வெள்ளி, 11 நவம்பர், 2011

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்

http://www.muthukamalam.com/images/picture/numbers.jpg

7.எண்கள்

நம் முன்னோர்கள் கணிதத்தில் மிகச் சிறந்த மேதைமைத் தன்மையுடையவராக விளங்கினர். அவர்கள் எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடையன என்று கண்டறிந்து கூறினர். எண்களின் ஆற்றலை எண் சோதிடத்தின் வாயிலாகவும் நமது முன்னோர்கள் கூறினர். இருப்பினும் எண்களின் சிறப்பினையும் அது மனித வாழ்க்கையில் பெறும் இடத்தினையும் பழமொழிகள் வாயிலாக நம் முன்னோர்கள் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

இரண்டு

இரட்டைப் படையில் வரும் இவ்வெண் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்வு கொண்டதாக விளங்குகின்றது. ஆண், பெண் இரண்டு, கண்கள், இரண்டு, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, இன்பம், துன்பம் இரண்டு என ஒவ்வொன்றிலும் இரண்டு என்ற எண் முன்னிற்கிறது.

இறைவன் உருவில் இரண்டாகக் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இறைவன் ஆணாகவும், பெண்ணாகவும் காட்சியளிக்கின்றான். ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதே உலக வாழ்க்கை. இதனை மக்களுக்கு உணர்த்துவதாக இறைவனின் திருவுருவம் அமைந்துள்ளது. ஓர் ஆணே, பெண்ணை மணக்க வேண்டும். அதுவே நடைமுறைக்கு உதந்த ஒன்றாகும். ஆணுமல்லாது, பெண்ணுமல்லாதிருப்பவன்( இரண்டும் கெட்ட நிலையில்) ஒருத்தியை மணப்பின், அவனின் மனைவி அவனை விட்டுவிட்டு வேறொரு ஆடவனடன் சென்று விடுவாள். இது இயல்வு. அத்தகைய் தன்மையுடையோன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கருத்தினை,

‘‘ரெண்டுங் கெட்டான் பொண்டியிழந்தான்’’

(ரெண்டுங்கெட்டான்-திருநங்கை, பெண்டாட்டி-பெண்டாட்டி)

என்ற பழமொழி எடுத்தரைக்கிறது.

உடலுணர்வு, உள்ள உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாதவன், பெண்ணின் மனத்தேவை, உடற்தேவைகளை நிறைவு செய்யாதவன், மனம், உடல் ஆகிய இரண்டு நிலைகளிலும் சரியில்லாதவனின் மனைவி அவனுடன் வாழ மாட்டாள் என்ற கருத்தினையும் இப்பழமொழி உள்ளடக்கியுள்ளது நோக்கத்தக்கது.

ஆண், பெண் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தும்போது இருவரும் திறமையானவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது யாராவது ஒருவர் திறமையானவராக இருத்தல் குடும்பததிற்கு என்பதுஇன்றியமையாத ஒன்றாகும். மனைவி செலவாளியாக இருக்கும்போது கணவன் சேர்த்து வைக்கும் குணமுடையவனாக இருக்க வேண்டும். அதாவது சமர்த்து (திறமை, பொறுப்பு) என்று இதனைக் குறிப்பிடுவர். கணவன் செலவாளியாக இருந்தால் மனைவி இருக்கிப் பிடிக்கும் குணம் கொண்டவளாக இருக்க வேண்டும்.

இங்ஙனம் யாராவது ஒருவர் திறமையானவராக இருந்தால் அக்குடும்பம் நன்கு வளம் பெற்று உயர்வடையும். மாறாக கணவன், மனைவி இருவருமே அதிகச் செலாவளிகளாக இருந்தால் அக்குடும்பம் வறுமை வாய்ப்படும். வளம் குன்றி ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவர். கணவன், மனைவிக்குள் பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கும் என்பதனை,

‘‘ரெண்டும் ரெண்டாப்பை ரெண்டுங் கழண்டாப்பை’’

என்ற பழமொழி விளக்குகிறது.

தேங்காயின் ஓட்டினால் (கொட்டாங்கச்சி) செய்யப்பட்ட கரண்டி இதனை அகப்பை என்பர். இதனை வைத்துக் குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களைச் சமைப்பர். அகப்பை என்பது வழக்கில் ஆப்பை என்று வழங்கப்படுகிறது. இவ்வகப்பை உறுதியாகக் குச்சியில் செருகப்பறெ்றிருந்தால் மட்டுமே சமைக்கப் பயன்படும். அடிக்கடி காம்பிலிருந்து கழன்று வந்து கொண்டே இருந்தால் அதனை வைத்துச் சமையல் வேலை செய்ய முடியாது. அது போன்றே கணவன், மனைவி இருவரும் குடும்பப் பொருப்புடன் நடந்து கொள்ளவேண்டும். பொருப்பின்றி நடப்பின் கழண்ட அகப்பை போன்று குடும்பமும் ஆகிவிடும். (அகப்பையில் உள்ள நீண்ட குச்சி ஆண், கொட்டாங்கச்சி பெண்) அகப்பை என்பது இங்கு ஆண், பெண் இருவரையும் குறியீடாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

அகப்பை போன்று ஒன்றிணைந்து செயல்பட்டுக் குடும்ப வளமைக்குக் கணவன், மனைவி இருவரும் பாடுபட வேண்டும் என்ற தமிழ்ப் பண்பாட்டை இப்பழமொழி விளக்குவது குறிப்பிடத்தக்கது.

ஐந்து

ஐந்து என்ற எண் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழும் எண்ணாகும். ஐந்தெழுத்து மந்திரம், பஞ்ச பாண்டவர்கள், ஐம்புலன்கள், ஐம்பூதங்கள், ஐந்து விரலகள், ஐந்து காப்பியங்கள் எனப் பல நிலைகளில் இவ்வைந்து என்ற எண் மக்களிடம் வழக்கில் சிற்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

மந்திரத்தில் ஐந்தெழுத்து மந்திரம் சிறப்பானது. உயர்வானது நமசிவாயஎன்பதே அச்சிவ மந்திரமாகும். இதனைச் சொல்பவர் பலவிதமான நன்மைகளையும் அடைவர். அவர்களைத் துன்பம் என்பது அணுகாது. இவ்வைந்து எழுத்து மந்திரத்தினை முழுமையாகக் கூற இயலாவிட்டாலும்சிவாஎன்று இரண்டெழுத்தைக் கூறினாலும் பழுது ஏற்படாது. சிவபெருமான் மந்திரம் சொல்வோரைக் காப்பாற்றுவார். இத்தகைய தெய்வ நம்பிக்கையை,

‘‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’’

என்ற பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது.

இன்றும் வழக்கத்தில், நடந்து செல்லும்போது பிறரின் மீது நம்மை அறியாமல் கால்பட்டு விட்டால் உடனே நாம், ‘சிவாஎன்று கூறுகிறோம். இதனாலேயே ஐந்து எழுத்து மந்திரத்தில் உள்ள நம இறுதிய எழுத்தாகிய ய என்ற எழுத்துக்களை மட்டும் கூறினாலேயே சிவபெருமானின் அருள் கிட்டும் என்பதையே இப்பழமொழி உணர்த்துகின்றது.

கன்று ஈன்ற பசுமாட்டை விலைக்கு வாங்கி வந்தவர் பசுமாட்டில் பால் இல்லையெனில்,

‘‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’’

என்று மற்றவரிடம் கூறுவார். இதில் அஞ்சுக்கு ரெண்டு என்பது, பால், தயிர், நெய், கோமியம், சாணம் எனப் பசுவில் இருந்து கிடைக்கும் 5விதமான பொருள்களாகும். இதில் பால், தயிர், நெய் இவை கிடைக்கா விட்டாலும் கோமியம், சாணம் என்ற இரண்டு பொருள்கள் மட்டும் உறுதியாகப் பசுமாட்டில் இருந்து கிடைக்கும். இதனைக் குறிக்கவே பசுமாட்டை வாங்கி வந்தவர் மேற்கண்ட பழமொழியைப் பிறரிடம் கூறவர்.

அஞ்சு ஐம்பது

இளம் வயதில் கல்வி கற்பது நன்மை பயக்கும். அவ்விளம் பருவமே கல்வி கற்க ஏதுவான பருவமாகும். இளம் வயதில் மனமும் உடலும் கற்பதற்கேற்ப ஒத்துழைக்கும். முதுமைப்பருவம் அடைந்தால் உடலும் மனமும் ஒத்துழைக்காது. இதனைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள்,
‘‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’’

என்ற பழமொழி வாயிலாகக் கல்வியை வியுறுத்தினர் எனலாம். ஐந்து என்பது இளம் பருவத்தையும், ஐம்பது என்பது முதுமைப் பருவத்தையும் குறிக்கும். இளம் வயதில் மட்டுமே எளிதாக ஒருவர் கல்வியனைக் கற்க இயலும். முதுமைப் பருவத்தில் கற்றுக் கொள்ளலாம் என நிகை்கின்றபோது ஒருவரால் இயலாது போய்விடும். அதனால் இளமையில் கல்வியைக் கற்றுத் தேர்தல் வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட பழமெமாழி நமக்கு எடுத்துரைக்கின்றது.

ஐந்து பத்து விரல்கள்

இளஞ்சிறார்களுக்கு எண்களைக் கற்றுக் கொடுக்கும்போது, அவர்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக, ‘‘ஐந்து ஒரு கைவிரல் ஐந்து’’ என்று ஆசிரியர்கள் கூறிக் கற்றுக் கொடுப்பர். இவ்விரல்கள் ஐந்தும் ஒரே அளவாக இருப்பதில்லை. நீண்டும, குறுகியும் இவ்விரல்கள் உள்ளன.

ஒரு குடும்பத்தில் ஒரு தாயின் மக்களாக நான்கு பேர் இருப்பின் அவர்கள் வேறுவேறு குணமுடையவர்களாக இருப்பர். அவர்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால் பிறர் அவன் தவறு செய்துவிட்டான் என்று கூறினால் மற்றவர் அதைவிடு,

‘‘அஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்கு’’,

அதுபோன்றுதான் விட்டுவிடு பெரிதுபடுத்தாதே என்பர்.

ஒருவன் நன்கு பாடுபட்டு உழைத்து உண்ணுதல் வேண்டும். அதுவே அவனுக்குப் பெருமை தரும். உழைக்காது உண்பது இழிவானதாகும். தம் உழைப்பில் கிடைத்த பொருளைத் தானும் உண்டு, பிறருக்கும் கொடுத்து உண்டு வாழ்பவனுடைய வாழ்வே உன்னதமானதாகும். இதனை,

‘‘அஞ்சு விரல்ல பாடுபட்டு
பத்து விரல்ல அள்ளித் தங்கணும்’’

என்ற பழமெமாழி எடுத்துரைக்கின்றது.

உழைப்பின் பெருமையையும், உழைப்பினால் வரும் பலனைத் தாம் மட்டுமல்லாது பிறருக்கும் கொடுத்து வாழ வேண்டும் என்ற சமுதாய நன்னெறியையும் இப்பழமொழி விளக்குவது குறிப்பிடத்தக்கது.

பத்து விரல்கள் என்பது உழைப்பவனையும், அவனிடம் இருந்து பொருள் பெற்றவனையும் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகும். இரு கைகளில் ஒருவன் உண்பது கிடையாது. வலதுகையால் மட்டுமே உணவினை எடுத்து உண்பது இயற்கை. அதனால் உழைப்பவன் அவனிடம் உதவி பெற்றவன் ஆகிய இருவரையும் பற்றிக் குறிப்பிடும் நோக்கிலேயே இப்பழமொழியில், ‘‘பத்துவிரல்’’ என்று சுட்டப்பெற்றது எனலாம்.

ஐந்து வயது பத்து வயது

ஒரே குடும்பத்தில் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த உடன் பிறந்தோர் இளமைக் காலத்தில் ஒருவருக்கொருவர் அன்புடனும், பாசத்துடனும் வாழ்வர். அவர்கள் வளர வளர அவர்களது மனமும், எண்ணங்களும் மாறிக் கொண்டே வரும். திருமணம் நடந்த பின்னர் முற்றிலும் குணம் வேறுபட்டு நடப்பர். அதுவரை அண்ணன்தம்பி என்று ஒட்டி உறவாடியவர்கள் அண்ணன், தம்பி என்பது பங்குப் பிரிப்பதற்காக ஏற்பட்ட பங்காளி என்ற உறவு எனக் கருதித் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொளவர். எந்த நிலையிலும் பிரியாத குடும்பங்கள் அண்ணன் தம்பிகளும் இவ்வுலகில் இருப்பது கண்கூடு. இருப்பினும் திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த உடன் இவ்வண்ணன் தம்பி உறவு முற்றிலும் வேறுபட்டு பங்காளி என்ற எண்ணம் மனதில் உருவாகிறது என்பதனை,

‘‘அஞ்சு வயசுல அண்ணன் தம்பி
பத்து வயசுல பங்காளி’’

(அஞ்சு ஐந்து, வயசு-வயது)

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

அஞ்சு வயது என்பது இளம் வயதினையும், பத்து வயது என்பது திருமணம் முடிந்துகுழந்தைகள் பெற்றெடுத்த நிலையையும் குறிக்கும் இளம் வயதில் எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே இறுதி வரையிலும் அன்புடனும், நட்புறவுடனும் மனிதர்கள் வாழ வேண்டும். சொத்துக்களுக்காப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு வாழக் கூடாது என்ற கருத்தினை வலியுறுத்துவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

ஐந்து பெண்கள்

மனிதன் அடையும் செல்வங்களுள் குழந்தைச் செல்வமும் குறிப்பிடத்தக்கது. முதன்மையானது. அளவோடிருந்தால் அது செல்வம். அளவின்றி இருப்பின் அதுவே துன்பமயமானதாக மாறும். அதிலும் சமுதாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் வரவு என்றும், பெண்குழந்தை பிறந்தால் செலவு என்றும் மக்கள் கருதுகின்றனர்.

ஒரு குழந்தை பிறந்தாலே இவ்வாறு கருதக்கூடிய சமுதாயம் ஐந்து குழந்தைகளும் பெண்குழந்தைகளாகப் பிறந்துவிட்டால் அரசனைப் போன்று செல்வ வளமுடையவர்களும் செல்வ வளம் குன்றி வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர். அதாவது பிச்சை ஏற்று வாழும் ஆண்டியாக ஆவர் என்பதை,

‘‘அஞ்சும் பொம்பிளப் பிள்ளையாப் பிறந்தா
அரசன் கூட ஆண்டியாகி விடுவான்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. மக்களிடையே நிலவும் பெண் குழந்தைகள் குறித்த தவறான எண்ண ஓட்டத்தையே இப்பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் ஆண் என்றும் பெண் என்றும் பேதம் பார்க்கக் கூடாது என்ற சிந்தனையை ஊட்டுவதாக இப்பழமொழி அமைந்திருக்கின்றது.

ஆறும் நூறும்


இளம் வயதிலோ அல்லது பொதுவாகவோ ஒரு மனிதனை வாழ்த்தும்போது, ‘‘நூறாண்டு வாழ்க’’ என்று வாழ்த்துவர். சிலர் தான் 100 ஆண்டுகள் வாழ்வர். ஆனால் இறப்பு என்பது எந்த வயதில் வரும் வராது என்று அறுதியிட்டுக் கூற இயலாது. ஏனெனில் இறப்பு எப்போதும் எந்த நிலையிலும் எவ்விடத்திலும் எவருக்கும் எவ்வயதிலும் வரும். இந்த வயதினருக்கு இறப்பு நேரும், நேராது என்று கூற இயலாது. இதனை,

‘‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’’

என்ற பழமொழி விளக்கியுரைக்கின்றது.

ஆறு வயதானாலும் நூறு வயதானாலும்இறப்பு என்பது எவ்வகையிலாவது வரும். அதனைத் தடுக்க முடியாது என்பர். இதுவே மேலோட்டமான பொருளாகும்.

பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும், நூறு கௌரவர்களுடன் நூற்றியோராவது ஆளாகப் போரிட்டாலும் கர்ணனுக்கு மரணம் என்பது நிச்சயம். அதனை மாற்ற முடியாது என்ற மகாபாரதக் கதையை விளக்கத் தோன்றியதே இப்பழமொழியாகும். இதுவே இப்பழமொழிக்குச் சரியான விளக்கமும் ஆகும்.

எட்டு


எட்டு என்பது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஓர் எண்ணாகும். மனித வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்து ஓரெட்டில் நடக்காத நடை, ஈரெட்டில் பயிலாத கல்வி, மூவெட்டில் செய்யாத திருமணம், நாலெட்டில் பெறாத பிள்ளை ஐயெட்டில் சேர்க்காத செல்வம், ஆறெட்டில் சுற்றாத உலகம், ஏழெட்டில் கொள்ளாத ஓய்வு, எட்டெட்டில் நிகழா இறப்பு இவை வீண். இவையே மனித வாழ்வு. ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

இங்ஙனம் நமது முன்னோர்கள் வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்துப் பார்த்தனர். எட்டாம் எண்ணை வைத்துப் பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடம் வழங்கி வருகின்றன. எட்டாம் நாளில் ஆண் குழந்தை பிறந்தால் அவன் வெற்றியடைவான் என்ற நம்பிக்கையும், பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெண் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவ்விடம் மண்மேடாகத் தாழ்நிலை அடையும் என்ற நம்பிக்கையம் மக்களிடையே இன்றும வழங்கி வருவதனை,

‘‘எட்டுக் குடையவன் வெற்றிக்குரியவன்’’

‘‘
எட்டாவதா(க)ப் பொண்ணு பிறந்தா(ல்)
எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவரு’’

ஆகிய பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. ஆண் எனில் உயர்வும், பெண் எனில் இழிவும் அழிவும் நடக்கும் என்று கருதுவது, ஆண்பெண் பால் வேற்றுமை பாராட்டும் மனித உரிமைமீறலாகவும் இப்பழமொழி அமைகின்றது. இப்பழமொழி இவ்வடிவில் அமைந்ததா? அல்லது இதில் உட்பொருள் ஏதேனும் உளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பத்து


பத்துப்பாட்டு, பதிகம், பத்துக் கட்டளைகள், பத்து ரதன்(தசரதன்), பத்து(தச) அவதாரம் எனப் பத்து என்ற எண் பல்வேறு வகைகளின் அடிப்படையில் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது. இப்பத்து என்பதனை உள்ளடக்கி நம்முன்னோர்கள் பழமொழிகளைக் கூறியள்ளது சிந்தனைக் குரியதாக அமைகின்றது. பசி என்பது பிணி போன்றது. அப்பிணி நீங்க உள்ள மருந்து உணவே ஆகும். இப்பசியால் பலர் வாடித் துன்புறுவது காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றது.

பசி என்பது அனைவருக்கும் பொதுவானது. பசியாத நல்வயிறு உலகில் எங்கும் இல்லை எனலாம். இப்பசி வந்துவிட்டால் எல்லா உயிரினங்களும் தங்களது பசியைத் தீர்துக் கொள்ளப் பலவாறு முயற்சிகளை மேற் கொள்கின்றன. நற்குடியில் பிறந்தோரும் பசி வந்திடில் தங்களின் நற்குணங்களை இழந்துவிடுவர். இழிசெயல்களைச் செய்யத் தொடங்குவர். இதனை,

‘‘பசி வந்திடப் பத்தும் பறக்கும்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. அன்பு, கல்வி, ஈகை, கருணை, நட்பு, காதல், பகை, மானம், என்ற பத்துவிதமான குணங்களும் மிகுபசி உடையவனிடம் இருந்து விலகிவிடும் எனப்பசியின் தன்மையை விளக்குகின்றபோது பத்து என்ற எண்ணைப் பழமொழிகளில் உள்ளிட்டு நமது முன்னோர்கள் பழமொழியினைக் கூறியுள்ளனர்.

இங்ஙனம் இரண்டு, ஐந்து, ஆறு, பத்து, நூறு என்ற எண்களை வைத்து மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளை நமது முன்னோர்கள் பழமொழி வாயிலாக விளக்கி இருப்பது போற்றுதற்கு உரியதாக அமைந்துள்ளது. பண்பாட்டு விளக்கமாக இவ்வெண்கள் குறித்த பழமொழிகள் அமைந்து வாழ்விற்கு வழிகாட்டுவதுடன், எண்களை வைத்து வாழ்க்கையில் நிலவும் மக்களின் நம்பிக்கையையும் இப்பழமொழிகள் விளக்குகின்றன எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக