திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்


கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்
-முனைவர். மா. தியாகராசன்.
முன்னுரை
சங்கத் தொகை நூல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலிஎன்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒரு பாடல். சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ பாடிய பாலைக் கலிப் பாடல்கள் முப்பத்தைந்து கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலிப் பாடல்கள் இருபத்தொன்பது. மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக் கலிப்பாடல்கள் முப்பத்தைந்து,, சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக் கலிப் பாடல்கள் பதினேழு. கடவுள் வாழ்த்துப்பாடிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரே எழுதி முடித்துள்ள நெய்தற் கலிப் பாடல்கள் முப்பத்து மூன்று ஆக மொத்தம் நூற்றைம்பது பாடல்கள் இந்நூலின் கண் அழகுற அமைந்துள்ளன.
இந்நூலின் மூலமாகப் பண்டைய தமிழர் தம் வாழ்வியல். பழக்க வழக்கங்கள், பண்பு நலன் முதலியவற்றைத் தெள்ளிதின் உணர முடியும். இக்கட்டுரையின் வழியாகக் கலித்தொகை காட்டுகின்ற பண்பு நலன்களில் சிலவற்றை ஆய்ந்தறிவோம்.

பண்பு பற்றிய விளக்கம்
பொதுவாகப் பண்புஎன்னும் சொல்லுக்குக் குணம்என்பது பொருள், பலவகையான குணங்களையும் பண்புஎன்னும் சொல் குறிக்கும் எனினும் பண்பு என்னும் சொல்லுக்குத் தனிப்பட்ட ஒரு பொருளையும் கலித்தொகை விளக்கி கூறுகிறது. மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் புனைந்துள்ள நெய்தற் கலியில் மாமலர் முண்டகம்” (கலித்தொகை பாடல் எண் 133, நெய்தற்கலி பாடல் எண் 16) என்று தொடங்கும் பாடலில் பலவகையான குணநலன்களுக்குரிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ஆற்றுதல் என்ப தொன்று அலந்தவர்க்கு உதவுதல்என்னும் அடி. இல்லறம் நடத்துதல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது. வறுமையுற்றவர்க்கு ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதேயாகும்என்னும் பொருள் அமையப் புணையப்பட்டுள்ளது. அடுத்ததாகப் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைஎன்னும் தொடர். இது பாதுகாத்தல்என்று சிறப்புறக் கூறத்தக்கது தன்னுடன் கூடியவரைப் பிரியாமல் இருப்பதுவே யாகும்என்னும் பொருளில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பண்புஎன்னும் சொல்லுக்குரிய விளக்கமாகப் பண்பெனப்படுவது பாடறிந்தொழுதல்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கட்பண்பு என்று சிறப்பித்துக் கூறப்படுவது. உலக நடையை அறிந்து அதற்கேற்ப நடத்தல்என்பது அதன் பொருளாகும்.

இதனை அடுத்து அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை பொறை ஆகிய சொற்களுக்குரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. அன்பு என்று கூறப்படுவது தன் சுற்றத்தாரைத் துன்புறுத்தாமல் பாதுகாத்தல். அறிவு எனப்படுவது. அறிவிலார் தன்னைப் பழித்துப் பேசியவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல், செறிவு என்பது, கூறிய ஒன்றை மறுத்துக் கூறாமல் இருத்தல். நிறை என்பது, ஒரு செயலைப் பிறர் அறியாதாவாறு மறைந்து செய்தல். முறை என்பது நியாயம் வழங்கும்போது வேண்டியவர், வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் அவர் செய்த தவறுக்கேற்ற தண்டணை வழங்குதல் பொறை எனப்படுவது பகைவரை வீழ்த்துவதற்கு உரிய காலம் வரும் வரையில் பொறுத்திருத்தல் என்று விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இந்தக் கலித்தொகைப்பாடல் பண்புஎன்பதற்குத் தனிப்பட்ட விளக்கம் வழங்கியுள்ளது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.

போற்றி உரைத்த பண்புகள்
 “அருள் செய்து வந்த அறவோர், தாபதர் முதலியோர்க்குத் தலைவன் அறவுணர்வுடன் வேண்டுவன கொடுக்கக்கூடயவன்என்னும் கருத்து. பாலைக்கலி 11ஆம் பாடலில். அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்என்று கூறப்பட்டுள்ளது. கொடை கொடுக்கும் அறவுணர்வு கொண்டவன் தலைவன் என்பதால், கலித்தொகையில் கொடைப்பண்பு பாராட்டிக் கூறப்பட்ட ஒரு பண்பாக விளங்குகிறது. அறத்திறனைப் பாராட்டி கலித்தொகை அடுத்த அடியில் பெரிதாய பகை வென்று பேணாரைத்தெறுதலும்எனத் தலைவனது. மறத்திறன் பாராட்டப் பெற்றுள்ளது. கொடைப் பண்பு போற்றுதற்குரியது. மேலும் கொடையளிப்போர் தம் செல்வம் தழைத்துச் செழிக்கும் என்னும் நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்ததைக் கலித்தொகை எடுத்தியம்புகிறது. இதோ கலித்தொகை கூறும் கருத்து நீர்வளம் மிக்க ஓர் ஆற்றங்கரையில் மரங்கள் செழித்துத் தழைத்திருந்தன. அந்தக் காட்சிக்கு உவமையாகக் கலித்தொகை, “ஈகைத்திறம் மிக்க தீதற்றோர் செல்வம் வளர்ந்து செழிப்பதைஎடுத்துக் காட்டியுள்ளது. ஈதலிற் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல் தீங்கரை மரநந்த” (பாலைக்கலிபாடல் எண் 27) என்பன கலித்தொகைப் பாடல் வரிகளாகும்.

உலகம் நிலையாமை உடையது; அந்த நிலைமையை உணர்ந்தோர், தம்மிடம் உள்ள செல்வங்களை வாரி வாரி வழங்குவார்கள். அதுபோல மரங்கள் மலர்ந்த மலர்களைச் சொரிந்தன. என்பதனை. உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்’ (பாலைக்கலி-31) என்று கலித்தொகை கூறியுள்ளது.

கல்வி, கேள்வி, ஒழுக்கங்களால் சிறந்த ஆன்றோர் அடக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்னும் கருத்து. ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லாச் சினையொடும்” (பாலைக்கலி-31) கிளைகளில் உள்ள அரும்புகள் மலராகின்ற வரையில் அடக்கமாக இருக்கும் காட்சிக்கு ஆன்றோர் அடக்கமாக இருத்தல் உவமை கூறப்பட்டுள்ளது.

மேலோர் தம்முடைய புகழை மற்றவர் கூறக்கேட்கும் போது நாணத்தால் தலை குனிந்து இருப்பார்கள். அதுபோல இரவில் மரங்கள் தலை சாய்த்து உறங்கினஎன்றும் கருத்தினைத் தம்பு கழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச” (நெய்தற் கலி பாடல்-2) எனக் கலித் தொகை விளக்கிக் கூறுவது சான்றோர் தம் அடக்கப் பண்பை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

சான்றோர் பிறர் துன்பத்தையும் தம் துன்பமாகக் கருதி அதனைப் போக்க அறம் செய்யும் பண்பு உடையவர்என்பதைப் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன்.” (நெய்தல் கலிப்பாடல் 22) என கலித்தொகை எடுத்துக் கூறியுள்ளது.

வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் நடுநிலையாக நின்று நீதி வழங்கும் பண்பு கலித்தொகையில் போற்றி கூறப்பட்டுள்ளது. ஓர்வுற் றொருதிறம் ஒல்காத நேர்கோல் போல் அறம் புரி நெஞ்சத்தவன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.6) என்பது கலித்தொகைத் தொடர். ஒரு பக்கம் சாயாமல் நடுநின்று தன்பால் வைக்கப்படும் பொருளுக்கேற்ப சாய்கின்ற துலாக்கோல் போல நடுநிற்கின்ற அறிவுணர்வு கொண்டவன் தலைவன்என்பது இத்தொடரின் பொருளாகும்.

பகைத்து வருபவன் கூற்றுவன் ஆனாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கின்ற வீரமும், நட்புக் கொண்டவர்களிடம் தோற்பதற்கு நாணம் அடையாத பெருந்தன்மையும் உயர்ந்த பண்புகள் என கலித்தொகையில் சுட்டிக் காட்டியுள்ளது. பகை எனின் சுற்றம்வரின் தொலையான்றவன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்” (குறிஞ்சிக் கலிப்பாடல் எண். 7) என்பவை கலித்தொகையின் வரிகள்.

மேலும் தலைவன்தன் மீது பொறாமைக் கொண்டவர்கள் தன்னைப் பற்றி குறைகளை கூறினாலும், தான் யார் மீதும் குறை கூறாதவன்என்று தலைவன் பண்பு பாராட்டப்பட்டுள்ளது.

மாறு கொண்டாற்றாரெனினும் பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.7) என்பவை கலித்தொகை வரிகள்.

வெறுத்து ஒதுக்கிய பண்புகள்
 ஒருவர் தம் அருகில் இருக்கும்போது அவரை புகழ்ந்து பாராட்டுவதும், அவர் எதிரில் இல்லாதபோது அவரைப் பற்றிய பழி தூற்றிக் கூறுவதும் இன்று பரவலாக நாம் பார்க்கக்கூடிய பண்பு இதனைக் கலித்தொகை எடுத்துக் காட்டுவதற்கும் இழித்து கூறுவதற்கும் தயங்கவில்லை. சிறப்பு செய் துழையராப் புகழ் போற்றி மற்றவர் புறக்கொடையே பழி துற்றும் புல்லியார்” (பாலைக்கலி பாடல் எண்.24) என கலித்தொகை புறங் கூறுபவர்களை புல்லியர் எனக் கூறியுள்ளது.

ஒருவர் செல்வராக இருக்கும்பொழுது அவருடன் சேர்ந்து அவர் செல்வத்தை எல்லாம் துய்த்து மகிழ்ந்து, பின்னர் அவர் வறுமையை அடைந்தபோது அவருக்கு உதவாமல் புறக்கணித்து பிரிகின்ற பண்பைப் கலித்தொகை, குற்றமென்று குறித்து காட்டுகிறது.

செல்வத்துல் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர் ஒல்கிடந்து உலப்பிலா உணர்விலார்” (பாலைக்கலிப் பாடல் எண்.24) என்பது கலித்தொகை.

ஒருவருடன் மனம் ஒன்றி நட்புக் கொண்டு அதன் காரணமாக அவர் நம்மைப் பற்றிய மறைபொருளையெல்லாம் கூறக் கேட்டறிந்து கொண்டு அவரைப் பிரிந்து பின்னர் தம் கேட்டறிந்தவற்றை பிறருக்கு எடுத்துக் கூறுகின்ற பண்பை கலித்தொகை இழித்துக் கூறுகிறது.

பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தகால் பிறருக்கு உரைக்கும் பீடிலார்” (பாலைக்கலிப் பாடல் எண். 24) கூடியிருந்தபோது அறிந்து கொண்ட மந்தணச் செய்திகளை பிரிந்தவுடன் பிறர்க்கு எடுத்துக் கூறுபவரை பெருமையற்றவர் என்று கலித்தொகை இழித்து கூறியுள்ளது.

நெய்தல் கலி 32ம் பாடலில் தனக்கு கற்பித்த ஆசிரியருக்கு பொருளளிக்காமல் அவரை வருத்தமுற செய்தவன் கற்ற கல்வியை தவறாக பயன்படுத்துபவன் ஆகியோர் செல்வம் அழியும் தக்க நேரத்தில் தனக்கு உதவியவனுக்கு திரும்ப உதவாதவன் செல்வம் அவன் பிள்ளைகளிடத்து சென்றாலும் அச்செல்வம் அவர்களையும் துன்புறுத்தாமல் விடாது. சுற்றத்தார் மனம் வருந்துமாறு சேர்ந்த செல்வமும் அழியும். ஒருவன் தான் கொடுத்த வாக்குறுதியை தவற விட்டு விட்டால் அவன் அப்போது வெற்றி பெற்றாலும் பின்னர் அத்தவறுதல் அவனை அழிக்காமல் விடாதுஎன்பவை நெய்தற்கலி இடித்துரைக்கும் பண்புகள்.

இதோ நெய்தற்கலிப்பாடலில் மேறகூறிய கருத்தமைந்த பகுதி.

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகிர்ந்து உண்ணான். ருவிச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்இப்பகுதியில் கற்ற கல்விக்கு மாறாக நடப்பவன் பொருள் அழியும் என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது. கற்று அறியாதவன் அறியாமையால் தவறு செய்தால் அது மன்னிக்கப்பட்டாலும், அறிந்தவன் செய்யும் தவறு அறவே மன்னிக்க இயலாது. அதனால்தான் கடந்த நூற்றாண்டு கவிஞன் மகாகவி பாரதியாரும் படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான்! போவான்! ஐயோவென்று போவான்என்று சீற்றத்துடன் பாடினார். எனவே கற்றக் கல்விக்கு மாறாக நடப்பதை கலித்தொகை சாடுகிறது - அவர் செல்வம் அழியும் என்று கவிதை பாடுகிறது.

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதவன் மற்று அவன் எச்சத்துள் ஆயினும். அஃது எறியாது விடாதே காண்; கேளிர்கள். நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தான் இலான் குடியே போல் தமியவே தேயுமால் சூள்வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் வாள்வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்என்பவவை கலித்தொகை பாடல் அடிகள்.

முடிவுரை
கடைப் பிடித்தற்குரிய உயரிய பண்புகளும் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாத தீய பண்புகளும் கலித்தொகையில் அகப்பொருளை எடுத்துக் கூறும் பாடல்களுக்கு இடையிடையே ஏற்றவகையில் கற்போர்க்கு ஏற்றம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பண்புகள் கவினார்ந்த உவமைகள் வழியாகவும் கவர்ச்சி மிகு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இவற்றால் பண்டைத் தமிழர் தம் பண்பாட்டு நலனை நாம் அறிந்தும் மகிழவும். அவற்றை நம் வாழ்விலும் கடைப்பிடித்து ஒழுகவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கலித்தொகை காட்டுகின்ற பண்புகளுக்குள் சில பண்புகள் மட்டுமே கட்டுரையின் அளவு கருதிக் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையின் போக்கினையும் நோக்கினையும் தொடர்ந்து கலித்தொகை நூல் முழுவதையும் ஆழ்ந்து கற்றால் எல்லாப் பண்புகளையும் படித்தறிந்து இன்புறலாம். பண்பாடு மிக்க சங்க காலத் தமிழர் வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் வழிபிறக்கும்! இந்த வழிக்குரிய கதவுகளை நம் தமிழ் மொழி திறக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக