புதன், 17 ஆகஸ்ட், 2011

பொன்னெறிகள் பொலியும் புறநானூறு

பொன்னெறிகள் பொலியும் புறநானூறு
Hindu Gods - image courtesy: Wikipedia
உலக நாடுகளில் மக்களால் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் தமிழ் மொழி மிகவும் பழமையானது, வரலாற்றுச் சிறப்புடையது, இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும் தன்னிகரற்ற நிலையில் தனிச்சிறப்புடன் விளங்குவது.
தமிழ் மொழி, "என்றிவள் பிறந்தாள் என்றுலகறியா" ஏற்றம் கொண்ட இனிய மொழி, உயர் தனிச் செம்மொழி. மொழிக்கு மட்டுமின்றி அம்மொழியைப் பேசும் வாழ்க்கைக்கும் இலக்கணக் கண்ட மொழி, வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி, முச்சங்கங்கள் கண்ட முதிர்ச்சியான மொழி.
தமிழின் சிறப்பையும், தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுச் சிறப்பையும் உலகுக்குப் பறைசற்றும் உயரிய நூல்களில் 'புறநானூறு' முன்னிலையில் உள்ளது.
Life style of ancient Tamils - image courtesy: Himalayan Academy
புறநானூறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் தமிழகத்தில் விளங்கிய புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பு. பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறிவுறுத்தும் அரிய கருவூலம். புறநானூறு பண்டைக் காலத்து வாழ்ந்த பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும், புலவர் பெருமக்களையும் போற்றிக் காட்டும் ஒரு வரலாற்றுப் பெட்டகம் புறநானூறு! பல வீரவழிபாட்டு முறைகளையும், சமூகப் பழக்கவழக்கங்களையும் பறைசாற்றும் பைந்தமிழ் முரசு புறநானூறு! புவியில் புகழோடு பொருளான வாழ்க்கை வாழ மனிதனுக்குக் கிடைத்த பொன்னெறிகளின் பூக்காடு இப்புறநானூறு! அறக் கோட்பாடுகளும் மனிதநேயக் கொள்கைகளும், வேண்டும் விழுப் பொருள்களின் பரிமாணங்களும் கொண்டு உலகை வாழச் செய்து உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பற்ற தத்துவச் சாத்திரம் இப்புறநானூறு! எழுதப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும், எக்காலத்துக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற இனிய கொள்கைகளின் ஊற்றாக தத்துவ அமுதத்தினைத் தந்து கொண்டிருக்கும் தலை சிறந்த நூல் இப்புறநானூறு.
கடைச்சங்க நூலாகக் கருதப்படும் புறநானூறு, முச்சங்க காலத்துப் பாடல்களும் கொண்டு விளங்கும் ஒரு காலக் கண்ணாடி. எட்டுத்தொகையில் ஆறு அக நூல்களும் இரண்டு புற நூல்களும் உள்ளன. பதிற்றுப்பத்தும் புறநானூறும் எட்டுத்தொகையில் புறத்துறை நூல்களாகும்.
புறநானூற்றில் அறம் மற்றும் பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு இன்றியமையாத மறம், மானம், 'மாண்டவழிச் செலவு' தோற்றம் முதலிய நற்பண்புகளும், கடமையும், 'உற்றுழி உதவி ஊக்கும் உயர்திறமும்' 'உயிரோடு கெழுமிய செயிர்தீர் நட்பும்' செங்கோண்மையும், கடவுட்பற்றும், பகைவரை வென்று புகழ் பெருக்கும் வாழ்க்கைத் திறனும் வெகுவாகப் பேசப்படுகின்றன. பேசப்படும் இவையே, உழவு, வாணிகம், அரசியல், பொருளாக்கம், ஒற்றுமை, குழு உயர்வு, கலைப்பண்பு முதலியன வளர்ந்தோங்க வழி செய்திருக்கின்றன. பண்டைத்தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும் சீரிய நாகரிகப் பண்பாட்டையும் தெரிந்து தெளியப் புறநானூறு பெரிதும் உதவுகிறது.
பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறிவுறுத்தும் அரிய கருவூலமாகப் புறநானூறு பொலிகிறது. பண்டைக் காலத்துப் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும் எடுத்தியம்பும் நோக்கமுடைய பாடல்கள் புறநானூற்றில் மிகுதியாக நம்மால் காண இயலும். புறநானூற்றுப் பாடல்கள் தோன்றிய காலம்தான் 'தமிழகத்தின் வீரயுகம்' என்று சிறப்பித்து சொல்லத்தக்க பொற்காலமாகும்.
தனி மனிதன் தன் வாழ்க்கையினை உயர்த்திக் கொள்ளத் தேவையான உயர் நெறிகள் புறநானூற்றில் நிரம்ப உள்ளன.
அரசியல் வித்தகர்களின் அரசியல் ஞானத்தை மேம்படுத்தும் அளப்பறிய தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தன்னிகரற்ற நூல் புறநானூறு. சமுதாய உயர்விற்கான வழிகள் புறநானூற்றுப் பாடல்களில் புதையலாய்ப் பொதிந்து கிடக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் புதிய தத்துவங்கள் புறநானூற்றிலே பொலிகின்றன. உலகத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கின்ற விழுப் பொருள்களான அன்பு, அறம், அருள், கொடை, ஈகை, கடமை, வீரம், தியாகம், நன்றி முதலியன புறநானூற்றின் உயிர்ப்பொருளாய் ஊடுருவி உள்ளன. உலகின் இயற்கையை உணர்த்தி உலகில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய உயர்ந்த நெறிகளை உணர வைக்கின்றன புறநானூற்றின் பாடல்கள் பல. இர்ண்டாவது உலகப் போர்க்குப் பிறகு அரசியலை ஆய்ந்த அறிஞர்கள் உலக மக்களுக்கு இன்றியமையாததாய் வேண்டப்படுகின்ற பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை ஆகிய நால்வகை உரிமைகளை வலியுறுத்தி அத்லாந்திக் சார்ட்டர் (Atlantic Charter) என்ற உரிமை ஆவணம் வகுத்ததை வரலாறு காட்டுகிறது. இந்நான்கு உரிமைகளும் உடையவர்களாய்ப் பண்டைக் காலத்திலேயே தமிழ்நாட்டு மக்கள் விளங்கியதைக் காட்டும் பேரிலியக்கியமே புறநானூறு என்றால் சிறிதும் மிகையில்லை. இருபதாம் நூற்றாண்டில் மக்களுக்கு வேண்டப்படும் உரிமைகளை வலியுறுத்தி சங்க காலத்திலேயே பாடிய புறநானூற்றுப் புலவர்களின் திறனும் அரசியல் ஞானமும் போற்றத்தக்கன.
புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட தொகுதி ஆதலால் புறநானூறு எனும் பெயர் பெற்றது. புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்னும் பெயர்களாலும் இந்நூல் வழங்கப்படுகின்றது.
இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 400 பாட்ல்கள் உள்ளன. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாமல் 400 பாடல்கள் இந்நூலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். இவற்றுள் 267, 268ஆம் பாடல்கள் முற்றும் மறைந்து போயின. 266ஆம் பாடலுக்கு மேற்பட்ட பிற்பகுதிப் பாடல்கள் பலவற்றின் அடி, சீர் முதலியனவும், பாடல்களின் பிற்குறிப்புகளில் பெரும்பாலானவும் சிதைவுபட்டுள்ளன.
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர்கள் 156 புலவர்கள் ஆவர். புறநானூற்றின் முதல் 266 பாடல்களுக்கு உரிய பழைய உரை கிடைத்துள்ளது. சில பாடல்களுக்கு எழுதப்பட்ட இவ்வுரைக் குறிப்பிலிருந்து இவ்வுரைக்கும் முற்பட்ட உரை ஒன்று இந்நூலுக்கு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்த மிகப் பழைய உரை நமக்குக் கிடைக்கைவில்லை.
இந்துமாக்கடல் தோன்றுவதற்கு முன்னரே படைக்கப்பட்ட பல பாடல்களும், பாரத இராமாயண நிகழ்ச்சிகளுக்கு முன்னரும், பின்னரும் தோன்றிய பாடல்களும், திருவேங்கடத்தில் திருமலைக் கோவிலும், பழனியில் முருகன் கோவிலும், இராமேச்வரத்தில் இராமலிங்கர் கோவிலும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பாடல்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் படைக்கப்ப்டுவதற்கு முன்பே படைக்கப்பட்ட பாடல்களும் கொண்டு புறநானூறு தன் தொன்மையை உல்குக்குப் பறைசாற்றி வருகிறது.
மிகப்பழமையான நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னர் தோன்றிய செய்யுட்களைக் கொண்டுள்ள புறநானூறு, தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையினை உணர்த்தும் ஒரு பெருநூல் என்றால் சற்றும் மிகையாகாது.
புலவர்கள் மட்டுமின்றி மன்னர்களும் சிறந்த சிந்தனையாளர்களாக விளங்கினார்கள். தமிழ்ப் புலமையோடு அவர்களால் படைக்கப்பட்ட பல புறநானூற்றுப் பாடல்கள் தமிழையும் ஆண்டு, அதற்கு அடிமையான அரசர்களின் திறத்தினையும் காட்டி நம்மை வியக்க வைக்கின்றன.
இன்றைய நிலையில் தனி மனித வாழ்வில் மட்டுமின்றிப் பொதுநல வாழ்விலும் சிக்கல்கள் எழும்போது அச்சிக்கல்களைப் போக்குகின்ற தீர்வுகள் பல புறநானூற்றிலே காணப்படுகின்றன.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட புறநானூற்றில் எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும், எந்த மக்களுக்கும், எந்தக் காலத்திற்கும் தேவையான பொன்னெறிகள் பல பேசப்பட்டுள்ளன. அப்பொன்னெறிகள் மக்களை, நாட்டை, மொழியை, சமுதாயத்தை என்றும் உயர்த்தி மேம்பாடு அடையச் செய்வன.
புறநானூற்றுத் தத்துவங்கள் புவியில் மனித குலத்தை, மனிதத்தை வாழ்விக்க வல்லன.
ஆட்சித்திரன் சிறக்க...
நாடாள்வோர் எத்தகைய தன்மைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும், எத்தன்மைகள் இருந்தால் அரசாள்வோர் மக்கள் போற்றுகின்ற மாமன்னர்களாக இருப்பர் என்பதைப் புறநானூற்றின் கடவுள் வாழ்த்துக்குப் பின்வரும் முதற்பாட்டு குறிப்பிடுகின்றது
சேரமன்னனான பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் ஆட்சிச் சிறப்பைப் பாட முற்பட்ட முர்ஞ்சியூர் முடிநாகனார், மன்னனின் சிறப்புகளாகக் கூறும் பண்புகள் பொதுவாக ஓர் ஆட்சியாளர் கைக்கொள்ள வேண்டிய பண்புகளாகவே உள்ளன. நிலம், நீர், ஆகாயம், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டு சேரமான் பெருஞ்சோற்றுதியன் ஆட்சி புரிகின்றானாம்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை'
Tamil sage and poet Thiruvalluvar - image courtesy: Himalayan Academy
என்று நம்மைக் கீறி இகழ்பவரையும் இந்த நிலம் தாங்கி நிற்கும். இந்த நிலத்தைப் போலவே இகழ்பவரையும் பொறுத்தல் மனிதர்க்குத் தலையாய பண்பு எங்கிறது உலகப் பொதுமறை.
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினுடைய பண்பினைக் கொண்டிருக்கிறான் என்கிறார் முடிநாகனார். பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுப்பதால், அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் பண்பினைக் கொண்டுள்ளானாம் மன்னன் பெருஞ்சோற்றுதியன். மேலும், அவன் பகைவன் செய்த பிழைகள் பொறுக்குமளவு அல்லவாயின் பகைவனை அழித்தற்குச் செய்யும் சூழ்ச்சித் திறன் வானத்தைப் போல எல்லையில்லாமல் கொண்டுள்ளானாம். காற்றினைப் போலப் பகைவரை அழித்தற்கேற்ற மனவலிமையும் சதுரங்க வலிமையும் கொண்டுள்ளானாம் சேரலாதன்.
அனைத்தையும் எரித்து அழிக்கும் நெருப்பின் திறம், அவன் பகைவரை எதிர்கொண்டு அழித்து ஒழிக்கும் போது வெளிப்படுகிறதாம். அதே நிலையில், பகைவர்கள் தன்னைச் சரணடைந்து வணங்குவார்கள் ஆயின், அவர்களுக்குத் தண்ணீரைப் போல அருள் செய்ய வல்லவனாகப் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் அவன் பகைவர் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும்போது 'நிலத்தைப் போலவும், எல்லையின்றிப் பொறுக்க முடியாத அளவுக்குப் பிழைகள் செய்வார்களாயின் அகன்று விரிந்து எல்லையற்ற அவனுடைய சூழ்ச்சித்திறன் வானத்தப் போலவும் அவனுடைய மன வலிமை எத்திசையிலும் சென்று தாக்கக்கூடிய திறன் காற்றைப் போலவும், பகைவரை அழிப்பதில் நெருப்பினைப் போலவும், பகைவரே பணிந்து நிற்பாராயின், அவர்களுக்கு அருள் செய்யும் நிலையால் தண்ணீரைப் போலவும் சேரமான் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் பஞ்ச பூதங்களின் தன்மைகளைக் கொண்டு அவன் ஆட்சி செய்கின்றான் என்கிறார் புலவர்.
மண்திணிந்த நீலனும்
நீலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்கியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்
என சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை விளிக்கின்றார் புலவர் முரஞ்சியூர் முடி நாகனார்.
மன்னனை விளிக்கின்ற நிலையில் உள்ள இவ்வரிகள், மன்னனின் ஆட்சித் திறனைக் கூறுவதாய் இருந்தாலும், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அது நாட்டின் தலைமை அமைச்சர் (பிரதம மந்திரி) தொடங்கி ஓர் அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளர் வரை, நாடாள்வோர் மற்றும் நிர்வாகப் பணி செய்வோர் கைக் கொள்ள வேண்டிய பண்புகள் இவை எனப் பறைசாற்றுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது. மேலே சொன்ன ஐம்பெரும்பூதத்தின் இயல்புகள் நிர்வாகிகள் கொண்டிருப்பார்கள் எனில் அவர்களின் நிர்வாகத் திறன் மேம்படும். ஆட்சித் திறம் அகிலம் போற்றச் சிறக்கும்.
பைந்தமிழ்ப் பாமணி
முத்து. இராமமூர்த்தி
  நன்றி
தமிழுக்கு அமுதென்று பேர்
auvai - sketch by mazalais kid
உலகத்தில் இறைவனின் படைப்புகளில் மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பே ஆகும். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கிறாள் ஔவைப் பாட்டி. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவும், அதையொட்டிய அவனது செயல்பாடுகளுமே அவனைப் பிற உயிர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்த்துகின்றன.
ஆறாவது அறிவைப் பயன்படுத்தி செயலாற்றாதவன் விலங்காகவே கருதப்படுகிறான். புல் முதலிய ஓரறிவு உயிர்கள் முதல் ஐயறிவு உடைய விலங்குகள் வரை எந்த உயிரினமும் பேசுவதில்லை. அவைகள் உண்டாக்கும் ஒலி வெறும் கூச்சலாகவே இருக்கிறது.
ஆனால் மனிதன் மட்டுமே தன்னுடைய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கிறான். மொழி மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழியின் மூலமே மனிதன் தன் எண்ணங்களைப் பிறருடன் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு மொழியே பெரும் துணையாக விளங்குகிறது. மனிதனின் பண்பாட்டுச் சிறப்பிற்கும் மொழி வழி வகுக்கிறது. மொழி இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்த்தால் ஒரு வெறுமையான நிலையே உள்ளதைக் காணலாம்.
உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் மனிதர்களால் பேசப்படுகின்றன. அவைகளில் எழுதும் மொழியாக இல்லாமல் பேசும் மொழியாக மட்டுமே உள்ள மொழிகள் எண்ணற்றவை. பழமையினாலும், இலக்கிய வளத்தாலும் புகழ் பெற்று விளங்கும் மொழிகளில் தமிழ் மொழி தலையாயது. 'என்றிவள் பிறந்தாள் என்றுலகறியா' ஏற்றம் கொண்டவள் தமிழ்த்தாய்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி! இலக்கணம் கண்டபின் இலக்கியம் கண்டனரா அல்லது இலக்கியம் கண்டபின் இலக்கணம் கண்டனரா என்று ஆராய்ந்து அறிய முடியாத சிறாப்பினை உடையது தமிழ்!
aruNagirinaathar - image courtesy: pariharam.com
இன்றைக்கு நமக்குக் கிடைக்காத பல அரிய ஒப்பற்ற உயர் இலக்கியங்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு பொலிவு பெற்ற தன்னேரில்லாத் தனி மொழி தமிழ்! தமிழ், தமிழ், தமிழ்... எனப் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்ல, அமிழ்து, அமிழ்து, அமிழ்து என அமிழ்தமாக மாறி இனித்து, தன்னைச் சுவைத்தவரைக் காத்து நீடு வாழவைக்கும் அமுதம் தமிழ் அன்றோ!
அதனால்தான், "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்" என்கிறார் அருணகிரிநாதர்.
'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசனார், 'தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்ததுண்டோ?' என வினவுவார்.
kaNNagi - image courtesy:thehindu.com
தமிழ் தன்னைச் சுவைப்பவரை வாழவைக்கிறது; தொண்டாற்றுபவரைச் சாக விடுவதில்லை. தமிழ் என்றும் இளமையாக உள்ள முதிர்ந்த மொழி! அதனால் அது தன்னைப் பேசுபவரையும், சுவைப்பவர்களையும் என்றும் இளமையாக வைத்திருக்கிறது. என்றுமுள தெந்தமிழை இயம்பி இசை கொள்ளும் புலவர்களுக்கு என்றும் இறவாத புகழ் வாழ்க்கையைத் தமிழ் தந்து வருவது வரலாறு உணர்த்தும் உண்மை ஆகும்.
தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும், கம்பரும், பாரதியும் இன்றும் உலகம் முழுவதும் வியாபித்து வாழ்ந்துகொண்டு வருகின்றார்கள் அல்லவா?
valluvar
இங்ஙனம் தமிழ் போற்ற்ப்படுவதற்குக் காரணம் என்ன? அதன் இனிமையா? வளமா? வளர்ச்சியா? தமிழின் ஏற்றத்திற்குக் காரணம் இவை அத்தனையும்தான் என்றாலும், அது தன்னகத்தே கொண்டுள்ள இலக்கண இலக்கியங்களின் மேன்மைதான் அடிப்படையாக விளங்குவதைக் காணலாம்.
தொல்காப்பியத்தின் ஒல்காப் புகழும், சங்கப் பாடல்களின் தகைமையும், வான்புகழ் வள்ளுவத்தின் மேன்மையும், இளங்கோவின் ஏற்றமும், திருத்தக்க தேவரின் தேன்மொழியும், சேக்கிழாரின் தெய்வீக நெறியும், ஆழ்வார்களின் அமுத மழையும், நாயன்மார்களின் நற்றமிழ்ப் பாமாலைகளும், சித்தர்களின் செந்நெறிகளும், பாரதியின் உணர்ச்சி வெளிப்பாடுகளும், கண்ணதாசனின் கவிதை வெள்ளமும் இல்லாமல் போயிருந்தால் தமிழ் தன்னேரில்லாத் தமிழாகத் தரணியில் தலை நிமிர்ந்து விளங்க முடியுமா?
ஆம்! உயர்தனிச் செம்மொழியான தமிழ் உலகத்தில் உயர்ந்தோங்கி நிற்கக் காரணம், அது கொண்டிலங்கும் அரிய இலக்கியங்கள்; அவ்விலக்கியங்கள் கூறும் ஆழமான அரிய செய்திகள்; நேர்த்தியான நெறிகள்; வளமான வாழ்வியல் அறங்கள்; தகையான தத்துவங்கள்!
தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே உலகளாவிய உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு இலங்குவதைக் காணலாம். அவைகளின் நோக்கமும், அவைகளில் பொதிந்து கிடக்கும் எண்ணங்களும் விரிந்த உள்ளக்கடலில் விளைந்த நல்முத்துக்களாகவே இருக்கின்றன.
உலகம் முழுவதுமே வாழவேண்டும், உலக மக்கள் இன்புற்று இருக்க வேண்டும், பிறர் துன்பத்தைத் துடைத்தல் வேண்டும் எனப் பரந்த இதயத்துடன் தமிழ்ப் புலவர்கள் தங்கள் படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
"உலகம் உவப்ப வளனேபு திரிதகு
பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு"
எனத் திருமுருகாற்றுப் படையைத் தொடங்கும் நக்கீரப் பெருமான், உலகம் உவப்ப, பலர் புகழ் ஞாயிறு கடலில் தோன்றுதல்போல திருமுருகப் பெருமான் நீலமயிலின் மீது தோன்றுகிறான் என உலகத்தை முன்னிருத்திக் கூறுகிறார்.
திருவள்ளுவரும் 'உலகு' பற்றிய சிந்தனையோடே திருக்குறளைத் தொடங்கி இருக்கிறார்.
'உலகம் யாவையும்' எனும் பாடலுடன் இராமவதாரத்தினைப் பாடத்தொடங்கும் கம்பரின் கவின் தமிழும் விரிந்து, பரந்து உயர்ந்து நிற்கும் அவரின் உள்ளத்தை நமக்குக் காட்டுகின்றது.
'உலகெலாம்' எனத் தொடங்கிய பெரிய புராணமும், சேக்கிழாரின் செந்தமிழ் நெறியை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அங்ங்னம் விரிந்து, பரந்து, உயர்ந்து நிற்கும் உள்ளத்தில் மட்டுமே உயர்ந்த சிந்தனைகள் விளையும்; தகையான தத்துவங்கள் மலரும்; நிலையான நெறிகள் நிறையும்.
சமுதாயச் சிந்தனையுடன் உலகெல்லாம் இன்புற்று வாழவேண்டும் என்ற நோக்கில் படைக்கப்பட்ட இலக்கியங்கள்தான் காலத்தைக் கடந்து வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும், பாரெல்லாம் வாழ, பாடப்பட்ட பாடல்கள் மட்டுமே சாகா வரம் பெற்று சாசுவதமாய் நிலைக்கின்றன.
சங்கத் தமிழ்ப் பாடல்களும், வள்ளுவனின் தெள்ளு தமிழும், இளங்கோவின் சிலம்பும், கம்பனின் காவியமும், ஆழ்வார்களின் அமுதமும், நாயன்மார்களின் நற்றமிழும், சேக்கிழாரின் செந்தமிழும், பாரதியின் பைந்தமிழும் என்றும் இலக்கிய உலகில் நிலைபெற்று வாழ்வதற்குக் காரணம் அவைகளின் ஊடே இழையோடும் சமுதாய நோக்கமே ஆகும்.
சங்கப் புலவர் நரிவெரூஉத்தலையார் அருளும் அன்பும் இல்லாதவரோடு சேர வேண்டாம் என அறிவுரைப்பது அருளும் அன்பும் இல்லாதவர் விரிந்த மனம் உடையவர் அல்லர் என்பதால்தானே!
"அருளும் அன்பும் நீங்கி நீங்கா
நிரயம் கொள்பவரோ டொன்றாது காவல்
குழலி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குறைத்தே!" (புறம் - 5)
என்பவை அவருடைய பொன்மொழிகள்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால்
வேறொன்றறியேன் பராபரமே."
என்பார் தாயுமானவர். வடலூர் வள்ளற் பெருமானும்,
"அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் 
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்"
என உலகத்து உயிர்களுக்கு அன்பு காட்ட அருளுமாறு ஆண்டவனை வேண்டுகிறார்.
விரிந்து பரந்த உள்ளத்தில் சாதி, மதம், மொழி, இனம் என வேற்றுமை கண்டு பேதம் பாராட்டும் தீமை முளை விடுவதில்லை. விரிந்து பரந்த உள்ளத்திற்கு, "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" மனத்தால் உயர்ந்து நிற்கும் மாமனிதர்களுக்குப் பகைவர் என யாருமே கிடையாது. அவர்களுக்கு விலங்கினங்கள்கூட நண்பர்கள், பறவைகள் எல்லாம் உறவினர்கள். அவர்கள்,
"காக்கை குருவி எங்கள் ஜாதி
கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
என அனைத்தையும் உடன் சேர்த்து ஆர்ப்பரிப்பர். அவர்களின் உள்ளம் விரிந்து நிற்பதால், அவர்கள் எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டு வணங்குவர்.
"வானில் பறக்கும் புள்ளெல்லாம் நான், கடலில்
நீந்தும் மீனெல்லாம் நான்"
என அனைத்திலும் தங்களைக் கலந்து கொள்ளும் அதி அற்புத ரசவாதிகள். அனைத்திலும் தங்களை இணைத்துக் கொள்வதோடு, அனைத்திலும் ஆண்டவனை 'அந்தர்யாமி'யாகத் தரிசித்து வணங்கும் அத்வைதிகளின் உள்ளத்தில் விளைவதெல்லாம் உலகை உய்விக்கும் உன்னதத் தத்துவங்கள். அவர்களின் மொழிகள் யாவும் மொழியையே வாழவைக்கும் அமிழ்தான தெய்வத் திருமறைகள்!
இங்ஙனம் உயர்ந்த நோக்கோடு உலகளாவிய சிந்தனையுடன் தமிழுக்கு நூல்களைத் தந்த புலவர்களால் தமிழ் வாழ்ந்தது; வாழ்விறது; வாழும்!
அறக்கொடைகளை, நீதினெறிகளை, நல்லறங்களைப் பெற்ற தமிழ், அவைகளைத் தந்த புலவர்களையும், புவனம் எல்லாம் போற்றும் வண்ணம் இறவாமல் வாழ்கிற ஏற்றத்தைத் தந்திருக்கிறது.
தமிழ் தன்னைச் சுவைப்பவர்கள் காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆம்! தமிழ் ஓர் அமுதமொழி. அது இனிப்பதோடு, சுவைப்பவர்களையும் வாழ்வாங்கு வாழ வைக்கிறது.
பண்டைய தமிழர் வரலாற்றைக் கூறும் நல் ஆவணங்கள் சங்க இலக்கியங்கள் 
ஓமலூர், பிப். 2: பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் நல் ஆவணங்களாக சங்க இலக்கியங்கள் திகழ்வதாக, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இராம.சுந்தரம் பேசினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் தொல்காப்பியம்-​ சங்க இலக்கியம் பன்முக நோக்கிலான ஒப்பீட்டாய்வு கலந்தாய்வரங்கம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதல் அமர்வுக்குத் தலைமை வகித்து வரலாற்றியல் நோக்கு குறித்து சென்னை தொல்லியல் துறை பேராசிரியர் முனைவர் இரா.பூங்குன்றன் பேசியது:
சங்க காலம், தனி மனித வீரதீரச் செயல்களால் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த வீர யுகக் காலம். 
அக்கால அரசியல் கிழார்,மன்னர்,வேளிர்,வேந்தர் என்ற அதிகாரப்படி நிலைகளைக் கொண்டு விளங்கியது. கி.மு.500-ல் இருந்து தொடங்கும் தமிழக அரசியலில் கிழார் என்ற அரசியல் தலைவன் தொடக்கத்தில் குடித்தலைவனாகக் குறிக்கப் பெறுகிறான். 
பல்வேறு தொல் குடிகள் நகர வாழ்க்கையில் ஈடுபட்டனர் என்பதற்குத் தொல்லியல் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் கிடைத்துள்ளன. 
சங்க இலக்கியத் தொகுப்பு முழுவதும் பழங்குடிகளின் அழிவும்,வேளிர்,வேந்தர் எழுச்சியும் கண்ணுக்குத் தெரியும் காட்சிகளாக அன்றைய அரசியல் மாற்றங்களை காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளன.
மாறிக் கொண்டிருக்கும் அந்தக் காலகட்டத்தில் புலவர்கள், எழுச்சி பெற்று வரும் அரசியல் தலைவர்களைப் புகழ்ந்தனர். குடித்தலைவர்களாகிய கிழார்கள் தாங்கள்
வாழ்ந்த பகுதிகளில் புதைந்து கிடைக்கும் கனிம வளங்களைக் கண்டறிந்து அவற்றை வாணிகப் பண்டமாக்கினர். 
கனிம வளத்தால் வேளிர்கள், குடித்தலைவர் நிலையிலிருந்து பல குடிகளை இணைந்து நிற்கும் வேளிர் நாட்டின் தலைவர்களாக உருவானார்கள்.
வாணிகப் பெரு வழிகளில் அமைந்த ஊர்களில் வேளிர் அரசியல் அதிகாரம் செலுத்தியுள்ளனர் என்றார் அவர்.
அடுத்த அமர்வுக்குத் தலைமை வகித்து சமுதாயவியல் நோக்கில் சங்க இலக்கியம் என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் இராம.சுந்தரம் பேசியது:
குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலைத் திணை வாழ் மக்களின் சமூக வாழ்வியலைக் கூறும் பத்துப்பாட்டு காஞ்சிபுரம்,மதுரை, பூம்புகார்ஆகிய நகரங்களின் சிறப்பையும், அவற்றைக் கட்டுப்படுத்தி ஆளும் அரசர்கள்,வேந்தர்களின் தலைமைப் பண்பையும்,வணிக விரிவாக்கத்தையும் எடுத்துக் கூறுகிறது. 
இதன் வழி இனக்குழு வாழ்க்கை படிப்படியாக வணிகக்குழு வாழ்க்கையோடும்,அரசுகளோடும்
இணைந்த நிகழ்வைக் காண முடியும். புறநானூற்றில் மாங்குடி மருதனார் பாடியுள்ள மூன்று பாடல்கள் இந்த மாற்றத்தை,வளர்ச்சியை தெளிவுபடுத்தும் நற்பெருஞ்சான்றுகளாகும்.
கி.மு.100-கி.பி.300க்கு இடைப்பட்ட ஆண்டுகாலச் சமுதாயம் ஒரேபோக்கில்,ஒரே தன்மையில் அமைந்திருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இக்காலக் கணிப்பு குறித்து கருத்து வேறுபாடு உண்டு.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் கி.மு.100ஐ ஒட்டியது என்றும் பொருளதிகாரம், கலித்தொகை,பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவை கி.பி.5-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கூறப்படுகிறது. அகப்புறச் சான்றுகளால் இக்காலக் கணிப்பு பொருந்துவதாக உள்ளது. எனினும் இங்கு அனைத்து நூல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
சங்க காலச் சமுதாய அமைப்பிலும், சில படி நிலைகளைக் காணலாம். சங்க காலம் இனக்குழு சமுதாயத்தில் இருந்து நிலவுடைமைச் சமுதாயமாக வளர்ச்சியுற்ற நிலையை இவற்றின் மூலம் காண முடிகிறது.
பண்டைத் தமிழ் மக்களின் வரலாற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் நல் ஆவணங்களாகத் தொல்காப்பியமும் எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களும் திகழ்கின்றன. தமிழர்களின் இலக்கிய, இலக்கண முயற்சிகளின் பெருஞ்சாதனையாகவும் தொல் உலகச் செவ்வியல் படைப்புகளோடு ஒப்பிடத்தக்கனவாகவும் மேனாட்டுத் தமிழியல் ஆய்வாளர்கள் இவற்றைப் போற்றி மகிழ்கின்றனர். 
இவை இலக்கிய, இலக்கணப் படைப்புகளாக மட்டுமன்றி சங்க கால சமுதாய வரலாற்றை எடுத்துரைக்கும் மூலமாகவும் இருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு என்றார்.
இரண்டாவது நாள் கலந்தாய்வரங்கில் யாப்பியல் நோக்கு குறித்து இரா.சம்பத், பண்பாட்டு மானுடவியல் நோக்கு பற்றி சீ.பக்தவத்சல பாரதி, வாய்மொழி வாய்பாட்டு குறித்து முனைவர் கார்லோஸ், அறவியல் நோக்கு குறித்து ராஜ் கௌதமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
© Copyright 2008 Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக