புதன், 17 ஆகஸ்ட், 2011

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள்


திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள்
சு. சிவசங்கர் - 14 October, 2006
Proverbs in Thirunavukarasar's Thevaram - Tamil Literature Ilakkiyam Papersபக்தி இயக்கப் படைப்பாளிகள், ஏனைய படைப்பாளிகளைப் போன்று தமது படைப்பில் எளிதில் நிறைவு கொள்வதில்லை. தாம் சார்ந்துள்ள சமயக் கருத்தியலை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே அவர்களுடைய முதல் நோக்கமாகும். அதற்காக அவர்கள் மேற்கொண்ட உத்திகள் பல. முதலாவதாகப் பயணம், அவர்களை மக்கள் முன் அவர்கள் சார்ந்துள்ள கருத்தியலின் தூதுவர்களாக நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக இசை, அவர்கள் கைக்கொண்ட இசை வடிவங்கள் மக்களை அவர்கள் முன் நிறுத்தி வைத்தன. மூன்றாவதாக அவர்கள் பேசிய, பாடிய மொழி மக்களின் பேச்சு நடையை ஒத்ததாக இருந்தது. பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். திருநின்ற செம்மையரான திருநாவுக்கரசர், தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தையும் பண்பாட்டினையும் சமூகத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அரிய முயற்சியில் ஆழ்ந்திருந்தார். நாட்டுப்புற வழக்குகள் பல அவரது தேவாரப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பழமொழிகளும் உண்டு.
வாழ்க்கை அனுபவங்களின் பிழிவாகக் காணப்படுபவை பழமொழிகளாகும். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகின்றனர். அவற்றுள் சில மகிழ்ச்சிக்குரியன, சில வருத்தத்திற்குரியன, சில நினைத்துச் சுவைக்கத்தக்கன. சில மறந்து விடத்தக்கன. அனுபவம் எதுவாயினும் அதனுடைய சாரத்தைத் தனக்குப் பின்வருவோர் உணருமாறு மனிதன் கூறியவையே பழமொழிகள் எனலாம். பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அறியலாம் எனக் கலைக்களஞ்சியம் கூறும். பழமொழி, பழஞ்சொல், முதுமொழி, முதுசொல், வசனம், சொலவம், சொலவடை என்று பலவாறான பெயர்கள் பழமொழிக்கு இருப்பதுவே அதன் தொன்மையை விளக்கும்.
"ஏதுநுதலிய முதுமொழி" என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால், பண்பாடு தொடங்கிய காலந்தொட்டுப் பழமொழிகள் இருந்து வந்தமையை அறிய முடிகிறது.
"நன்று செய் மருங்கில் தீதில் என்னும்
தொன்றுபடு பழமொழி"
என அகநானூறும் எடுத்துக்காட்டுகிறது. பழமொழிகளின் அருமையை உணர்ந்த முன்னோர் அவற்றை ஏட்டில் எழுதா நாட்டுப்புற இலக்கிய நிலையிலிருந்து மாற்றிப் பதிவு செய்ய எண்ணியதன் விளைவே, "பழமொழி நானூறு" என்னும் இலக்கியமாகும். திருக்குறள், நாலடியார் முதலான நூல்களிலும் பழமொழிகள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. தொடர்ந்து எழுந்த பக்தி இலக்கியங்களிலும் பழமொழிகள் குறிப்பிட்டதோர் இடத்தைப் பெற்றுள்ளன.
மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படல் பழமொழியின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. Trench Proverbs and their lessions பழமொழி உரைநடை சார்ந்தது எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைக் காணலாம். பழமொழி உவமைப் பண்பு கொண்டது. சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறு போல அமைகின்றன என வேறு சில இயல்புகளையும் தே. லூர்து கூறுகின்றார் (தே. லூர்து நாட்டார் வழக்காறுகள் பக்.6,7). குறைந்தபட்சம் ஒரு தலைப்பையும் ஒரு முடிவுரையையும் உள்ளடக்கிய மரபுவழி உரைக் கூற்றே பழமொழியாகும் எனப் பழமொழிக்கு வரையறை தருகிறார் ஆலன்டண்டிஸ். அமைப்பியல் அடிப்படையில் அவர் கூறும் பழமொழி வகைகளுள் "வேறுபடுத்திக் காட்டும் முரணுடைய பழமொழிகள்" என்பதும் ஒன்று (நாட்டார் வழக்காறுகள் பக்.11,14). திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்பெறும் பழமொழிகளுள் பெரும்பாலானவை மேற்கூறிய இயல்புகளுக்குப் பொருந்தி வருவனவாகும். வேறுபடுத்திக் காட்டும் முரணுடையப் பழமொழிகள் என்னும் அமைப்பிலேயே அப்பர் கூறும் பழமொழிகள் மிகுதியும் அமைந்துள்ளன.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி (Proverb) அல்லது சொல்லடை (Proverbial phrase) வருமாறு அமைந்துள்ளது. வேறு பல பாடல்களிலும் பழமொழிகள் பயின்று வருவதையும் காணமுடிகிறது.
திருப்பாடல்தோறும் ஒரு பழமொழி அமையப்பெற்ற தன்மையினால் நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்பெறுகிறது. இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியோ, சொல்லடையோ இடம் பெறுகின்றன. இவற்றுள் சில இன்றளவும் மக்கள் வழக்கில் உள்ளவை.
"மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
உழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
மயில்ஆலும் ஆரூ ரரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேனே"
என்பது இப்பதிகத்திலுள்ள முதற்பாடல். "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்னும் குறள்வரியை இப்பாடல் நினைவுபடுத்துகிறது. இப்பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறும் "கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே" என்னும் பழமொழியும் இதே கருத்தை கூறும். சைவ சமயத்தை விட்டுப்பிரிந்து, சமணம் சார்ந்து பல்லாண்டுகள் கழித்து மீண்டும் சைவம் திரும்பியவர் திருநாவுக்கரசர். சமணத்திற் புகுந்ததால் இழிநிலை ஏற்பட்டதாகக் கருதி, சைவத்தின் மேன்மையை உணர்த்தும் விதமாக இப்பதிகப் பழமொழிகள் அமைந்துள்ளன.
இரண்டாம் பாடலில் அமையும் பழமொழி, "முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே" என்பதாகும். முயலின் பின் போதல் எளிது, காக்கையின் பின் போதல், பறத்தல் இயல்பில்லாத மனிதர்க்கு அரிது. தமக்கு இயல்பல்லாத சமண நெறியில் சென்ற இழிநிலை இப்பாடலில் அப்பரால் கூறப்படுகிறது. இருக்கிறதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போவது என்னும் உலக வழக்குப் பழமொழியை மேற்கண்ட பழமொழிகள் ஒத்துள்ளதைக் காணலாம்.
"அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே" என்னும் பழமொழி மூன்றாம் பாடலில் அமைகின்றது.
"நல்லவனை நாலு பணம் கொடுத்து வாங்கு
கெட்டவனை நாலு பணம் கொடுத்தாவது விலக்கு"
என்று ஒரு பழமொழி கூறுகிறது. இதன் மறுதலையாய் விலை கொடுத்து மறம் வாங்குவது எத்தனை பேதமை என்பதனை இப்பாடல் வரி விளக்குகின்றது. "தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே" என்னும் ஒன்பதாம் பாடற் கருத்தும் இதுவேயாம்.
மணல் வீடு கட்டுவது, நீர்க்கோலம் போடுவது போன்ற நிலைபேறற்ற செயல்களைச் செய்வது அறிவிலிகள் செயல் ஆகும். இதனைத் தாம் செய்ததாக அறிவிக்கும் அப்பரடிகள் கீழ்க்காணும் தொடரைக் கூறுகிறார்.
"பணி நீரால் பாவைசெயப் பாவித்தேனே"
சமண நெறியால் வீடுபெறக் கருதுதல் என்பது அறிவீனமாகும் என்னும் கருத்தை இப்பாடல்வரி கொண்டுள்ளது.
அறிவிலியோடு சேர்ந்தால் அழிவு உறுதி என்னும் கருத்து அடுத்த பாடல் பழமொழியில் பெறப்படுகிறது.
"எதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே"
என்னும் இப்பாடல் வரி, "பின் இன்னா பேதையார் நட்பு" என்னும் பழமொழி நானூற்றுக் கருத்துக்கு ஒத்திசைக்கிறது.
கொண்ட கொள்கையின் தன்மை அறியாமல், கண்மூடித்தனமாய்ப் பின்பற்றும் முட்டாள் தனத்தை,
"இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்தவாறே" என்னும் பாடல் பழமொழி எடுத்தியம்புகிறது.
பயனற்ற செயலைச் செய்து ஓய்ந்து போகும் செயல்பாடு மனிதனிடம் இன்றளவும் உள்ளது. "விழலுக்கு இறைத்த நீர்" என்னும் தொடர் அதனை உணர்த்தும். இக்கருத்து அமைய, அப்பரடிகள் "பாழ் ஊரிற் பயிக்கம்புக்கு எய்த்தவாறே" என்னும் சொல்லடையை தமது அடுத்த பாடலிற் கூறுகின்றார். (பயிக்கம் = பிச்சை) இதே கருத்தினை "பயிர்தன்னைச் சுழியவிட்டுப் பாழ்க்கு நீரிறைத்து" (4:52:7) என்று மற்றொரு பாடலிலும் அமைத்துப் பாடுகின்றார்.
வழி தெரிந்தவன், தெரியாதவனுக்கு வழி காட்டுவது உலக இயல்பு. மாறாகக் "கொத்தைக்கு மூங்கை வழிகாட்டும்" போக்கினைப் பற்றி கூறுகின்றார் அப்பரடிகள் (கொத்தை = குருடன், மூங்கை = ஊமை) (4:99:2).
நாட்டுப்புற வழக்காறுகளிலும், பழமொழிகளிலும் காணப்படுகின்ற "விளக்கினில் விழும் விட்டிற் பூச்சியையும் (4:31:5), ஆற்றினிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரையும் (4:87:6), இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பையும் (4:75:6), பாம்பின் வாய்த் தேரை"யையும் (4:52:7) தமது திருப்பாடல்களில் எடுத்துக் காட்டுகின்றார் அவர்.
"நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு இட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணிபுரவர்க்குத்
தக்கதன்று தமது பெருமைக்கே" (5:158:7)
என்னும் பாடல், "பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை" என்ற பழமொழியை நினைவுறுத்துவதாய் அமையக் காணலாம்.
"நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த கதை"யும் அப்பரடிகளால் இரு இடங்களில் (4:27:5, 5:213:7) கூறப்பெற்றுள்ளது. கதையைப் பிழிந்தெடுத்த சாறென இப்பழமொழி அமைகின்றது.
எந்த ஓர் இலக்கியமும், மனிதனை விட்டு விலகி நின்றால் நிலைக்க முடியாது. சாதாரண மனிதனின் கருத்துகளும், பேச்சுகளும் இலக்கியத்தில் இடம் பெறும் போது அவை இலக்கியத்திற்கு உயிரோட்டம் தருகின்றன. தமது காலச் சமூகத்தினை, அதன் பண்பாட்டினைச் செப்பம் செய்ய வேண்டிய கட்டுப்பாடு, சமய, சமுதாயப் போராளியான திருநாவுக்கரசருக்கு இருந்தது. அவர்தம் பாடல்கள் சராசரி மனிதனுக்கும் சென்றடைய வேண்டிய தேவை இருந்தது. எனவே, அப்பர் தேவாரத் திருப்பாடல்கள், நாட்டுப்புற மக்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி அவர்களுடைய பேச்சு வழக்குகளை - பழமொழி முதலான வழக்காறுகளை உள்ளடக்கியதாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.
நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக