புதன், 27 ஜூன், 2012

உலகுக்கு குமரிக்கண்டம்


உலகுக்கு குமரிக்கண்டம் http://tamilresearch.wordpress.
http://tamilresearch.files.wordpress.com/2011/06/ourhome.jpg?w=300&h=238- நந்திவர்மன்

கடவுளின் கைரேகைத் தடங்கள்  என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று.  உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார்.  உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! கிரகாம் ஹான்காக் 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என
இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார்.  ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடியிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார்.  அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன.  தமிழர்களின் சங்க இலக்கியம்  வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவாவின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்கள் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவை அத்தனையும் கட்டுக்கதையாகிட முடியாது என்று கிரகாம் ஹான்காக் நம்பினார்.
 இன்றிலிருந்து 17000 ஆண்டு முன்பு உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.  17000 முதல் 7000 ஆண்டு வரை ஆங்காங்கே கடற்கோள்கள் நடந்தன.  ஆழிப்பேரலைகள் எழுந்தன.  அதில் 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மக்கள் வாழ்ந்த நாடுகளும் நிலங்களும் கடலடியில் மூழ்கியது.  அந்தப் பகுதிகளில் மனித குலத்தில் முன்னோடி நாகரிகம் பற்றி தேடியாக வேண்டும்.  தமிழர் வரலாற்றை உலக வரலாற்றில் இருந்து பிரித்து தனியே கண்டறிய முடியாது. ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாக உள்ளது.  இந்தியா ஒரு காலத்தில் நான்கு புறமும் கடல் நீரால் சுழப்பட்ட நாவலந்தீவு ஆக இருந்தது.  நாவலந்தீவு என்பது தமிழ் இலக்கண நூல் பிங்கல நிகண்டு கூறும் பெயர். 
 இந்தியா இன்றுள்ள இடத்தில் இப்போது இருப்பது போன்ற வடிவில்தான் இருந்தது என்று முடிவு கட்டிக்கொண்டு வரலாறு எழுதக் கூடாது.  எழுதுவதும் தவறு.  சிலப்பதிகாரத்தில் இந்துமாக்கடல் கொண்ட குமரியாறும் பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் பற்றி பேசப்படும்.  எனவே இது போல் இலக்கியங்கள் கூறும் நாகரிகங்களைக் கண்டறிய கடலடி ஆய்வில் இறங்கினார் கிரகாம் ஹான் காக்!
 ஜப்பான் அருகே அவர் கண்டெடுத்த சான்றுகள் பற்றி சொர்க்கத்தின் கண்ணாடி  என்ற நூலில் பதிவு செய்தார்.  மால்டா  இந்தியா ஜப்பான் பகாமாஸ் எனக் கடலடியில் அவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளை  நூலில் பதிவு செய்தார்.  அந்த நூலில் தான் நமது பூம்புகார் பற்றிய வியத்தகு கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
 இந்திய அரசு 1000 ஆண்டு பழமையும் இலக்கிய வளமுள்ள மொழியை செம்மொழி என அறிவிக்கலாம் என்று வரையறை வகுத்தது! அதன்படி தமிழ்ச்செம்மொழி என அறிவிக்கப்பட்டது.  ஆனால் 1000 ஆண்டு வரலாறு எங்களுக்கும் உண்டு என்று வேறு சில மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் இடம் கேட்கின்றன.
 ஆனால் 1000 ஆண்டா? தமிழ் வரலாறோ கி.மு. 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை பூம்புகார் நகரின் சில கூறுகளை கடலடியில் கண்டெடுத்து கிரகாம் ஹான்காக் 11500 ஆண்டு பழமை நமக்குண்டு என்று நிறுவுகிறார்.

பூம்புகாரை எப்படி கடல் விழுங்கிறது? குமரிக்கண்டமும் அதிலிருந்த குமரியாறும் இந்தமாக்கடலில் எப்படி மூழ்கின? பஃறுளியாறும் பல அடுக்குளாக இருந்த மலைகளும் எப்படி கடலடியில் மூழ்கின? இந்த வினாக்களுக்கு விடை கிரகாம் ஹான்காக் இடம் கிடைக்கிறது. அவர் சொல்கிறார் மனித குல வரலாற்றில் கடந்த முக்கிய பேரழிவு பற்றி நாம் மறந்து விட்டோம்.  பனி ஊழிக்காலத்தின்  கடைசியில் 12000 ஆண்டுகள் முன்பு உலகில் கடல்களை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் கடலோடிகளாகவும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டு வாழ்ந்த நாடுகளை விட்டு துடைத்து எறியப்பட்டார்கள்.  இந்தப் பேரழிவு உலகில் உள்ள 600 தொன்மக் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மலை உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து மனித குலத்தை அழித்த நிகழ்வு ஏதாவது ஒரு வகையில் பல நாட்டு இலக்கியங்களில் இடம் பிறந்துள்ளது.
அந்தக் காலச் சுநாமி
எப்படி நடந்திருக்கும் அந்தக் காலத்துக் சுநாமி? அப்போது வட அமெரிக்காவுக்கும் வடஐரோப்பாவுக்கும் இடையே கடல் இல்லை.  பனிப்பாறைகளே இருந்தன.  அண்டார்டிகாவில் இன்று இருப்பது போல! அதுவும் 3 மைல் ஆழத்துக்கு பனிப்பாறைகள் இருந்தன.  அதன் மீது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் போகக் கூடிய சுழ்நிலை இருந்தது.  புவி வெப்பமாதல் பற்றி இன்று அலறுகிறோம்! அன்று வெப்பத்தால் இந்தப் பாறைகள் உருகி கடல் தோன்றியது.  உருகிய பனி பாறைகள் உலகெங்கும் ஆழிப்பேரலைகளை உருவாக்கின.  பல நாடுகளை அவை விழுங்கின.  அப்படி அழிந்து போனது நம் குமரிக்கண்டம்! கடலுள் மூழ்கியது நம்ம பூம்புகார்.  இவற்றை முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவர் கிரகாம் ஹான்காக்!
அவர் மட்டுமல்ல உலகில் பல நாட்டவரும் கடலடி அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.  கடலில் மூழ்கிக் காணாமல் போன கப்பல்களை தேடுவதில் தொடங்கினார்கள்.  உலகெங்கும் 3 மில்லியன் கப்பல்கள் கடலடியில் மூழ்கிவிட்டன.  இவற்றில் பெரும்பகுதி இன்றும் கண்டெக்கப்படவில்லை.  இப்படி கடலடியில் கப்பல்கள் தேடியவர்கள் கட்டிடங்களை கண்டார்கள்.  நாகரிகங்களை கண்டறிந்து வருகிறார்கள்.
 “கடலடியில் நம் பாரம்பரியம் உள்ளதென்று பெருமை கொள்கிறோம்! 4000 ஆண்டுகளில் மூழ்கிய நகரங்களும் கப்பல்களும் நாம் கண்டெடுப்போம் என்று காத்துள்ளன.  சிந்து வெளி நாகரிக காலந்தொட்டு 7000 கிலோ மீட்டர் தூரம் நீண்ட இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடலடியில் பெரும் புதையல் காத்துக் கொண்டுள்ளது.  அங்கு தேடினால் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடிக்கலாம்.  1980 முதல்தான் இந்தியாவில் கடலடியில் அகழ்வாய்வு சூடு பிடிக்கத் தொடங்கியது.  கோவாவில் உள்ள நேனஷல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓசியோனோகிராபி கடலடியில் கப்பல்களை தேடப்போய் குஜராத் அருகே துவாரகா நகரத்தையும் பூம்புகாரையும் கண்டுபிடித்தார்கள் என இந்திய அரசு தொல்லியல் துறையின் கடலடி அகழ்வாய்வு பிரிவு தலைவர் அலோஜ் திரிபாதி கூறியுள்ளார்.
நம் சேர சோழ பாண்டியரின் நாடுகள் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை  தேடிப் பார்க்க வேண்டாமா? தமிழக அரசே குமரிக்கண்டம் பற்றி கடலாய்வு செய்து நூலாக்கி உலகின் பிற பேரழிவுகளுடன் தமிழினமும் அழிந்தது என்று நம் நாகரிகத்தை நிலை நாட்ட வேண்டும்.
 நாம் குமரிக்கண்டம் என்பதை கோண்டுவானா பெருங்கண்டம் என மற்றவர்கள் அழைக்கிறார்கள்.  கோண்டுகள் மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிகள்.  அந்தப்பகுதியின் பாறைகளுக்கும் பிற கண்டங்களின் பாறைகளுக்குமான ஒப்பீடு காரணமாக கோண்டுவானா என்ற சொல் உருவாயிற்று.  அந்தக் கோண்டுவானா பற்றி  நூலெழுதியவர் டொனால்டு பிளான்.  அந்த ஆய்வேட்டில் கோண்டுவானா பெருங்கண்டமாகத் திகழ்ந்தது.  இன்று தென்பசிபிக் கடல் உள்ள பகுதியில் அக்கண்டம் அமர்ந்திருந்தது.  பூமத்திய ரேகை வரையும் அதையும் தாண்டி தென்துருவமும் வரையும் பரவி இருந்தது.  புது கண்டங்கள் உடைந்து சிதறிய துகள்களையும் குப்பைகளையும் இன்று பசிபிக் பெருங்கடல் என்று சொல்லப்படும் பகுதியில் துடைத்து எறிந்து விட்டு அங்கு வீற்றிருந்தது கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று கூறுகிறார்.
 
பூமத்திய ரேகைக்கு எதிர்த்திசையில் லாராசியா என்ற சிறிய கண்டம் ஒன்றிருந்தது.  அந்நிலப்பரப்பே இன்று பெரிதாக வளர்ந்து பெரிதாகி வடஅமெரிக்கா ஆயிற்று.  கிழக்கில் எவ்வளவு தூரத்தில் என்று வரையறுத்துச் சொல்ல முடியா தூரத்தில் பால்டிகா என இன்னொரு சிறிய கண்டமிருந்தது.  அக்கண்டமே இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி நின்றது.
 ஆங்காங்கே எங்கிருந்தன எனச் சொல்லவியலாத இடத்தில் சிறுசிறு கண்டங்கள் இருந்தன.  அவை ஆசியாவுடன் பின்னாளில் இணைந்தன. 500 மில்லியன் ஆண்டுகள் முன்பு லாரன்சியாவும் பால்டிகாவும் மோதிக் கொண்டன.  இவை நிகழ்ந்த போது தென் துருவப் பகுதியில் நகர்ந்து இன்றுள்ள தென் அட்லாண்டிக் நோக்கி கோண்டுவானா நகர்ந்தது.  கோண்டுவானா என்ற பெரும்கண்டம் ஆப்ரிக்காவை தென்னமெரிக்காவை இந்தியாவை அண்டார்டிகாவை ஆசுதிரேலியாவை நியுஇனியாவை நியுசிலாந்தை உள்ளடக்கியதாக இருந்தது.  இன்று வேறு கண்டங்களுடன் ஒட்டியுள்ள பல பகுதிகள் அப்பெருங்கண்டத்திலிருந்து பிரிந்தவையே!

 
மத்திய ஐய்ரோப்பா இத்தாலி பால்கன் தீபகற்பம் துருக்கி மத்திய கிழக்கு ஈரான் ஆகிய அனைத்தும் கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.  ஆக இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய கோண்டுவானா உடைந்து சிதறி இன்று ஏற்பட்டுள்ள பூமியின் கண்டங்கள் மட்டுமே நம் வரலாற்றை சொல்லிடாது! அமெரிக்காவில் 1909 லேயே கடலடி அகழ்வாய்வு நடந்துவிட்டது.  1909 ஏப்ரல் 5 அரிசோனா மாகாண அரசிதழின் பதிப்பில் (அரிசோன கெசட்) வெளியான கட்டுரையில்  அரிசோனா மாகாணத்தை ஒட்டி கடலடியில் பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.  இது 8799 அடி ஆழமுடையது. உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்று சொல்லி வந்தார்கள்.

 
ஆனால் புதிதாக வேறோர் பள்ளத்தாக்கு திபெத்தில் இதற்கு போட்டியாக வந்தது.  அமெரிக்காவின் ஜியாகிரபி கமிட்டியும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் கூட்டாக 1994 ல் சீன வசமுள்ள திபேத்தில் உற்பத்தியாகும் யார்லங் திசாங்போ நதியில் உள்ள பள்ளத்தாக்கு 17657 அடி ஆழமுள்ளதால் அதுவே உலகின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டார்.  இப்படி உலக அதிசயங்களுள் ஒன்று என்று இன்று தகுதி இழந்து விட்டது.  அரிசோனா கடலடியில் உள்ள பள்ளத்தாக்கு! அனால் இதே பள்ளத்தாக்கில் 1909 ல் கல்லில் மனிதனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் எகிப்திய கடவுட் பதுமைகளின் சிலைகள் பதப்படுத்தப்பட்ட மம்மிக்கள்கண்டெடுக்கப்பட்டன.  நூறு ஆண்டு முன் அமெரிக்காவில் நடந்தது 100 ஆண்டு கடந்தும் இந்தியாவில் நடக்கவில்லை.
 பூம்புகார் தொடர்பாக மிகச் சில நாட்களே நடந்த ஆய்வையே இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.  நம் வங்காள விரிகுடாக்கடல் 2172000 கி.மீட்டர் பரப்புடைய கடலாகும்.  கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின்படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடல் தரைக்கு கீழே உள்ளது.  இதில் உடைப்பு ஏற்பட்டு இந்தியத் தட்டு வடக்கு நோக்கி மௌள நகர்கிறது.  சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத்தட்டும் மயன்மார் அமர்ந்துள்ள தட்டும் சந்திக்கின்றன.  ஒரே தட்டு மீது உட்கார்ந்திருந்த இந்தியாவும் ஆசுதிரேலியாவும் கன்னியாகுமரிக்கு தெற்கே 960 கி.மீட்டர் தூரத்தில் தட்டு உடைந்து ஆசுதிரேலியா கழன்று செல்கின்றது.  இந்தியா வடக்கு நோக்கி நகர்கிறது.  அந்தப்பிளவில் ஒரு காலத்தில் மூழ்கிய தமிழ்நாட்டின் ஒரு பகுதி மீண்டும் மேலெழுப்பலாம்!
 இந்தியா- மயன்மார் பிளவு பெரிய பிளவின் பக்க விளைவு.  அந்தமான் நிகோபார் அருகில் உள்ள சுந்தா பள்ளம் அருகே இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் மோதிக் கொள்கின்றன.  அப்போது இந்தியத் தட்டு தாழ்ந்து அதன்மேல் மயன்மார் தட்டு ஏறி அமர்ந்து கொள்கிறது.  மயன்மார் தட்டு மேலே ஏறி உட்கார்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது.  இந்த உரசல்களால் சுநாமி உருவாகி வருகிறது.  கடற்பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன.  இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் கடற்கரை மாறுகிறது.  கடலரிப்பு நேருகிறது.  கடலில் கண்முன்னே பல பகுதிகள் மறைந்து விடுகின்றன.  காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் நம் பழம் நகரங்களையம் நாகரிகத்தையும் மூடுகின்றன. 
மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை சென்னையில் உள்ள கடற்சார் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட்டாக இணைந்து தேடிக் கண்டெடுத்து புதிய செய்திகளை வெளிக் கொணர வேண்டும்.
 வங்கக்கடலில் உள்ள கடற் பள்ளத்தாக்குகளில் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பற்றி இந்திய அறிவியல் கழகம் 2008 ல் வெளியிட்ட நூலில் வீ. சுப்பிரமணியன் கே.எஸ்.கிருஷணா எம்.வி.ரமணா கே.எஸ்.ஆர்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக எழுதிய கட்டுரையில் வடக்கு வங்கக்கடலில் வடகிழக்கு தெற்கு தென்கிழக்கு திசையில்  300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக சரிவுகளுடன் பள்ளத்தாக்கு உள்ளதைச் சொல்கின்றனர்.  கடல் தரையின் ஆழம் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக உள்ளது.  கடற் பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 – 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும் மூடியுள்ளன.  10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போல கடலின் தரை மேலெழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை எதுவோ மூடியுள்ளது!! ஆக அறிஞர்கள் வங்கக்கடலில் பள்ளத்தாக்குகள் பற்றி சொல்லி விட்டார்கள்.  அதற்குள் நம் வரலாற்றை நாம் தேடியாக வேண்டும்.

 
நம் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கடலின் நிறம் நீலமாக தெரிந்து பிறகு கருமேகம் சு10ழ்ந்தது போல காட்டப்படுவது கடற்பள்ளத்தாக்கு ஆகும்.  புதுச்சேரி கடற்கரையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் கடலடியில் எரிமலை வெடித்து 1857 ல் பள்ளத்தாக்கு உருவாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிந்து சமவெளி அகழ்வாய்வு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்! அடுத்தடுத்த சான்றுகளை அகழ்வாய்ந்து தர இன்றுள்ள இந்திய நிலப்பரப்பில் தேடிக் களைத்து விட்டோம்! கடலில் அல்லவா ஒளிந்து கொண்டுள்ளது நம் வரலாற்றுப் புதையல்! கடலடியில் தேட வேண்டிய கடமை நமக்கல்லவா உள்ளது.   ஆனால் அறிவுலகம் ஏற்கும் சான்றுகள் இன்றும் ஆழத்தில் இன்னமும் தொலைவில் அகப்படும் என்று முதல் அடி எடுத்து வைத்த கிரகாம் ஹான்காக்கை வரவழைத்து சிறப்பிப்போம்! தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது குமரிக்கண்டம் பற்றிய குறும்படம் தயாரானது.  அது இருக்குமிடம் தெரியவில்லை.  மீண்டும் படமல்ல தேவை! வரலாற்று புதையலை தோண்டி உண்மைகளை முத்தாரம் போலத் தொகுத்து உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல ஆவணப்படம் எடுக்க வேண்டும்.