திங்கள், 20 ஜூன், 2011

பெண்கள்

         என்றுமே பெண்கள் இலட்சியவாதிகள் தான்
இலட்சியம் என்றால் என்ன? தங்களுக்கென்று ஒரு கொள்கை, தங்களுக்கென்று ஒரு நேர்மையான பாதை, தங்களுக்கென்று ஒரு நேர்வழி. இவைகளை அனைத்தையும் ஒருங்கே பெற்ற பெண்களை இலட்சியப் பெண்கள் என்று சொல்லலாம்.
கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு இறுதி வரை அவனைத் திருத்த போராடிய இலட்சியப் பெண்கள், கைக் குழந்தையோடு, கைவிட்டுச் சென்ற அல்லது இறந்து விட்ட கணவனாக இருந்தாலும், மறுமணம் செய்து கொள்ளாமல், குழந்தைக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு வாழ்ந்த இலட்சியப் பெண்கள், பள்ளிப் படிப்புக்குக்கூட வழியில்லாத கிராமப் பெண்கள், தங்கள் கணவனோடு இணைந்து விடியற்காலையிலேயே வயல்வெளிக்குச் சென்று வயல்வெளியில் மழையிலும், வெயிலிலும் நாள் முழுவதும் வேலை செய்து குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்த இலட்சியப் பெண்களின் நிஜக்கதைகள் ஆயிரம் ஆயிரம் உள்ளன
இன்றைய பெண்கள்
இலட்சியப் பெண்களாக இருந்து வந்த பெண்களுக்கு அவர்களின் அறிவார்ந்த படிப்பும், கை நிறைய சம்பளமும் தன்னம்பிக்கையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. பெண்கள் தங்கள் படிப்பு, திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்த அருமையான சூழலும், வாய்ப்பும் உருவாகியுள்ளது.
ஒரு பெண் என்று தன்னந்தனியாக இரவு 12 மணிக்கு நடந்து வரும் சூழல் ஏற்படுகிறதோ, அன்று தான் நம் நாடு உண்மையான சுதந்திரம் அடைந்துள்ளது என்று பொருள்படும் என்று  மகாத்மா காந்தி சொல்லி விட்டுச் சென்றார். அந்த நிலையை விட சற்று உயரிய நிலை இன்று சாத்தியமாகியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம். இன்றைய பெண்கள் இரவில் வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐ.டி மற்றும் அதன் துறை சார்ந்த பணிகளுக்கு இரவு நேர வேலையும் இருப்பதால், நிறுவனங்கள் கார் அனுப்பி பெண்களை பத்திரமாக வேலைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தச் சூழல், காந்திஜி கண்ட கனவை விட உயர்ந்த நிலை தானே.
ஆண்களுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்ற நிலை மாறி, பெண்களுக்கு ஆண்கள் சரிநிகர் சமானம் என்ற நிலை உருவாகி வருகிறது.
ஐ.டி-யில் ஐடியல் பெண்கள்

ஐ.டி-யில் ஐடியல் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் இன்று ஏன் அவசியமாகிப் போனது?
ஒரு பக்கம் அதிகரித்து வரும் பெண்களின்  கல்வியறிவு.
 மறுபக்கம் அயல்நாட்டு நிறுவனங்களின் தயவில் பெருக்கெடுத்த வேலை வாய்ப்புகள்.
இதற்கிடையில்படித்து முடிக்கும் முன்பே கல்லூரிகளுக்குச் சென்று படிக்கின்ற மாணவ மாணவிகளில் 80 சதவிகிதமானவர்களைக் கொத்திச் சென்று அனுபவமில்லாதவர்களுக்கு, ஆரம்பத்திலேயே குறைந்தபட்சமாக 20 ஆயிரம் சம்பளம் கொடுக்கத் தயாராக இருக்கும் ஐ.டி. நிறுவனங்கள். இதன் காரணமாய் சமுதாயத்தில் பெண்களின்  நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படித்த பெண்கள்வேலைக்குச் செல்லும் பெண்கள் இவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
எதிர்காலத்தில் பெண்கள்
பொருளாதார சுதந்திரம் பெற்றுள்ள பெண்களில் பலர், சம்பளத்துக்காக மட்டுமே ஐ.டியில் பணி புரிகிறார்கள். ஐ.டியில் சாதனை புரிய வேண்டும் என்ற இலட்சியத்தோடு பணிபுரிபவர்களின் சதவிகிதம் மிகமிகக் குறைவு என்று சர்வேக்கள் கூறுகிறது. மேலும் சாஃப்ட்வேர் துறையில் மிக  உயரிய பதவியில் இருக்கும் பெண்களின் சதவிகிதமும் மிகக் குறைவே.

கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற சார்லஸ் பாபேஜ் கம்ப்யூட்டரை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தார் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. அடா பைரான் கிங் [Ada Byron King] என்ற பெண்மணி தான் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இது போன்ற முன்னோடிகள் வெளிச்சத்துக்கு வந்தால் தான் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.வெறும் பணத்துக்காக சாஃப்ட்வேர் துறையில் வேலைசெய்யும் மனப்பாங்கு குறைந்து ஏதேனும் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும், உருவாக்க வேண்டும் என்கின்ற இலட்சிய மனப்பாங்கு பெண்களிடையே அதிகரிக்கும்.   

பெண்களுக்கான பொற்காலம்
குறிப்பாக பெண்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை முடக்கிப் போட்டக் காலத்தில் இருந்து பலர் போராடிப் பெற்ற இந்த சுதந்திரக்காற்றைக்  காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
சுதந்திரம் என்பது
·        மனம் போன போக்கில் வாழ்வது என்று பொருளல்ல...
·        யார் எப்படிப் போனால் என்ன என்று நமக்குத் தோன்றுவதையெல்லாம் செய்வது என்று அர்த்தம் இல்லை
·        பணம் ஒன்று மட்டுமே சுதந்திர வாழ்க்கையல்ல
·        உறவுகள் தேவையே இல்லை என்ற எண்ணம் சுதந்திர வாழ்க்கை அல்ல
·        யாருடன் வேண்டுமானாலும் நேரம் கெட்ட நேரத்தில் போனிலும், நேரிலும் அரட்டை அடிப்பதுஆணுக்கு இணையாக மது அருந்துவது, புகை பிடிப்பது, உடல் அங்கங்களை ஷோகேஸ் செய்வதை போல  உடை அணிவது இவைகள் எதுவுமே சுதந்திரம் கிடையாது.

ஒரு பெண் தன்னுடைய திறமைகளால் மட்டுமே அடையாளம் காணப்பெற வேண்டும். உடலாலோ, அலங்காரத்தினாலோ அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடாது. எந்த ஒரு பெண், இந்த மனோநிலையை எப்போது அடைந்து மனதளவில் முதிர்ச்சி அடைகிறாளோ அவளே மிகவும் சுதந்திரமான பெண்ணாவாள். அயல்நாட்டுப் பணத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் அயல்நாட்டுப் பண்பாட்டினால் நம் நாட்டுப் பண்பாடு சீர்குலையலாமா?  


எதிர்காலத்தில் ஐ.டி துறை
அயல்நாட்டு தயவினால் நம் நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்து வருவதில் எந்த  தவறும் இல்லை. அதில் நாம் சந்தோஷப்படுவதிலும் எந்தப் பிழையும் இல்லை.
நம் நாட்டு இளைஞர்களின் உடல் மற்றும் மன உழைப்பில் உருவாகும் எத்தனையோ கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் இன்று உலகளாவிய முறையில் பெரிய வெற்றி பெற்று வளர்ந்து வருகிறது. ஆனால் நம் நாட்டில் இதுபோல சாஃப்ட்வேர்களைத் தயாரிக்கும்(உருவாக்கும்) நிறுவனங்கள் இல்லாதது  மிகப் பெரிய குறையே ஆகும்.
இதற்கு மிக முக்கிய காரணம், நம் இளைஞர்களுக்கும், இங்குள்ள நிறுவனங்களுக்கும் ஆராய்ச்சி மனோபாவம் மிகக் குறைவாக இருப்பது தான்.
எதிர்காலத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிகரித்து, ஆராய்ச்சி செய்ய பணியாளர்களும் அதிகரித்தால், ஒரு மைக்ரோசாஃப்ட் போல, ஒரு ஆரகிள் கார்பொரேஷன் போல, ஒரு சன் ஜாவா போல நம் இந்திய நிறுவனம் உருவாகி, அதன் சாஃப்ட்வேர்கள் உலகளாவிய அளவில் விற்பனை செய்யப்பட்டு நிரந்தர வருமானத்துக்கு வழிவகுக்கும்.



திறமையைப் பட்டை தீட்டுங்கள்
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண் என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் துறையில் புரோகிராமராக வேலை செய்து வந்தார். திருமணம் காரணமாக வேலையில் இருந்து நின்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் என்னிடம் திரும்ப வந்து வேலை கேட்டார். அவரது வேலை செய்யும் பாங்கும், தொழில்நுட்ப அறிவும் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், நானும் அவரை மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்தன்று வேலையில் திரும்ப சேரச் சொல்லி இருந்தேன்.

காலை 10 மணிக்கு அவரிடம் இன்டர்நெட்டில் இருந்து தகவல்களை சேகரிக்கும் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு என் சீட்டில் வந்தமர்ந்தேன். சரியாக 10.10-க்கு பரபரப்பாக என் அறையில் நுழைந்து மேடம்... இன்டர்நெட்டில் எப்படி செல்வது. எனக்கு இன்டர்நெட் பற்றி எதுவுமே தெரியாது...எனக்கு 1 மாதம் பயிற்சி அளித்தால் போதும்...என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், இதற்கு மேல் அவர் பேசிய எதுவுமே எனக்கு காதில் விழவில்லை. பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஒரு பெண் 10 வருடம் சப்ஜெக்ட்டில் தொடர்பில்லாததால் இந்த அளவுக்கு பின் தங்கி விட்டாரே என்று எனக்கு ஏக ஆதங்கம்.
அதுவும் அந்த பெண் என்னிடம் வேலை கேட்டு வந்து 2 மாதங்கள் கழித்து தான் வேலையில் சேர நான் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த 2 மாதத்திலாவது, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாவிட்டாலும், பிரவுசிங் சென்டர் சென்றாவது தன் கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டிருக்கலாம். இப்படி எந்த முயற்சியுமே செய்யாமல், மறந்து போன சப்ஜெக்ட்டோடு என்னிடம் வேலையில் சேர்ந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. அந்த பெண்ணிடம் நான் சொன்னது இது தான் இப்படி எதுவுமே தெரியாமல் வந்திருக்கிறீர்களே.... என் நிறுவனத்தில் என்ன வேலை செய்யலாம் என்று நினைத்து வந்திருக்கிறீர்கள்... இப்படி உங்கள் திறமைகளை வீணடித்துக் கொண்ட பெண்ணாக, பெண்கள் தினத்தன்று என் முன் வந்து நின்றிருக்கிறீர்களே...
இது போன்று இன்று ஏராளமானோர் BE, BTech, MCA படித்துவிட்டு, தங்களின் அறிவை மேப்படுத்திக் கொள்ளாமல், வேலை செய்ய வேண்டும், தொழில் செய்ய வேண்டும் என்று கிளம்பி தோற்று விடுகிறார்கள். வேலையிலும், தொழிலிலும் ஜெயிக்க உங்கள் திறமை, படிப்பு, வளர்ந்துவரும் தொழில்நுட்ப அறிவு போன்றவைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


எல்லாவற்றையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில், நாம் சொல்வதைக் கேட்டு அதன்படி அப்படியே செயல்படக் கூடிய இரண்டு நபர்கள் யார் தெரியுமா? நம் உடம்பும், மனதும் தான். ஆம். நம் மனது என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படக்கூடியது நம் உடல். நம் மனதை எப்படித் தயார் செய்கிறோமோ, கண்டிப்பாக அதன்படி அது செயல்படும். மனதின் கட்டளைபடி உடம்பும் ஒத்துழைக்கும். இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி முடிவாகும்.
தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று உங்கள் ஆழ்மனதுக்கு உத்தரவு போட்டு விட்டு தூங்கிப் பழகுங்கள். உங்களுக்கு அலாரம் இல்லாமலேயே டாண்!என்று 4 மணிக்கு விழிப்பு வந்துவிடும். உதாரணத்துக்கு, தொடர்ந்து சீரியல் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் சிகரெட் பிடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சீரியல் பார்க்காவிட்டாலோ அல்லது சிகரெட் பிடிக்கா விட்டாலோ ஏன் உடம்பில் ஒரு அதிர்வும், மனதில் ஒரு தடுமாற்றமும் ஏற்படுகிறது? வழக்கம். அதுதான் காரணம். வழக்கமாக செய்யும் எந்த ஒரு விருப்பமான செயலையும், அந்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும் போது மனதில் அதிர்ப்தி ஏற்படுகிறது. செயல் தடுமாற்றம் உண்டாகிறது.
இதுபோல எல்லா நல்ல விஷயங்களையும் நம் வழக்கமாக்கிக் கொண்டுவிட்டால் அதற்கு நாம் அடிமையாகிவிடலாம். ஆம். வழக்கம் என்பது நம் மனதில் ஆழப் பதிந்துவிடக் கூடிய ஒன்றாகும். கண்டிப்பாக நம் மனது சொல்வதை உடலும் கேட்கும்.

எப்போதுமே உங்களைச் சுற்றி அனுபவம் மிக்க நபர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். நம்மைவிட மேலானவர்கள், சிறப்பாக செயல்புரிபவர்கள் இருக்கின்ற இடங்களில் செயல்பட்டால், அவர்கள் ஏதேதோ செய்ய, நாமும் முயற்சிக்க நாம் முன்பு இருந்ததை விட சில படிகளாவது கண்டிப்பாக முன்னேறுவோம். நம் தரமும் அதிகரிக்கும்.
மேலும் நம் பிடிவாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, பல நல்ல விஷயங்களுக்கு அடிமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த பழக்கங்களை பிடிவாதமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் நமக்கு நாமே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும்.
,
நாம் செய்கின்ற வேலைகளில், நாம் கஷ்டம் என்று உணரும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் கவனம் செலுத்தி முடித்து விட்டால் மற்ற சின்ன சின்ன வேலைகளை சந்தோஷமான மனநிலையில் முடிக்க முடியும்.
எதையும் எழுதி வைக்கும் கலை
என் பெற்றோர் கற்றுக் கொடுத்த இன்னொரு விஷயமும் இன்றைய Personality Development வகுப்புகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. அது என்னவென்றால் எதையும் எழுதி வைத்து விட்டால் கஷ்டமாக இருந்தால் பாதி குறையும். சந்தோஷமாக இருந்தால் இரட்டிப்பாகும்.
ஆம். இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பச் சூழலில், என் பெற்றோர் இல்லாத நேரங்களில் எங்களுக்குள் (என் சகோதரி மற்றும் சகோதரனுடன்) சண்டை வந்தால் வாய் வார்த்தை கை சண்டையாக மாறாமல் இருக்க ஒரு யோசனை சொன்னார்கள். எங்கள் மூவருக்கும் தனித்தனியாக நோட்டு ஒன்றைக் கொடுத்தார்கள். எங்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால், ஒருவருக்கு மற்றவரிடம் பிடிக்காத விஷயத்தை அதில் எழுதி வைக்க வேண்டியது தான் அந்த யோசனை. பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நோட்டு புத்தகங்களை வைத்துக் கொண்டு விசாரண நடக்கும். இதுபோல இன்னும் சொல்லப் போனால், பெற்றோர் வீட்டிற்கு வருவதற்குள் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணாமல் போன நாட்களும் உண்டு. நோட்டைப் பார்க்கும் போது தான்ஓஹோ...இவ்வளவு நடந்துள்ளதா!என்று தோன்றும்.

சுயநலம் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரிடமும் 100 சதவிகிதம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை. நம் பலவீனம் மற்றவர்களுக்கு பலமாகி விடுகிறது. எனவே, ஒரே வடிகால், நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பதை எல்லாம் பேப்பரில் எழுதி வைப்பது தான். இப்படி செய்யும் போது மனதும் அமைதியாகிறது. எழுதி வைப்பதால், கோபத்தின் தீவிரம் குறைகிறது. தெளிவான மன ஓட்டத்தில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கிறது. நம்முடைய சோகம், துக்கம், ஏமாற்றம் போன்ற அனைத்தையும் எழுதி வைப்பதன் மூலம் அவைகளின் வீரியம் குறைகிறது. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான நேரங்களில் அவைகளுக்கு நல்ல தீர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
கற்பனை செய்யுங்கள்
நல்ல கற்பனைகள் நம்மை செம்மைப்படுத்தும். நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அது போல நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும். கற்பனைகள் உங்கள் செயலுக்கு வலு கொடுக்கும். தீவிரமாக உழைக்க வழி வகுக்கும். தொடர்ந்த கற்பனைகளும், அதனைச் சார்ந்த அயராத உழைப்பும் வெற்றிக்கு வழி வகுக்கும்.கனவு. கற்பனை. உழைப்பு. இவைகள் தான் வெற்றியின் அடித்தளமாகும். எனவே கனவு காணுங்கள்...கற்பனை செய்யுங்கள்...உழையுங்கள்....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ed;wp-http://compcarebuvaneswari.blogspot.com/