வியாழன், 18 ஜூலை, 2013

சிவபெருமான் ஆடிய நடனங்கள்

சிவபெருமான் ஆடிய நடனங்கள்
சைவ ஆகமங்கள் சிவபெருமானுடைய ஏழு வகையான நடனங்களைப் பற்றி பேசுகின்றன அவை :
1. காளிகா தாண்டவம்
2. கௌரி தாண்டவம்
3. சம்ஹார தாண்டவம்
4. திரிபுர தாண்டவம்
5. ஊர்த்துவ தாண்டவம்
6. ஆனந்த தாண்டவம்
சிவ பெருமான் ஆடிய கூத்து வகைகள்
கொடு கொட்டி
பாண்ட ரங்கம்
கோடு
ஐவகைச் சம்ஸ்காரக் கூத்து
(நீக்கல்
நிலைப்பித்தல்
நுகர்வித்தல்
அமைதியாக்கல்
அப்பாலாக்கல்)
காளிக்கூத்து
முனிக்கூத்து
இன்பக் கூத்து
ஐந்தொழில் கூத்து
அறுமயக் கூத்து
இவை பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் ஆடப் பெற்றவை.
இந்நடனங்களுள் தில்லை வனத்தில் ஆடிய அன்புக் கூத்தும், ஆலவனத்தில் (திருவாலங்காடு) ஆடிய அருள் கூத்தும் குறிப்பிடத்தக்கவை.
சிவபெருமான் ஆடியபொழுது காளி கண்டு களித்தாள் என்னும் செய்தியை
இறைவன் ஆடல் கண்டருளிய அணங்குக
என்று சிலப்பதிகாரம் வழக்குரைக் காதை 37-38 கூறுகின்றது.
சிவபெருமான் ஆடியருளிய ஆடல்கள் பலவாறாகக் கூறப்படினும் அவற்றின் அடிப்படைக் காரணம் ஒன்றேயாகும்.
வடமொழி நூல்கள் சிவபெருமானின் ஆடல்களைப் பல வகைப்படுத்தி பேசுகின்றன.
இமயமலையில் ஒரு மாலை நேரத்தில் மூவுலகங்களையும் படைத்த அன்னை அரியணையில் வீற்றிருக்க, சூலபாணியாகிய சிவபெருமான் அங்கு அனைத்துத் தேவர்கள் சூழ்ந்திருக்க ஆடியருளினான்.
கலைமகள் வீணையும், இந்திரன் சூழலும் வாசிக்க, பிரமன் ஜெபமாலை உருட்ட, திருமகள் பாட, திருமால் மத்தளம் வாசிக்க, மற்ற எல்லா தேவர்களும் சூழ்ந்திருந்தனர்.
இந்நடனம் பற்றி சிவ பிரதோஷ ஸ்தோத்திரம் கதாசரித் சாகரஎன்னும் நூல்கள் குறிப்பிடுகின்றன என்று டாக்டர் ஆனந்த குமாரசாமி கூறியுள்ளார். இந்நடனத்தில் சிவபெருமாள் இரு கைகளுடன் காணப்படுகிறார். முயலகன் காலடியில் இருப்பது பற்றிய பேச்சில்லை.
சிவபெருமானுடைய மற்றொரு நடனம் தாண்டவம்என்னும் வகையைச் சேர்ந்தது. சிவபெருமான் பைரவர் அல்லது ஸ்ரீ வீரபத்திரர் என்னும் பெயர் கொண்டு தாமச குணத்துடன் ஆடியதாகும். இது தேவியுடன் சிவபெருமான் பத்துக் கரங்களுடன் மயானத்தில் ஆடியது. இந்நிகழ்ச்சியை விளக்கும் பழஞ்சிற்பங்கள் எல்லோரா, எலிபெண்டா, புவனேஸ்வரி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
மீமாம்சை வழியைப் பின்பற்றிய முனிவர் பலர் தாருலாவனத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மனத்தில் அனைத்தும் தாமே என்றும் மற்றொரு ஆற்றல் கிடையாது என்றும் ஓர் எண்ணம் தோன்றியது. அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் சிவபெருமான் காபாலியாகவும் திருமால் மோகினி வேடமும் கொண்டு அங்கு சென்றனர். காபாலியைக் கண்ட ரிஷபத்தினியர் அவர் பின் சென்றனர். மோகினியைக் கண்ட முனிவர் அவ்வடிவின் பின் சென்றனர்.
மனைவியர் செயலைக் கண்டு முனிவர் கோபம் கொண்டு காபாலி வடிவில் வந்த இறைவனை அழிக்கத் திட்டம் தீட்டினார்.
முனிவர் ஆபிசார வேள்வி இயற்றினர், அதிலிருந்து வேங்கை தோன்றியது. அதனை இறைவர் அடக்கி அதன் தோலை உடுத்திக்கொண்டார். அதன் பிறகு பாம்பினை முனிவர்கள் ஏவ, அதனை தம் வலக்கைக்குக் கங்கணம் ஆக்கினார். தமது செயல் நிறைவேறாமையால் முனிவர் தமது தவ வலிமையைப் பயன்படுத்தி ஒரு விந்தைக் கோலம் கொண்ட முயலகன் என்னும் அரக்கனை ஏவினர்,
இறைவர் அந்த அரக்கனை அடக்கி காலடியில் அழுத்தினார். இறுதியில் முனிவர்கள் வேள்விக் குண்டத்திலிருந்த நெருப்பை அவர் மேல் அள்ளி வீசினர். அதனைத் தமது கரத்தில் ஏந்தினார். வேள்வியில் தோன்றிய மானும், மழுவும் சிவபெருமானை வந்து அடைந்தன. தீய மந்திரங்களைச் சிலம்பாக ஆக்கி அணிந்துகொண்டார். நடனம் ஆடினார்.
ஆதிசேஷன் இறைவனைத் துதித்து மீண்டும் ஒரு தடவை அந்நடனம் ஆடும்படி வேண்டினார். சிவபெருமானோ உலகின் இடமாகிய தில்லையில் அந்நடனத்தை மீண்டும் ஆடுவதாக உறுதியளித்தார்.
அதிசேஷன் பதஞ்சலி எனும் பெயருடன் பிறந்து தில்லையில் வாழ்ந்து வந்த வியாக்ர பாதருடன் சேர்ந்து கொண்டார்.
வியாக்ரபாதரும், பதஞ்சலியும் சிவபெருமானுடைய ஆனந்த தாண்டவத்தைக் காணக் காத்திருந்தனர்.
தில்லை வனத்தின் காவல் தெய்வமாக விளங்கிய காளியிடம் சிவபெருமான் சென்று ஆனந்த நடனம் ஆடுவதற்கு இடம் தர அனுமதி கேட்டபோது, காளி அதற்கு மறுத்தாள். ஆயினும் காளி ஒரு நிபந்தனையுடன் ஒரு இடம் தர ஒப்புக்கொண்டாள்.
நடனத்தில் இருவரில் யார் தோல்வி அடைகிறார்களோ, அவர் தில்லை வனத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
நடனத்தின் ஒரு கட்டத்தில் சிவபெருமானின் காதணிகளில் ஒன்று தரையில் விழுந்தது. சிவபெருமான் தனது திறமையினால் காதணி விழுந்ததும் அதனை எடுத்து, அதை அதற்கு முன்பு இருந்த நிலையிலேயே அமைத்துக் கொண்டு பிறர்க்குத் தெரியாமல் ஆடினார். முடிவில் சிவபெருமான் வெற்றி பெற்றார்.
நடனத்தில் தோல்வியை ஒப்புக்கொண்ட காளி தில்லைவனத்தில் இருந்த தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறி வனத்திற்கு வெளியே அமர்ந்தாள். இதன் காரணமாகவே தில்லைக்காளி எல்லைக்கு அப்பால்என்னும் சொற்றொடர் உள்ளூர் மக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது.
தேவர்களுக்காகவும், முனிவர்களுக்காகவும், பதஞ்சலி, வியாக்கிர வாகனர் (புலிக்கால் முனிவர்) மற்றும் அடியார்களுக்குக் காட்சித் தரும் பொருட்டுப் பொன்னம்பலத்தில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிவருவதாக நம்பிக்கை இருந்து வருகிறது.
இந்நடனம் பற்றிய செய்திகள் திருமூலர் திருமந்திரத்துடன் திருக்கூத்து தரிசனம் (9-ஆம் தந்திரம்) உமாபதி சிவத்தின் உண்மை விளக்கம், குமரகுருபரரின் சிதம்பரம் மும்மணிக் கோவை ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
இது கோயில் புராணம் தரும் செய்தியாகும், இதன் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் (காலம் கி.பி. 1290 – 1340)
தில்லை நடராசர் உருவத்தைப் பின்பற்றியே தென்னிந்தியக் கோயில் நடராசர் படிமங்கள் வடிக்கப்பட்டன.
ஆடிய சில இடங்களும் நடன வகைகளும்
தில்லை ஆனந்த நடனம்
மதுரை கால்மாறி ஆடிய இடம்
திருவாலங்காடு அண்டம் முழுவதும் நிமிர்ந்து ஆடும் நடனம். அண்டங்கள் முழுவதிலும் இவ்வாடல் நிகழ்கின்றது.
சிவபெருமானை அழிப்பதற்காக வேள்விக் குண்டத்திலிருந்து மீமாம்சை முனிவர்களால் உண்டாகப்பட்ட பொருள்களைப் பற்றிப் பலவாறு பேசப்படுகின்றது.
வேங்கை குரோத குணம்
பாம்பு மாச்சரியம் (பொறாமை)
பூதம்(முயலகன்) அஞ்ஞானம்
நெருப்பு கோபம்
தீய மந்திரங்கள் கெட்ட எண்ணங்கள்
2. ஆடலின் வாயிலாக ஐந்தொழில்கள் தமிழக நடராசர் படிமத்தின் வடிவம்
கரங்கள் நான்கு. அணிகலன்கள் அணிந்து தொங்கும் சடைமுடி ஆடும் வேகத்தில் அலை அலையாக அசையும் நிலை, தலையில் படமெடுத்தாடும் பாம்பு, கையில் ஏந்திய கபாலம், கங்கை, அதன் மேல் பிறை நிலா, இலங்க இலைகளால் ஆன மகுடம், வலக்காதில் ஆண்களுக்கே உரிய காதணி, இடது காதில் பெண்கள் அணியும் தோடு, கழுத்தணி, கடகம், இடுப்பணி, கால் கை விரல் மோதிரங்கள், கால் சலங்கை, கங்கணம் ஆகியவை அணிந்த நிலை.
துடையுடன் ஒட்டி இறுக்கி கட்டப்பட்ட ஆடை, சிறகடித்துப் பறக்கின்ற மேலாடை (அங்கவஸ்திரம்) வலது கைகளில் ஒன்று உடுக்கையும், மற்றொன்று அபய முத்திரையும் தாங்கியுள்ளன. இடக்கையில் ஒன்று நெருப்பையும், மற்றொன்று தூக்கிய காலை சுட்டிக் காட்டிக் கொண்டும் உள்ளன. வலது கால் முயலகனை மிதித்த நிலையிலும், இடது கால் தூக்கிய நிலையிலும் உள்ளன. முயலகனின் கைகள் பாம்பைப் பிடித்துள்ளன.
தாமரை மலர்ப் பீடத்தின் மேல் இவையனைத்தும் இருக்க, பீடத்திலிருந்து திருவாசி நடராசர் உருவத்தைச் சூழ்ந்துள்ளது. அதில் 36 தீப்பிழம்புகள் கொழுந்து விட்டெரிகின்றன.
புலித்தோல் (அல்லது) யானைத் தோல் ஆடை, தலையில் கபாலம், இலவங்க இலைகள், கங்கை, பாம்பு, வானிலிருந்து வீழ்ந்த கங்கையை, தான் தலையில் ஏற்றுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விடும் சிவபெருமானின் செயல் இவை அவரை ஒரு யோகியாகக் காட்டுகின்றன.
இந்நடனம் நாநாந்தநடனம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபெருமானின் ஐந்து தொழில்களைக் குறிக்கின்றது . வட மொழியில் பஞ்சக்ருதயம்என்று இது அழைக்கப்படுகின்றது. ஐந்து தொழில்கள் ஆவன :
படைத்தல் உடுக்கையின் நாதத்திலிருந்து
காத்தல் அபய கரத்தின் அருளால்
அழித்தல் அக்கினி ஏந்திய கரத்தால்
மறைத்தல் முயலகனை அழுத்திய திருவடியால்
அருளல் மற்றொரு திருவடி
இதனை உண்மை விளக்கம் என்னும் நூலின் 36- ஆம் பாடல்,
தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம், ஊற்றமாம்
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முக்கி
நான்ற மலர்ப்பதத்தே நாடு
என்று கூறுகிறது.
(இப்பாடலுடன் அரன்துடி தோற்றம் 2799 திருமந்திப் பாடலை ஒப்பு நோக்குக)
3. நமசிவாய மந்திரம்
நடராசர் ஆடும் நடனத்தை நமசிவாயஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்துடன் தொடர்புபடுத்தியும் கூறுவார்கள்.
நெருப்பினை ஏந்தி ஒடுக்கும் தொழில் செய்யும் கை
முயலகனை அழுத்தி மறைத்தல் தொழில் செய்யும் கால்
உடுக்கையை ஏந்தி பகைக்கும் தொழில் செய்யும் கை சி
கீழ் நோக்கிய இடது கை வா
வலது அஞ்சலிக்கை
உயர்த்திய இடது கால் அருளல்
திருவாசி ஒங்கார வடிவமாகவும் அதிலுள்ள 36 சோதிகள் மர்த்ருகா மந்திரங்களாகவும் உள்ளன.
திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் ஆன திருக்கூத்து தரிசனத்தின் 37 ஆம் பாடலும் ஆடவல்லானின் ஆடலுக்கு 5 எழுத்து மந்திரத்தைத் தொடர்புப்படுத்திப் பேசுகின்றது.
ஆகாசம் ஆம் உடல் அங்கு ஆர் முயல்கள்
ஏகாசமாம் திசை எட்டுத் திருக்ககைகள்
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தானாக
மாகாய மன்றுள் நடம் செய்கின்றான் அன்றே
(திருமூலர் திருமந்திரம் தந்திரம் திருக்கூத்துத் தரிசனம் – 13)
ஆகாயம் உடல்
முயலகன் ஆணவம்
திசைகள் 8 – கைகள்
மூன்று கண்கள் ஞாயிறு, திங்கள், தீ.
அவன் நடம் செய்யுமிடம் அறிவும் பேரொளியாகிய பெருவெளி. இந்நடனம்,
நீடிய நீர் தீக்கால் நீள் வானிடையும் அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்இக்கூத்து நாளும் நடக்கின்றது என்கிறார் திருமூலர்.
வரலாற்றுக்காலத்தில் இருந்து நாளதுவரை ஆடவல்லானின் எழில்வடிவில் மயங்கியோர் வெளிநாட்டார் உட்படப் பலர் ஆவர்.
ஆனந்த தாண்டவம் ஆடும் எழில் காட்சியை அப்பர்,
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில்
பால்வெண்­றும்
இனித்தமுடைய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இம்மாநிலத்தே
என்று பாடுகிறார்.
4. சிவபெருமான் ஆடல் பற்றிய அறிஞர் கூற்று
பெஞ்சமின் ரோலண்டு (Benjamin Roland) The art and architecture of India. (p.187) என்னும் தமது நூலில்
”to the Dravidan Imagination sivas dance, the Nadanta is the Personification of all the forces and Powers of the cosmic system in oPeration, the movement of energy with in the Universe in him they have their dayspring and in him their death”
என்று குறிப்பிடுகிறார்.
”of the numberless metal images found in Tamil Nadu Country and Ceylon. the Natarajan Type in one of the great creation of Indian art….No artisit of today however great, could more axactly or more wisely create an image of the energy which science must postulate behind all phenomena. It is poetry; but merverthless science.”
என்பது டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் கூற்று.
சென்னை அரும்பொருள் காட்சித் சாலையில் உள்ள நடராசர் வடிவத்தின் கலை அழகில் ஈடுபட்ட count Kaiserling. ”Travel Diary of a philosopher Vol.1.” என்னும் நூலில் நடராசர் வடிவத்தைப் புகழ்ந்து பேசுகிறார்.
”The Dance of Siva” என்னும் ஆய்வுக்கட்டுரையை எழுதிய டாக்டர் ஆனந்தகுமாரசாமி என்பார்.
”The Essentil significance of Siva’s Dance is threefold; First, it is the image of his rhythemic activity as the source of all movement with in the cosmos, which is Represented by the Arch. Secondaly the purpose of his dance is to release the countless souls of men from the share of Illusion.Thirdly the place of the dance, Chidambaram, the centre of the Universe is within the Heart.”
என்று குறிப்பிடுகிறார்.
(சிவபெருமானின் ஆடலில் பொருள் மூன்று செயல்களைக் கொண்டது. முதலாவதாக, பேரண்டத்தின் இடைவிடாத செயல் நிகழ்த்துவதற்காக, அண்டத்தின் அடையாளமாக விளங்குவது திருவாசி. இரண்டாவதாக ஆடலின் காரணம் மாயையின் வலையிலிருக்கும் மனித ஆன்மாக்களை விடுவிப்பதற்காகும். மூன்றாவதாக, நடனம் நிகழும் இடம் பூமியில் நடுஇடமாகிய சிதம்பரம் நமது இதயத்தில் உள்ளது. டாக்டர் ஆனந்தகுமாரசாமி டி.எஸ்ஸ’.., The Dance of Siva, page. 29 Siva – Nataraja – the cosmic Dancer in Child – Ambaram by J.M. Samasundaram- 1970
முடிவுரை :
கலைஞர்கள் இறைவனுக்குக் கொடுத்த வடிவங்களில் சிறந்து விளங்குவது ஆடவல்லான் வடிவம். தமிழகம், சிங்களம் ஆகிய இடங்களில் இவ்வடிவங்கள் ஐம்பொன்னால் செய்யப்பட்டுள்ளன.
தென்திசை நோக்கி ஆடும் நிலையில் உள்ள இவ்வடிவம் நடராசர் என்னும் பெயராலும், சபாபதி கூத்தபிரான், அம்பலத்தாடி என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறது. முதலாம் இராசராசசோழன் காலத்தில் பொன் அளக்கும் நிறைக்கல்லுக்கு ஆவல்லான் என்னும் பெயர் இருந்து வந்தது.

நடராசன் வடிவம் சமயம், கலை, அறிவியல், தத்துவம் ஆகியவற்றின் சான்றாக விளங்குகின்றது.