வெள்ளி, 25 நவம்பர், 2011

(மகாபாரதப் போர் - தமிழர்கள்)



ஐந்திணைகளும் ஐம்பூதங்களும்:

தொல்தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்கள் இருந்ததாக முன்னர் கண்டோம். இயற்கையின் ஒப்பற்ற அமைப்புக்களாக விளங்கிய இந்த ஐந்துவகை திணைகளும் தொல்தமிழகத்திற்குக் கிடைத்த அரிய வரங்கள் என்றே கூறலாம். வடக்கே பனிமலையும், கிழக்கே கடலும், மேற்கே பாலைவனமும் இயற்கை அன்னை கொடுத்த பாதுகாப்பு அரண்களாக இருந்து தொல்தமிழகத்தைக் காத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையாகாது.

அதுமட்டுமின்றி, இந்த ஐவகைத் திணைகளில் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கியது. அதாவது இந்த ஐவகைத் திணைகளும் இயற்கையின் ஐம்பேராற்றல்களான ஐந்து பூதங்களுடன் தொடர்புடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணையும் ஒரு பூதத்துடன் தொடர்புடையதாய் அதன் அளப்பரிய ஆற்றலை தன்னில் கொண்டதாய் விளங்கியது. இனி இந்த ஐந்து திணைகளுக்கும் ஐந்து பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று காணலாம்.

முல்லைத் திணையில் இயற்கையின் முதல் பூதமான ஆகாயம் சிறப்புற விளங்கியது எனலாம். கார்காலத்தை தனது பெரும்பொழுதாகவும் மேகத்தையே (மாயோன்) தனது தெய்வமாகவும் கொண்டது முல்லைத் திணை ஆகும். இம் மேகங்கள் உலாவரும் இடம் ஆகாயம் என்பதால் ஆகாயமே முல்லைத் திணைக்குரிய பூதமாகியது.

குறிஞ்சித் திணையில் இயற்கையின் இரண்டாவது பூதமான நிலம் சிறப்புற விளங்கியது எனலாம். செந்நிலம் ஆகிய சேயோனை தனது தெய்வமாக உடையது குறிஞ்சித் திணை ஆகும். எனவே நிலம் குறிஞ்சித் திணைக்குரிய பூதமாகியது.

மருதத்திணையில் இயற்கையின் மூன்றாவது பூதமான காற்று சிறப்புற விளங்கியது எனலாம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென விளங்கும் வயல்கள் நிறைந்தது மருத நிலம். காற்று வீசுவதற்குத் தங்குதடையில்லாத இந்த வயல்வெளியில் கொண்டல், கோடை, தென்றல், வாடை என்ற நால்வகைக் காற்றும் வலம் வந்தன. தொல்தமிழகத்தின் மத்தியில் இருந்த மருத நிலத்திற்குக் கிழக்கே இருந்து கொண்டல் காற்று வீசியது. மேற்கில் இருந்து கோடைக்காற்று வீசியது. வடக்கில் இருந்து வாடைக்காற்று வீசியது. தெற்கில் இருந்து தென்றல் காற்று வீசியது. இப்படி நான்கு புறங்களிலும் இருந்து வீசிய நால்வகைக் காற்றினையும் மருதநில மக்கள் அனுபவித்தனர். இப்படித் தான் மருதநிலத்துக்குரிய பூதமாக காற்று விளங்கியது. காற்று சிறப்புற விளங்கும் இந்த 'மருத' நிலத்திற்கும் காற்றைக் குறிக்கும் 'மாருத' த்திற்கும் மயிரிழை அளவே வேறுபாடு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மருதம் <----> மாருதம் (காற்று)

நெய்தல் திணையில் இயற்கையின் நான்காவது பூதமான நீர் சிறப்புற விளங்கியது எனலாம். நெய்தல் நில மக்களுக்கு கடலே தெய்வம் என்பதால் நீர் நெய்தல் திணைக்குரிய பூதமாயிற்று.

பாலைத்திணையில் இயற்கையின் ஐந்தாவது பூதமான தீ சிறப்புற விளங்கியது எனலாம். வேனிலை பெரும்பொழுதாகவும் பகலை சிறுபொழுதாகவும் உடைய பாலைநிலத்தில் தீயையொத்த கதிரவனின் வெம்மை கோலோச்சி இருக்கும். எனவே தான் தீ பாலைத்திணைக்குரிய பூதமாயிற்று.

மேலே கண்ட ஐம்பூத - ஐந்திணை உறவானது கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
பூதம்----------------------------திணை

ஆகாயம்---------------------முல்லை
நிலம்---------------------------குறிஞ்சி
காற்று-------------------------மருதம்
நீர்--------------------------------நெய்தல்
தீ----------------------------------பாலை

மகாபாரதப் போரில் தமிழர்கள்:

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான  தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.

தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:

நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக்  கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

                                                    -
புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

-
பெரும்பாணாற்றுப்படை - 415-417

ஆதிபகவன் யார்


ஆதிபகவன் யார்? http://thiruththam.blogspot.com/search/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg__RmvB9mCyxjiSkiE8HKuBaHHLQrzsSUUBQnzWQQdVeZY9Th0xIXkCDobHjUZcpnlECZ9fccyrCc8dkEQGGG1osArycSD45Ebsg0YEeSUGIPAESjc_ynDFmChsPQ5Yr2iDRvvLlvDrEg/s320/athipakavan.jpg
குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                                             -
குறள் எண்: 1

தற்போதைய பொருள்:

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

குழப்பங்கள்:

மேற்காணும் உரைகளில் கலைஞர் உரை நீங்கலான மூன்று உரைகளும் ஆதிபகவன் என்பதற்கு பொதுவாக 'கடவுள்' என்று விளக்கம் கொடுத்துள்ளன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடவுள் ஒருவர் அல்லரே. சிவன், விட்டுணு, அல்லா, இயேசு, அருகன், புத்தர் என்று ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒரு கடவுள் உள்ளனரே. வள்ளுவர் இவர்களில் யாரைக் குறிப்பிடுகிறார்?. இது குறித்து இணைய தளங்களில் தேடியபோது பல கருத்துக்கள் கிடைத்தன. அவை கீழே தரப்பட்டுள்ளன.

ஆதிபகவன் என்பது பரமசிவன் தான் என்று சைவர்கள் கூறுகின்றனர். இல்லை இல்லை, ஆதி என்பது வள்ளுவரின் தாய்; பகவன் என்பது அவரது தந்தை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சமண மதத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப தேவரையே இச்சொல் குறிப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர். அத்துடன் நிற்காமல் திருவள்ளுவரை சமணர் என்றும் கூறத் தலைப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு சாரரோ ஆதிபகவன் விட்டுணுவைக் குறிப்பதாகக் கூறி வள்ளுவரை வைணவர் என்று தங்கள் பக்கம் இழுக்கின்றனர். ஆதி பகலவன் என்பதே ஆதி பகவனாக மாறிவிட்டது என்றும் இச்சொல் ஆதி காலத்தில் இருந்து இன்றுவரை வணங்கப்பட்டு வரும் சூரியனையே குறிக்கிறது என்றும் கூறுவார் உளர். இப்படி ஆதிபகவன் குறித்து ஒரு தெளிவான விடையினைக் காண இயலவில்லை. என்றால் உண்மையில் இந்த ஆதிபகவன் யார்?. குழப்பமான இக் கேள்விக்கு சரியான விடையினைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆதிபகவன் - சரியான சொல்லா?

ஆதிபகவன் என்னும் சொல்லே முதலில் தவறானதாகும். இதில் ஒரு எழுத்துப் பிழை உள்ளது. ஆதியகவன் என்பதே சரியான சொல்லாகும். இது கீழ்க்கண்டவாறு இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.

ஆதியகவன் = ஆதி + அகவன்.

ஆதி = காரணம். (மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)
அகவன் = அறிவானவன்.
(
அகம் = ஞானம் / அறிவு. மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)

எனவே ஆதியகவன் என்பது காரண அறிவானவன் என்ற பொருளைத் தரும்.

ஆதியகவன் சரியே என நிறுவுதல்:

ஆதிபகவன் என்ற சொல் தவறு; ஆதியகவன் என்பதே சரி என்று முன்னர் கண்டோம். இது எவ்வாறு சரி என்று இங்கே பார்ப்போம்.

தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி விதி என்ற ஒன்று உண்டு. இது மிகவும் இன்றியமையாததாகும். திருவள்ளுவரும் இவ் விதிகளை மீறாமல் குறள்களை இயற்றி உள்ளார். பொதுவாக எழுத்துப் புணர்ச்சியினை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உள்ளடிப் புணர்ச்சி. இன்னொன்று புறவடிப் புணர்ச்சி. இதை ஒரு சான்றுடன் காணலாம்.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.

இக் குறளின் இரண்டாம் அடியில் 'அடங்க+பெறின் = அடங்கப் பெறின்' என்ற உள்ளடிப் புணர்ச்சி ( ஒரு அடிக்குள் நிகழும் எழுத்துப் புணர்ச்சி) உள்ளது. முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் இடையிலான 'அறிவறிந்து + ஆற்றின் = அறிவறிந் தாற்றின்' என்பதில் புறவடிப் புணர்ச்சி உள்ளது. புறவடிப் புணர்ச்சி என்பது அடுத்தடுத்த அடிகளுக்கு இடையிலான எழுத்துப் புணர்ச்சியினைக் குறிக்கும். அவ்வகையில் அறிவறிந்து என்ற முதலடியின் ஈற்றுச்சொல் ஆற்றின் என்னும் இரண்டாமடியின் முதல் சொல்லுடன் புணர்ந்து அறிவறிந்தாற்றின் என்று இங்கே வந்துள்ளது. இதுபோன்ற புறவடிப் புணர்ச்சிகளை திருக்குறளில் பல இடங்களில் காணலாம். திருக்குறளில் மட்டுமின்றி பல தமிழ் இலக்கியங்களிலும் இப் புறவடிப் புணர்ச்சியினை காணலாம். இதுபோன்ற ஒரு புறவடிப் புணர்ச்சியே கடவுள் வாழ்த்தின் முதல் பாடலில் வந்துள்ளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
யகவன் முதற்றே உலகு.

இக் குறளில் முதல் அடியின் ஈற்றில் வரும் ஆதி என்னும் சொல் இரண்டாம் அடியின் முதலாக வரும் அகவன் என்ற சொல்லுடன் புணரும்போது நன்னூல் சூத்திரம் 162 இன் படி கீழ்க்கண்டவாறு ஆகும்.

ஆதி + அகவன் = ஆதி+ய்+அகவன் (ய் என்பது உடம்படுமெய்)
                           =
ஆதியகவன்.

எனவே புணர்ச்சி விதிப்படி ஆதியகவன் என்பதே சரியாகும். திருவள்ளுவரும் ஓலைச்சுவடியில் ஆதியகவன் என்றே எழுதியிருப்பார். பிற்கால மக்கள் ஓலைச்சுவடியில் இருந்து எடுத்து எழுதும்போது தவறுதலாக ஆதிபகவன் என்று எழுதிவிட்டனர். இத் தவறே நாம் மேலே கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஆகும்.

அறிவே தெய்வம்:

வள்ளுவர் கடவுள் இருப்பதை மறுக்கவில்லை. அதேசமயம் கடவுளுக்கு ஒரு மதத்தை கற்பிக்கவோ பருப்பொருள் வடிவம் கொடுக்கவோ இல்லை. வள்ளுவர் கடவுளை அறிவின் வடிவமாகவே காண்கிறார். 'சுத்த அறிவே சிவம்' என்று தாயுமானவரும் 'அறிவே தெய்வம்' என்று பாரதியாரும் ' அறிவே கடவுள்' என்று திருமூலரும் இதே நோக்கில் கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  கடவுளைப் பற்றிய வள்ளுவரது தெளிவான இந் நோக்கினை இதோ கீழ்க்காணும் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் காணலாம்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.

இப்பாடலில் 'இறைவன் தூய அறிவின் வடிவானவன்' என்பதனை 'வாலறிவன்' என்ற சொல்லால் நேரடியாக உணர்த்துகிறார். அதுமட்டுமின்றி கீழ்க்காணும் பாடல்களிலும் 'இறைவன் அறிவு வடிவானவன்' என்ற கருத்தினை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைக்கிறார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வர்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகல் புரிந்தார் மாட்டு.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.

மேற்காணும் ஏழு பாடல்களும் இறைவனின் அடிசேர்தலைப் பற்றியே கூறுகின்றன. உண்மையில் இந்த 'அடிசேர்தல்' என்றால் என்ன?. என்று பார்ப்போம்.

பகுத்தறிவும் ஏன் என்ற கேள்வியும்:

உயிரினினங்களில் மனிதன் மட்டுமே கேள்விகள் கேட்கிறான். இக் கேள்விகள் பலவகைப்படும். எங்கே, எப்படி, எப்போது, யாரால், எதனால், எவற்றால், எவர்களால், ஏன் என்று கேள்விச் சொற்கள் பல உள்ளன. இவற்றுள் ஏன் என்ற கேள்விச்சொல் காரணம் பற்றி எழுவது; மிக மிக இன்றியமையாது; எல்லையற்ற ஆற்றல் கொண்டது; கீழ்நிலையில் உள்ள ஒருவனை மேல்நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையது; சிந்திக்கும் திறனைத் தூண்டுவது; புரட்சிக்கு அடிகோலி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவுவது. இப்படி இக் கேள்வியின் சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதுவல்ல நம் நோக்கம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu6DJydGaBbMt15O6DobHAD6uoPAT1SgGj1BP7oWBffNFJtDeMd1PCED-4ZmjI0ranobe3i_mhNTEMqUEFqHhS0MhkEqBCo1aFMAt3eFG9yBQ8a0etl05ZtJlieE-w1Rwx0znfzKJpmRU/s320/globalquestion.jpgஉண்மையில் ஏன் என்னும் கேள்வி ஒரு முடிவில்லாமல் இயங்குகின்ற ஒரு குடைகருவி போன்றாகும். மற்ற கேள்விச் சொற்களை பயன்படுத்துவதில் ஓர் எல்லை உண்டு. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மற்ற கேள்விச் சொற்களை பயன்படுத்த முடியாது. ஆனால் ஏன் என்ற கேள்வியை மட்டும் எல்லை இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஏன் என்ற கேள்வியே கேட்கப் படாத மாதிரி யாராலும் விடை கூற முடியாது. நீங்கள் விரும்பினால் முயன்று பாருங்கள்.

என்றால் ஏன் என்ற கேள்வி எப்போது நிற்கும்?. எங்கே முடியும்?. இவற்றின் விடை: 'இறைவன்' ஆகும். ஆம், இறைவனே ஏன் என்ற கேள்வியின் முடிவாவான். ஏனென்றால் இறைவன் காரண அறிவானவன். காரண அறிவை அறிய உதவும் கேள்வியான ஏன் என்ற கேள்விக்கு காரண அறிவாய் விளங்கும் இறைவன் தானே விடையாக இருக்க முடியும். எல்லையற்ற புரியாத புதிர்களால் நிறைந்து இருக்கும் இவ் உலகில் எவ்வளவோ இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சான்றாக நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றதை நாம் அறிவோம். ஆனால் ஏன் நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றது?. இந்த ஒரு கேள்விக்கே நம் அறிவியலாளர்களால் இன்னும் சரியான விடை காண முடியவில்லை. அப்படியே அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து இக் கேள்விக்கு விடை கூறி விட்டாலும் அதற்கும் ஒரு ஏன் போட்டுவிட்டால் அவர்கள் கதி என்னாகும்?. ஆம், ஏன் என்ற கேள்வி கேட்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் அதற்கான விடையினைக் காண மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இப்படி மனிதனை உந்தும் ஆற்றலாகவும் ஏன் என்ற கேள்வி விளங்குகிறது. 

காரண அறிவின் வடிவாய் விளங்கும் இறைவனே உலகில் உள்ள அனைத்துக் கேள்விகளின் அடிப்பொருள் அதாவது இறுதி விடை ஆவான். இந்த இறுதி விடை ஆகிய அடிப்பொருள் காண்டலையே அடிசேர்தல் என்று கூறுகிறார் வள்ளுவர். தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல் ஆகிய சொற்கள் அனைத்தும் ஏன் என்ற கேள்விகளால் நாம் நம்முள் குடைந்து குடைந்து அடிப்பொருள் ஆகிய இறைவனை அடைய வேண்டும் என்னும் பொருளையே உணர்த்தி நிற்கின்றன.

இப்படி மேலே கண்ட ஏழு பாடல்களிலும் இறைவனை அறிவின் வடிவாகவே போற்றியுள்ளார் வள்ளுவர். அதுமட்டுமின்றி இறைவனை அடையும் முறையினையும் நமக்கு மறைமுகமாக உணர்த்திச் சென்றிருக்கின்றார். இதிலிருந்து வள்ளுவர் எழுதியது ஆதியகவன் தான் என்பதனை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

தாள் வணங்குதல், அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கு பாதங்களைத் தொட்டு வணங்குதல், பாதங்களில் தலையை வைத்து வணங்குதல் என்றெல்லாம் பொருள் கொண்டு வள்ளுவர் கடவுளுக்கு உருவம் கொடுத்திருப்பதாகக் க்ருதி அவரை தத்தம் மதங்களின் பக்கம் இழுக்க முயன்றுள்ளனர் நமது முன்னோர்கள். இது தவறாகும். ஏனென்றால் ஒரு பாடலுக்குப் பொருள் கூறுமிடத்து தன்கருத்தை ஏற்றிக் கூறாமல் நடுநிலையில் நின்று ஆசிரியரின் கருத்து என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பொருள் கூற வேண்டும் என்பதே விதியாகும்.

கடவுள் வாழ்த்தில் வரும் அனைத்துப் பாடல்களும் இறைவனை அறிவின் வடிவமாகக் காட்டும்போது ஆறாவது பாடலான ' பொறிவாயில் ஐந்தவித்தான்' என்ற பாடல் மட்டும் விதிவிலக்காகவும் நெருடலாகவும் உள்ளது. ஏனென்றால் ஐம்பொறிகளையும் அடக்குதல் என்பது ஐம்பொறிகள் உடைய மாந்தர்க்குரிய செயலாகும். அதை உருவமில்லாத இறைவனுக்கு ஏற்றிக் கூறுவது மிகப் பெரும் தவறாகும். நீத்தார் பெருமையில் வரவேண்டிய இக் குறளை தவறுதலாகவோ வேண்டுமென்றோ சிலர் கடவுள் வாழ்த்தில் சேர்த்துள்ளனர். இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்
உலகியற்றியான் (வள்ளுவர் இறைவனை சபித்தாரா?)

குறள்: 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்
                          -
எண்: 1062

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
சாலமன் பாப்பையா உரை: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளும் 'உலகியற்றியான்' என்னும் சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்றே பொருள் கூறுகின்றன. உலகைப் படைத்தவன் யார் என்றால் அது இறைவன் என்று அனைவருக்கும் தெரியும். அவ்வகையில் மேற்காணும் மூன்று உரைகளுமே உலகைப் படைத்த இறைவனுக்கு 'பரந்து கெடுக' என்று வள்ளுவர் சாபமிடுவது போன்ற தொனியில் விளக்கம் கூறியுள்ளன. இக் கருத்து சற்றேனும் ஏற்புடையதா?. இல்லை. ஒருபோதும் இல்லை.

ஏனென்றால் ஒரு மனிதன் தனது வறுமை நிலையினால் பிச்சை எடுத்துண்டு வாழ்கின்றான் என்றால் அதற்கு உலகைப் படைத்த இறைவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?. இவ் உலகில் அனைத்து உயிர்களையும் இறைவனே படைத்தான் என்றால் அவன் படைத்த அனைத்து உயிர்களிடத்திலும் ஒரே மாதிரித்தானே அன்பு செலுத்துவான். அப்படிச் செலுத்துவது தானே முறையென்று கூறப்படும். இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்று தானே அனைத்து மதங்களுமே கூறுகின்றன. அப்படி இருக்க, ஒருவனுடைய ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் அறமாகாது.

ஒருவரது ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பாகாத நிலையில் வள்ளுவர் இறைவனுக்கு சாபம் இடவேண்டிய தேவையும் இல்லை. அதுமட்டுமின்றி, கடவுள் வாழ்த்தில் இறைவனைப் புகழ்ந்த வள்ளுவர் ' இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்" என்று அவனது நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையைக் கூறுகிறார். அதன்படி வள்ளுவரது சாபமோ யாருடைய சாபமோ இறைவனைப் பற்றாது. இதை வள்ளுவரும் நன்கு அறிவார். எனவே இறைவனுக்குச் சாபமிடும் மதிகெட்ட செயலை அவர் ஒருபோதும் செய்திருக்க மாட்டார். இதிலிருந்து மேற்காணும் பொருள் விளக்கங்கள் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்பொருள் குளறுபடிக்குக் காரணம் 'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்று தவறாகப் பொருள் கொண்டதே ஆகும். இதன் உண்மையான பொருள் என்ன என்று கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

உண்மையில் 'உலகியற்றியான்' என்ற சொல் ஒரு நாட்டின் அரசனைக் குறிப்பதாகும். இது எவ்வாறெனில் 'உலகு' என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் இங்கு இச்சொல் ஒரு நாட்டையே குறிக்கும்.

உலகு = நாடு
இயற்றுதல் = நடத்துதல், விதித்தல்

(
ஆதாரம்: வின்சுலோ தமிழ் இணையப் பேரகராதி)

ஆக, உலகை இயற்றியவன் என்பது இங்கு ஒரு நாட்டை நடத்திச் செல்பவன் அல்லது ஒரு நாட்டிற்கு சட்டதிட்டங்கள் மற்றும் வரிகளை விதிப்பவன் என்ற முறையில் ஒரு அரசனையே குறிப்பதாகும்.

இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்: " பிச்சை எடுத்தும் ஒருவன் (ஒரு நாட்டில்) உயிர்வாழ வேண்டுமானால் அந் நாட்டை நடத்திச் செல்கிற மன்னன் (பொருளை இழந்து உணவுக்காக) அலைந்து திரிந்து கெட்டொழியட்டும்."
ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் வாழ்வதற்கு முழுமுதல் காரணம் யார்?. உறுதியாக அந் நாட்டின் அரசனே அன்றோ?. ஆம், ஒரு நாட்டு மன்னன், தன் நாட்டு மக்களின் மீது ஏராளமான வரிகளை விதிப்பதாலும் கொடுங்கோலாட்சி புரிவதாலும் பொருள் வளம் இழந்தவர்கள் ஏழ்மையால் பிச்சை எடுத்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவர். பொதுமக்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தனது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதிக வரி வசூலிக்கும்பொழுது அதைத் தாளமாட்டாமல் குடிமக்கள் வடிக்கும் கண்ணீர் அந் நாட்டு மன்னனின் செல்வத்தை அழிக்கும் கருவியாகும் என்று கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் கூறுகிறார்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. - 555

இப்படியாக செல்வத்தை இழந்து அம் மன்னனும் வறுமை நிலையுற்று உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கெட்டு ஒழியட்டும் என்று இக் குறளில் அவனுக்குச் சாபமிடுகிறார் வள்ளுவர்.

இதிலிருந்து இக் குறளில் வள்ளுவர் சாபமிடுவது பிச்சைக்காரனின் ஏழ்மை நிலைக்குக் காரணமான நாட்டு மன்னனையே அன்றி உலகைப் படைத்த இறைவனை அன்று என்பது உறுதி செய்யப்படுகிறது