திங்கள், 5 டிசம்பர், 2011

நுதல்-நெற்றி

நுதல் என்றால் என்ன? முன்னுரை: நுதல் என்னும் சொல் சங்க காலத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கிழந்த நிலையில் உள்ள பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது. இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றிக் காணலாம். தற்போதைய பொருட்கள்: நுதல் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன. இணையத் தமிழ்ப் பேரகராதி: சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம். கழகத் தமிழ்க் கையகராதி: நெற்றி, தலை, புருவம், சொல். பொருள் பொருந்தாமை: மேற்காணும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம். ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67 பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55 ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67 சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107 என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222 திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230 வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423 ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219 ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225 நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227 நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234 ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424 சுடர்நுதல் பசலை - கலி.125 வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127 ஆய்நுதல் பசப்பே - கலி.144 பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25 நுதல் ஊரும் பசப்பு - கலி.28 பசந்தன்று நுதல் - கலி.36 நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205 மேற்காணும் பாடல்கள் அனைத்தும் காதலி அழுதுநின்ற நிலையைக் கூறுகின்றன. பசப்பு, பசத்தல், பசலை ஆகிய சொற்கள் யாவும் அழுகையைக் குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் பசப்பு என்றால் என்ன? என்ற கட்டுரையில் ஆய்வுசெய்து நிறுவியுள்ளோம். இந் நிலையில், அழுகையுடன் தொடர்புடைய உறுப்பாக மேற்காணும் பாடல்கள் அனைத்திலும் குறிப்படப்படும் 'நுதல்' என்ற சொல்லுக்குப் பொருளாக நெற்றியோ புருவமோ தலையோ பொருந்தாது. ஏனென்றால் நெற்றியோ புருவமோ தலையோ அழுவதில்லை. அடுத்து 'சிறுநுதல்' என்ற சொல்லானது ஐங்குறுநூறு.394, 179. குறுந்தொகை-129. அகநானூறு.-57,334, 307. புறநானூறு.-166 ஆகிய இடங்களில் பயின்று வந்துள்ளது. சிறு என்றால் சிறிய அளவினது என்ற பொருள்நிலையில் இங்கும் நுதல் என்னும் சொல்லுக்கு முற்சொன்ன ஐந்து பொருட்களும் பொருந்தாது. இது எவ்வாறெனில் நெற்றியும் தலையும் அகன்ற பரப்புடையவை; புருவமோ நீளமானது ஆகும். சொல்லுக்கும் மேலிடத்திற்கும் சிறுமைப் பண்பு பொருந்தாது. அடுத்து சுடர்நுதல், வாள்நுதல், ஒள் நுதல், நறுநுதல் ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. இச் சொற்களில் நுதல் என்னும் சொல்லுடன் அடைமொழியாய் வருகின்ற சுடர், வாள், ஒள் ஆகிய சொற்கள் யாவும் ஒளிரும் பண்பைக் குறிப்பவை என்று நாம் நன்கு அறிவோம். அதேபோல நறு (நறிய) என்னும் சொல்லும் ஒளிரும் பண்பையே குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் கூந்தலுக்கு மணம் உண்டா என்ற கட்டுரையில் ஆய்வு செய்து நிறுவியுள்ளோம். இந்த நான்கு சொற்களும் ஒளிரும் பண்பையே குறிக்கின்ற நிலையில் இவற்றை அடைமொழியாகக் கொண்ட நுதல் என்னும் சொல்லுக்குப் பொருளாக சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம் என்ற பொருட்களில் எதுவும் பொருந்தாது. ஏனென்றால் இவற்றில் எதற்குமே ஒளிரும் பண்பு இல்லை. இவற்றில் இருந்து நுதல் என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் நீங்கலாக பிற பொருட்களும் உண்டு என்று தெளியலாம். புதிய பொருட்கள்: நுதல் என்னும் பெயர்ச்சொல் குறிக்கும் புதிய பொருள் 'கண்விழி ' ஆகும். நிறுவுதல்: நுதல் என்னும் சொல்லானது எவ்வாறு கண்விழியினைக் குறிக்கும் என்பதை இங்கே பார்ப்போம். உடல் உறுப்புக்களில் கண்விழிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு. அவை: சிறுமைப் பண்பு, ஒளிரும் பண்பு மற்றும் கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு ஆகியன. இந்தப் பண்புகளை விளக்கும் சங்க இலக்கிய மற்றும் கீழ்க்கணக்குப் பாடல்களைக் கீழே காணலாம். சிறுமைப் பண்பு: சிறுநுதல் - ஐங்கு.394, 179. குறு-129. அக.-57,334, 307. புற.-166. ஒளிரும் பண்பு: ஒள் நுதல் - ஐங்கு.73, 168,123,449,322, கலி - 105,110,35,142,147,4,97. குறு-167,22,292,70,273. அக-5,50,84,116,306,325,344. நற்.-77,240,283,339,377. பரிபா.தி-1. பதிற்.-30,48,57,74,81. புற.-25. குறள்-1088,1240. கார்.-34. நாலடி.-379,380 சுடர்நுதல் - ஐங்கு.94, 474, 466,254,375,443. கலி-13,58. அக.-192. குறி.-182. நற்.-208,245. பதிற்.-16,51,70. பெரும்பாண்.-385. பட்டின.-21 வாள்நுதல் - ஐங்கு.404, 408,420,447. குறு-135. அக.-9,33,179,230,386. பரிபா.-8. பதிற்.-19,38,89. புற.-105,211,314. நான்மணி.-22 நறுநுதல் - கலி.105,17,37,47,92,12,14,21,53,60,61. குறு.-259,323,362. அக.-43,90,93,173,338,238. நற்.-50. பரிபா.-11. பதிற்.-65. பெரும்பாண்.-303. நாலடி.-381. கார்.-21. கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு: ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67 பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55 நலம்பெறு சுடர்நுதல் தேம்ப - ஐங்கு.56 ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67 சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107 என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222 திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230 வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423 ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219 ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225 நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227 நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234 ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424 சுடர்நுதல் பசலை - கலி.125 வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127 ஆய்நுதல் பசப்பே - கலி.144 பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25 நுதல் ஊரும் பசப்பு - கலி.28 பசந்தன்று நுதல் - கலி.36 நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205 நுதல் பசப்பு இவர்ந்து - குறு.-185 நுதல் ஊர்தரும் பசப்பே - குறு.-205 நல்நுதல் பசலை - குறு.-48 பசந்தன்று நுதலே - குறு.-87 நல்நுதல் பசப்பவும் - அக.-77,85 ஒள்நுதல் பசப்பே - அக.-102 திருநுதல் பசப்ப - அக.-186 நுதல் பசந்தன்றே - அக.-227 ஒள் நுதல் பசலையும் - அக.-251 சிறு நுதல் பசந்து - அக.-307 நுதல் பாய பசலை - அக.-317 திருநுதல் பசப்பே - அக.-354 பசந்தன்று கண்டிசின் நுதலே - அக.-376 பசலை பாய்ந்த நுதலேன் - அக.-135 பசந்தன்று நுதலும் - அக.-95 நறுநுதல் பசத்தல் - நற்.-1 நுதல் கவின் அழிக்கும் பசலையும் - நற்.-73 சுடர்புரை திருநுதல் பசப்ப - நற்.-108 நுதலும் பசலை பாயின்று - நற்.-133 நல்நுதல் பசப்பினும் - நற்.-151 திருநுதல் பாய பசப்பே - நற்.-167 நுதலே ..... பசப்பு ஊர்ந்தன்றே - நற்.-197 நுதல் பரந்த பசலை - நற்.-288 நல்நுதல் பசந்த - நற்.-322 பசலை பாய்தரு நுதலும் - நற்.-368 பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் - குறள்.-1238 வெள்ளைக்கண் கம்புள்: ஐங்குறுநூற்றில் 85 ஆம் பாடலில் ' வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை' என்ற வரி உள்ளது. இதில் குறிப்பிடப்படும் கம்புள் என்ற பறவைக்கு வெள்ளை நிறத்தில் நெற்றியோ தலையோ இருந்ததாகக் கொள்ளலாமா என்றால் கொள்ள முடியாது. ஏனென்றால் வெள்ளை நிறத் தலையோ நெற்றியோ பறவை இனங்களில் பரவலாகக் காணப்படும் பண்பாகும். அன்றியும் ஒரு பறவையைப் பாடலில் குறிப்பிடும் புலவர் அதன் சிறப்புத் தன்மையையே கூறுவார் என்பதால் நுதல் என்ற சொல் இங்கும் நெற்றி அல்லது தலையைக் குறித்து வந்திருக்காது என்பது தெளிவு. அதே சமயம் வெள்ளை நிறக் கண்களானது பறவை இனங்களில் அரிதாகவே காணப்படும் பண்பாகும். பறவைக் குடும்பங்களில் ஜோஸ்டெரோபிடே என்ற குடும்பம் ஒன்று உண்டு. இக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பறவைகளின் கண்களைச் சுற்றிலும் பெரிய வெள்ளை நிற வளையம் ஒன்று காணப்படுகிறது. இது இப் பறவைகளின் தனிச் சிறப்பாகும். இக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஒன்றின் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இப் பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் தேடலாம். ஆக இங்கும் 'நுதல்' என்பது 'கண்விழி' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பது பெறப்படுகிறது. கண்களைச் சுற்றிலும் வெள்ளை நிறத்தில் பெரிய வளையத்தைக் கொண்ட இப் பறவைகளை சங்க காலத்தில் கம்புள் என்று அழைத்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. முடிவுரை: இன்றைய தமிழ் அகராதிகளில் பல சொற்களுக்குத் தவறான பொருட்கள் கொடுக்கப் பட்டுள்ளன என்பதை நாம் முன்னரே கண்டுள்ளோம். இந்த அகராதிப் பொருட்களின் அடிப்படையில் பல சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் 'நறுநுதல்' என்ற சொல்லுக்கு' மணம் வீசும் நெற்றி' என்றே உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆனால் நெற்றி எங்காவது மணம் வீசுமா?. சந்தனம் பூசினாலும் இன்ன பிற திரவியங்களைப் பூசிக் கொண்டாலும் நெற்றி சிறிது நேரம் மட்டும் தானே மணக்கும்; மணம் வீசிக்கொண்டே இருக்க முடியுமா?. அதிலும் பெண்கள் நெற்றியில் எப்போதும் சந்தனத்தையோ வாசனைத் திரவியங்களையோ பூசிக் கொண்டே இருப்பார்களா?. ஒருவரிடம் இருந்து மணம் வீசுகிறது என்றால் அது அவருடைய நெற்றியிலிருந்து தான் வீசுகிறது என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்?. என்றெல்லாம் உரையாசிரியர்கள் சிந்திக்காமல் உரை எழுதியுள்ளது வேதனையளிக்கிறது. நாம் அறிந்தவரையில் பெண்கள் வாசனைத் திரவியங்களைத் தலைமுடியில் பூசிக் கொள்வார்கள்; சிலர் உடலெங்கும் (முகம் தவிர) பூசிக் கொள்வார்கள். இந் நிலையில் 'மணம் வீசும் நெற்றி' என்ற பொருள் எவ்வகையில் பொருத்தமாகும் அல்லது சாத்தியமாகும் என்று ஏன் உரையாசிரியர்கள் சிந்திக்கவில்லை என்பது புரியாமலே உள்ளது. எது எப்படியோ இனி 'நறுநுதல்' என்பது பாரதியார் சொன்னதுபோல் 'ஒளி படைத்த கண்' ணையே குறிக்கும் என்பது தெளிவு. thanks-web blog-tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக