திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தமிழ் நூல்களில் வானூர்தி


வலவன் ஏவா வானஊர்தி்
 

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். அந்த விமானம் படைத்தவன் யார் என்றால் இன்றைய குழந்தைகள் கூட கண்ணை மூடிக் கொண்டு ரைட் சகோதரர்கள்என்று கூறுவார்கள்.

தமிழ் நூல்களில் வானூர்தி பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிப்பறந்தான் !
இராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான்!
கண்ணகியை கோவலன் வானூர்தியில் அழைத்துச் சென்றான்..

இன்னும் இலக்கியங்களில் விமானம் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன..

சான்றாக..

வலவன் ஏவா வானஊர்தி

என்ற தொடர் புறாநானூற்றில் இடம்பெறுகிறது.

இன்று விமானத்தை ஓட்டும் விமானியை அன்று வலவன்என்று நம் தமிழர் அழைத்தனர்.

வல்என்பது விரைவு என்பதைக் குறிக்கும் சொல்லாகும்..
விரைவாக ஓட்டுபவன் என்றபொருளில் வல்லவன் என்பதே வலவன் என்றானது..

வலவன் ஏவா வான ஊர்தி என்பது - ஆளில்லாத விமானத்தையே குறிப்பதாக உள்ளது.

வாழ்வில் நல்வினை மட்டும் செய்தால் சொர்க்கம் என்ற வீடுபேறு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவர்கள் வலவன் இன்றித் தானே இயங்கும் வான ஊர்தியைப் பெறுவர்என்று சங்ககாலத்தமிழரிடம் நம்பிக்கை இருந்தது.


சொர்க்கம் இருப்பது உண்மையா? பொய்யா?

என்ற விவாதம் முடிவடையாதது..
என்றென்றும் தொடர்ந்து வருவது.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சொர்கம் உண்டு!
நரகம் உண்டு என்று நம்புவார்கள்..

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்..
சொர்க்கம் என்பதும் நரகம் என்பது உண்டு..
ஆனால் அது எங்கோ இல்லை!

நாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..

ஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..

நாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே!!



பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை தோய்ந்த புறப்பாடல் இதோ


சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்துஎனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.


புறநானூறு -27
27.
புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.



பொதுவியலின் ஒரு துறை முதுமொழிக்காஞ்சி. இது அறம் பொருள் இன்பம் என்பவற்றின் தன்மைக் குற்றமில்லாது அறிவுடையோர் அரசனுக்குக் கூறுதலாலும் புலவர்பாடும் புகழுடையார் வானவூர்தி எய்துவர் எனப் புகழ்ச்சி செல்வத்தின் பயன் கூறியதாலும் முதுமொழிக்காஞ்சியானது.


சேற்றில் வளரும் தாமரையின் பூத்த ஒளியுடைய நிறமும் நூற்றுக்கணக்கான இதழ்களுடைய தாமரை மலரின் குவியலைக் கண்டது போல சிறந்த குலத்தில் பிறந்து கவலையின்றி அரசர் வீற்றிருப்பர். அவர்களை மனதால் கருதும் போது அவர்களுள் புகழும், அதனால் பாடப்பொறும் பாட்டும் உடையராய் இருப்பவர் சிலரே.

தாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே!

புலவரால் பாடப் பெறும் புகழுடையோர், வானில் வலனால் செலுத்தப்படாது இயங்கும் விமானத்தினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய இறைவனே, சேட்சென்னியே நலங்கிள்ளியே,

வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!

பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!

உண்மை எனக் கல்லாதவரும் அறியுமாறு செய்யும் திங்களாகிய தெய்வம்.
அது இயங்கும் உலகத்தில் ஒன்றனைச் செய்ய வல்லவராயினும் செய்ய இயலாதவராயினும் வறுமையால் வருந்தி வந்தோரின் வயிற்றின் பக்கங்களைக் கருதி அவர்களுக்கு அருளுடன் வழங்க வல்லவனாகுக.
கெடாத வலிமையுடன் உனக்குப் பகைவரானவர்கள் அருளின்றிக் கொடாது இருத்தலில் வல்லவராகட்டும்.

தாமரை மலர் அரசர் கூட்டத்திற்கு உவமையானது. மக்களுள் மண் பயனுற வாழ்வோரே மக்களாகக் கருதப்படுவர்.
எஞ்சியோர் மாக்களாகவே(விலங்கு) கருதப்படுவர்.

உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியை இவ்வாறு பாடுகிறார்..
 

 

இப்பாடலில் வலவன் ஏவா வான ஊர்த்தி என்ற பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை ஆளில்லாத விமான ஊர்தியைக் குறிப்பதாக உள்ளமை வியப்பளிப்பதாகவுள்ளது.

வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!
பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!

என்ற சிந்தனை இன்றைய மருத்துவவியலோடு ஒப்பு நோக்கத்தக்கதாகவுள்ளது.

பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை உற்று நோக்கும் போது.. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட அறிவியல்ச் சிந்தனைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?
என்ற வினா எழுவது இயற்கையே..

அறிவியல் தமிழுக்குத் தொடர்பில்லாதது!

அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக
அமைகிறது.

இன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.
 

அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!!


thanks-தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு. நாமக்கல் மாவட்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக