திங்கள், 15 ஆகஸ்ட், 2011

உலகச் செம்மொழி


செம்மொழிகளில் தமிழ்
-முனைவர் மு. பழனியப்பன்.
உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் பெருமை தரக் கூடிய மகிழ்ச்சியான செய்தி. உலக அரங்கில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் தன்னிகரற்ற பெருமை இதுவாகும். இந்தப் பெருமை பல நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டும். தற்போது கிடைத்திருப்பது ஓரளவிற்கு மனநிறைவை தமிழ் மக்களிடமும், தமிழ் அறிஞர்களிடமும் ஏற்படுத்தியுள்ளது. 

உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம், தமிழ் ஆகிய எட்டு மொழிகள் கொள்ளப்படுகின்றன. 

கிரேக்க மொழி பாரம்பரியம் மிக்க மொழியாகும். இந்தமொழியின் வரிவடிவம் கி. மு. 700 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இம்மொழியில் உள்ள இலக்கிய வளங்கள் அதிகம். ஹோமர் எழுதிய இலியது, ஒடிசி ஆகிய மாகாப்பியங்களும், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் தத்துவ நூல்களும் இம்மொழியின் பெருமையை உலக அளவில் நிலைநிறுத்தி வருகின்றன. 

சமஸ்கிருதம் இந்தியவின் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். இந்த மொழியில் கி. மு. 1500 முதல் கி. மு. 2000வரை வேதங்கள் தோன்றின. இதற்கடுத்து இராமயண மகாபாரத இதிகாசங்கள் தோன்றின. இதனைத் தொடர்ந்து முப்பத்தாறு வகைப் புராணங்கள், தந்திர நூல்கள், காவியங்கள் போன்ற எழுந்தன. பாணினி படைத்த அஸ்டத்தியாதி ஒப்பற்ற இலக்கண, மொழிக் கூறுடைய நூலாக அமைந்தது. காளிதாசரின் காவியங்கள், கௌடில்யர் அர்த்தசாஸ்திரம் போன்றனவும் தனித்த இலக்கியச் சிறப்பினை இம்மொழிக்கு அளித்தன. மார்க்ஸ் முல்லர், கெல் புரூக் போன்ற அயல்நாட்டவர்கள் வடமொழியின் சிறப்பினை மொழிபெயர்ப்புகளின் வாயிலாக உலக அளவிற்கு எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக இந்திய மொழிகளில் வடமொழி செம்மொழி வரிசையில் முன்பாகவே இடம் பெற முடிந்தது.

இலத்தீன் மொழி இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளுக்கு அடித்தளமாக இருந்துவருகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இம்மொழி இலக்கியங்கள் சிறப்படைந்திருந்தன. இம்மொழியில் புகழ்பெற்ற கவிஞர் வெர்ஜில் படைத்த இனீட் என்னும் காவியம் உலகப் புகழ் வாய்ந்தது. இம்மொழியில் சிசிரோ, சேலஸ்ட், டெசிட்டஸ், செனகா போன்ற தத்துவ அறிஞர்களின் படைப்புகளும் குறிக்கத்தக்கன. கி. பி பதினெட்டாம் நூற்றாண்டுவரை இம்மொழி இலக்கியங்கள் சிறப்பு பெற்றிருந்தன.

பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்குகிறது. இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் கணித எண்கள் பாரசீக மொழி வழங்கிய கொடையாகும். உமர் கய்யாம் என்ற உலகப் புகழ் பெற்ற கவிஞரின் கவிதைகள் இம்மொழிக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

அரபு மொழியின் எழுத்துவடிவம் கி. மு. 328 ஆம் ஆண்டில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. குர்ஆன் இம்மொழியில் எழுதப் பெற்றதாகும். கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் இதன் செம்மொழி இலக்கியக் காலம் தொடங்கியது. மொழியியல், வரலாறு, புவியியல் போன்ற துறை சார்ந்த பல நூல்கள் இம்மொழியில் எழுந்துள்ளன.

எபிரேயம் கி. மு. 1200 முதல் பழமை பெற்று விளங்கும் மொழியாகும். இம்மொழியில் எழுதப் பெற்ற கிறித்துவ சமயச் சார்புடைய நூல்கள் இம்மொழிக்குச் செம்மொழித் தகுதியைத தந்தன. இம்மொழயின் செம்மொழி நிலை கி. பி. 12 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இது இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழியாக விளங்குகின்றது.

சீன மொழியும் பண்டைய மொழியாகும். கி. மு. 600 ஆண்டளவில் வாழ்ந்த கன்பஸ்ரீசியஸ் என்பவரின் தத்தவப் படைப்புகள் இம்மொழியில் குறிக்கத்தக்கனவாகும். லாவுட்ஸ் என்பவர் தாவ் என்னும் நெறியில் நின்று பல படைப்புகளைப் படைத்தளித்தார். கன்பஸ்ரீசியஸ் கி. மு. 600 வரையுள்ள இலக்கியங்களைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக அளித்துள்ளார். ஐந்தாவதாக அமைந்த அவரின் படைப்பான தென்றலும் வாடையும் குறிக்கத் தக்க படைப்பாக விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து கதை பொதி பாடல்கள், இசைப்பாடல்கள் பல எழுந்தன. 

இம்மொழிகளின் வளங்களைக் காணும் பொழுது அவற்றின் தொன்மையும், இலக்கியச் சிறப்பும், தொடர்ச்சியான இலக்கிய வளமையும் இம்மொழிகளுக்குச் செம்மொழி நிலையை வழங்கியுள்ளன என்பது தெரியவருகிறது. இதே வரிசையில் தமிழும் இடம் பெறுவது என்பது தகைமை உடையதே ஆகும்.

இதற்கு அடுத்த நிலையில் இந்தியத் துணைக்கண்டத்தில் செம்மொழிகளாக பின்வருவரும் மொழிகள் கொள்ளப் பெற்றுள்ளன. வடமொழி, பாரசீகம், அரபு, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இவ்வகையில் இந்திய அரசால் செம்மொழியாக ஏற்கப் பெற்றனவாகும். இதன் வரிசையில் தமிழும் தற்பொழுது இணைந்துள்ளது. 

பாலி, பிராகிருதம் போன்றன இந்திய அரசால் ஏற்கப் பெற்றுள்ள உலகச் செம்மொழிகள் பட்டியலில் இல்லாத செம்மொழிகள் ஆகும். அவை பற்றிய செய்திகளும் அறிந்து கொள்ளப் பெற வேண்டியனவாகும்.

பாலி மொழி கி. மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பேச்சு மொழியாக அமைந்து கி. மு. முதல் நூற்றாண்டில் எழுத்து வகை இலக்கிய வளமையைப் பெற்றது. பௌத்த சார்புடைய மொழியாக இது விளங்கியது. தம்மபதம், புத்தர் ஜாதகக் கதைகள், திரிபிடகம் போன்றன இம்மொழியில் எழுந்தவையாகும். தாய்லாந்து, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில இம் மொழி பரவியுள்ளமையால் இதனை உலகச் செம்மொழியாக அறிவிக்கக் கோரிக்கை இருந்து கொண்டுள்ளது. 

பிராகிருதமும் இந்தியாவின் தொன்மையான மொழிகளுள் ஒன்று. இவ்வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது. இந்திய அரசின் வாயிலாக இந்தியச் செம்மொழிகளின் மொழிஅறி ஞர்கள் அவ்வப்பொழுது பாராட்டப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழறிஞர்களுக்கு ஊக்கமும், உணர்வும் ஏற்பட இந்திய அரசு அளித்துள்ள செம்மொழித் தகுதி உதவிடும் என்பதில் ஐயமில்லை.

இருப்பினும் யுனெஸ்கோ என்னும் உலக அமைப்பு நிறுவனம் தமிழின் செம்மொழித் தகுதியினை இன்னும் ஏற்காமல இருக்கிறது. இதனையும் ஏற்கச் செய்யும் காலம் வரும். உலக அளவில் தமிழை எடுத்துச் செல்லவும், தமிழில் உலக இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் பெருவாய்ப்பு அமைய இந்தச் செம்மொழித்தகுதி உதவிடும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தக்க நிலையில் எடுத்துக் கொண்டு தமிழ் நிலைக்கச் செய்ய தமிழர்கள் அனைவரும் முயல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக