செவ்வாய், 16 ஏப்ரல், 2013

sangakala magalir,meippaadu


ங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள். ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்குத் தொல்காப்பியர் பின்வரும் பண்புகள் இன்றியமையாதன என எடுத்தோதுகின்றார்.
உயிரினும் சிறந்தன்ற நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல், களவியல் - 23)
அச்சமும் நாணும் மடனுமுந் துறதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல், களவியல் - 8)
இதன் வழி ஆண்களுக்குப் பெருமையும் வீரமும் வேண்டப்படுவன போல பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். எனவே சங்ககால மகளிரின் செயற்பாடுகளையும் அவர்களுடைய பண்புகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
அழகு:-
பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் என்ற புலவர்
பூவொடு புரையுங் கண்ணும் பேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலும்” (குறுந். 226 1-3) என வருணித்துள்ளார்.
மென்மையான உடலமைப்பு:
மகளிர் மென்மையான உடமைப்பிற்குரியவர். புறவுலகின் பொய்மையும் சூதும் அறியாதவர். உலகின் இடையூறு நிலைகளையும் விலங்கு முதலியவற்றால் நேர்ந்திடும் இடுக்கண்களையும் உணராதவர். ஆனால் உள்ளத் திண்மையால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஒம்பும் ஆற்றல் உடையவர்கள் அவர்களேயாவர். இவ்வாறு மகளிர்பாற் காணத்தகும் மென்னீர்மையினைச் சாயல் என்ற சொல்லால் நந்தமிழர் வழங்கினார்.
நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனலித் தன்றே” (குறந். 95. 4-5)
என்ற குறுந்தொகைப் பாடலின் அடிகள் இக்கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்துகிறது.
இசை:
பெண்களுக்கு குரல் இயற்கையாகவே இனிமை நிரம்பியிருந்தது. எனவே, இசைத்தமிழ், மகளிர் வழிப் பெரிதும் வளர்ந்தது. தாலாட்டுப் பாடல் தாய்மார் வளர்த்த இயலிசைத் தமிழ் இலக்கியம் ஆகும். யானை முதலிய காட்டு விலங்குகளும் மற்றவர்களும் அவர்தம் இசைக்கு வயப்பட்டுத் தம் கொடூரத்தன்மை மறந்து நின்றமையைச் சங்க இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.
ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் கருவின் பாலை” (பொருநர் - 11-12) என்ற பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது.
விளையாட்டு:
மலைவாழ் மகளிர் தினைப் புனங்களில் கிளியோட்டி தினைப் புனத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.
களைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை” (குறுந். 141 1-2)
களைப்பூவினைப் பறித்து மாலைதொடுத்தாலும், தினைப் புனத்தில் கிளி ஓட்டுதலும் மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இளமகளிர் அக்காலத்தே கவலையில் தோயாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என்பதனை நற்றினைப் பாடல் கொண்டு அறியலாம்.
விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத்திற் சென்றிருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேயமெனப்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்” (நற் 68. 1-5)
இந்நற்றிணைப் பகுதி கொண்டு மகளிர் வீட்டின் வெளியே சென்று விளையாடமலிருப்பது அறமாகாது என்பதும் அதனால் செல்வமும் தேய்ந்துவிடும் என்பதும் தெரியவருகின்றன. விளையாடும் மகளிர் கூட்டத்தினைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சங்க காலப் புலவர்கள் ஒரையாமம்என்றும் பொய்தன் மகளிர்என்றும் குறிப்பிடுகின்றனர். பஞ்சாயக் கோணுப்பல் கொண்டு செய்யப்பட்ட பாவை கொண்டு மகளிர் அந்நாளில் விளையாடிய விளையாட்டு ஓரை எனப்பட்டது. வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கையாடுதல், குரவையாடுதல் முதலிய விளையாட்டுகள் மகளிர் விளையாட்டுகளாகக் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் (குறுந். 239. 1-3) என்ற குறுந்தொகைப் பாடற்பகுதியும்,
அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 2. 1-3)
என்ற பதிற்றுப்பத்து பாடற்பகுதியும், மகளிர் விளையாட்டினைக் குறிப்பிடுகின்றது. சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை,
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்” (புறம். 312 5.6)
என்ற புறநானூற்றுப் பாடற்பகுதி கொண்டு அறியலாம். சிறுமகளிர் வீட்டின் முற்றத்தில் கழங்காடுகின்றதை,
கூரை நல்மலைக் குறுந்தொடி மகளிர் மணலொடு கழங்கு
பருவ வயது வந்துற்ற பெண்கள் தங்களுக்கேற்ற காளைகள் மீது காதல் கொண்டனர். அக்கால ஆடவனுக்கு வீரமே வாழ்வாக விளங்கியது. பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் வயது நிறைந்த இளைஞன் ஒருவனைக் குறிப்பிடுகின்ற பொழுது,
ஒளிறுவாள் அருஞ்சாம முருக்கிக்களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312. 5-6) என்று கூறியுள்ளார்.
முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர். இதனை,
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” (கலி. 103. 63-64)
என்று முல்லைக்கலி குறிக்கின்றது. இந்நாளைப் போல் அல்லாமல், அக்காலத்தே மகளிரை மணந்துகொள்ள ஆடவரே மகளிர்தம் அணிகலன்களுக்கெனப் பெரும் பொருளினைப் பரிசமாகத் தந்தார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்து போற்றுகின்றோம். ஆனால் அதற்காகத் தகுதியில்லாதவன் ஒருவன் பெரும் பரிசுப் பொருளைக் கொணர்ந்து தந்தாலும் தங்கள் மகளைப் பழந்தமிழ்ப் பெருமக்கள் மணஞ்செய்து கொடுத்தார்களில்லை. இதற்குப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி சான்று கூறும்.
முழங்கு கடன் முழவின் யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
தந்தையும் கொடா அன்” (புறம்.334. 10-13)
இறை நம்பிக்கை:
சங்ககால மகளிர், இறை நம்பிக்கை உடையவர்கள், மணமாகாத மகளிர், முருகனை நோக்கி, யாம் எம் நெஞ்சமர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய்யாகாமல் நனவின் கண்ணும் எம் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என வேண்டினர். மணமான மகளிரோ, தமக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும் என் நோன்பிருந்தனர். மேலும், தம் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், போரில் வெற்றி கிட்டவும் வரம் அருள வேண்டும் என்றும் திருமுருகனை ஒருமனமாக இறைஞ்சி நிற்கின்றனர். திருப்பரங்குன்றத்திலே நடைபெறும் வழிபாடு இது.
அருவரைச் சேரத் தொழுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற்சே எப்பநின் னளிபுனல் வையை
வரு புனலணிலென வரங் கொள்வோரும்
கருவ யிறுறுகெனக் கடம் பட வோரும்
செய்பொருள் வாய்க்கெனச் செவி சார்த்துவோரும்
ஐய மடுகென வருச்சிப போரும்” (பரி. 8.102-108)
சங்க கால மகளிர் உயிரை விடவும், நாணத்தை விடவும் கற்புடைய மகளிராக விளங்கினர். மகளிர் பொழுதுபோக்காவும் மனம் மகிழ்ச்சியாகவும் விளையாடி மகிழ்ந்தனர். சங்க கால மகளிர் வீரமுடைய ஆண்மகனை மணந்தனர். சங்க காலத்தில் மகளிருக்கு இறை நம்பிக்கை மிகுந்திருந்தது.
ண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்பினைப் புலப்படுத்துவன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும், தமிழரின் அக, புற வாழ்வினை வகைப்படுத்தி விளக்கிக் கூறும் இனிய நூல்களாகும். ஒத்த அன்புடைய தலைவன், தலைவியின் அன்பினை எட்டே வரிக்குள் எடுத்துக் கூறுவது. தொல்காப்பியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். எண்வகை மெய்ப்பாடுகள் மற்றும் 32 பொருண்மைகள் குறுந்தொகையில் சில பாடல்களில் பயின்று வந்துள்ளதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியர் கூறும் எண் வகை மெய்ப்பாடுகளாவன:
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” (தொல். மெய்ப். 3)
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி உவகை என்பன எண் வகை மெய்ப்பாடுகளாகும். எண்வகை, மெய்ப்பாடுகளின் வகைகளான 32 பொருண்மை பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
நகை (மடன்) :
நகை இகழ்ச்சியிற் பிறப்பது, எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கும் நகைப் பொருளாகும். இதனை நூற்பாவின் வாயிலாக அறியலாம்.
எள்ளல் இளமை பேதைமை மடன்என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (தொல். மெய்ப். 4)
முறுவலோடு வரும் மகிழ்ச்சியில் நகை பிறக்கும். எள்ளல், இளமை பொதுப்படையாகத் தன்னிடத்தும் பிறரிடத்தும் நிகழும், நகையின் வகையான மடன் என்னும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம்.
மன்றஅரா அத்த பேஎம்முதிர் கடவுள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே” (குறுந். 87)
தலைவியின் மன வருத்தத்தினால் நுதலில் பசப்பு, தோள் நெகிழ்பு ஏற்பட்டன. அறியாமை உடைய மக்கள் தலைவியின் நோய்க்குத் தலைவனே காரணம் என்று கூறினர். மக்கள் அறியாமையுடைய மடன் நெஞ்சை உடையவர்கள் எனக் கூறும் நிலையில் மடன் என்ற மெய்ப்பாடு இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
அழுகை (அசை):
அழுகை, இளிவு, இழவு, அசை, வறுமை என்னும் நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும். இதனைத் தொல்காப்பியர்,
இளிவே இழவே அசையே வறுமையென
விளிவுஇல் கொள்ளை அழுகை நான்கே” (தொல். மெய். 5)
என்கிறார். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையும் தோன்றும். கீழ்வரும் அடிகளில் அசை என்ற மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
இவளே நின்சொற் கொண்ட என்சொல்தேறி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
மடல்தாழ் பெண்ணை எம்சிறு நல்ஊரே” (குறுந். 81)
தோழி தன் நிலையில் இருந்து தாழ்ந்து தலைவனைப் பற்றிப் பலவாறாக நல்ல சொற்களைக் கூறினமையினால், தலைவி நலமிழந்து, விரும்பி ஏற்றுக் கொண்டாள். இப்பாடல் கருத்தில் தோழி தன் நிலையில் தாழ்தல் என்ற மெய்ப்பாடு காணப்படுகிறது
இளிவரல் (வருத்தம்):
மூப்பு, பிணி, வருத்தம், மென்மை முதலிய நான்கும் இளிவரல் மெய்ப்பாட்டின் வழித் தோன்றும்.
முப்பே பிணியே வருத்தம், மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே” (தொல். மெய்ப். 6)
இழிப்பு தன் மாட்டும் பிறர் மாட்டும் உளதாகிய வருத்தத்தினால் பிறக்கும் தலைவன் பிரிவால் தலைவி வருத்தம் அடைவதைப் பாடல் வழி அறியலாம்.
அதுகொல் தோழி காம நோயே
. . . . . . . . . . . . . . . . . . .
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடுஒல் லாவே” (குறுந். 5)
தலைவன் பிரிவால் காமநோய் உற்று, தலைவியின் தாமரைமலர் போன்ற மெல்லிய கண்கள் இரவு, பகல் உறங்காமல் வருந்தின. இந்த வருத்தம் தன்மாட்டுப் பிறந்த வருத்தம் என்ற மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.
மருட்கை (பெருமை):
மருட்கை வியப்பால் தோன்றுவது. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நால்வகைப் பொருண்மையான் பிறக்கும்
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.” (தொல். மெய். 7)
பெருமை தான் கண்ட பெருமையின் வியப்பு, பிறர் கண்ட பெருமையின் வியப்பு என்ற இருவகையும் குறுந்தொகையில் பயின்று வருவதனைக் காணலாம்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அள வின்றே சாரல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3)
தலைவனுடன் தலைவி கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது என்றமையின் தான் கண்ட பெருமை பற்றிய வியப்பு, தலைவன் நட்புப் பெருகியது கொண்டதால் பிறர் கொண்ட பெருமை பற்றிய வியப்பு என இரண்டு வகையான பொருண்மையின் வாயிலாகப் பெருமை என்ற மெய்ப்பாடு வெளிப்படுவதை அறிய முடிகிறது.
அச்சம்:
பிறராலும், பிற பொருளாலும் தோன்றும். நான்கு வகைப் பொருண்மையான் அச்சம் பிறக்கும்.
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல், மெய்ப். 8)
பிறரால் அச்சம் பிறக்கும் என்ற வழிப் பின்வரும் பாடலில் அச்சம் மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல” (குறுந். 8)
தலைவன் பரத்தையாரிடத்துப் பெரிய மொழிகளைக் கூறிப் பின்னர் மனைவியிடத்துத் தம் கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகிற பாவையைப் போலத் தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் இயல்பினன் என்ற இக்கருத்தின் வாயிலாக அச்சம் என்ற மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
பெருமிதம் (இசைமை):
பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும்.
கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.” (தொல். மெய்ப். 9)
இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழியொடு வருவதை செய்யாமை என்ற இசைமை மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் அமைவதை அறியலாம்.
காலையும் பகலும் கையறு மாலையும்
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே” (குறுந். 32)
தலைவன் தலைவியை விட்டுச் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தாலும் தலைவியை ஊரார் பழிக்காத வண்ணம் தலைவன் மடல் ஏறாது வாழ்ந்தான். தலைவி பிரிவை ஏற்றுப் பழியொடு வருவதைச் செய்யாது வாழ்ந்தான். இப்பாடல் வாயிலாக இசைமை மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
வெகுளி:
வெகுளி வெறுப்பினால் பிறப்பது. உறுப்பறை, குடிக்கோள், அலை, கொலை என்ற நால்வகைப் பொருண்மையான் தோன்றும்.
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே” (தொல். மெய்ப். 10)
தலைவன் வரையாமை நீடித்தவழித் தலைவி சினந்து உரைக்கிறான்.
முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே” (குறுந். 28)
இது தலைவியின் துன்பத்தை அறியாது தலைவன் வரைவினை நீடித்தமையினால் தலைவி தலைவனைச் சினந்து உரைத்தது. குறுந்தொகைப் பாடலில் தலைவி சினந்து கூறும் களவு குறைவு.
உவகை (புலன்):
உவகை மகிழ்ச்சியில் பிறப்பது. செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நால்வகைப் பொருண்மையான் உவகை தோன்றும்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல். மெய்ப். 11)
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன்களால் நுகர்தல் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலடிகளில் அமைதல் காணலாம்.
ஒடுங்குஈர் ஓதி ஒள்நுதற் குறுமகள்
. . . . . . . . . . . . . . . . . . . . .
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே” (குறுந். 70)
தலைவன் தலைவியுடன் இன்புற்று, அவளது மென்மையை அறிந்து, இளமையைப் புணர்ந்து, நறுமணத்தை நுகர்ந்து, குளிர்ச்சியை உண்டு அவளது அழகினை உயிர்த்து, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனத் தலைவன் தலைவியை ஐம்புலன்களால் உய்த்து உணர்ந்து வெளிப்படுவதினால் புலன் என்ற மெய்ப்பாடு தோன்றுவதை அறியமுடிகின்றது.

ஓலைச்சுவடி


கிறித்துவச் சமய ஓலைச்சுவடிகள் - ஆ.சிவசுப்பிரமணியன்

இக்கட்டுரையின் தலைப்பு சிலருக்கு வியப்பை அளிக்கலாம். சிலருக்கு எரிச்சலூட்டலாம். அய்ரோப்பாவிலிருந்து இங்குப் பரவிய ஒரு சமயம். பதினாறாம் நூற்றாண்டிலேயே நூல் அச்சாக்கத்தைத் தமிழ் மொழியில் தொடங்கி வைத்த சமயம். எந்த அளவு ஓலைச் சுவடிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் என்பது வியற்பிற்கான காரணமாகலாம். ஓலைச்சுவடிகளைக் கூட சமய அடிப்படையில், கிறித்தவம், இஸ்லாம் எனப் பாகுபடுத்துவது தேவைதானா? என்பது எரிச்சலுக்கான காரணமாக அமையலாம்.

ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும், இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு அவை எவ்விதம் உதவும் என்று கண்டறிவதற்குத் துணைபுரியும் என்பதன் அடிப்படையிலும்தான் இவ்வாறு சமய அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி சமயம் சார்ந்த சிந்தனையின் அடிப்படையில் கட்டுரையின் தலைப்பு அமையவில்லை. இத்தலைப்பிற்குள் நுழையும் முன்னர் தமிழ்நாட்டில் கிறித்தவத்தின் பரவல் குறித்த சில அடிப்படைச் செய்திகளைச் சுருக்கமாக அறிந்துகொள்வது அவசியமாகிறது.


தமிழ்நாட்டில் கிறித்தவம்

16-ஆம் நூற்றாண்டில் 1533 அல்லது 1536 வாக்கில் கத்தோலிக்கக் கிறித்தவம் போர்ச்சுகீசியர்களின் துணையுடன் முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்ட தென்தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதியில் பரவியது. 17-ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் தமிழ்நாட்டின் கடற்கரை நகரங்களாகிய பழவேற்காடு, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் சீர்திருத்தக் கிறித்துவம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆயினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இதன் தாக்கம் இருக்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் சீர்திருத்தக் கிறித்துவம் தமிழ்நாடெங்கிலும் பரவலாக அறிமுகமாகத் தொடங்கியது. அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் பரவல் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இருந்தது.

1578 ஆம் ஆண்டில் 16 பக்கங்களைக் கொண்டதம்பிரான் வணக்கம்என்ற சிறு நூலும் 1579 ஆம் ஆண்டில்கிரிசிதித்தியானி வணக்கம்என்ற 119 பக்கங்களைக் கொண்ட நூலும் முறையே கொல்லத்திலும், கொச்சியிலும் அச்சிடப்பட்டன. 1586ஆம் ஆண்டில்அடியார் வரலாறுஎன்ற 600 பக்க அளவிலான நூல் புன்னைக்காயலில் அச்சிடப்பட்டது. தமிழ்நாட்டு எல்லைக்குள் அச்சாக்கப் பணி முதல் முறையாக புன்னைக் காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில்தான் தொடங்கியது. இத்தொடக்ககால முயற்சிகள் கத்தோலிக்கத் திருச் சபையால் தொடங்கப்பட்டன.

கத்தோலிக்கர்களையடுத்து வந்த சீர்திருத்தக் கிறித்தவ சபை தன் அச்சாக்க முயற்சியை 1715ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் தொடங்கியது. ‘அஞ்சுவேதப் பொத்தகம்என்ற பெயரில் விவிலியத்தின் சில பகுதிகள் அச்சிடப்பட்டன. சமய எல்லையைத் தாண்டி தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாட நூல்களும் இங்கு அச்சாயின.

அச்சாக்க முயற்சிக்கு முந்தைய நிலை

இவ்வாறு அச்சாக்கம் என்ற தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கிறித்தவம், அதற்கு முன்னர் தன் சமயப் பரப்பல் முயற்சியில் ஓலைச்சுவடிகளையே பயன்படுத்தி வந்தது. இவ்வாறு அது பயன்படுத்திய ஓலைச்சுவடிகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்:

1.     சிற்றிலக்கியங்கள்

2.     கதைப்பாடல்கள்

3.     நாடகம்

4.     விவிலிய மொழிபெயர்ப்பு

5.     மறையுரை

6.     மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) மற்றும் மிஷன்

       பணியாளர்களின் அலுவல் தொடர்பான குறிப்புகள்.

7.     மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) மற்றும் மிஷன்

       பணியாளர்களின் தனிப்பட்ட குறிப்புகள்.

8.     வழிபாட்டுப் பாடல்கள்.

இவை அய்ரோப்பிய மறைப் பணியாளர்களாலும் கிறித்தவத்தைத் தழுவிய தமிழ்க் கிறித்தவர்களாலும் அவ்வப்போது எழுதப்பட்டன. அச்சாக்கம் அறிமுகமான பின்னர் இவற்றுள் சில அச்சு வடிவம் பெறாது மறைந்து போயின. சில இன்றளவும் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் இடம் பெற்றுள்ளன. கிறித்தவ தேவாலயங்களிலும், தனிப் பட்டோரிடமும் சில சுவடிகள் இன்றுவரை பாதுகாப் பாயுள்ளன. சிலர் தம்வசம் இருந்த ஓலைச் சுவடிகளைக் காகிதப் பனுவல்களாக மாற்றியுள்ளனர். இப்பனுவல்களின் இறுதியில் ஓலைச் சுவடியிலிருந்து எடுத்தெழுதியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சுவடிகளைப் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு பகுக்கலாம்.

1.     சமய ஆய்வுக்கு மட்டும் துணைபுரிபவை.

2.     தமிழ்மொழியின் இலக்கியம் - இலக்கணம், உரைநடை,

       அரங்கம் நாட்டார் வழக்காறு ஆகியன குறித்து

       அறியவும், ஆராயவும் துணை நிற்பவை.

3.     தமிழ்நாட்டின் சமூகவியல், வரலாறு ஆகியனவற்றை

       எழுதத் துணை நிற்பவை.

இப்பயன்பாடுகளுக்குரிய சுவடிகள் குறித்து இனிக் காண்போம்.

சிற்றிலக்கியங்கள்

கிறித்தவச் சிற்றிலக்கியங்களைப் பொறுத்தளவில் மூவகையான உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவது யேசுவின் பிறப்பு, போதனைகள், மரணம், உயிர்த்தெழில் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு உருவானவை. இரண்டாவது கிறித்தவனான ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு உருப்பெற்றவை. கிறித்தவச் சமயம் சார்ந்த புனிதர்கள் வரலாற்றைக் கூறுவன.

இவற்றில் அவர்களின் கிறித்தவப்பற்று, அதன் அடிப்படையில் எதிர்கொண்ட இடையூறுகள், நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியன இடம்பெறும். இம்மூன்றாவது வகையிலான சிற்றிலக்கியங்கள் மிகப் பெரும்பாலும் கத்தோலிக்கம் சார்ந்தேயுள்ளன. கிறித்தவத்திற்காகத் தம் உயிரை நீத்தோர் வேதசாட்சிகள் (matyr) எனப்படுவர். இவர்களை மையமாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் உருவாகியுள்ளன. இவற்றையும் மூன்றாவது பிரிவில் அடக்கலாம்.

கதைப்பாடல்கள்

நிகழ்த்துக்கலைகளாக நிகழ்த்தப்படும் வில்லுப் பாட்டு, கணியான் ஆட்டம், உடுக்கைப் பாட்டு ஆகியனவற்றில் பயன்படுத்துவதற்காகக் கதைப்பாடல்கள் நாட்டார் கவிஞர்களால் உருவாக்கப்பட்டு வந்தன. இச்சூழலில் கிறித்தவம் பரவியபோது, கிறித்தவர்களும் இதுபோன்ற கதைப்பாடல்களை உருவாக்கியுள்ளனர். விவிலியச் செய்திகளையும், புனிதர், வேதசாட்சி ஆகி யோரை மையமாகக் கொண்டும் இக்கதைப் பாடல்கள் உருவாகியுள்ளன.

நாடகம்

தமிழ்நாடு தனக்கென ஓர் அரங்கக் கலையைக் கொண்டிருந்தது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுக் காதைக்கு எழுதிய உரைச் செய்திகள் அரங்கம் தொடர்பான, பல நுட்பமான செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் அரங்கக் கலையானது பார்சி நாடகக் குழுவின் தாக்கத்தால் முற்றிலும் அழிந்துபோன நிலையில் தெருக்கூத்து மரபு தமிழ் அரங்கக் கூறுகளை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்டுள்ளது. தெருக்கூத்து மரபு மட்டு மின்றி கத்தோலிக்க அரங்கமும் தமிழ் அரங்கக் கூறுகளைப் பாதுகாத்து வந்துள்ளது. கூத்து அடவுகள் கத்தோலிக்க அரங்கக்கலையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இவற்றில் பயிற்சி பெற்ற அண்ணாவிகள் மறைந்துபோனமையாலும் தொடக்கத்தில் தமிழ்க் கத்தோலிக்க அரங்கத்தை முதன் முதலாக உருவாக்கிய சேசு சபையினர் பின்னர் மட்டுமீறிய கட்டுப்பாடுகளை விதித்தும், சமயச் சடங்குகளுடன் ஒன்றியிருந்த அரங்கத்தைச் சடங்கிலிருந்து துண்டித்தும் கத்தோலிக்க அரங்கின் மறைவிற்குக் காரணமாயினர். ஆயினும் நாடகப் பனுவல்கள் ஓலைச் சுவடி வடிவில் இன்றும் கிட்டுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய அரங்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய இவை துணைபுரியும் தன்மையன.

மறையுரை

கிறித்தவத் தேவாலய வழிபாட்டில் ஒரு முக்கிய கூறாக அமைவது குருக்களும், போதகர்களும் நிகழ்த்தும் மறையுரையாகும். கிறித்தவம் தமிழ்நாட்டில் பரவிய தொடக்ககாலத்தில் அய்ரோப்பிய குருக்களே மறைப் பணியாற்றி வந்தனர். சரளமாகத் தமிழில் மறையுரையாற்ற முடியாத நிலையில் அதை உரைநடை வடிவில் ஓலையில் எழுதிப் படித்துள்ளனர். சின்னச் சவேரியார் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு சேசு சபைத்துறவி, ஞாயிறு தொடங்கி சனி முடிய ஏழு நாட்களுக்கும்ஞாயிற்றுக்கிழமைப் புதுமை’, ‘திங்கள் கிழமைப் புதுமை’ (புதுமை: அற்புதம்) என்ற தலைப்பிட்டு தனித்தனி ஓலைச்சுவடிகளை எழுதிவைத்துள்ளார். கத்தோலிக்கர்களின் அன்றாட சமய வாழ்வில் இச்சுவடிகள் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பின்னர் இச்சுவடிகள் அச்சு வடிவம் பெற்றன.

மறைத்தள ஆவணங்கள்

ஒரு நிறுவனச் சமயம் என்ற முறையில் கிறித்தவச் சமயம், தனக்கெனத் தனியான நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்தது. இந்நிறுவனப் பணியாளர்களும் மறைப் பணியாளர்களும் அன்றாட நிர்வாகம் தொடர்பான அலுவலகப் பதிவுகளையும், கடிதங்களையும் எழுத, தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் செய்யுள் வடிவிலின்றி உரைநடையில் எழுதப்பட்டன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இத்தகைய ஆவணங்கள் அவை உருவான காலத்திய சமூக வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளன. புதிய கிறித்தவர்களுக்கும் மதத் தலைமைக்கும் இடையிலான உறவுநிலை, வழக்குகள் - தீர்ப்புகள் மறைப்பணியாளர்களின் பணிமுறை, பணியில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், உடன்படிக்கைகள், ஒரு குறிப்பிட்ட தேவாலயம் உருவான வரலாறு ஆகியனவற்றை மறைத்தள ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில், சமயம் சார்ந்து நிற்கும் இத்தகைய ஆவணங்கள் எவ்வகையில் தமிழ்ச் சமூக வரலாற்றிற்கு உதவும் என்ற வினா எழுவது இயற்கையே. சமயம் என்பது சமூக நிறுவனங்களுள் ஒன்று என்பதன் அடிப்படையில் சமய ஆவணங்களுக்குள் சமூகச் செய்திகள் புதைந்துள்ளன. இதற்குச் சான்றாக சில செய்திகளைக் குறிப்பிடலாம்.

கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் தம் பிறவி அடையாளங்களில் ஒன்றான மதத்தைத் துறந்தார்களே தவிர, சாதியைத் துறக்கவில்லை. இதனால் சாதியை மையமாகக் கொண்ட சிக்கல்கள் கிறித்தவத்தில் உருவாயின. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நிகழ்ந்தன. வழக்குகளில் தம் தரப்புச் சான்றுகளாக சில போழ்து ஓலைச்சுவடிகளையும் தாக்கல் செய்துள்ளனர். இச்சுவடிகள் சாதிய மேலாண்மை தொடர்பான செய்தி களைப் பதிவு செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதிகளுக்கிடையே நிலவிய உறவு நிலையை இவை வாயிலாக அறிய முடிகிறது.

தேவாலயத்தின் செலவுகளுக்காக வாங்கப்பட்ட வரி விவரங்கள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளும் இருந்துள்ளன. பணமாக மட்டுமின்றித் தானியமாகவும், காய்கனிகளாகவும் கூட வரி செலுத்தியுள்ளனர். இச்செய்திகளைக் கூறும் கோவில் கணக்கு ஓலைகள், அவை செலுத்தப்பட்ட காலத்தை, பொருளாதார நிலையை அறியத் துணை புரியும். சீர்திருத்தக் கிறித்தவத்தில் போதகர்களுக்கு உதவஉபதேசியார்’ (catechist) என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்தது. குருக்களின் பணிப்பகுதி பரந்துபட்ட தாயிருந்ததுடன், போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லாமலும் இருந்தன. இத்தகைய சூழலில் குருக்கள் இல்லாத நேரங்களில் உபதேசியார்களின் பணியைக் குருக்களும் மக்களும் நம்பியிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்த குரு வரும்போது அவருக்கு வழிபாட்டில் உதவி செய்தல், மற்ற நாட்களில் தேவாலயங்களைத் திறந்து செபம் படித்தல், செபம் கற்றுக் கொடுத்தல், குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கல், திருமணம், இறப்பு போன்ற வாழ்க்கை வட்டச் சடங்குகள் கிறித்தவ நெறியில் நிகழ உதவுதல், கிறித்தவர் களின் வீடுகளுக்குச் சென்று வரல், குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள் மரணப் படுக்கையில் இருப்பவர்கள், ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், சொற்பொழி வாற்றல், துண்டுப் பிரசுரங்களை விற்பனை செய்தல் என்பன உபதேசியார்களின் முக்கிய பணிகளாக இருந்தன.

இவை தவிர தங்களின் முந்தைய சமயப் பழக்க வழக்கங்களைப் புதிய கிறித்தவர்கள் பின்பற்றாதவாறு கண்காணித்தல், புதிதாகச் சிலரை மதம் மாற்றல், நன்கொடை வாங்குதல், தேவாலங்களுக்குத் தரவேண்டிய வரிகளைக் கிறித்தவர்களிடமிருந்து வாங்குதல், வழக்கு களைத் தீர்த்து வைத்தல், தேவாலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பனவும் இவர்களது பணியாகும். உபதேசியார்களை மேற்பார்வையிடவிசாரணை உபதேசியார்என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். உபதேசியார்கள் தமது அன்றாடப் பணிகளை எழுதி வைத்து அவற்றை விசாரணை உபதேசியாரிடம் தர வேண்டும்.

பொதுமக்களிடம் தொடர்புகொண்டிருந்த உபதேசியார்கள் தம் அன்றாடப் பணிகளை ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர். உபதேசியார் குறிப்பு என்றழைக்கப்படும் இக்குறிப்புகள் அவை எழுதப்பட்ட காலத்தின் சமூக நிலையை விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஓலைச்சுவடிகளிலும், காகிதங்களிலும், உபதேசியார் சவரிராயபிள்ளை (1801-1874) என்பவர் எழுதி வந்த நாட்குறிப்புகளைத் தொகுத்து அவரது மகன் யோவான் தேவசகாயம் சவரிராயன் (1843 - 1904) என்பவர்சவரிராய பிள்ளையவர்கள் சர்னலும் காகிதங்களும்என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டு கால திருநெல்வேலி மாவட்டத்தில் 1836 தொடங்கி 1874 வரையிலான சமூக நிலையை அறிய உதவும் இத்தொகுதிகள் குடும்ப உறுப்பினர்கள் தேவைக்காக 25 படிகளே அச்சிடப்பட்டுள்ளன.

இந்நூல் பல அரிய செய்திகளின் களஞ்சியமாக அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி யிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட உபதேசியார் நாட்குறிப்புகள் காகித வடிவிலும், ஓலைச் சுவடி வடிவிலும் ஜெர்மனியில் உள்ள ஹாலே என்ற இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன. இச்சுவடிகள் வாயிலாக சில வரலாற்றுச் செய்திகள் கிட்டும் வாய்ப்புள்ளது.

பயன்பாடு

கிறித்தவ ஓலைச்சுவடிகளில் ஒரு பகுதி உரை நடையில் அமைந்திருத்தல், அதன் தனிச்சிறப்பாக அமைகிறது. நமக்குக் கிடைக்கும் சோதிடம், மருத்துவம் தொடர்பான ஓலைச்சுவடிகள் கூட செய்யுள் வடிவில் அமைந்தவைதான். இலக்கியம், கதைப்பாடல் தொடர் பான சுவடிகள் செய்யுள் நடையில்தான் அமைந்திருக்கும் என்பதைக் கூற வேண்டிய அவசியமில்லை. தத்துவம், இலக்கிய இலக்கண உரைகள் ஆகியன மட்டுமே உரைநடையில் அமைந்திருந்தன. எனவே உரைநடை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வழங்கிவந்தது. கருத்துக்கள், அறவுரை ஆகியனவற்றைக் கூற, ஒருவரை விளித்துக் கூறும் வகையிலான அகவல் பா வடிவைப் பயன்படுத்தியுள்ளனர்.

அகவுதல் என்ற சொல்லுக்கு அழைத்தல் என்ற பொருளும் உண்டு. ‘அகவிக் கூறுதலின் அகவல் என்றாயிற்றுஎன்பர். மனனம் செய்யவும், கூறும் செய்தியைக் கேட்போர் எளிதில் புரிந்துகொள்ளவும் அகவல்பா வடிவம் துணைபுரியும் தன்மையது. இக் காரணம் பற்றியேகபிலரகவல்’, ‘விநாயகர் அகவல்என்பன மக்களிடையே எளிதில் சென்றடைந்தன. உரைநடை வளர்ச்சியடையாக் குறையை அகவல் வடிவிலான நூல்கள் தீர்த்து வைத்தன. யாப்பு விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட செய்யுள் வடிவிலான நூல்களைக் கற்றவர்கள் படித்து வந்தனர். உரைநடை என்ற வடிவம் தமிழில் வளர்ச்சியுறாமைக்கு இதுவே காரணமாகும்.

நவீனத்துவம் வளர்ச்சியுற்ற அய்ரோப்பிய சமூகத்தி லிருந்து வந்த கிறித்தவம், வரலாறு, பூகோளம், அறிவியல் போன்ற அறிவுத்துறைகளை, தான் நிறுவிய கல்விக் கூடங்கள் வாயிலாகக் கற்பிக்கத் தொடங்கிய போதும், புற உலகின் செயல்பாடுகளைப் பதிவு செய்யவேண்டிய போதும் உரைநடை அவர்களுக்குத் தேவைப்பட்டது. இத்தேவையை நடைமுறைப்படுத்த தொடக்கத்தில் ஓலைச் சுவடிகளை அவர்கள் பயன்படுத்தினர். இதுவரை நுழையாத புதிய தடங்களில் தமிழ் உரைநடை நுழைய இச்செயல் துணைபுரிந்துள்ளது. இதனால் உரைநடையின் பயன்பாடு மாற்றியமைக்கப் பட்டுள்ளது. சமூக நிகழ்வுகளையும், முரண்பாடுகளையும் ஆவணப்படுத்தத் தூண்டியுள்ளது. இதன் காரணமாக 18, 19 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தமிழ் உரைநடை வளர்ச்சியை ஆராயவும், சமூக நிகழ்வுகளைக் கண்டறியவும் கிறித்தவ ஓலைச்சுவடிகள் துணைபுரிகின்றன. இதுவே கிறித்தவ ஓலைச்சுவடிகளின் சிறப்பாக அமைகிறது.

செய்ய வேண்டுவன

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கிறித்தவ ஓலைச் சுவடிகள், தனி மனிதர்களிடமும், புராதனத் தேவாலயங் களிலும் கிறித்தவத் திருச்சபைகளின் ஆவணக் காப்பகங் களிலும் உள்ளன. செர்மனி, டென்மார்க், வாடிகன், பாரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் உரைநடை வடிவிலான கிறித்தவம் தொடர்பான ஓலைச்சுவடிகளும் அடக்கம். அச்சுவடிகளில் பல அச்சு வடிவம் பெறத் தகுதி யானவை. தமிழ் வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இவை வாசிக்கக் கிட்டாதது குறைபாடாகும். இன்று ஓலைச்சுவடிகளைக் குறுந்தகடுகளில் பதிவு செய்ய முடியும். எனவே அயல்நாடுகளில் உள்ள ஓலைச் சுவடிகளைக் குறுந்தகடுகளில் பதிவு செய்து தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் படிக்கவும், பதிப்பிக்கவும் உதவ வேண்டியது அவசியம். அதிகப் பொருட் செலவில்லாத இப்பணியை அவர்கள் மேற்கொள்வது கடினமான ஒன்றல்ல.

(உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை) நடத்திய சுவடிப் பயிலரங்கில் ஆற்றிய உரையின் சுருக்கம்)

நன்றி - உங்கள் நூலகம்  ஜூன் 2010
நன்றி - கீற்று