திங்கள், 16 ஏப்ரல், 2012
செம்மொழி இலக்கியங்களில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சீரழிவுகளையும், அதனைத் தடுக்கும் முறைகளையும், அதிலிருந்து மீண்ட முறைகள்
செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் வாழ்நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது. கடலோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, கடல்படு பொருள்கள் கொண்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை, கடல் வாழ்வின் சவால்களில் இருந்துத் தங்ளைத் தற்காத்துக் கொண்டமை முதலான பல வாழ்முறைகளைச் செம்மொழி இலக்கியங்கள் அறிவித்து நிற்கின்றன.
தலைவன் தலைவியைச் சந்தித்துவிட்டுத் தேரேறிச் செல்கின்றான். அவ்வாறு அவன் தேரில் ஏறிச் செல்லும் காட்சி பெருங்கடற்பரப்பில் பரதவர்கள் கப்பல் ஏறிச் செல்வது போல இருந்தது என்று கடல்வழியையும், நில வழியையும் ஒருங்கு வைத்துக் காண்கிறது ஒரு அகநானூற்றுப்பாடல்.
சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த
கடுசெலல் கொடுந்திமிழ்போல
நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே! (அகநானூறு.330)
என்ற இப்பாவடிகளில் "கடுசெலல் '' என்ற சொற்பகுதி பெருங்கடலில் செல்லும் பயணம் எளிய பயணம் அன்று கடுமை வாய்ந்த பயணம் என்பதை எடுத்துரைக்கின்றது.
மேலும் தமிழன் கடற்பகுதிகளில் எவ்வெவ் தொழில்கள் செய்தான் என்பதைப் பின்வரும் பாடல் உணர்த்துகிறது.
அவனொடு
இருநீர் சேர்ப்பின் உப்புடன் உழுதும்
பெருநீர்க்குட்டம் புணையோடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே (அகநானூறு 280)
வரிய நிலையுடைய தலைவன் செல்வ வளம் மிக்கத் தலைவியைக் காதலிக்கிறான். இதன் காரணமாக அவளை அடைய வழி எவ்வாறு என்று தேடுகிறான். இதற்கு ஒரு வழியாக அவன் தலைவி வீட்டில் தொண்டுகள் பல செய்ய முற்படுகிறான். குறிப்பாக தலைவியின் தந்தைக்கு அருகில் இருந்து அவருடன் இணைந்து நன்முறையில் பணியாற்றுகிறான். இந்தக் காரணம் கருதியாவது தன்மகளை தொண்டு செய்யும் தலைவனுக்கு தந்துவிடானா என்பதுதான் தலைவனின் ஏக்கம்.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள "பெருநீர்க்குட்டம்'' என்ற குறிப்பு கடலைக் குறிப்பதாகும். அதனுள் புணையோடு புக்கும் என்பதனால் தலைவியின் தந்தையோடு இத்தலைவன் பெருங்கடலில் சென்று மீன்பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்தும் (படுத்தும்), பணிந்தும், பக்கத்திலேயே இருந்தானாம். இதன் காரணமாகவாவது தலைவியின் தந்தை, தலைவியைத் தந்து நிற்கமாட்டானா என ஏங்குகிறான் இத்தலைவன்.
இப்பாடலின் வழியாகத் தமிழர்களின் கடல் தொழில்களில் உள்ள கடுமை தெரியவருகிறது. இக்கடுமையோடு பற்பல தடைகளையும் தமிழர்கள் கடல் தொழிலில் அனுபவித்துள்ளனர். (அனுபவித்தும் வருகின்றனர்)
. . . திண்திமில்
எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்
கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புஉடன்
கோள்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத் தூங்கும் (அகநானூறு 340)
இப்பாடலில் மீன் தொழில் செய்யச் செல்லும் தமிழர்க்கு ஏற்பட்ட தடைகள் பல காட்டப் பெற்றுள்ளன. பரதவர்கள் மீன் பிடிப்பதற்காக வலை கட்டி வைக்க அந்த வலையையே வேகம் கொண்டச் சுறா மீன்கள் அழித்துவிடுகின்றன என்ற குறிப்பு கிடைக்கின்றது.
இவ்வகையில் கடல்புற வாழ்வில் பல இடைஞ்சல்கள் உள்ளன என்றும் அவற்றைக் கடந்து மேலாண்மை செய்து தமிழன் அக்காலத்திலேயே வாழ்ந்துள்ளான் என்பது தெரியவருகிறது.
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உறவோன் மருக'' (புறநானூறு: 66)
என்று புறநானூறு கரிகாலனைப் போற்றுகின்றது. அதாவது கடலில் கப்பல் செலுத்தி காற்றை வசப்படுத்தியவரின் மருமகன் கரிகாலன் என்று இப்பாடல் அவனைப் புகழ்கிறது. கரிகால் பெருவளத்தான் காலத்தில் திருந்திய கடல் வாணிப முறை இருந்தது என்பது தெரியவருகிறது.
மேற்கருத்தை உறுதி செய்யும் வண்ணமாகக் கரிகாலனின் பட்டினமான காவிரிப்பூம்பட்டிணத்தில் கடல் படு பொருள்களும், நிலம் படு பொருள்களும் வந்து குமிந்திருந்த நிலையைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் பாடியுள்ளார்.
" நீரின் வந்த நிமிர் பரிப்புரவியும்
காலின் வந்த கருங்கறி முடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
(பட்டினப்பாலை 183193)
மேற்கண்ட பாடலில் காவிரிப்பூம்பட்டிணத்தில் வந்திறங்கியிருந்த, ஏற்றமதியாகவிருந்தப் பொருள்களின் பட்டியல் எடுத்துரைக்கப் படுகிறது.
அமைதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் கடல் பரப்பு சீறி எழுகின்றபோது பேரழிவு ஏற்பட்டுவிடுகின்றது. இந்தப் பேரழிவுகளில் இருந்து மீட்டெழவேண்டிய ஆற்றலை, சவாலை மனித இனம் பெற்றுய்ய வேண்டியிருக்கிறது. இப்பேரழிவுகளில் இருந்து மனித குலத்தைக் காக்க பல்வழிகளில் போராட வேண்டியிருக்கிறது. தற்போது பேரழிவுத் தடுப்பு மேலாண்மை என்ற புதிய மேலாண்மைப்புலம் உலக அளவிலும், இந்திய அளவிலும் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு மாநிலங்கள் அளவிலும் செயல்பட்டுவருகின்றது.
பேரழிவு என்பதை " மனிதர்களால் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பேரழிவுகளை உண்டாக்கும் பெருத்த உயிர் மற்றும் பொருள்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தும் சூழ ல் '' என்று விளக்கிக் கொள்ளலாம்.இதனை இருவகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகள் என்பது ஆகும். இதனுள் கடல்கோள், நிலச்சரிவு, பூகம்பம், புயல் போன்றனவற்றைக் கொள்ளலாம். மற்றது மனிதன் ஏற்படுத்துவதாகும். இதனுள் போர் அழிவுகள், இராசயனப் பொருள்களினால் ஏற்படும் அழிவுகள், அணுகுண்டு கதிர்வீச்சு போன்றவற்றால் ஏற்படும் சீரழிவுகள் போன்றனவற்றை இதனுள் அடக்கலாம்.
செம்மொழி இலக்கியங்களில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சீரழிவுகளையும், அதனைத் தடுக்கும் முறைகளையும், அதிலிருந்து மீண்ட முறைகளையும் காணமுடிகின்றது.
கடல் சூறாவளி
கடலில் ஏற்படும் புயல் போன்றவற்றால் பல அழிவுகள் ஏற்படுகின்றன. கடலில் வீசும் சூறாவளியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுரைக் காஞ்சியில் ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ளது.
பனைமீன் வழங்கும் வளைமேற்பரப்பின்
வீங்கு பிணி நோன்கயிறு அரீஇ இதைப் புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடுங்காற்று எடுப்ப கல்பொருது உரைஇ
நெடுஞ்சுழி பட்ட நாவாய் போல
இருதலைப் பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மெனபிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீந்து உழிதரும் கடாஅ யானையும்
அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
(மதுரைக் காஞ்சி 375385)
என்ற இந்தப் பாடல் அடிகளில் இயற்கைப் பேரழிவான கடல் சூறாவளி தந்த அழிவுகளும், மன்னன் நடத்தியப் போரின் அழிவுகளும் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளன.
குறிப்பாக பனைமீன் என்ற வகை சார்ந்த மீன்கள் உலவும் கடற்பரப்பில் பெருங்காற்று வீசியது. இதன் காரணமாக மரக்கலங்களின் மேலே கட்டப் பெற்றிருந்த பாய்மரச் சீலைகள் கிழிந்து வீழ்ந்தன. காற்று நான்கு பக்கங்களிலும் பெருமளவில் வீசியதால் பாய்கள் கட்டப் பெற்றிருந்த மரங்கள் கூட முறிந்து வீழ்ந்தன. நங்கூரக் கல் கயிற்றுடன் மோதிப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக கடலில் சென்ற கலங்கள் அசைந்து ஆழச் சுழியில் அகப்பட்டு அழிந்தொழிந்தன. இத்தோற்றத்தைப் போல போர்க்களத்தில் யானைகள் அழிவைச் செய்தன. யானைகள் தாங்கள் கட்டப் பெற்றிருந்த முளைக் கம்புகளைச் சிதைத்து, இரும்புச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு யானைகள் அழிவைச் செய்ய கிளம்பினவாம்.
இவ்விரு காட்சிகளின் வழியாக மதுரைக் காஞ்சி இயற்கைச் சீரழிவு, போர்ச்சீரழிவு இரண்டையும் ஒருங்கு காட்டியுள்ளது. இவற்றின் இழப்புகளையும் பதிவு செய்துள்ளது. இவற்றைத் தடுத்திட வேண்டும் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் ஏற்படும் வண்ணம் அழிவுகள் தமிழ் இலக்கிய நெறிப்படி மிக்க அழுத்தம் கொடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன. அதாவது உயிரளபடை என்ற நிலையில் அழுத்தம் கொடுத்து நீட்டித்துச் சொல்ல வேண்டிய நிலையில் அழவுகளை மதுரைக் காஞ்சி சுட்டிக்காட்டியுள்ளது.
"அரீஇ, உரைஇ '' ஆகிய சொற்கள் அழுத்தம் மிக்க சொல்லிசை அளபெடை சொற்களாகும். அழிவின் விளைவுகள் கருதி இதைப் பாடவந்த மாங்குடி மருதனார் அழிவு அழுத்தம் கருதி சொற்களை அழுத்தத்துடன் இப்பாடலில் படைத்துள்ளார் என்பது கருதத்தக்கது.
மேலும் மதுரைக் காஞ்சி என்ற செம்மொழிப் பனுவல் பாடப்பட்டதன் நோக்கமே நிலையாமை உணர்த்துதலே ஆகும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு வீடுபேற்றைப் பற்றி அறிவுறுத்தவும், போரின் மீது அவன் கொண்டிருந்த பெருவிருப்பைத் தடுக்கவும் மதுரைக் காஞ்சி பாடப் பெற்றுள்ளது.
...வல்பாசறை
படுகண் முரசம் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்
திரை இடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே''
( மதுரைக் காஞ்சி 231238)
என்ற பகுதியில் போர்செய்து ஒழிந்த மன்னர்கள் கடல் மணலை விடப் பெரிய அளவினர் என்று ஏளனக் குறிப்பு விளங்கச் செய்யப்பெற்றுள்ளது. உயிர்க்கொலைகளை மிகுவிக்கும் போரினைப் பற்றிய ஏளனக் குறிப்பு இதுவாகும். இப்போர்த் தொழிலை விடுத்து நிலைத்த அருள்வழியைத் தேடு என்பது மதுரைக்காஞ்சிப் பாடலின் அடிக்கருத்தாக விளங்குகிறது.
கப்பல் அழிவில் இருந்துத் தப்புதல்
கடலில் செல்லும் கப்பல் இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகின்றபோது அதில் இருந்து மீண்டெழுந்த மனித குல முயற்சியையும் செம்மொழி நூல்கள் பதிவு செய்துள்ளன.
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர்கொள் பலகை போல
வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிறையே
(நற்றிணை 30)
இப்பாடல் பரத்தையர்கள் பலரின் பழக்கத்திற்கு உரிய தலைவன் ஒருவனை இடித்துரைக்கும் போக்கில் தலைவி கூறிய பாடலாகும். அதாவது கடல்மரம் எனப்படும் கப்பல் கவிழ்ந்துவிட்டால் அதில் பயணித்தவர்கள் ஏதாவது கைக்குக் கிடைக்கும் பொருளைக் கொண்டுத் தப்பிக்க முயலுவர். அந்நிலையில் ஒரு பலகை கடலில் மிதக்கிறது. அந்தப் பலகையைப் பிடித்து உயிர் தப்பிக்க பலர் முன்னேறுவர். ஒரு பலகையைப் பிடிக்கப் பலர் முயன்றுக் கைப்பிடித்தல்போல தலைவனின் கைகளை பலராகிய பரத்தையர்கள் பிடித்ததாகத் தலைவி இடித்துரைத்துத் தலைவனின் இயல்பை இப்பாடலில் சுட்டுகிறாள்.
இதே நிலையில் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் மணிமேகலைக் காப்பியத்தில் கடலில் பலகை ஒன்றின் துணை கொண்டு உயிர்தப்புவான்.
"நளியிரு முந்நீர் வளிகளன் வௌவ
ஒடிமரம் பற்றி ஊர் திரையுகைப்ப ''
என்று மணிமேகலை இச்சூழலை விளம்பும். அவன் அவ்வாறு தப்பித்து வேறு ஓர் நிலப்பகுதிக்குச் சென்றுவிடுவான். நாகர் வாழும் மலை அதுவாகும். அங்கு அவன் நாகர்கள் பேசும் மொழி பேசி அவர்களின் அச்சுறுத்தலில் இருந்துத் தப்புவான்.
இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் கடல் அழிவுகளும் , அதில் இருந்து மீண்ட மனித குலத்தின் இயல்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன.
ஊழி பெயரினும் தான்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்ப டுபவர் ( திருக்குறள் 989)
என்ற திருக்குறள் தமிழர்களின் பேரழிவு எதிர்ப்பிற்கான ஆணிவேரான குறள் ஆகும். ஊழி பெயர்கின்ற அளவிற்குத் துன்பம் வந்திடினும் தன்னிலை பெயராமல் இருப்பவர்களாக மனிதர்களை வளப்படுத்துவதற்கு, சான்றோர்களாக ஆக்குவதற்கு பேரழிவு மேலாண்மை உதவி வருகின்றது என்பது கருதத்தக்கது.
முடிவுகள்
இவ்வாய்வுக் கட்டுரையின் வாயிலாகப் பின்வரும் முடிவுகள் எட்டப்படுகின்றன.
பேரழிவுகள் அடிப்படையில் இயற்கைப் பேரழிவு, மனிதனால் உண்டாக்கப்படும் பேரழிவு என்று இரு வகைப்படும். இவை இரண்டும் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியன என்பதில் ஐயமில்லை. இவையிரண்டையும் ஒருசேரக் கருதி இவற்றைத் தடுக்க எழுந்த முதல் தமிழ்க்குரல் செம்மொழி இலக்கியமான மதுரைக் காஞ்சியின் குரல் என்றால் அது மிகையில்லை.
கடல் சூறாவளி பற்றிய குறிப்புகளையும், கடல் பேரழிவில் இருந்து மனிதன் தப்பிக்க முயலும் முயற்சிகளையும் தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணமுடிகின்றது. மணிமேகலை, நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் பேரழிவு தடுப்பு மேலாண்மை பற்றிய செய்திகள் காட்டப்பெற்றுள்ளன.
மதுரைக் காஞ்சியில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகளைச் சுட்டும்போது அவற்றினைச் சொல்லழுத்தம் கொடுத்துக் காட்டியிருப்பது அழிவின் துயரத்தை சொல்லாலும் பொருளாலும் உணர்த்திக்காட்டுவதாக உள்ளது.
தொடர்ந்த மனித வாழ்வில் பேரழிவுகள் நடைபெற்று வந்துள்ளன. அதிலிருந்து மீண்டு மனிதஉயிர்களும், மற்ற உயிர்களும் எழுந்தே நின்றுள்ளன. இன்னும் எழுந்து நிற்பதற்கான மன, உடல் உறுதிகளை மனித உலகம் பெற வேண்டும் என்பதே பேரழிவு மேலாண்மையின் உயரிய நோக்கமாகும்.
பயன்கொண்ட நூல்கள்
1. சுப்பிரமணியன்.ச.வே.,(உ.ஆ), சங்கஇலக்கியம், எட்டுத் தொகை தொகுதிகள் 1, 2, 3 மணிவாசகர் பதிப்பகம், 2010
2. நாகராசன்.வி. (உ. ஆ) பத்துப்பாட்டு, நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை, 2004http://manidal.blogspot.in/2011/02/blog-post_14.html
சங்ககாலம்-அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
முனைவர் ந. முருகேசன்
மனிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத் துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர் களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்க ளின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.
பெரிய வள்ளல் என்று இன்றும் போற்றப்படு கின்ற பாரிவள்ளல் மனிதர்களிடம் மட்டுமா அன்பு காட்டினான்? அவனுடைய அன்பு, வாடிய முல்லைக் கொடியிடம் கூட சென்றதே! படரக் கொடியின்றி வாடிய முல்லைக் கொடி படர, தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்து வந்த பாரியின் மனம், சகல உயிர்களையும் நேசித்த உணர்வு மிக்கதல்லவா! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் முன் னோடி பாரிதான்! பாரியைப் போலவே பெரிய வள்ளலாக, சங்க காலத்தில் வாழ்ந்தவன் பேகன். அவனும் புலவர் களையும் இரவலர்களையும் நேசித்ததோடு, அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினான்.
மனிதனின் வாட்டத்ததைப் போக்கிய மன்னன் பேகன், குளிரால் வாடிய மயிலுக்கு உயர்ந்த போர்வையைப் போர்த்தினான். இவனும், எவ்வு யிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கிய வட லூர் வள்ளலாரின் முன்னோடியே! குறுங்குடி மருதனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்று எண்ணத் தக்கது. தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, "கார்கா லம் வந்துவிட்டது; தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி, தலைவனின் நல்ல மனதைக் கூறுவதில் சங்ககால மனித உணர்வைக் காணலாம்.
""பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்'' (அகநா-4)
பூத்த சோலையில் தம் துணையோடு தேனில் திளைத்து மகிழும் வண்டினங்கள், மணியொலி கேட்டு பயந்து, கலைந்து சென்று விடுமோ என்று கருணையோடு எண்ணி, தன் தேர் மணிக ளின் நாவை ஒலிக்காத வண்ணம் கட்டி, தேரைச் செலுத்துபவனாம் தலைவன். பலநாள் பிரிந்து கிடந்து, வாடும் தலைவியைக் காண விரைந்து வரும் வேளையிலும், வண்டினங்கள் மகிழ்வைச் சிதைத்துவிடக் கூடாதே என்று நினைத்த உள் ளம் சங்ககாலச் சமுதாயப் பண்பைப் பிரதிபலிப் பதாகும்.
எவ்வுயிர்க்கும் தன்னால் துன்பம் நேர்ந் துவிடக் கூடாது என்பதையும், எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் குறுங்குடி மருதனார் இக் காட்சியின் மூலம் உணர்த்துகிறார்.
சீத்தலைச் சாத்தனார் பாடிய அகப்பாடல் ஒன் றும் நினைக்கத்தத்தது. காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடித்துக் குதிரை பூட்டிய தேரில் திரும்பும் போது, தன் பாகனுக்கு உரைத்ததில் காணப்படும் அன்புணர்ச்சி கற் றோர் நினைவை விட்டு அகலாதது.
""வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடமறந் தேமதி வலவ குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணைநிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே'' (அகநா-134)
காதலியை விரைவில் காண வேண்டும் என்று வரும் வழியில், ஆண்மானும் பெண்மானுமாய்க் கூடி மகிழ்ந்திருப்பதைக் கண்ட தலைவன், தேரொலி கேட்டு அவைகள் கலைந்துவிடும் என்று எண்ணி, குதிரையைச் சாட்டையால் அடித்து ஓட்டாது மெல்ல நடத்திச் செல்க என்று பாகனுக்கு உரைக்கிறானாம்.
மனித நேயத் தையும் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் தலைவனின் உயர்ந்த நெறியைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது. [நன்றி: தினமணி]
தமிழின் முற்கால இலக்கியங்களில் யானை
பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று. தமிழின் முற்கால இலக்கியங்களில் பல விலங்குகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் யானைகள் அளவுக்கு வேறெந்த விலங்கைப் பற்றியும் இவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டதில்லை. முத்தொள்ளாயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சேர சோழ பாண்டியர்கள் மேல் ஆளுக்கு தலா தொள்ளாயிரம் என்று பாடப்பட்ட முத்தொள்ளாயிரம் பாடல்களில் நமக்கு கிடைத்திருப்பவை வெறும் 108 பாடல்கள் மட்டுமே. அந்த நூற்றியெட்டில் 33 பாடல்களில் யானைகள் பேசப்படுகின்றன.
[தாராசுரம் யானை ரதம்]
கவித்துவ உணர்வும் கற்பனைத் திறமும் இனிய சொல்வடிவம் பெரும் முத்தொள்ளாயிரம் வெறும் நூற்று எட்டு பாடல்களாக அருகியது ஒரு சோகக்கதை. இவ்வளவு சிறப்பான பாடல்களைப் பாடிய கவிஞரின் பெயர் மற்றும் காலத்தை நாம் மறந்து விட்டோம், காலப்போக்கில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் அனைத்தையும் மொத்தமாகத் தொலைத்திருப்போம். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட இந்த பாடல்கள், நானூறு ஐநூறு ஆண்டுகள் முன் வரை இலக்கியத்தில் பேசப்பட்டு வந்துள்ளன. அதன்பின் இவை குறித்த பதிவுகள் நம் இலக்கியங்களில் இல்லை. வெகு காலம் கழித்து புறத்திரட்டு என்ற தொகுப்பு நூலை உருவாக்கிய புண்ணியவான் ஒருவர், கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நீத்தார் பெருமை, பொறையுடைமை, அரண், நகர், கைக்கிளை என்றெல்லாம் அதிகாரங்களை உருவாக்கி, அவற்றில் பொருந்தக்கூடிய பாடல்களை வெவ்வேறு நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டார். அந்த வகையில் நமக்குக் கிடைத்த பெரும்பேறே இந்த நூற்று எட்டு பாடல்களும்.
முத்தொள்ளாயிரத்தில் யானைகளைக் குறித்து செய்யப்பட்டிருக்கும் பதிவுகள் அந்தந்த அரசர்களின் பெருமைகளையும் அவர்களுடைய நாடுகளின் பெருமையையும் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், யானைகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவை என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றன. இக்காரணத்தால் யானைகள் மிகுந்த நேசத்துக்கு உரியனவாக இருக்கின்றன.
’யானை கட்டிப் போர் அடித்த காலம்’ என்று சொல்வார்களே, இன்றைக்கு அத்தனை விளைச்சல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அத்தனை யானைகள் நம்மிடம் இன்று இல்லை. ஒரு முத்தொள்ளாயிரப் பாடலில் சேரனுடைய யானை வளம் பற்றிய குறிப்பொன்று கிடைக்கிறது. அந்நாட்டு வீரர்கள் கைமாற்றிக் கைமாற்றி கள் அருந்துகிறார்கள். அருந்தும் முன், அந்தக் கள் பானையின் மேலே தேங்கி வரும் நுரையைத் தம் கைகளால் வழித்து வீதியில் வீசுகிறார்கள். அவர்கள் சென்றபின் அந்த வழியே வரும் சேரனின் யானைகள் இந்த நுரையை மிதிக்கின்றன-
ஓங்கெழில் யானை
மிதிப்பச்சே றாயிற்றே,-
பூம்புனல் வஞ்சி
அகம்.
என்று பாடுகிறார் முத்தொள்ளாயிரப் புலவர்.
[மகாபலிபுரம் பல்லவ யானைகள்]
ஒரு மன்னனின் போர் திறத்தைப் பற்றி பேச வேண்டும் - அவன் மிகவும் பலமுள்ளவன் என்று சொன்னால்தானே பாடப்படும் அரசனுக்குப் பெருமை? இங்கும் புலவருக்கு யானைகளே துணை வருகின்றன - “பல்யானை மன்னீர்!” என்று அழைத்து, “படுதிறை தந்துய்ம்மின்,” என்று அறிவுறுத்துகிறார். சாமானிய அரசர்களிடம் திறை பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது?- ஒரு அரசனின் புகழைப் பாடவும் பல யானைப் படைகள் கொண்ட பேரரசர்கள் தேவைப்படுகிறார்கள்.
கோதை என்று சேரனை அழைத்து ஒரு மிக அழகிய பாடல். சேரன் “செங்கண்மாக் கோதை”- சிவந்த கண்கள் கொண்டவன், போர் நாட்டம் மிகுந்தவன். அவனைப் போலவே இருக்கிறது அவனது யானையும்- அது ஒரு “சினவெங் களியானை”. வீரம் நிறைந்த பல மன்னர்களின் வெண்கொற்றக் குடையை பிடுங்கி தூர எறிந்த இந்த யானை நிலவைப் பார்த்ததும், பழக்க தோஷத்தால் அதுவும் யாரோ ஒரு மன்னனுடைய வெண் குடைதான் என்று நினைத்துக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய கை நீட்டுகிறதாம்.
வீறுசால் மன்னர்
விரிதாம வேண்குடையைப்
பாற எறிந்த
பரிசயத்தால்த் தேறாது,
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை,-
திங்கள்மேல் நீட்டும்தன்
கை.
கை என்ற பதம் ஈற்றடியாகத் தனித்துப் பொருத்தப்பட்டிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது.
சாதாரணமாகவே யானை நடந்து செல்லும்போது அதன் நடையை ரசித்தபடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அதன் பின் செல்லலாம், அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் திங்கள் மீதே கை வைக்கப் பார்க்கும் போர் யானை நடப்பதைப் பார்க்கும் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனை எப்படி விரிகிறது பாருங்கள், இது ஒரு கவியுள்ளத்தில் மட்டுமே தோன்றக்கூடிய கருத்து.
கச்சி ஒருகால்
மிதியா, ஒருகாலால்த்
தத்துநீர்த் தன்தஞ்சை
தான்மிதியாப்- பிற்றையும்
ஈழம் ஒருகால்
மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி
களிறு!
கோழியர்கோக் கிள்ளி- உறையூர்ச் சோழனது யானை, தன்னுடைய முதல் அடியை காஞ்சி (கச்சி) நகரில் வைக்கிறது, அடுத்த அடியைத் தஞ்சையில் வைக்கிறது. அப்படியே போய் அதன் அடுத்த மிதி ஈழத்தில் விழுகிறது! இத்தனை நாடுகள் வென்ற வேந்தனே என்று சாதாரணமாகச் சொல்லாமல், இத்தனையையும் மிதித்து நடக்கிறது இந்த யானை என்று எத்தனை நயத்தோடு சொல்லியிருக்கிறார்கள் - நம் கண்முன் சோழனது யானைப் படையின் பராக்கிரமம் விரிகிறதல்லவா?
[பேளூர் ஹோய்சாள யானைகள்]
மனிதர்கள் யானையைப் பழக்கப்படுத்த கற்றுக் கொண்டு அதைப் பல வேலைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றுள் போர்த் தொழில் முதன்மையானது. யானைகள் மெதுவாகவே நகருமென்றாலும் அவற்றுக்கான பிரத்யேகப் பயன்பாடுகள் இருந்தன. ஒரு யானையின் மேல் ஏழு முதல் 10 வீரர்கள் வரை ஏறிப் போர் புரிந்தார்களாம். யானையால் மட்டுமே அத்தனை மனிதர்களைச் சுமக்க முடியும். உயரமான விலங்கு என்பதால் களப்போரில் யானை மேலிருந்து தெளிவாக அம்பு எறிய முடியும். ஆனால் இவற்றைவிட முக்கியமானது, பகைவர்களின் மதிற் சுவர்களை உடைப்பது.
பலமான மதிற்சுவர்களை உடைக்க யானை பலம் வேண்டும். எத்தனை முயன்றாலும் மனிதர்களால் அது முடியாது. போதாக்குறைக்கு இந்த மதில்களின் வாயிற் கதவுகளில் கூரிய ஈட்டிகளை வேறு பொருத்தியிருந்தார்கள். இந்த முத்தொள்ளாயிரப் பாடலின் காட்சியைப் பாருங்கள்,
அயில்க்கதவம் பாய்ந்துழக்கி,
ஆற்றல்சால் மன்னர்
எயில்க்கதவம் கோத்தெடுத்த
கோட்டால்ப்.- பனிக்கடலுள்ப்
பாய்தோய்ந்த நாவாய்போல்த்
தோன்றுமே,- யெங்கோமான்
காய்சினவேல்க் கிள்ளி
களிறு!
அயிற்கதவை (அயில் – அம்பு) உடைத்து பின் எயிற்கதவை தன்னுடைய தந்தத்தில் குத்தி தூக்கிக் கொண்டு ஓடும் கோதையின் யானை, கடலில் செல்லும் கப்பல் போல் இருக்கிறது என்கிறார் புலவர்: “எயில்க்கதவம் கோத்தெடுத்த கோட்டால்”- யானை தன் தந்தத்தில் கோட்டையின் வாசல் கதவைக் கோத்து உயர்த்திப் பிடித்து நடக்கிறது, இது பார்ப்பதற்கு பாய்மரக் கப்பல் ஒரு கடலில் பயணிப்பது போல் இருக்கிறது: ‘பனிக்கடலுள்ப் பாய்தோய்ந்த நாவாய்போல்த் தோன்றுமே” என்று பாடுகிறார் புலவர். யானைகளை நேசிக்கக் கூடியவர்களால் மட்டுமே இந்தக் காட்சியை உருவகப்படுத்திப் பார்த்து ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
போர், வீரம் பற்றியெல்லாம் பேசும்போது யானைகளைப் பாடலாம். ஏனெனில், அவை வலிமையானவை, கம்பீரமானவை. ஆனால் அக்கால வழக்கங்களைப் பற்றிச் சொல்லவும் அவற்றையே பயன்படுத்தியிருக்கிறார் முத்தொள்ளாயிரப் புலவர்.
போர் என்றால் நிறைய உயிரிழப்பும் இருக்குமே. அக்காலத் தமிழரிடையே உடன்கட்டை ஏறுவது வழக்கத்தில் இருந்திருக்கிறது. பாண்டியன் மேற்கொண்ட போரில், மரணமடைந்த வீரர்களின் மனைவியர் தங்கள் கணவர்மார்களோடு எரி மூழ்குகிறார்கள். அதைக் காணச் சகியாது பாண்டியன் கண்ணை மூடிக் கொள்கிறான். போரில் நிறைய யானைகளும் இறந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு அவ்வானைகளின் துணை பெடைகள் புலம்புகின்றன. அதைக் காணச் சகியாது உயிர் பிழைத்த போர் யானைகளும் தங்கள் கண்களை மூடிக் கொள்கின்றன என்று பொருள் தரும் பாடலில் இந்த வழக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய பெண்டிர்
எரிமூழ்கக் கண்டுதன்
தானையால்க் கண்புதைத்தான்
தார்வழுதி - யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத்
தாம்கண் புதைத்தவே!-
பல்வாயால்ப் பட்ட
களத்து.
காதல் இல்லாமல் இலக்கியமா? முத்தொள்ளாயிரத்தில் போருக்குச் சென்ற யானைகளின் வீர காதல் வெவ்வேறு பாடல்களில் இவ்வாறு பாடப்பட்டிருக்கின்றன-
ஏற்கனவே நாம் பார்த்தது போல் எதிர் அரசனின் மதிற்சுவர்களைத் தகர்க்க யானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்போது யானைகளுக்கும் காயங்கள் ஏற்பட்டு விடும். அவற்றின் தந்தங்கள் உடைந்துவிடும். இப்படிப்பட்ட ஒரு இழப்பை பாண்டிய நாட்டு யானையொன்று எவ்வளவு புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறது பாருங்கள்:
பிடிமுன் அழ(க)ழிதல்
நாணி- முடியுடை
மன்னர் குடையால்
மறைக்குமே…
என்று செல்கிறது கற்பனை!
பகைவர்களின் மதிற்சுவர்களை இடித்து உடைத்ததால் தந்தங்களும், அவர்களின் மணிமுடிகளை நசுக்கியதால் நகங்களும் உடைந்த சோழனின் யானைக்கு இவ்வளவு சாமர்த்தியம் இல்லை- அது,
…பிடிமுன்பு
பொல்லாமை நாணிப்
புறங்கடை நின்றதே!
என்று பாடுகிறார் புலவர்.
[கஹுராஜோ சிற்பங்களில் யானைகள்]
பொதுவாக, சங்கப்பாடல்களில் காதல் கொண்ட பெண்கள் தங்கள் ஏக்கத்தைத் தங்கள் தோழிகளிடம் சொல்வார்கள். முத்தொள்ளாயிரத்திலும் பல பாடல்கள் அப்படி உண்டு. அவற்றைத் தவிர அபூர்வமாக யானையிடம் பெண்கள் பேசுவதாக சில பாடல்கள் உண்டு…
இது அருமையான பாடல். சோழநாட்டுப் பெண் ஒருத்தி பாடுகிறாள். சோழன் நீல நிற மலர் அணிந்து கொண்டு ஒரு பெண் யானை மீதேறி வருகிறான். அந்த யானை ஆடிக்கொண்டே வருகிறது. இவள் அந்த யானையைப் பார்த்து “அடி யானையே! சோழன் உன் மேல் இருக்கிறான் என்கிற கர்வத்தில் இப்படி ஆடிக் கொண்டு வருகிறாயே! காவிரி பாயும் நாட்டுப் பெண்கள் இப்படி நாணமில்லாமல் நடக்க மாட்டார்கள் என்பது உனக்குத் தெரியாதா?” என்கிறாள்.
நீள்நீலத் தார்வளவன்
நின்மேலான் ஆகவும்
நாணாதே என்றும்
நடத்தியால் - நீள்நிலம்
கண்தன்மை கொண்டலரும்
காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை அல்ல
பிடி!
யானையானாலும் பெண்ணென்றால் நாணம் இருக்க வேண்டாமா என்று கேட்கிறாள் இவள் - இந்த சோழ நாட்டுப் பெண்ணின் வயிற்றெரிச்சல் தெளிவாகவே வெளிப்படுகிறது, இல்லையா?
அது சோழ நாடு. இது பாண்டிய நாடு. அவ்வளவுதான் வித்தியாசம். பாண்டியனின் யானைக்கு இந்தப் பெண் செய்யும் அறிவுறுத்தல் என்னவோ அதேதான் - “ஏ! மட யானையே! பகைவர்களின் சதை ஒட்டிக் கொண்டிருக்கும் வேலையுடைய எங்கள் கோமான் உன் மீது ஏறி உலா வரும் போது மெதுவாக நடந்து செல். இல்லையென்றால் நீ ஒரு பெண்தானா என்கிற ஐயமே வந்துவிடும்” என்கிறாள்.
எலாஅ மடப்பிடியே!
எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல்
மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந்
தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ(து)
உடைத்து!
பாவம் இந்த யானைகள், இவைகளும் பெண்கள் வாயில் விழுந்து எழாமல் தப்ப முடிவதில்லை!
மேலே பார்த்த பாடல்கள் இரண்டிலும் பெண்கள் யானைகளைப் பார்த்து கோபப்படுவதாக பாடப்பட்டுள்ளன. பின் வரும் பாடலில் உள்ள பெண் கோபப்படுவதில்லை, கெஞ்சுகிறாள்.
பாண்டியன் தெருவிலே வருகிறான். அவன் மீது ஆசை வைத்து விட்டாள் இந்தப் பெண், தன் வீட்டு ஜன்னல் வழியாக அவன் வருவதைப் பார்க்கிறாள். அவனை ஆசை தீர பார்க்க முடியவில்லையோ என்னவோ, பாண்டியனை சுமந்துவரும் பெண் யானையிடம் கெஞ்சுகிறாள் அவள். “உடுக்கை போன்ற பாதத்தையும் கேடயம் போன்ற காதுகளையும் உடைய யானையே! பாண்டியனைச் சுமந்து வரும் போது என் ஜன்னலுக்கு அருகே நட” - என்று.
துடியடி, தோற்செவி,
தூங்குகை, நால்வாய்ப்
பிடியேயான் நின்னை
யிரப்பல் - கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு
சேரி புகதலும்எம்
சாலேகம் சார
நட!
காதலுக்கும் வீரத்துக்கும் யானைகளைத் துணை சேர்த்துக் கொண்டு இத்தனை பாடியிருக்கிறார் புலவர். ஏன்? இவர் போன்ற பண்டைத் தமிழ் புலவர்களுக்கு வேறு உவமையே கிடைக்கவில்லை என்பதாலா? இல்லை. எல்லாம் ஒரு பற்றுதான். யானைகள் மீதான பற்று. முத்தொள்ளாயிரத்தில் வரும் யானைகளை மட்டும் பேசுவதானாலும்கூட இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இது தவிர சங்கப் பாடல்களில் எத்தனை யானைகள் வருகின்றன, என்னென்ன செய்கின்றன.
தமிழ் இலக்கியத்தில் யானைகளின் இடம் மிக முக்கியமானது. அவை வீரத்தின் குறியீடுகளாக, அரசனுடைய ஆற்றலின் ஆதாரமாக மட்டும் இல்லை- நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உள்ள குழந்தைகள் விளையாடிப் பார்க்க விரும்பும் நேசத்துக்கும் உரியனவாக இருக்கின்றன.
(இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள பாடல்களின் வடிவம் காவ்யா வெளியீடான, டி.கே.சிதம்பரநாத முதலியார் பதிப்பித்துள்ள முத்தொள்ளாயிரம் நூலை ஒட்டி கையாளப்பட்டுள்ளது)
http://solvanam.com/?p=17919
சங்க இலக்கியம் -ராமர்
ராமர் பாதம் பதித்த ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் பரவி உள்ளதை முந்தைய இதழ் ஒன்றில் படித்தோம். தமிழ் நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டே ராமர் வாழ்ந்தது உண்மைதானா என்று கேள்வி எழுப்புவோருக்கு தமிழ் இலக்கியம் என்ன பதில் தருகிறது?
உலக இலக்கியங்களில் சங்க இலக்கியம் மிகவும் பழமையானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று பெரும் சங்கங்கள் தமிழ் இலக்கிய வளத்தின் செழுமைக்குத் தக்க சான்று!
ராமர் ஒரு புனைகதைப் பாத்திரமா அல்லது ஜீவனுள்ள ஒரு உண்மை நாயகனா என்பதற்கு சங்க இலக்கியம் அற்புதமான பதிலைத் தருகிறது.
புறநானூறின் 378ம் பாடல்
தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.
ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு:
தென் பரதவரின் குறும்புகள் அடங்க, வட வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க, அவரை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்! இச் சோழனின் நெடு நகரிலே, வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினனான சோழனின் வஞ்சிச் சிறப்பைப் போற்றிப் பாடினேன். எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு ஏராளமாக அளித்தான். அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன். அவர்கள் கண்டு திகைத்தனர்! விரலில் அணிவன செவியிலும், செவியில் அணிவன விரலிலும், அரைக்குரியன கழுத்திலும், கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்! அவரது செயலைக் கண்டவர் கைகொட்டி நகைத்தனர். 'சீதையின் அணிகளை கண்ட குரங்கினம் அணிந்ததென' இராமாயணத்தில் சொல்லப்படும் தன்மை போலிருந்தது அந்தக் காட்சி!
என் சுற்றத்தின் வறுமையும் தொலைந்தது! அவர் முகத்தில் நகையும் அரும்பிற்று.
பழமையான சங்க இலக்கியம் வழக்கில் இருந்து வரும் ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டி நகைச்சுவையுடன் 'குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்' என்று கூறுவது பொருள் பொதிந்த ஒன்று.
அகநானூறு 70ம் பாடல்
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகம் 70 - வரிகள் 13 முதல் 17 வரை)
இராமன் அரக்கரை வெல்லுதற்குச் செய்யும் போர் பற்றிய அரிய மறைச் செய்தியை வானர வீரர்களோடு ஆராய்தற்பொருட்டுக் கோடிக்கரையில் பல விழுதுகளுடைய ஆலமரத்தின் கண் பறவைகள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தைக் கைகவித்து அவித்தனன் என்பது மேற்கண்ட பாடல் தரும் அற்புதச் செய்தி.
நடந்திருந்தாலன்றி இப்படிப்பட்ட புனைகதைகள் வழக்கில் வர முடியாது; அதிலும் பாடலில் மேற்கோளாக இடம் பெற முடியாது. தனுஷ்கோடியை 'தொன் முது கோடி' என்று பாடல் கூறுவது மிகவும் ஆழ்ந்த பொருளைத் தருவதாகும்.
'காலம் காலமாக இருந்து வரும் கோடி' என்ற அர்த்தத்தை உற்று நோக்கினால் எல்லையில் காலம் முன்னர் நடந்த அரிய சம்பவமும் அது சார்ந்த இடமும் நமக்குப் புலனாகும்.
கலித்தொகை தரும் இராவணன் பற்றிய தகவல்
இது தவிர கலித்தொகை பாடல் 139ல் 33 முதல் 37 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:
"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"
இந்த வரிகள் அரக்கர் கோமானான பத்துத் தலை இராவணன் இமய மலையை எடுத்ததை அழகுறக் கூறுகிறது. ஆக, இப்படி இராவணன் இமைய மலை எடுத்தது, இராமன் தனுஷ்கோடியில் ஆலோசனை செய்தது, குரங்குகள் சீதையின் ஆபரணங்களை இடம் மாறி அணிந்தது போன்ற செய்திகள் சங்க இலக்கியத்தில் அழகுற ஆங்காங்கே தக்க இடத்தில் அமைந்துள்ளன.
இராமன் வாழ்ந்தாரா என்ற் கேள்விக்குச் சங்க இலக்கியம் தரும் பதில் இது!
.
சேது என்ற சொல்லின் பொருள்
சேது என்பது ஒரு பழமையான வடமொழிச் சொல். இதன் பொருள் அணை என்பதாகும். இதை 'ஸஹ இதும் கந்தும் ஷக்யதே அனேனேதி ஸேது:' என்ற பழமையான சொற்றொடரால் அறியலாம்.
இதுவே கரைகளை உடைத்து நீர் வெளிவராமல் இருக்கும் கரைக்கும் உரித்த சொல்லாக ஆகிறது. ஆகவேதான், 'நிஸ்ஸேது' என்ற சொல் சமூக மற்றும் கௌரவத்திற்குரிய சட்டங்களை உடைப்பவனையும் குறிக்கும் சொல்லாக ஆனது.
இமயம் முதல் சேது வரை ஒரே பாரதம்!
ராமர் அமைத்த சேதுவைக் காக்கும் உரிமை தமிழக மன்னர் குலமான சேதுபதிகளுக்கு உண்டு. அவர்களின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது; மரியாதைக்குரியது. ராமர் ஸ்தாபித்த சேது சமஸ்தானத்தின் முதல் சேதுபதி முதல் இன்றைய சேதுபதி வரை ராமர் பாலத்தை அவர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். கி.பி.1605ம் ஆண்டிலிருந்து சேதுபதி வம்சத்தின் ஆதாரபூர்வமான வரலாறு நமக்கு இன்று கிடைக்கிறது.
இந்தக் குறுகிய சுமார் 400 ஆண்டுகள் வரலாறை அலசி ஆராய்ந்து பார்த்தாலும் முழு பாரத தேசமே சேதுவின் மீது கொண்ட பக்தி எவ்வளவு என்பதை விளக்கும். சங்க இலக்கியம் இமயமலையை எடுத்த ராவணனையும் குறித்தது. கோடிக்கரையில் ராமனின் சேது பற்றிய ஆலோசனையையும் குறிக்கிறது.
தமிழின் சங்க இலக்கியத்தைத் தவிர, "ஆ ஸேது ஹிமாசல" - இமயம் முதல் சேது வரை என்ற சொற்றொடரை - ஒரே பாரதம் என்ற ஒற்றுமைத் தொடரை - வேறு எந்தப் பழமையான இலக்கியத்தால்தான் நிரூபிக்க முடியும்!?
(நன்றி : ஆதிப்பிரான்)
வெள்ளி, 13 ஏப்ரல், 2012
லெமூரியா - குமரிக் கண்டம்
எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்
சு.கி. ஜெயகரன்
• அண்ணாயிசத்தின் வெற்றி
• தார்மீக அரசியலுக்குச் செருப்படி
• சென்ற விய வருடத்து அரசியல்
ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகளை எதிர் கொள்ளும்போது அவற்றை அறிவு ரீதியாக உள்வாங்கிப் பின் மாற்றுக் கருத்துகளைத் தர்க்க ரீதியாக முன்வைக்க வேண்டும். ஆனால் பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைச் சூழலில், மாறுபட்ட கருத்துகளைத் தர்க்க பூர்வமாக எதிர்கொள்ளும் தன்மை குறைவென்பதை நான் லெமூரியா பற்றி எழுதியபோது வந்த எதிர்வினைகளால் உணர்ந்தேன். கருத்துகளை எதிர்கொள்ளாமல், எழுதியவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் எதிர்வினைகளைக் கண்டேன்.
காலச்சுவடு இதழில், சில ஆண்டுகளுக்கு முன் 'லெமூரியா - குமரிக் கண்டம் குழப்பம்' என்ற கட்டுரையை, பின்னர் வரவிருந்த 'குமரி நிலநீட்சி' என்று தலைப்பிட்ட என் நூலுக்கு வெள்ளோட்டம் போல் எழுதினேன். அதில் மனுக் குலம் தோன்றியதற்கு முன்னிருந்த கோண்ட்வானாக் கண்டமும், மேனாட்டு மறை'ஞானி'களின் கற்பனையில் உதித்த லெமூரியாவும் சங்க இலக்கியங்கள் சில சுட்டும் குமரி என்ற நிலப் பரப்பும் வெவ்வேறானவை என்பதை விளக்கியிருந்தேன். அதற்கான எதிர்வினைகளை, மறைந்த கண்டத்துடன் சம்பந்தப்பட்ட புனைபெயர்களில் எழுதியோர், காலச்சுவடு எதிர்வினைகளைப் பிரசுரிக்கவில்லையென்று குறைகூறி, அவற்றை ஒப்புரவு என்ற பத்திரிகையின் இதழ் ஒன்றில் பதிவு செய்தனர். காலச்சுவடு ஒரு கருத்துப் போரைத் துவங்கியிருப்பதாகவும் அதை எதிர்கொள்ளக் குமரிக் கண்ட ஆதரவாளர் அனைவரும் முன்வர வேண்டும் என்ற அறைகூவலும் எழுதப்பட்ட அந்த எதிர்வினைகளில் கோபமே மேலோங்கியது.
கருத்துப் போர் ஆரம்பிப்பதாகக் கூறி என்மீது வசைமாரி பொழிந்த அந்த எதிர்வினைகளில் ஒன்றுகூட என் நூலிலுள்ள அறிவியல் சார்ந்த வாதங்களை எதிர்கொள்ளவில்லை. 'எப்படி இவர் இப்படிக் கூறலாம்' என்ற தோரணையில் எழுதப்பட்ட எதிர்வினைகளில் கடற்கோள், கண்டப் பெயர்ச்சி, மறைந்த கண்டம், அங்குத் தழைத்த சீரிய நாகரிகம் பற்றி எழுதி, சங்கப் புலவோர், உரைகாரர் கூறியவை கட்டுக் கதைகளாக இருக்க முடியாது என வாதிட்டனர். எப்படி 'இருந்திருக்க முடியும்' என்பதைக் கூறாத அந்த வாதங்கள், குத்துச் சண்டை பயிலுவோர் திருப்பக் குத்தாத மணல்பையின் மீது குத்துவதை எனக்கு நினைவுறுத்தின.
அவற்றில் எனக்கு விடுக்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி, 'நான் கோடிக்கணக்கில் செலவழித்துக் கடலடி ஆய்வுகள் நடத்தினேனா?' என்பது. என் வாதங்கள், அறுபதுகளுக்குப் பின் நடத்தப்பட்ட புவியியல், கடலடி மற்றும் ஆழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆம், அவற்றிற்கென ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் பல கோடிகள் செலவழித்துள்ளன. ஆனால் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். மறைந்த கண்டங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பன்மொழிப் புலவர் துவங்கி அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும் பேருந்துத் தொழிலதிபர்வரை எவரேனும் ஒருவராவது கடலடி ஆய்வுகள் நடத்தியவரா அல்லது புவியியலின் அடிப்படைகளைத்தான் புரிந்துகொண்டவர்களா? அவர்கள் அனைவரும் ஸ்காட் எலியட் சொன்னார், ஹெலினா ப்ளவாட்ஸ்கி சொன்னார் என்று அவர்கள் எழுதியவற்றை, மூலங்களை ஆராயாமல், கேள்விகள் எழுப்பாமல், அவர்களின் லெமூரியாக் கோட்பாடு என்ற அரைத்த மாவையே தமிழில் அரைக்கவில்லையா?
தொல்காப்பியருக்கு முற்பட்ட புலவோர் எழுதியவற்றை மேற்கோள் காட்டி 'என்மனார் புலவோர், பாங்குற உணர்ந்தோர்' என்று எழுதும் மரபு, தொல்காப்பியத்தில் உள்ளது. அதே மரபில், நக்கீரர் தம் இறையனார் அகப்பொருளுரையில் குமரி எனும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிட்டதை எழுநூறு அல்லது எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர் பின்பற்றினர். அவர் மிகைப்படுத்தி எழுதிய நிலவியல் விவரங்கள் வேத வாக்குகளாக! அன்று இருந்ததாக நம்பப்பட்டவற்றை, அன்று எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகளை, புவியின் மேற்பரப்பைச் செயற்கைக் கோள்களால் கண்காணிக்கும் இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மேம்பட்ட அறிவியல் ஆய்வுகளால் கண்டத் தட்டுகளின் அமைப்பு, கடல் மட்ட உயர்வு பற்றி அறிந்துகொண்ட நிலையில், சங்கப் புலவர் மற்றும் உரைகாரர் கூறியதை விடுத்து, இந்த நூற்றாண்டிற்குள் காலடியெடுத்து வைக்க வேண்டும்.
கருத்துகளை உள்வாங்காமல், அவற்றிற்கு எதிர்வினைகளை எழுதுவது ஆகாயத்துடன் சிலம்பம் செய்வது போலாகும். ஓர் எடுத்துக்காட்டு, வெகுஜனமக்கள் வார இதழ் ஒன்றில் அன்றைய அரசியல்வாதி எழுதிய மறுப்புக் கட்டுரை. 'தமிழன் மட்டுமல்ல மனிதயினம் தோன்றியதே குமரிக் கண்டத்தில்தான் என்று பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்போது பெங்களூர்க்காரர் ஒருவர், குமரிக் கண்டம் என்றே ஒன்று இருந்ததில்லை என்கிறார். அதைப் படித்ததும் இலக்கியச் செல்வர் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டார்' என்ற முற்குறிப்புடன் ஆரம்பித்தது 'தமிழன் தோன்றிய குமரிக் கண்டம்' என்ற கட்டுரை. அதில் 'இலங்கையில் புகழ்பெற்ற நூலாகிய மகாவம்சம், இலங்கைக்கும் தெற்கே 700 காதம் (இவர் கணக்குப்படி அது 4900 மைல்களுக்குச் சமம்!) நிலப்பரப்பு இருந்ததாகக் கூறுகிறது' என்று எழுதியிருந்தார். அந்த எதிர் வாதம் அவர் மகாவம்சத்தையோ என் நூலையோ புரட்டிக்கூடப் பார்க்காமல் எழுதியது என்பது தெளிவு.
அவர் மகாவம்சத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால் அதில் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் எதுவுமேயில்லை என்பதைக் கண்டிருப்பார். என் நூலை வாசித்திருந்தால், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நிலப்பரப்பு எதுவாகயிருக்கும் என்பதை நான் விளக்கியிருப்பதையும் அறிந்திருப்பார். புவியியல் பதங்கள் விரவலாகப் பயன்படுத்தப்பட்ட அவரது கட்டுரையில், நிலவியல் வரைபடங்கள் இரண்டு, அதில் ஒன்றில் 12 கோடி ஆண்டுகட்கு முற்பட்ட குமரிக் கண்டத்தின் படம் இருந்தது. மனித குலம் தோன்றியதே ஒரு லட்சத்திற்கும் குறைவான காலம் என்ற நிலையில், புவியின் வரலாறு, மனித குலத்தின் வரலாறு பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலுடன் அவை பற்றி எழுத வேண்டும்.
என்னைப் பாராட்டி, என் நூலுக்கு மதிப்புரை எழுதியவர் ஒருவர், நூலைப் படிக்காமல் எழுதியிருக்கிறார் என்றால் வியப்படைய வேண்டாம். தீராநதியில் (ஜூலை 2003) வெளிவந்த 'விஞ்ஞானமும் இலக்கியமும் கலந்த ஆய்வு' எனத் தலைப்பிடப்பட்ட பத்மாவதியின் மதிப்புரையின் ஆரம்பமே 'இலக்கிய ஆதாரங்கள், கண்டங்கள் நகர்வது பற்றிய தகவல்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, கடல் மட்ட ஆதாரங்களைக் கொண்டு லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிவிட்டதை நிறுவுகிறது இந்தப் புத்தகம்' என்று தொடங்குகிறது. அவர் எழுதிய மதிப்புரைக்கும் என் நூலின் அடிப்படை இயங்குதளத்திற்கும் எந்த விதமான தொடர்புமில்லை. மேலும் கடலுக்கடியில் எரிமலை வெடித்துக் குமுறும்போது உருவாகும் நிலநடுக்கம் பற்றி நான் எழுதியதைப் புரிந்துகொள்ளாமல் அதையே இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்திய நம் முன்னோரின் பெருமை பேசப் பயன்படுத்தியிருந்தார் அவர். 'பராந்தக சடையன் வெளியிட்ட செப்பேடுகளில் உள்ள, வேள்விக்குடி செப்பேட்டில் உயர்ந்துகொண்டிருந்த மலையைத் தடுத்து நிறுவியவரும், கடல்நீர் முழுவதையும் குடித்த குடமுனியைப் பற்றிக் கூறப்பட்டதால், கண்டப் பெயர்ச்சி, மலைகள் உயர்வது பற்றி நம் முன்னோர்கள் அன்றே தெரிந்து வைத்திருந்தனர்' என்று எழுதினார்.
பாராட்டுகள் பலவகை. அவற்றில் மறைமுகமான பாராட்டு ஒருவகை. ஒருவர் பாடியதைப் போலப் பாடுவது, ஒருவர் எழுதியவற்றை எழுதுவது போன்ற செயல்களால், காப்பியடிப்பவர், தான் யாரைக் காப்பியடிக்கிறாரோ, அவர்மீதுள்ள தன் அபிமானத்தை வெளிப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். இதைத்தான் imitation is a form of appreciation என்ற ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. இவ்வகையில் என்னைப் பாராட்டியவர் நாவலர் சடகோபன் என்பவர். 'குமரி நிலநீட்சி'யில் நான் எழுதிய சில முக்கியமான கருதுகோள்களை வரிக்கு வரி எடுத்தெழுதி 'மறைந்த கண்டம்' பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு நாளிதழில் எழுதியிருந்தார். ஓரிடத்திலாவது அவர் அந்தக் கருத்துகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைக் குறிப்பிடாமல் எழுதியிருந்தார் அந்தப் பண்பாளர்! இதில் ஒரு ஆபத்து என்னவென்றால், லெமூரியா பற்றிய எனது கருத்துகள், தமிழினப் பெருமை பேசுவோரைத் தாக்கும் ஒரு தடியாகச் சிலரால் பயன்படுத்தப்படக்கூடும், மேற்கூறிய நாவலர் சடகோபன் மாதிரி. ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. தமிழர்கள் பெருமை கொள்ள எண்ணற்ற கூறுகள் உள்ளபோது, இல்லாத ஒன்றைப் பிடித்துக்கொண்டிருக்கத் தேவையேயில்லை என்பது என் நிலைப்பாடு.
இரு ஆண்டுகளுக்கு முன் கணையாழியில் குமரிக் கண்டம் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். புவியியல் அபத்தங்கள் நிரம்பிய அக்கட்டுரை, மறைந்த கண்டத்தில் பாலைவனங்களும் அதில் ஒட்டகங்களும் இருந்திருக்கக்கூடும் எனச் சிலாகித்தது. அக்கட்டுரை கூறிய கருத்துகளை மட்டுமே எதிர்கொண்டு முல்லையும் குறிஞ்சியும் திரிந்து உருவாகும் பாலை நிலமும் பாலைவனமும் ஒன்றல்ல என்றும் இந்தியாவின் தென் பகுதியருகே பாலைவனங்கள் என்றும் இருந்ததற்கான புவியியல் தடயங்கள் ஏதுமில்லையென்றும், ஒட்டகங்கள் பாலைவனத்தில் பரிணமித்த விலங்குகள் அல்ல, அவை வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தியபின் பாலைவனங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் குறிப்பிட்டேன். என் கட்டுரைக்கு மறுபடியும் எதிர்வினையெழுதிய அக்கட்டுரையாளர், என் கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்கொள்ளாமல், எவ்வாறு தமிழர் தன்னம்பிக்கையின்றித் துவண்டுக் கிடக்கின்றனர் என்றும் பழம்பெருமை பேசுவதில் தவறில்லை என்றும் எனக்கு அறிவுரை அளித்திருந்தார்.
குமரி நிலநீட்சிக்கு எதிர்வினை எழுதியோர் ஏதோ தாம் மட்டும் தமிழினத்தின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் காவலர் போன்று எழுதினர். நானும் என் பள்ளிப் பருவத்தில் மறைந்த கண்டம் பற்றியும் 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும்' முற்பட்ட தமிழினத்தின் பெருமை பற்றியும் பேசக் கற்றுக்கொண்டேன். அதைக் கற்பித்த, தமிழ் இலக்கியத்தை மட்டுமே அறிந்த என் தமிழாசிரியர்களுக்கு நன்றி கூற வேண்டும்! பள்ளியில் கற்றுக்கொண்ட குமரிக் கண்டக் கோட்பாட்டை அன்று பரிபூரணமாக நம்பினேன். பின்னர் புவியியல் பயில ஆரம்பித்தபோதுதான், மறைந்த கண்டக் கோட்பாடு எத்தகைய மிகை என்பதும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டது என்பதும் புலப்பட்டது. அதைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற உந்துதலால் அது பற்றி எழுத முற்பட்டேன். உண்மையைத் தேடும் என் ஆய்வுகள் அரசியல் எல்லைகளையும் சாதி-இன, மத, மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை.
என் நூலைப் படித்துணர்ந்து நடுநிலையான மதிப்புரை எழுதியவர்களில் பொ. வேல்சாமி முக்கியமானவர். அவர் லெமூரியா - மறைந்த கண்டங்கள் கோட்பாடுகளை ஆதரித்து எழுதுபவர்களின் உள்நோக்கம் பற்றிய ஒரு முக்கியமான கேள்வியையெழுப்பினார். ஆரிய இனப் பெருமை பேச வெள்ளைக்கார மறை'ஞானி'கள் லெமூரியாக் கோட்பாடு பற்றி எழுதினர் என்றால், இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைச் சூழலில் ஏன் அது பற்றி எழுதுகிறார்கள்?
அண்மையில் பழந்தமிழகம் பற்றிய நூலொன்றைக் கண்டேன். அதில் மறைந்த கண்டம் பற்றிய 'ஆய்வு'க் கட்டுரைகளில் வேத விளக்கங்களும் புராணக் கதைகளும் பஞ்சாங்க ஆதாரங்களுடன் காவி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. குமரிக் கண்ட ஆய்வாளர் ஒருவர், ஐந்திறம் நூலைப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து தமிழ் மொழி பற்றியும் தமிழர் பற்றியும் முக்கியமாக இந்துமதம் பற்றிய தகவல்களையும் கிரகித்துக் கொண்டிருப்பதாக ஓர் எழுத்தாளர் எழுதியதைக் காண நேர்ந்தது. பழந் தமிழகத்தில் (மறைந்த கண்டம் உட்பட) இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் என முன்கூட்டியே எடுத்த முடிவுக்கு இவர்களால் ஆதாரங்கள் தேடப்படுகின்றன.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புராணங்களையும் ஆகமங்களையும் துணைக்கு இழுத்து வந்து அறிவியலால் தெளிவு செய்யப்பட்ட கோட்பாடுகளை 'ஆராய்ந்து'கொண்டிருப்பதாகக் கூறும் கேலிக்கூத்தை நாம் பிறந்த மண்ணில் மட்டும்தான் காண முடியும்.
இந்தியாவின் பன்முகத் தன்மையிலும் மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் அக்கறையுடையோர் கவனிக்க வேண்டியவை பற்றி எழுதிய அ. மார்க்ஸ் 'வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்' "இந்துத்துவவாதிகளின் பிரதான ஆயுதம் வரலாறு. வரலாற்றின் அடிப்படையில் அவர்கள் எதிரியை அடையாளப்படுத்துகிறார்கள். 'தேசியத்தை' வரையறுக்கின்றனர். தங்களின் நிகழ்கால அரசியலுக்குத் தோதாக ஒரு பழங்காலத்தைக் கட்டமைக்கின்றனர். அதன் மூலம் நிகழ்காலம் மட்டுமல்லாமல் பழங்காலமும் அவர்களின் வசமாகிறது" என்று குறிப்பிடுகிறார். இங்குதான் தமிழினத்தின் பழங்காலத்தை யார் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். 'பண்டைய இந்தியா' எனும் நூலில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டும் மார்க்ஸ், 'நமது பழம்பெருமையைப் பீற்ற வேண்டும் என்பதற்காக வேத காலத்திலோ, சங்க காலத்திலோ கணிப்பொறிகள் இருந்தன என்று சொல்லிவிட முடியுமா? நாகரிகம் ஒன்றின் காலத்தைச் சொல்லும்போது அது பிற வரலாற்றுச் சம்பவங்கள், பிற துறை முடிவுகள் ஆகியவற்றுடன் பொருந்துகிறதா என்பதை அறிவது முக்கியம். ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு சில தரவுகளை மூடி மறைப்பது, வரலாறு எழுதியலின் அறமன்று' என்று கூறும் அவர், எழுதுபவரின் அறியாமையின் காரணமாகவோ, வேறெந்த நோக்கத்திலோ தவறான தகவல்களைத் தராமலிருப்பது முக்கியமானதொன்று என்றும், ஆதாரமற்ற விவரங்களை உறுதிபடச் சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார். ஆனால் இதைத்தான் பல மறைந்த கண்ட ஆதரவாளர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.
செவிவழிச் செய்திகள், ஐதீகங்கள், புராணங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகிவற்றிற்குத் தம் மனம் போன போக்கில் கொடுத்த விளக்கங்களை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் நூல்களின் வரலாற்றுக் காலங்களைக் கணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் ஆய்வுத் துறையில் முத்திரை பதித்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் கண்ட முடிவுகளில், தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோரின் காலங்களை கி.பி.5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாகக் குறிப்பிட்டதால் அவர் தூற்றப்பட்டார் என்றும், அவரது நிலைப்பாட்டை எதிர்த்தவர்கள் தக்க ஆதாரங்கள் காட்டி மறுக்காமல், உணர்ச்சிமயமான எதிர்வினைகளை எழுதினர் என்பதையும் முனைவர் அ.க. பெருமாள் (தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு - 1983) சுட்டிக்காட்டுகிறார். 'தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிக்கவந்தவர் எல்லோரும் வையாபுரியாரின் காரணங்களை அறிவுபூர்வமாக மறுக்காது, முத்திரை குத்திப் பழித்துவிட்டு, தமிழ் நூல்களைத் தொன்மையான காலத்திற்குத் தள்ளித் திருப்திப்பட்டுக்கொள்ளும் நிலையைத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் பரக்கக் காண்கிறோம்' என்கிறார் பெருமாள்.
குமரி நிலநீட்சி பற்றிய என் கணிப்புகளும் இதே போன்ற, ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவான எதிர்ப்புகளை, எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. காரணம், வையாபுரியாரின் காலக் கணிப்புகள் வந்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் உள்ள வேறுபாடுகள். இன்று கோட்பாடுகளின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பும் அறிவியல் நாட்டம் கொண்ட இளைய தலைமுறையினர் இருப்பது; தகவல் துறையின் முன்னேற்றத்தால் அண்மைக் கால ஆய்வுகள் பற்றிய பரவலான புரிதலிருப்பது; விழிப்புணர்வு கொண்ட பகுத்தறியும் வாசகர்களின் எண்ணிக்கை பெருத்திருப்பது போன்றவை அன்றில்லாதவை. லெமூரியா மறைந்த கண்டம் பற்றிய என் கருத்துகளை ஏற்றுக் கொள்வது கடினமாகயிருப்பது தன்னின உயர்வுவாதம் பேசும் ஒரு சிறு விழுக்காட்டினருக்கே.
தன்னின உயர்வுவாதமே பிரிவினைகளுக்குக் காரணம். இப்படித்தான் ஒரு காலத்தில் சீனர்களும் அவர்களே உலகின் மூத்த குடியினர் என்றும் அவர்கள் வாழும் பகுதியே உலகின் மையம் என்றும் நம்பினர். ஆனால் அது அறிவியல் காட்டும் உண்மையல்ல என்பதைச் சீனச் சிந்தனையின் மறுமலர்ச்சிக் காலத்திலேயே உணர்ந்தனர். ஒருசாரார் அடுத்தவரைவிட உயர்ந்தவர் என்று எண்ணுவதாலேயே சாதி, இன, மதச் சண்டைகள் உருவாகின்றன.
தமிழர்தான் மூத்த குடியென்பதும் தன்னின உயர்வுவாதம்தான். ஒரு லட்சம் ஆண்டுகட்கு முன், ஆதி மனிதர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உலகெங்கிலும் வியாபித்தனர்; அவர்களே நம் முன்னோர்கள் என்ற அறிவியலால் தெளிவான உண்மையை, இந்தத் தன்னின உயர்வுவாதிகளால் செரிக்க முடியாது என்பது வேறு விஷயம். தமிழர் நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முற்பட்டது என்று ஓர் 'இலக்கியவாதி' கூறினால் அதை நம்புவதுதான் தமிழ்ப் பற்றின் அடையாளமாகக் கருதப்படும் நிலை நீடிக்க வேண்டுமா, அல்லது மானிடவியல், தொல்லியல் ஆகியவற்றின் அண்மைக் கால ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை அறிந்து, இந்தத் தேங்கிய நிலையை மாற்ற வேண்டுமா என்பதைப் பகுத்தறிய விழையும் வாசகர்கள்தான் தீர்வு செய்ய வேண்டும்.
லெமூரியா
லெமூரியா மெய்யா? கற்பனையா?
இரா.கு.பாலசுப்பிரமணியன்
2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.
இத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்…
கி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், “”கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'’ என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.
அந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த “செனாசாயிக்’ என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான “மயேசென்’ யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.
“லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'’ என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.
உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனை “கோண்ட்வானா’ என்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.
இருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா? அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா? இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
ஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது “கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்’ எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.
அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா? அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது? இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.
சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் “பாங்கியா’வுக்கு “அனைத்துலகு’ என்று பொருள்.
இந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.
இவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.
தென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!
ஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.
கண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.
ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு’ என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.
“”நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)
“”வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’ (சில 11:1:20)
இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.
ஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெருவள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.
“தடநீர்க்குமரி’ என்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது. “நதியும் பதியும்’ என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. “நீர் மலிவான்’ என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.
லெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது நாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.
http://tamil.sify.com/manjari/feb05/fullstory.php?id=13689479
சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:
thanks website-tsunami
இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது. நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800x60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டுகளாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது..
சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்டதாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!
மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.
அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.
ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.
கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:
உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்
தமிழ்மொழியின் முதல் தோற்றம்
தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000
மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்
பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.
தொல்காப்பியம்
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்
1. பழந்தமிழ் (Ancient Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil
2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil
3. தற்காலத் தமிழ் (Modern Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil
ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil
முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.
திராவிட மொழிக் குடும்பம்
மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.
தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.
இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு
உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.
வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.
தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்
மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.
சார்லஸ் டார்வின்
இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.
கால்பந்து ஒட்டுபோல்
தையலிட்ட
கடற் தளத்தின் மேல்
கோல மிட்டு
காலக் குமரி எல்லை வரைந்த
வண்ணப் பீடங்கள்
நாட்டியம் புரியும் !
நண்டு போல் நகர்ந்து,
கண்டத் தளங்கள்
துண்டு துண்டாய்த் தவழும்
கடல் சூழ்ந்திட !
‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.
டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]
‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.
டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]
’450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.
இலமுரியா கண்டம்
இலமுரியா கண்டம்
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.
பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.
குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
“சைகை மொழி” – Sign Language.
குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.
இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை
1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
5. வாய்ச் செய்கையொலிகள்
வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
7. சுட்டொலிகள் (Decitive Sounds)
சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள் எனப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)