செவ்வாய், 16 ஏப்ரல், 2013

sangakala magalir,meippaadu


ங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள். ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்குத் தொல்காப்பியர் பின்வரும் பண்புகள் இன்றியமையாதன என எடுத்தோதுகின்றார்.
உயிரினும் சிறந்தன்ற நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல், களவியல் - 23)
அச்சமும் நாணும் மடனுமுந் துறதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல், களவியல் - 8)
இதன் வழி ஆண்களுக்குப் பெருமையும் வீரமும் வேண்டப்படுவன போல பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். எனவே சங்ககால மகளிரின் செயற்பாடுகளையும் அவர்களுடைய பண்புகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
அழகு:-
பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் என்ற புலவர்
பூவொடு புரையுங் கண்ணும் பேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலும்” (குறுந். 226 1-3) என வருணித்துள்ளார்.
மென்மையான உடலமைப்பு:
மகளிர் மென்மையான உடமைப்பிற்குரியவர். புறவுலகின் பொய்மையும் சூதும் அறியாதவர். உலகின் இடையூறு நிலைகளையும் விலங்கு முதலியவற்றால் நேர்ந்திடும் இடுக்கண்களையும் உணராதவர். ஆனால் உள்ளத் திண்மையால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஒம்பும் ஆற்றல் உடையவர்கள் அவர்களேயாவர். இவ்வாறு மகளிர்பாற் காணத்தகும் மென்னீர்மையினைச் சாயல் என்ற சொல்லால் நந்தமிழர் வழங்கினார்.
நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனலித் தன்றே” (குறந். 95. 4-5)
என்ற குறுந்தொகைப் பாடலின் அடிகள் இக்கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்துகிறது.
இசை:
பெண்களுக்கு குரல் இயற்கையாகவே இனிமை நிரம்பியிருந்தது. எனவே, இசைத்தமிழ், மகளிர் வழிப் பெரிதும் வளர்ந்தது. தாலாட்டுப் பாடல் தாய்மார் வளர்த்த இயலிசைத் தமிழ் இலக்கியம் ஆகும். யானை முதலிய காட்டு விலங்குகளும் மற்றவர்களும் அவர்தம் இசைக்கு வயப்பட்டுத் தம் கொடூரத்தன்மை மறந்து நின்றமையைச் சங்க இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.
ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் கருவின் பாலை” (பொருநர் - 11-12) என்ற பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது.
விளையாட்டு:
மலைவாழ் மகளிர் தினைப் புனங்களில் கிளியோட்டி தினைப் புனத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.
களைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை” (குறுந். 141 1-2)
களைப்பூவினைப் பறித்து மாலைதொடுத்தாலும், தினைப் புனத்தில் கிளி ஓட்டுதலும் மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இளமகளிர் அக்காலத்தே கவலையில் தோயாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என்பதனை நற்றினைப் பாடல் கொண்டு அறியலாம்.
விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத்திற் சென்றிருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேயமெனப்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்” (நற் 68. 1-5)
இந்நற்றிணைப் பகுதி கொண்டு மகளிர் வீட்டின் வெளியே சென்று விளையாடமலிருப்பது அறமாகாது என்பதும் அதனால் செல்வமும் தேய்ந்துவிடும் என்பதும் தெரியவருகின்றன. விளையாடும் மகளிர் கூட்டத்தினைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சங்க காலப் புலவர்கள் ஒரையாமம்என்றும் பொய்தன் மகளிர்என்றும் குறிப்பிடுகின்றனர். பஞ்சாயக் கோணுப்பல் கொண்டு செய்யப்பட்ட பாவை கொண்டு மகளிர் அந்நாளில் விளையாடிய விளையாட்டு ஓரை எனப்பட்டது. வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கையாடுதல், குரவையாடுதல் முதலிய விளையாட்டுகள் மகளிர் விளையாட்டுகளாகக் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் (குறுந். 239. 1-3) என்ற குறுந்தொகைப் பாடற்பகுதியும்,
அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 2. 1-3)
என்ற பதிற்றுப்பத்து பாடற்பகுதியும், மகளிர் விளையாட்டினைக் குறிப்பிடுகின்றது. சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை,
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்” (புறம். 312 5.6)
என்ற புறநானூற்றுப் பாடற்பகுதி கொண்டு அறியலாம். சிறுமகளிர் வீட்டின் முற்றத்தில் கழங்காடுகின்றதை,
கூரை நல்மலைக் குறுந்தொடி மகளிர் மணலொடு கழங்கு
பருவ வயது வந்துற்ற பெண்கள் தங்களுக்கேற்ற காளைகள் மீது காதல் கொண்டனர். அக்கால ஆடவனுக்கு வீரமே வாழ்வாக விளங்கியது. பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் வயது நிறைந்த இளைஞன் ஒருவனைக் குறிப்பிடுகின்ற பொழுது,
ஒளிறுவாள் அருஞ்சாம முருக்கிக்களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312. 5-6) என்று கூறியுள்ளார்.
முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர். இதனை,
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” (கலி. 103. 63-64)
என்று முல்லைக்கலி குறிக்கின்றது. இந்நாளைப் போல் அல்லாமல், அக்காலத்தே மகளிரை மணந்துகொள்ள ஆடவரே மகளிர்தம் அணிகலன்களுக்கெனப் பெரும் பொருளினைப் பரிசமாகத் தந்தார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்து போற்றுகின்றோம். ஆனால் அதற்காகத் தகுதியில்லாதவன் ஒருவன் பெரும் பரிசுப் பொருளைக் கொணர்ந்து தந்தாலும் தங்கள் மகளைப் பழந்தமிழ்ப் பெருமக்கள் மணஞ்செய்து கொடுத்தார்களில்லை. இதற்குப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி சான்று கூறும்.
முழங்கு கடன் முழவின் யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
தந்தையும் கொடா அன்” (புறம்.334. 10-13)
இறை நம்பிக்கை:
சங்ககால மகளிர், இறை நம்பிக்கை உடையவர்கள், மணமாகாத மகளிர், முருகனை நோக்கி, யாம் எம் நெஞ்சமர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய்யாகாமல் நனவின் கண்ணும் எம் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என வேண்டினர். மணமான மகளிரோ, தமக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும் என் நோன்பிருந்தனர். மேலும், தம் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், போரில் வெற்றி கிட்டவும் வரம் அருள வேண்டும் என்றும் திருமுருகனை ஒருமனமாக இறைஞ்சி நிற்கின்றனர். திருப்பரங்குன்றத்திலே நடைபெறும் வழிபாடு இது.
அருவரைச் சேரத் தொழுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற்சே எப்பநின் னளிபுனல் வையை
வரு புனலணிலென வரங் கொள்வோரும்
கருவ யிறுறுகெனக் கடம் பட வோரும்
செய்பொருள் வாய்க்கெனச் செவி சார்த்துவோரும்
ஐய மடுகென வருச்சிப போரும்” (பரி. 8.102-108)
சங்க கால மகளிர் உயிரை விடவும், நாணத்தை விடவும் கற்புடைய மகளிராக விளங்கினர். மகளிர் பொழுதுபோக்காவும் மனம் மகிழ்ச்சியாகவும் விளையாடி மகிழ்ந்தனர். சங்க கால மகளிர் வீரமுடைய ஆண்மகனை மணந்தனர். சங்க காலத்தில் மகளிருக்கு இறை நம்பிக்கை மிகுந்திருந்தது.
ண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்பினைப் புலப்படுத்துவன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும், தமிழரின் அக, புற வாழ்வினை வகைப்படுத்தி விளக்கிக் கூறும் இனிய நூல்களாகும். ஒத்த அன்புடைய தலைவன், தலைவியின் அன்பினை எட்டே வரிக்குள் எடுத்துக் கூறுவது. தொல்காப்பியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். எண்வகை மெய்ப்பாடுகள் மற்றும் 32 பொருண்மைகள் குறுந்தொகையில் சில பாடல்களில் பயின்று வந்துள்ளதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியர் கூறும் எண் வகை மெய்ப்பாடுகளாவன:
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” (தொல். மெய்ப். 3)
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி உவகை என்பன எண் வகை மெய்ப்பாடுகளாகும். எண்வகை, மெய்ப்பாடுகளின் வகைகளான 32 பொருண்மை பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
நகை (மடன்) :
நகை இகழ்ச்சியிற் பிறப்பது, எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கும் நகைப் பொருளாகும். இதனை நூற்பாவின் வாயிலாக அறியலாம்.
எள்ளல் இளமை பேதைமை மடன்என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (தொல். மெய்ப். 4)
முறுவலோடு வரும் மகிழ்ச்சியில் நகை பிறக்கும். எள்ளல், இளமை பொதுப்படையாகத் தன்னிடத்தும் பிறரிடத்தும் நிகழும், நகையின் வகையான மடன் என்னும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம்.
மன்றஅரா அத்த பேஎம்முதிர் கடவுள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே” (குறுந். 87)
தலைவியின் மன வருத்தத்தினால் நுதலில் பசப்பு, தோள் நெகிழ்பு ஏற்பட்டன. அறியாமை உடைய மக்கள் தலைவியின் நோய்க்குத் தலைவனே காரணம் என்று கூறினர். மக்கள் அறியாமையுடைய மடன் நெஞ்சை உடையவர்கள் எனக் கூறும் நிலையில் மடன் என்ற மெய்ப்பாடு இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
அழுகை (அசை):
அழுகை, இளிவு, இழவு, அசை, வறுமை என்னும் நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும். இதனைத் தொல்காப்பியர்,
இளிவே இழவே அசையே வறுமையென
விளிவுஇல் கொள்ளை அழுகை நான்கே” (தொல். மெய். 5)
என்கிறார். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையும் தோன்றும். கீழ்வரும் அடிகளில் அசை என்ற மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
இவளே நின்சொற் கொண்ட என்சொல்தேறி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
மடல்தாழ் பெண்ணை எம்சிறு நல்ஊரே” (குறுந். 81)
தோழி தன் நிலையில் இருந்து தாழ்ந்து தலைவனைப் பற்றிப் பலவாறாக நல்ல சொற்களைக் கூறினமையினால், தலைவி நலமிழந்து, விரும்பி ஏற்றுக் கொண்டாள். இப்பாடல் கருத்தில் தோழி தன் நிலையில் தாழ்தல் என்ற மெய்ப்பாடு காணப்படுகிறது
இளிவரல் (வருத்தம்):
மூப்பு, பிணி, வருத்தம், மென்மை முதலிய நான்கும் இளிவரல் மெய்ப்பாட்டின் வழித் தோன்றும்.
முப்பே பிணியே வருத்தம், மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே” (தொல். மெய்ப். 6)
இழிப்பு தன் மாட்டும் பிறர் மாட்டும் உளதாகிய வருத்தத்தினால் பிறக்கும் தலைவன் பிரிவால் தலைவி வருத்தம் அடைவதைப் பாடல் வழி அறியலாம்.
அதுகொல் தோழி காம நோயே
. . . . . . . . . . . . . . . . . . .
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடுஒல் லாவே” (குறுந். 5)
தலைவன் பிரிவால் காமநோய் உற்று, தலைவியின் தாமரைமலர் போன்ற மெல்லிய கண்கள் இரவு, பகல் உறங்காமல் வருந்தின. இந்த வருத்தம் தன்மாட்டுப் பிறந்த வருத்தம் என்ற மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.
மருட்கை (பெருமை):
மருட்கை வியப்பால் தோன்றுவது. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நால்வகைப் பொருண்மையான் பிறக்கும்
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.” (தொல். மெய். 7)
பெருமை தான் கண்ட பெருமையின் வியப்பு, பிறர் கண்ட பெருமையின் வியப்பு என்ற இருவகையும் குறுந்தொகையில் பயின்று வருவதனைக் காணலாம்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அள வின்றே சாரல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3)
தலைவனுடன் தலைவி கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது என்றமையின் தான் கண்ட பெருமை பற்றிய வியப்பு, தலைவன் நட்புப் பெருகியது கொண்டதால் பிறர் கொண்ட பெருமை பற்றிய வியப்பு என இரண்டு வகையான பொருண்மையின் வாயிலாகப் பெருமை என்ற மெய்ப்பாடு வெளிப்படுவதை அறிய முடிகிறது.
அச்சம்:
பிறராலும், பிற பொருளாலும் தோன்றும். நான்கு வகைப் பொருண்மையான் அச்சம் பிறக்கும்.
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல், மெய்ப். 8)
பிறரால் அச்சம் பிறக்கும் என்ற வழிப் பின்வரும் பாடலில் அச்சம் மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல” (குறுந். 8)
தலைவன் பரத்தையாரிடத்துப் பெரிய மொழிகளைக் கூறிப் பின்னர் மனைவியிடத்துத் தம் கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகிற பாவையைப் போலத் தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் இயல்பினன் என்ற இக்கருத்தின் வாயிலாக அச்சம் என்ற மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
பெருமிதம் (இசைமை):
பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும்.
கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.” (தொல். மெய்ப். 9)
இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழியொடு வருவதை செய்யாமை என்ற இசைமை மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் அமைவதை அறியலாம்.
காலையும் பகலும் கையறு மாலையும்
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே” (குறுந். 32)
தலைவன் தலைவியை விட்டுச் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தாலும் தலைவியை ஊரார் பழிக்காத வண்ணம் தலைவன் மடல் ஏறாது வாழ்ந்தான். தலைவி பிரிவை ஏற்றுப் பழியொடு வருவதைச் செய்யாது வாழ்ந்தான். இப்பாடல் வாயிலாக இசைமை மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
வெகுளி:
வெகுளி வெறுப்பினால் பிறப்பது. உறுப்பறை, குடிக்கோள், அலை, கொலை என்ற நால்வகைப் பொருண்மையான் தோன்றும்.
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே” (தொல். மெய்ப். 10)
தலைவன் வரையாமை நீடித்தவழித் தலைவி சினந்து உரைக்கிறான்.
முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே” (குறுந். 28)
இது தலைவியின் துன்பத்தை அறியாது தலைவன் வரைவினை நீடித்தமையினால் தலைவி தலைவனைச் சினந்து உரைத்தது. குறுந்தொகைப் பாடலில் தலைவி சினந்து கூறும் களவு குறைவு.
உவகை (புலன்):
உவகை மகிழ்ச்சியில் பிறப்பது. செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நால்வகைப் பொருண்மையான் உவகை தோன்றும்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல். மெய்ப். 11)
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன்களால் நுகர்தல் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலடிகளில் அமைதல் காணலாம்.
ஒடுங்குஈர் ஓதி ஒள்நுதற் குறுமகள்
. . . . . . . . . . . . . . . . . . . . .
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே” (குறுந். 70)
தலைவன் தலைவியுடன் இன்புற்று, அவளது மென்மையை அறிந்து, இளமையைப் புணர்ந்து, நறுமணத்தை நுகர்ந்து, குளிர்ச்சியை உண்டு அவளது அழகினை உயிர்த்து, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனத் தலைவன் தலைவியை ஐம்புலன்களால் உய்த்து உணர்ந்து வெளிப்படுவதினால் புலன் என்ற மெய்ப்பாடு தோன்றுவதை அறியமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக