கானவர் / கரிபுனம் மயக்கிய அகன் காட்கொல்லை / ஐவனம் வித்தி.... -(புறம் 159)

காந்தள் மலரின் கிழங்கை உண்ணுவதற்கு கூட்டங்கூட்டமாக வரும் பன்றிகள் வாயால் உழுத புழுதியில் தினையையும், வரகையும் விதைக்கக் கற்றுக் கொண்டான்.

கிழங்ககழ் கேடில் உழுத சிலம்பிற் / றலைவிளை கானவர் கொய்தன்” (ஐங்குறு:270)

வேலைப்பிரிவினை பெண்களை தினைப் புனம் காத்தல், களைபறித்தல், கிளி கடிதல் போன்ற வேலைகளுக்கும், வேட்டை, கரிபுனம் மயக்கல்,தேனெடுத்தல் போன்ற வேலை களை ஆண்களுக்கும் பணித்தது. ஆண்கள் வேட்டை நிமித்தம் வாழுமிடம் விட்டு வெளியேறுவதும், பெண்கள் தினைப்புனத்தில் மையம் கொள்வதும் நடைமுறையானது. இப் பொருளியல் நடத்தையே, தகாப்புணர்ச்சி கொண்டிருந்த இனக்குழுவை தகுப்புணர்ச்சி கொண்ட குழுவாக மாற்றியது. ஒரு கணத்தின் ஆண்கள் வேட்டைக்குச் செல்லும்போது, தினைப்புனம் காக்கும் வேற்று கணங்களின் பெண்களுடன் புணர்ச்சி நடத்தினர். அகமண முறை தகர்ந்து புறமணமுறை உருக்கொண்டது. வயமான அடி தேர் வான் போல்அவளைத் தேடி இளைஞன் சந்தித்து அவளுடன் புணர்ச்சி நடத்தியதாக கலித்தொகை கூறுகிறது.வள்ளித் திருமணம்நாடகம் இதையே குறிக்கிறது. தினைப்புனங்கள் காதல் களங்களாக மாற்றப்பட்டு, காதல் சுவை அருவிபோல் கொட்டுமாறு சங்க இலக்கியத்தின் அகத்திணை கட்டமைக்கப்பட்டுள்ளது. இரவுக்குறி, பகற்குறி அமைத்து, களவுப்புணர்ச்சி நடந்ததை அகத்திணை இலக்கியங்கள் சுட்டும். இதுவரை அறிந்திராத வேற்றுக்கணத்தின் ஆண்களுடன் புணர்ச்சி கொள்வதும், நீங்கிய பின் அவளது தவிப்பும் இலக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

யாரும் இல்லைத்தானே கள்வன்/ தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ/ தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால்/ ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்/ முருகும் உண்டுதான் மணந்தஞான்றே” (குறுந்தொகை 25). தன்னோடு புணர்ச்சியில் ஈடுபட்டு விலகிச் சென்றவன் யாரென்றே தெரியாது. திரும்ப வருவானோ மாட்டானோ எனத் தவிக்கிறது அந்தப் பேதை உள்ளம். அவனுடன் புணர்ச்சிகொண்டதற்கான சாட்சி ஏதுமில்லை. தோழிக்கும் தெரியாது. திடீரென அவள் மனதில் ஒரு மின்னல்வெட்டு. ஆம் ஒரு சாட்சி இருந்ததே, தினைப்பயிரின் தண்டை ஒத்த கால்களையுடைய கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்ததே. மீண்டும் அவள் முகம் சுருங்கியது. அது இவர்களைக் கவனிக்காமல் நீரில் வரும் ஆரல் மீனைப் பார்த்தவாறு அல்லவா நின்று கொண்டிருந்தது? இப்படிப்பட்ட தவிப்புகளும், ஏக்கங்களும் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது. அக மணத்தை விடுத்து, புறமண முறையில் புகுந்தபொழுது, ஆண் பெண் கூடல் என்பது காதல் கொண்டு அல்லாமல் காமத்தை முன்னிறுத்தியே நிகழ்ந்துள்ளது. குழந்தைக்கு தாயை மட்டுமே தெரிந்திருந்தது.

மீன் உண் கொக்கின் துறவி அன்ன / வால் நரைக் கூந்தல் முதியோன் சிறுவன்” (புறம்: 277)

புறமண முறையிலும்கூட தாய்வழிச் சமூகமே நீடித்திருந்ததை பேரிற் பெண்டு” (புறம்:270) “செம்முது பெண்டு” (புறம்: 276) போன்ற பாடல்கள் காட்டுகின்றன. தாய்வழிச் சமூகத்தில் பெண் உயர்நிலையில் இருந்ததும் தெரிகிறது. வேற்றுக்குழுக்களின் ஆண்கள் அல்லது பெண்களுடன்தான் கூடவேண்டுமென புணர்ச்சியை ஒழுங்குபடுத்திய நிகழ்வுதான் பண்பாடு என்ற தளத்தில் அவர்களை கால்பதிக்கச் செய்தது. பண்பாடு இங்குதான் துவக்கம் பெறுகிறது. வேட்டை, உணவு சேகரிப்பு, கரிபுனம் மயக்கல், பன்றி உழுத புழுதியில் தினை, வரகு விதைத்தல், தினைப்புனம் காத்தல் என்ற பொருளியல் வளர்ச்சியின் மீது கட்டப்பட்ட மேல் கட்டுமானமாக பண்பாடு நிலை கொள்கிறது. காதலை, வேட்கையை அடிப்படையாகக் கொண்ட புணர்ச்சிச் செயல்பாடு மெதுவாக, காதலை அடிப்படையாகக் கொண்டதாக, களவாக மாற்றம் பெறுகிறது.

யாயும் யாயும் யாராகியரோ / எந்தையும், நுந்தையும் எம்முறை கேளீர் / யானும், நீயும் எவ்வழியறிதும் / செம்புலப் பெயனீர்போல / அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை 40)

உன் அன்னை யாரென யான் அறியேன். என் தாய் யாரென உனக்குத் தெரியாது. என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லர். நானும் நீயும் இதற்கு முன் அறிந்தவர்கள் அல்ல. ஆயினும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரானது அம்மண்ணுடன் கலந்து அதன் நிறத்தை ஏற்றுக்கொண்டதுபோல் நம் இருவரது நெஞ்சங் களும் அன்பால் தம்முள் ஒன்றுபட்டுக் கலந்தனஎன்று காதல் நெஞ்சங்கள் அன்பால் இணைந்தமை குறித்து புலவர் மரபு பாடியுள்ளது. புணர்ச்சிப் பண்பாட்டின் நகர்வு உண்மைக் காதலைக் கட்டமைக்கிறது.



முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?/ ஓரேன், யானும், ஓர் பெற்றி மேலிட்டு/ ஆஅ, ஓல்எனக் கூவுவேன் கொல்? / அலமரல் அசைவளி அலைப்ப, என் / உயவுநோய் அறியாது, துஞ்சம் ஊர்க்கே” (குறு:28) சங்க காலப்பெண் காமவேட்கையின் ஆற்றாமையை வெளிப் படுத்தத் தயங்கவில்லை. காமம் அவளைப்படுத்தும் துன் பத்தை அறியாது ஊரார் தூங்குவதை பொறுக்க இயலாமல் கோபம் கொள்வதைக் காண்கிறோம்.

முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல் / மூதா தை வந்தாங்கு/ விழுந்தே காமம்/ பெருந்தோளோயே” -(குறு: 204) என காமத்தை மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது நாவால் மெல்லத் தடவிக் கொடுப்பது போன்று காமம் புதியதுஎன அக்காலச் சமுதாயம் காமத்தை மிகவும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது. புணர்ச்சி அதனால் கிடைக்கும் சுகம் இயற்கையானது. தவிர்க்க இயலாதது. எவ்விதத்திலும் தீயதாக இருக்க முடி யாது. குழந்தைப் பேற்றுக்கு அது ஒன்றுதான் வழி.

காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ” (நற்றிணை:39)

மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே” (நற்-80)

காமம் மிகுதியுற்று, கூடமுடியாத நிலையில், அதை ஒரு நோய் என்றே கருதினார்கள். இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதுஎனக் கபிலரும் பாடுகிறார்.

உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது/ இருப்பின் எம் அளவைத்து அன்றே” (குறு:102).“காதலரை நினைத்திருந் தால் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகிறது. நினையாமல் உயிர் மட்டும் இருந்தால், அதைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லைஎனத் தலைவியும், “பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல/ உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி/ அரிது அவாவுற்றனை நெஞ்சே” (குறு:29) “அவளால் (பெண்ணால்) தன் உள்ளம் மழையில் கரையும் பசுங்கலம் (சுடாத கலம்) போலக் கரைந்ததாக தலைவனும் கூறுகிறான். புணர்ச்சியை இயற்கையாகவே கண்டனர். பண்பாட்டு அசைவானது, சங்க இலக்கியத்தில், அடுத்தத் தளத்திற்கு நகர்ந்து செல்வதையும் காண்கிறோம். கிடைத்த போது களவு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், கிட்டாத போது நோயாகவும் மாறியதைப் பார்த்தோம். ஆனால் சங்கத் தலைவன், தனது தலைவியுடன் ஏற்பட்ட களவுப் புணர்ச்சியானது தனது மனவலிமை, தனது அறிவு ஆகியவற்றைக் குறைத்துவிட்டதாகக் கூறுவது தெரிகிறது.

சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறமகன் / நீர் ஓரன்ன சாயல் / தீ ஓரன்ன என் உரன்அவித்தன்றே” (குறு:95) “பகையை அழிக்கும் தீ போன்ற என்வலிமையும், அறிவும் நீர்போன்ற மென்மையுடைய குறுமகளால் அழிக்கப்பட்டு விட்டதாகஉணருகிறான். மட்டுமல்ல, ... நாளும் என் / நெஞ்சு பிணி கொண்ட அம்சில் ஓதிப் / பெருந்தோள் குறுமகள் சிறு மெல் ஆகம் / ஒரு நாள் புணரப் புணரின் / அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே” (குறு:280)

தனது தலைவியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு ஈடாக அரைநாள் வாழ்க்கை வேண்டாம்என்கிறான். ஆணின் பொருளியல் வாழ்வில் அவனது ஆளுமையும், கவனமும் கூடிக்கொண்டே வரும்பொழுது, களவுப் புணர்ச்சியானது, அவனது பொருளியல் செயல்பாட்டிற்கு தடங்கல் ஏற்படுத்துவதாக உணருகிறான். ஒருமுறை தலைவியைப் புணருவதற்கான தனது சிந்தனை, பொருளியல் வாழ்க்கைக் கான அரைநாளை கெடுத்துவிடுவதாக உணருகிறான்.

புணரின் புணராது பொருளே, பொருள்வயிற் / பிரியின் புணராது புணர்வே” (நற்:16) . “புணர்ச்சியில் திளைத்தால் பொருள் கிடைக்காது. பொருளுக்காகப் பிரிந்தால் புணர்ச்சி இன்பம் கிட்டாதுஎன நினைக்கிறான். பொருளியல் வாழ் வில் ஏற்படும் மாற்றம், புணர்ச்சிப் பண்பாட்டிலும் மாறு தலைக் கொண்டு வந்தது. களவுப் புணர்ச்சி பெண்களை தீராத தவிப்பிலும், ஆண்களை தமது கடமையை ஆற்ற விடாமலும் செய்வதை உணர்ந்த சமூகம், கற்பொழுக்கம் அல்லது திருமணம் என்ற பண்பாட்டுத் தளத்திற்கு நகர்ந்து சென்றது. களவொழுக்கம், கற்பொழுக்கம் என்ற இரண்டு தளங்களிலும் புணர்ச்சிப் பண்பாடு செயலாற்றத் தொடங்கி யது தமிழ் சமூகம் இரண்டையும் ஏற்றுக் கொண்டது. அனைத்துப் பிரச்சினைகளின் பிறப்பிடமும், அவற்றிற் கான தீர்வுகள் இருக்குமிடமும் ஒன்றுதான். களவுப் புணர்ச்சிப் பண்பாட்டில் அன்றாடக் கடமைக்கு ஏற்படும் பாதிப்புகளும், இதனால் தலைவன், தலைவிக்கும் ஏற்படுகிற தவிப்புகளும் தீர்ந்துவிடுகிற இடமாக கற்பொழுக்கம் என்ற பண்பாடு இருந்தது. சங்க காலத்தில் களவை மேற்கொண்டு தவித்துக் கொண்டிருந்த அனைத்து தலைவிகளின் களவுப்பண்பாடுகளும் கற்பொழுக்கப் பண்பாடாக மாறியதா? என்பது குறித்து அறிய முடிய வில்லை. கற்பொழுக்கமானது குடும்பங்களைத் தோற்று வித்திருந்தது என்பதை அறியமுடிகிறது.

இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை / வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்/ மடப்பிடிப் பரிசில்மானப்/ பிறிது ஒன்று குறித்தது அவள் நெடும் புறநிலையே (குறு:298). அகுதை என்ற தன் மகனுக்கு அவன் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோலை பரிசு வழங்கிய நிகழ்வு இப்பாடலில் தெரிகிறது. ஐயைதந்தை (அகம்:6) அகுதை தந்தை (அகம்:96) என குழந்தை பெயர்கூறி அவன் தந்தை அழைக்கும் வழக்கம் அன்று இருந்துள்ளது. இன்றும் நடைமுறையில் உள்ளது. இது குடும்பம் என்பது தோன்றி விட்டமையைக் குறிக்கிறது. தந்தை வழிச் சமூகம் தோன்றி நிலைபெறத் துவங்கியுள்ளது. எனினும் களவுப் புணர்ச்சி யில் ஈடுபட்டவர்களின் திருமணம் சுலபமாக ஈடேற வில்லை என்றே தோன்றுகிறது. தந்தை, சகோதரன் இவர் களின் எதிர்ப்பும், தலைவன் தலைவியின் திருமணத்திற்கு நற்றாய், செவிலித்தாய், பாங்கன், தோழி ஆகியோரின் உதவியும், “மடலேறுதல்” (பெண்ணின் தந்தை திருமணத் திற்கு மறுத்தால், தலைவன் ஊருக்குள் வந்து, சப்தமிட்டு தங்கள் காதலை ஊர்மக்கள் அறிந்துகொள்ளச் செய்வது) என்ற நிகழ்வும், “உடன்போக்குஎன்ற சமூக மீறலும் (தலைவன் தலைவியைக் கூட்டிக்கொண்டு வேறிடம் சென்று மணமுடித்தல்) நடக்கவே செய்தது. இப்பண்பாடு இன்றுவரை நீட்சியடைந்து வந்துள்ளது.

அகத்திணை அனைத்திலும் களவு உறவில் ஏக்கம், தவிப்பு, ஏமாற்றம், நிச்சயமற்றதன்மை, மணத்திற்கு வலியுறுத்தல், சூள் உரைப்பது, இரவு பகலெனச் சேரத் துடிப்பது, இதில் ஏற்படும் இடையூறுகள், உணவு செல்லாமை, தூக்கம் கொள்ளாமை, உடல் மெலிவு, பசலை, பெற்றோர் தடை, மணம் தள்ளிப்போதல், ஊரார் கண்காணிப்பு, புலம்பல், தூதுவிடல், மடலேறுதல், உடன்போக்கு என்ற உணர்ச்சி வெளிப்பாடுகளை சங்கப் புலவர் மரபு பதிவு செய்துள்ளது. எனினும் புணர்ச்சிப் பண்பாடு அப்படியே நின்றுவிட வில்லை. மாறுதலை நோக்கி நகர்ந்தது.

வினையே ஆடவர்க்கு உயிரே, வாள்நுதல் / மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என” (குறு:135) . “வினை செய்தல் ஆடவர்க்கு உயிர் போன்றது. ஒளி பொருந்திய நெற்றியையுடைய இல்லின்கண் உறையும் மகளிர்க்கு அவர் தம் கணவர் உயிர் போன்றவர்” .

தன்னூறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை என தொல்காப்பியமும் வரையரை செய்கிறது. (தொல்- பொருள் . இனம்-116)

இவ்விரு பாடல்களும், சங்கத் தலைவிகளின் அடங்கிய தன்மையைப் புலப்படுத்துகிறது. தொல்காப்பியமும் அதை இலக்கணப்படுத்தியுள்ளது.

துயர் பொறுக்கல்லேன் தோழிநோய்க்கே” (குறு:224) “காமம் நெரிதர நாணம் கைநில்லாதே” (குறு:149). “முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல் ஆசு, ஓல் என கூவுவேன் கொல்என நாம் பார்த்த சங்கத் தலைவி அல்ல இவள். முற்றிலும் மாறுபட்ட தலைவியைக் காணுகிறோம்.

நோய் அலைக் கலங்கிய மதன் அழிபொழுதில் / காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும் / யானே பெண்மை தட்ப நுண்ணியதின் தாங்கி (நற்:94)

காமம் அளவுக்கு மீறிய நோயாகி, தனது மனவலிமையைக் குறைத்த போது தனது புணர்ச்சி ஆசையை வாய்விட்டுச் சொல்வது ஆணுக்குப் பொருத்தமானது. ஆனால் பெண்களுக்கு இயலாதது. தாங்கியாக வேண்டும்.

இதுவரை கண்ட தலைவனிடமும் தலைவியிடமும் காம ஆளுமை சரிசமமாக இருந்தது. தலைவனைப் போலவே, சமூக உற்பத்தியிலும், சமூக ஆதாயங்களைப் பெறுவதிலும் தலைவியும் சரிசமமாகப் பங்காற்றி வந்தாள். எனவே காமத்திலும் புணர்ச்சியிலும் சரிநிகர் ஆளுமையைப் பெற்றி ருந்தாள். ஆனால் மேற்கண்ட பாடல்கள் பெண்ணின் ஆளுமை வீழ்ச்சியடைந்த நிலையிலும் ஆணின் ஆளுமை விரிவடையும் நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. அகத்தில் உள்ளது புறத்தின் எதிரொலியே. அகத்திற்கேற்ப புறமும், புறத்திற்கேற்ற அகமும் சதா மாறிக் கொண்டி ருக்கின்றன. எனில் புறநிலையில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அணுக வேண்டும்.

குறிஞ்சி நிலம் தவிர்த்து, பிற நிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் ஆண்களுக்கான பணியையும், பெண்களுக்கான பணியையும் சமூகம் தெளிவாக வரையறுத்துவிட்டது. நிலத்தில் தினை, வரகு, பயிர்வகைகளைப் பயிரிடவும், பாலுக்கு உறை தெளிதல், தயிர் கடைதல், வெண்ணைய் எடுத்தல், நெய்யுருக்குதல் போன்ற பணி களையும், இவற்றின் பண்டமாற்றாக நெல்லும் எருமைக்கன்றும் வாங்கி வருதல் ஆகியவை பெண்களின் பணியாக வரை யறுக்கப்பட்டது. வெட்சிப்பூ சூடி வேற்றுப்புலத்தார் வரு வதைத் தடுக்க, கரந்தைப்பூ அணிந்து போர் செய்யும் பணி ஆண்களுக்கானது. வெட்சி, கரந்தைப் போர் நடத்திய வீரனை ஊரே திரண்டு ஒப்பனை செய்து, புதுக்கோலம் பூண்டு, புத்துணவு சமைத்து, மதுப்பிழிந்து கொடுத்து வாழ்த்திய நிகழ்ச்சியைஉண்டாட்டுஎனச் சங்கப்புலவர் மரபு கூறுகிறது. தலைவன் போரில் வெற்றி பெற்று தான் கொண்டு வந்த கால்நடையைக் கொடுத்து கள்ளுண்டான்என்றும், சமூகம் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டதையும் புற நானூறு பதிவு செய்கிறது. ஊர்மன்றத்தில் நடுநாயகமாக அமர்ந்து, ஊரை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றான். அவனது அழுக்குப் படிந்த ஆடையை வெளுத்துக் கொடுக் கும் புலத்தியாக பெண் அடிமையாக்கப்பட்ட செய்தியை களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்/ புலத்தி கழீஇள தூவென் அறுவைஎனப் புறநானூறு (311) பதிவு செய்துள்ளது.

கால்நடை வளர்ப்பு, தந்தைவழிச் சமூகத்தை உருவாக்கி யது. அது ஆணின் ஆதிக்கத்திற்கும், தனிச் சொத்துடமைக் கும் வழிகோலியதுஎன ராகுல்ஜி கூறுவது நோக்கத்தக்கது. முல்லை நிலத்தில் ஆண் ஆதிக்க நிலையிலும், பெண் தாழ்ந்த நிலையிலும் இருப்பதை அறிகிறோம். எனவே முல்லை நிலத்தின் உரிப்பொருள் இருத்தல்என புலவர் மரபு வகைப்படுத்தியுள்ளது. பெண்ணின் ஆளுமை இருத்தி வைக்கப்பட,போரிலும், ஊரிலும், ஆண்களின் ஆளுமை உயர்ந்து கொண்டிருந்ததால், புணர்ச்சிப் பண்பாட்டிலும் இது தவிர்க்க இயலாதவாறு வெளிப்படுகிறது.

மருதநிலத்தின் உரிப்பொருள்ஊடல்”. ஆற்றுப் பாசனத் தில் மிகுதியான உபரியை வழங்கும் நெல் சாகுபடி, தொடர்ந்து இனக்குழுக்களை அழித்து நாட்டை விரிவாக்க நடத்தும் போர்கள், வெற்றிக்களிப்பு, அரசு உருவாக்கம் என ஆணின் ஆளுமை உச்சத்திற்கு சென்றதால், இல்லக் கிழத்தி, காமக்கிழத்தி, பரத்தி என ஆண்களுக்கான ஒழுக் கம் விரிவாக்கம் பெற்றது. சமூகம் இதை ஏற்றுக் கொண் டது. பரத்தையர் வீட்டுக்கு சென்று திரும்பிய ஆணிடம் ஊடல் கொள்வதும், பின்பு ஊடல் நீங்கி, வேறு வழியின்றி கூடுவதும் என இழிநிலைக்கு பெண் தள்ளப் பட்டாள்.

நெய்தல் நிலத்தின் உரிப்பொருள்இரங்கல்’. பரதவர்களும், உமணர்களும், வணிகம் பொருட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதால், நீண்ட பிரிவும்,ஆபத்தான வழித்தடங்கல்களும் மீண்டு வர வேண்டுமேஎன்ற பதற்றம் மிக்க வாழ்வும் இரங்குதற் குரியனவாக இருந்தது. பொருளியல் வாழ்வின் அனைத்து அம்சங்களும் ஆண்களின் ஆளுமையுடன் கட்டமைக்கப் பட்டதால் பெண்களின் ஆளுமையுடன் கட்டமைக்கப்பட் டதால் பெண்களின் நிலை தாழ்வுற்று முடங்கிப் போனது.

சமூக, பொருளதார, அரசியல் தளங்களில் ஆண்களின் செயல்பாடானது அதிகமாக அதிகமாக அவனது ஆளுமை உச்சத்திற்கு சென்றது. புணர்ச்சியின் அளவைக் குறைத்துக் கொண்டாலன்றி அவனால் இயங்க முடியாது. பெண் ணுக்கு இவையேதும் இல்லாததால், தொடர்ந்து காமப் புணர்ச்சிக்கு அவனை அழைத்துக்கொண்டே இருக்கிறாள். அவன் தனக்குத்தானே குறைத்துக் கொள்வது மட்டுமல்ல, தலைவியும் குறைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. அதற்கான எல்லைக்கோடும் வகுக்கப்பட்டது.

அமிழ்தத் தன்ன அம்தீம் கிளவி/ அன்ன இனியோள் குணனும் இன்ன/ இன்னா அரும்படர் செய்யும் ஆயின்/ உடன் உறைவு அரிதே காமம்/ குறுகல் ஓம்புமின் அறிவுடையோரே”(குறு:206).“காமம் என்பது நும் போன்ற வரால் ஒருங்குகூடி வாழ்வதற்கு அரியதாகும். ஆதலின் அதனை நெருங்குவதிலிருந்து அறிவுடையீரே நும்மைக் காத்துக்கொள்ளும்என ஆண் தரப்பு அறிவுரை செய்கிறது.

இனிய செய்த நம் காதலர்/ இன்னா செய்தல் நோம் என்நெஞ்சே” (குறு:202) . இப்பாடல் மருத நிலத் தலைவியின் கூற்றாக பதிவாகியுள்ளது. களவு காலத்தில் நமக்கு இனியனவற்றைச் செய்த நம் காதலுக்கு உரியவர், இக்கற்பு காலத்தில் இன்னாத செயல்களைச் செய்தலால் என் நெஞ்சு மிகவும் வருந்துவதாயிற்று.ஆண்கள் காமத்தை நெருங்கக்கூடாது எனக் கூறியபொழுது, பெண்கள் அதனால் வருந்துவதும் புரிபடுகிறது.

புணர்ச்சியில் ஆணின் செயல், செயலூக்கமானது என்றும், பெண்ணின் செயல், தாக்கம் பெறுகிற அடங்கிய செயல் என்றும் வரையறுக்கப்பட்டது. பெண் ஆணின் சுகத்திற் கான பொருளாக மாற்றம் பெறுகிறாள். புணர்ச்சியில் அடங்கிய பாத்திரமாக மாற்றப்பட்டாள். நிகழ்த்துபவர், நிகழ்த்தப்படுபவர் என ஆண்-பெண் உறவு மாற்றமடைகி றது. பொருளாதார தளத்தில் ஆளுகின்ற ஆதிக்க நிலை யிலிருந்து, புணர்ச்சியில் ஆளுகின்ற பண்பாட்டை கட்ட மைப்பு செய்கிறான். இதுவே இல்லக்கிழத்தி, காமக் கிழத்தி, பரத்தை என அவனுடைய செயல்பாடு விரிவடை யவும், தலைவியின் புணர்ச்சி செயல்பாடு குறையவும் காரணமாகிப் போனது. ஆதிக்கத்தின் முன்னால் இயற்கை அடங்கிப் போனது.

ஆண்-பெண் உறவு ஆள்பவன் - ஆளப்படுபவள் என்ற உறவில் கட்டமைக்கப்பட்டதால் அது ஓர் அரசியல் உறவா கிறது. இவ்வுறவு நன்கு அமைய இருவரும் ஒரே அறத்தில் பங்கு பெற வேண்டும். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் இந்த அறத்தை உடைமையாகக் கொள்கிறார்கள். ஆணிடம் (ஆள்பவர்) ஒழுக்கவியல் நன்மைமுழுமை யான வடிவிலும், பெண்ணிடம் (ஆளப்படுபவர்) எவ்வ ளவு தேவையோ, அவ்வளவுக்கு தேவையான ஒழுக்க வியல் நன்மைஎதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆணுக்கு மட்டுப்பாடு அல்லது தைரியம்என்பதே முழுமை வாய்ந்த ஆளும்அறமாகிறது. பெண்ணுக்கு மட்டுப்பாடு அல்லது தைரியம்என்பது பணிபுரிகிறஅற மாகிறது. அதாவது ஆண், ஆளும் அறங்களின் முடிந்த முடி வான, முழுமையான ஒரு முன்மாதிரியாக ஆகிறான்என உளவியல் அறிஞர் ஃபுக்கோ நீண்ட விளக்கம் தருகிறார்.

ஆண் பொருள் வேண்டியோ, அல்லது போரின் நிமித்தமோ பிரிந்துள்ள நிலையில், பிற ஆண்கள் இவளை நெருங்காது இருக்கும் பொருட்டு, தனது அழகைக் குறைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் அவன் வரவுக்காக காத்திருப்பது என்ற அளவில் அவளின் ஆளுமை வீழ்ந்து பட்டது என்பதை அறியமுடிகிறது.

மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ/ இல் போது கொண்டு பலகுரல் அழுத்திய/ அந்நிலை புகுதலின், மெய் வருந்து றாஅ/ அவிழ் பூ முடியினன் கனவ இய/ மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே ” (நற்: 42) . வினை முடிந்து மீள் கின்ற தலைவன், பாகனைப் பார்த்து தான் வருவதை தலைவிக்கு முன்னே போய் தெரிவிக்க ஆணையிட, அவன் சென்று அறிவிக்கவே, “அவள் நீராடி தன்னைப் புனைந்து கொள்ளும் பொழுதில் நான் செல்லவும், அவள் என்னை அணைத்து மகிந்த நிலை முன் நிகழ்ந்தது மறத்தற்கரிதுஎன்கிறான் தலைவன். எனவே தலைவன் வெளிச்செல்லும் காலங்களில், தன்னை அழகுபடுத்திக்கொள்ளாமல் இருந்த நிலையை சங்கநூலில் காண்கிறோம். ஆணின் ஆளுமை மேலும் மேலும் உயர்நிலையில் கட்டமைக்கப்பட்டதும், பெண்ணின் ஆளுமை கீழ்நிலைக்கு தள்ளப்பட்டதுமான வரலாற்றை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. நில வுடைமையின் வளர்ச்சிப்போக்கு பெண்ணை அவளின் ஆளுமையை அழித்து, அடிமையாக்கிய வரலாறே, தமிழ் பண்பாட்டின் அசைவியக்க வரலாறு ஆகும்.

அதுமட்டுமல்ல, சங்கப் பாடல்களைப் பாடியோருள் முக்கி யமானவர்கள் பாணர்கள். வறுமைமிக்கவர்கள். யாழ் ஆகுளி பதலையோடு சுருக்கிதமது வறுமையைப் போக்க விறலியுடன் மன்னனைக் காணச் செல்வர் (புறம்:64) என சங்கநூல் கூறுகிறது. இவர்கள் வேந்தர் காலங்களில், தலைவனுக்கும் தலைவிக்குமிடையே மற்றும் தலைவனுக் கும் பரத்தையருக்குமிடையே தொடர்பை பாதுகாக்கும் இழிதொழிலுக்கு ஆளாகினர். விறலியர் பரத்தையர்களாக மாறினர் (சிவத்தம்பி. 2003,பக்.116) சங்க இலக்கிய சமூக நிறுவனத்தில், தமது ஆளுமையை அடக்கி அடிபணிந்த பெண்கள் போற்றுதலுக்குள்ளானார்கள். சமூக நிறுவ னத்தை கேள்விக்குள்ளாக்கிய பெண் ஆளுமை பரத்தையர் என்ற பட்டத்தைப் பெற்று சமூக நிறுவனத்தின் வெளியே வைக்கப்பட்டனர்.

இந்தியப்பண்பாடு சமண, பெளத்த, பார்ப்பனிய சொல்லா டல்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது. சங்ககால இறுதியில் இம்மூன்று மதங்களும் தமிழ்நாட்டில் காலூன்றிய செய்தியை மதுரைக் காஞ்சி கூறுகிறது.

பல் சான்றீரே, பல் சான்றீரே/செல்கஎனச் சொல்லாது, ‘ஒழிகஎன விலக்கும் / பொல்லாச் சூழ்ச்சி பல் சான்றீரே (புறம்:246) என்ற பாடல், பூதப்பாண்டியன் என்ற மன்னன் இறந்தபோது, அவன் மனைவி பெருங்கோப் பெண்டு கையறுநிலை நிலையில் பாடியது. சான்றோர்களே, தலை வனுடன் நீயும் செல்என்று கூறாது, ‘இறக்க வேண்டாம்எனக்கூறும் பொல்லாத எண்ணத்தை உடைய சான்றோர் களே, வெள்ளரி விதையையும் கீரையையும் சோற்றுடன் கலந்து நீரில் சாப்பிடவும், எள்ளுடன் புளித்தக் கீரையை யும், வேளைக்கீரையையும் உணவாகக் கொண்டு, கல் படுக்கை மீது பாயின்றி படுத்து உறங்கும் கைம்மை மகளிர் போல் இருக்கமுடியாது. தீயும், தாமரைப் பொய்கையும் எனக்கு ஒன்றுதான்எனக் கூறுகிறாள். ஒரு கைம்பெண், எத்துணை நோன்புகளை கைக்கொள்ள வேண்டும் என்ப தையும், அதைவிட உடன்கட்டை ஏறி இறந்துபோவது மேல் என எண்ணுமாறும் சமூக நிறுவனத்தில் ஆண்களின் ஆளுமை உச்சம் பெற்றுள்ளது.

இன்னா வைகல் உண்ணும் / அல்லிப் படூஉம் புல் ஆயினவே” (புறம்:248). “அழுதல் ஆனாக் கண்ணால்/

மெழுகும், ஆப்பிகண் கலுழ் நீரானே” (புறம்:249). “கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி” (புறம்:250). ஆணின்றி, பெண் தனித்து இயங்க முடியாது, கூடாது என்ற பார்ப்ப னியச் சொல்லாடலை தமிழ்ச்சமூகம் தன்வயப்படுத்திக் கொண்டது. சங்கம் மருவிய காலத்திலும், இலக்கியப் பனுவல்களினூடாக இதுவே வலியுறுத்தப்படுவதுடன், பெரும் சமூக கருத்தியலாகவும் நிலை நிறுத்தப்பட்டது.

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்/ பெய்யெனப் பெய்யும் மழை (குறள்:55). பொருள் சார்ந்த வலுவான அரசைக் கட்டமைத்து நிலைநிறுத்த முயலும் சமணமதச் சொல்லாடல் பெண்ணுக்கான ஒழுக்கத்தையும் தெளிவான முறையில் வரையறுத்தது. சிலப்பதிகாரமும், நீலகேசியும் நல்ல சான்றாக விளங்குகின்றன. ஒன்று கணவ னின் தவறுகளுக்கு மெளனசாட்சியாயிருந்து அவனுக்காகப் போராடும் பெண்மையை (கண்ணகி) வலியுறுத்துகிறது. மற்றது, கணவனின் தவறுகளுக்குரிய தண்டனையை அடுத் தப்பிறவியில் (இந்தப் பிறவியில் இல்லை) கொடுத்துப் பேயாய் (நீலி) அலைந்து திரியும் பெண்மையை வலியுறுத் துகிறது. ஆண்களுக்கான இச்சொல்லாடல்களை, பெண் களின் சமூக உளவியல் உள்வாங்கிச் செரித்து ரத்தத்துடன் கலக்கவிட்டது.கண்ணகியும் நீலியும் கலகக்குரல் எழுப்பி யிருப்பினும் அவை ஆணின் பார்வையில் எழுதப்பட்டிருந் தன. ஆண் ஆளுமைச் சமூக நிறுவனத்தை கேள்விக்குள்ளாக்கும் பரத்தையர் குடும்பத்திலிருந்து வந்த மாதவியும், மணி மேகலையும், திரும்ப ஆண் ஆளுமைச் சமூக நிறுவனத்துள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் துறவுஎன்ற புதிய தளத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

அறிவும், அழகும் நிரம்பிய புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பார்ப்பன மதச் (சைவம்) சொல்லாடலை கட்டியெழுப்ப முயன்று தனது ஆளுமையை வரலாற்றில் பதிவு செய்துள் ளார். எனினும் பேய்உரு கொண்டவளாக சித்தரித்து, அவரது ஆளுமையை சிறுமைப்படுத்தி பதிவு செய்தது பார்ப்பனியம். இராமாயணம், மகாபாரதம், போன்ற கதை யாடல்களை உருவாக்கி, கிராமம் தோறும் வாசிக்கப்பட்டு, தமிழ் மனங்களுக்குள் ஒரு வலுவான பொதுப்புத்தி தோற்று விக்கப்பட்டது. சீதை, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போன்ற படிமங்கள் இந்துப் பெருங்கதை யாடலாக இந்தியப் பெருவெளி முழுதும் எடுத்துச் செல்லப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டன. இவர்கள் கற்பு, பதிவிரதை, பத்தினி என்ற அதீதப் புனிதத்தன்மை கொண்ட பெண் களாக சமூகத் தளத்தில் உலவவிடப்பட்டனர். இவர்களுடன் கண்ணகி, மாதவி, வாசுகி, நல்லதங்காள் ஆகியோர் இணைக்கப்பட்டு, ஓர்மையான கருத்துருவாக்கம் சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

பார்ப்பனியத்தின் இன்னொரு கூறு சாதியம். வருணம், சாதி என்ற இந்துப்பெருங்கதையாடல் சூத்திரன், பஞ்சமர் என்று உழைப்பாளர்களின் பெண் ஆளுமையை மட்டுமல்ல, ஆண் ஆளுமையையும் சேர்த்து அழித்தது. கல்வியை இவர் களுக்கு மட்டுமல்லாமல், பார்ப்பனியப் பெண் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் மறுத்தது. கல்வி, அரசியல், பொருள் சேர்க்கும் உரிமை போன்றவற்றை இவர்களுக்கு மறுத்ததின்மூலம் பத்துப்பேரின் ஆளுமையை விரிவு படுத்தி, தொண்ணூறு பேரின் ஆளுமையை சீர்குலைத்தது. மேலும் சாதிக்குள் திருமணம் என்ற படிநிலை வளர்ச்சி பெண்ணை மீண்டும் அகமண முறைக்குள் அமிழ்த்தி சுதந்தி ரமான பாலியல் உணர்வுக்கு (காதலுக்கு) சமாதி கட்டியது. இதுவே இந்துப் பண்பாட்டு உருவாக்கத்தின் மேன்மையாகும்.

முகமதியர்கள், கிறித்தவர்கள், ஆங்கிலேயர்கள் வருகையா னது, புதிய சொல்லாடல்கள், இந்துப் பெருங்கதையாடல் களுடன் இணக்கம் பெற்று, புதிய கருத்தாக்கங்களை உரு வாக்கின. பார்ப்பனிய இறுக்கம் தளர்வு பெற்றபொழுது, பெண் ஆளுமையை உயர்த்துவதற்கான குரல்கள் அங்கும் இங்குமாக எழுந்தன. நாடு விடுதலைக்கு முன்பும் பின்பும் இக்குரல்களைப் பற்றிக்கொண்டு எழுந்து நிற்க பெண் ஆளுமை சக்தியற்றிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைக்கப்பட்ட பெண் ஆளுமை மீது தொடர்ந்து விழுந்த கருத்தியல் படிமங்கள், அதனால் அமுக்கம் பெற்று நனவிலியில் தொன்மப்படிவங்களாக உருமாறிப் போயின. தொன்மப்படிவத்தின் நீட்சியாக இன்றும் உழைக்கின்ற தலித் பெண்ணின் ஆளுமை ஓரளவேனும் உயிருடன் இருப் பதைக் காணமுடிகிறது. இந்துமதச் சொல்லாடல் அதை அறுத்துக் கட்டுதல்என்று இழிவுபடுத்திய பொழுது, “மணமுறிவும் எங்களது வர்க்கச் சாதனைஎன தணிகைச் செல்வன் உயரிய சொல்லாடலாக பதிவு செய்தார்.

கல்வி, வேலை செய்யும் உரிமை, பொருளியல் உரிமை, ஓட்டளிக்கும் உரிமை, சங்கம் சேரும் உரிமை ஆகிய வற்றை பெண்களுக்கு அளித்தால், பெண்ணின் ஆளுமை மீட்டெடுக்கப்பட்டுவிடும்என்ற கருத்தியல் ஆதிக்கச் சொல்லாடல் ஆகும். ஆதிக்கவாதிகளால் ஆளுமையை இழந்த ஆண்கூட, கல்வி கற்ற, பொருள் சேர்க்கும் பெண் உடல் மீது வன்முறையைப் பாய்ச்ச முடிகிறது. பெண்ணின் ஆளுமையை அவள் சமூகத்தில் தேடவேண்டியுள்ளது.

பெண், தன் ஆளுமையை அன்று சமூகத்தில்தான் தொலைத்திருந்தாள், தனி ஆணிடம் அல்ல. பெண் ஆளுமையின் வரலாற்றை ஆண் ஆளுமையின் வரலாற்றினூடாகவும், ஆவனால் வரையப்பட்ட சமூகம், பொருளாதாரம், அரசியல், சமய, சாதிய சடங்கியல் வரலாறுகளினூடாகவும் தான் தேட வேண்டியுள்ளது.

இன்று சமூகம் என்பது சக்திமிக்கதாக இருக்கிறது. இது சமயம், சாதி, பொருளியல், சடங்கியல் என்ற பாதுகாப்பு கவசங்களால் சூழப்பட்டிருக்கிறது. ஆண் ஆளுமையே அதன் பண்பாகும். இச்சமூகம் தனது சொல்லாடலை ஒரு அதிகார வரம்பிற்குள் கட்டமைத்துள்ளது. ஜனநாயகம், பெண் உரிமை குறித்து அது வாய் கிழியப் பேசும். சரிபாதிப் பெண்களின் உரிமையில் மூன்றில் ஒரு பங்கு கேட்பின் சனநாயகக் கட்டிடத்திலேயே மறுத்து ஒதுக்கும். புதுபுதுக் கருத்தாக்கங்களை உருவாக்கி, அனைவருக்குமான சொல் லாடலாக உலவவிடும். ஊடகங்கள் அதைப் பொதுப் புத்தியாக மாற்றிவிடும். பெண் ஆளுமை எழுந்துவிடாமல் காவல் காத்து நிற்கும்.

சொல்லாடல் என்பது ஒரு வலைப்பின்னல். அது அர்த்தங் களால் நிரப்பப்படுகிறது. சமூகம் எல்லோரையும் பேச விடுவதில்லை. குறிப்பாக அரசியல், பாலியல் குறித்து பேச அனுமதிப்பதில்லை. எனவே சொல்லாடல்கள் சுதந்திரமாக இருப்பதில்லை. இதைசொல்லாடலின் அதிகார ஒழுங்குஎன்கிறார் ஃபூக்கோ. இதையும் மீறி இன்றுபெண்ணியம்என்ற தளத்திலிருந்து கலகக்குரல் வந்து கொண்டே இருக் கிறது. சாதியத்தால் ஆளுமையை இழந்தவர்கள் சாதி மறுப்புஎன்ற தளத்திலிருந்தும் சுரண்டலால் ஆளுமையை இழந்தவர்கள் வர்க்கம்’’ என்ற தளத்திலிருந்தும் குரலெழுப்பிய வண்ணம் உள்ளனர்.

அறிவுத்தேடலிலும், பொருள்தேடலிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சுதந்திரமாகச் செயலாற்றினர் என்பதை மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை போன்ற பாடல்கள் குறிப்பிடுகிறது. பொருளியல் என்ற புறச் செயல்பாட்டிலும், புணர்ச்சி என்ற அகச் செயல் பாட்டிலும் ஆண் பெண் இருவரும் சம ஆளுமையை உடையவர்கள்தான் என்பதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதையே ஈழக் கவிஞர் ஆழியாள் கூறுகிறார்: அங்கு எனக்கென/ ஒரு பிரபஞ்சம் உருவாகும்/ அப்போது உயிர் பெறும்/ எனக்கான வரி வடிவங்களுடன் கூடிய/ என்மொழி/ அதன்பின்/ தேமல் படர்ந்த எவனாயினும்/ என்னோடு உரையாடட்டும்/ அப்போது கூறுகிறேன்/ பதிலை./ என்மொழியில்/ என் ஆதித்தாயின்/ பெண் மொழியில்/ அதுவரை நீ காத்திரு” (பெண் எழுதும் காலம். பக்-69)

இக்குரல், தன்னுடலை ஆணுடல் வழியாக சமூகத்தில், வரலாற்றில், நனவிலியில் அமுக்கப் பெற்றுக் கிடக்கும் தொன்மத்தில் தேடுகிறது. தொன்மத்திலிருந்து தோண்டி எடுக்கும் வெறியும், அதை சமகாலத்தில் பொருத்தி தற்கால சமூக உடலிலிருந்து தன்னுடலை மீட்டெடுக்கும் தவிப்பும் வெளிப்படுகிறது. அதேநூலில், கீழ்கண்டவாறும் காணப் படுகிறது.பெண் உடல் மனிதசுழற்சியின் மையமாக இருக்கிறது. இயற்கையின் ஒரு பாதியாக விளங்கும் பெண்ணின் சமூக இருப்பானது அவமானத்திற்குரியதே. பெண் உடல் குறித்த ஆரோக்கியமான புரிதலும், நாகரிகமான உரையாடலும் இனியாவது துவங்கப்பட வேண்டும்

பெண்ணைப் பற்றி பேச நூற்றுக்குநூறு சதம் பெண்ணே சரியானவள். பெண்ணின் உணர்வுகளை பெண்ணே முழுமையாக புரிந்து கொள்ளமுடியும். ஆண்கள் பேசுவதைவிட பெண் பேசுவதே இயற்கையானதும் வலிமையானதும் ஆகும். பெண்ணைக் குறித்த பேச்சனைத்தும் மையப்புள்ளியை நோக்கி நகர்வனவாக இருக்கவேண்டும்.

பெண்ணுடல் மனித சுழற்சியின் மையமாக இருக்கிறதுஎன்பது ஒரு ஆணாதிக்கச் சொல்லாடல். சக்தியில்லை யேல் சிவம் இல்லைஎன்பதுபோல. கருப்பை தாங்குதல் என்ற ஒன்று மட்டுமே இயற்கையளித்தது. மற்ற அனைத்தும் ஆண்களின் வன்முறையே. ஆண், பெண் என்ற வெவ் வேறான உடல்கள் திருமணம் என்ற பண்பாட்டு நடவடிக் கையால் இணைக்கப்பட்டு சமூகஉடல் என்ற தன்மையைப் பெறுகிறது. இந்த சமூக உடலில், ஆணுடல் என்பது மையமானது. ஆளுமையுடையது. தனித்தியங்கக் கூடியது. உயிர் போன்றது. பெண்ணுடல், ஆணுடலைப் பற்றி இருந்து இயங்கும் உயிரற்ற பிண்டமாகும். ஆணின் உட லோடு இயங்குவதின் மூலமே தனது இருப்பையும், இயக்கத்தையும் பெற்று ஒரு சமூக வடிவம் கொள்கிறது. சமூக உடலின் மையக்கருவான ஆணுடலின் தொடர்ச்சியான உயிர்ச் செயல்பாட்டிற்கும் அதன் புகழுக்கும் பங்கம் ஏற்படாதவாறு உறுதி செய்து நிற்பதே இதன் தலையாய கடமையாகும். பெண்ணுடலுக்கு தனக்குகந்த ஆணுடலை தேர்வு செய்யும் உரிமையில்லை.

ஆணுடல் பிரிந்துபோன நிலையிலும்கூட அது பிற உடலை நாடாது தவிர்க்க வேண் டும். பெண்ணுடலின் தன்னுணர்வு எழுச்சியுறாது அமுக் கப்பட்ட நிலையில் ஆணுடலின் வல்லாண்மையை ஏற்று நடக்கும்பொழுது மட்டுமே சமூக உடல் முறையாக இயக் கம் கொள்கிறது. சமூக உடலை நெருக்கடிக்குள்ளாக்கும் சொத்துரிமை, கல்வி, கலை, அறிவு, பாலியல் சுதந்திரம் ஆகியவற்றை மறுப்பதும், பெண்ணுடலின் முழு உரிமை யையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைப்பதுமே சமூக உடலின் கடமையாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப் படையில்தான் பெண்ணுடலுக்கான அறக்கட்டுமானங்கள் ஆணுடலால் வரையறுக்கப்பட்டன. பண்பாட்டு வரலாறு என்பது தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் வன்முறை களாலுமே நகர்த்தப்பட்டு வந்துள்ளது. பெண்ணுடல் மனித சுழற்சியின் மையமாக இல்லாததே இத்தனை பிரச்சனை களுக்கும் காரணம். எனவேபெண்ணின் சமூக இருப்பா னது, அவமானத்திற்குரியதேஎன்பது சமூகம், வரலாறு, தொன்மம் குறித்தப் புரிதலில் ஏற்பட்ட பின்னடைவே யாகும். பெண்ணியம்என்ற பனுவலில் மட்டும் பயணம் செய்வதால் ஏற்படும் கருத்தாக்கம் ஆகும்.

பெண் உடல் குறித்த ஆரோக்கியமான புரிதலும், நாகரிக மான உரையாடலும் இனியாவது துவங்கப்படவேண்டும்’’ என்ற வேண்டுகோளுக்கு ஆணுடல் எப்போதும் செவி சாய்ப்பதில்லை. அது உடல் பல நூற்றாண்டு காலம் சமூக உடலால் வார்த்து எடுக்கப்பட்டது. சமூகத்தின் அத்தனை வன்முறைகளையும் செரித்து வளர்ந்து கண்ணகியை கண் கலங்க வைத்து மாதவியை ஆலிங்கனம் செய்த உடல். தனது அழுகிய உடலை பரத்தை வீட்டுக்கு கொண்டு செல்லக் கூடையில் சுமக்கவைத்த உடல். சங்ககாலத்தில் கோப்பெரும் பெண்டுவையும், இக்காலத்தில் ரூப்கன் வரையும், “நான் இறந்து போனால், நீயும் உடன் கட்டை ஏறுஎன உத்திரவிட்ட உடல். ஒடுக்குமுறையையும், வன் முறையை மட்டுமே வரலாறு முழுதும் உண்டு வளர்ந்த ஆண் உடலிடம், கோரிக்கை பயனளிக்காது. ஏனெனில் அது சமூக உடலில் மையம் கொண்டுள்ளது.

வருடிப்பார்த்திருக்கிறாயா என் காமத்தை/ ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப் போலவோ/ அல்லது/ ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்/ ஆர்வத்துடனோ? (ஸில்வியா பிளாத்). இத்தகைய எதிர்பார்ப்பு அன்றைய சங்கத் தலைவியிடமும் இருந்தது. தலைவனும் அதை பூர்த்தி செய்துள்ளான். பெருத்த தோள்களையுடைய தலைவியே, மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது நாவால் மெல்லத் தடவிக் கொடுப் பது போன்று காமம் புதிதுஎன்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு பாடிய ஆணுடல், இன்றைக்கும் அதே தன்மையைப் பெற்றிருக்குமா?

பெண்ணின் ஆளுமையை மீட்டெடுக்க பெண்ணியம், சாதி மறுப்பு, வர்க்கம் என்ற மூன்று தளங்களும், ஒன்றோடொன்று ஊடாடுவதும், ஒன்றையொன்று கற்றுக் கொள்வதும், ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக்கொள்வதும், மூன்றும் நெருங்கியிருந்து சமூக உடலை கேள்விக்குட் படுத்துவதுமே இன்றைய தேவையாகும். இதனால் நாம் பெற்றுக்கொள்ள இருப்பது ஆளுமைமிக்க, சாதியும் சுரண்டலுமற்ற பெண்ணுடல்.

உதவிய நூல்கள்:



1. குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு

2. பாட்டும், தொகையும், தொல்காப்பியமும் தமிழ் சமூக உருவாக்கமும் - ராஜ் கெளதமன்

3.சங்க காலத் தமிழகத்தின் சமூகநிலை, வெ.பெருமாள்சாமி

4. தமிழ் சிந்தனை மரபு - ச.பிலவேந்திரன்

5. பெண் எழுதும் காலம் - அ.வெண்ணிலா

6. திணைக்கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் - கா.சிவத்தம்பி.

நன்றி - புதுவிசை