திங்கள், 5 டிசம்பர், 2011

(தொல்தமிழகம்)

(தொல்தமிழகம்) தொல் தமிழகம்: தொல் தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்கள் இருந்ததாக தொல்காப்பியம் கூறியதை முன்னர் கண்டோம். என்றால் இந்த தொல் தமிழகம் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தது? தற்போது இருக்கும் தமிழ்நாட்டிலா? லெமூரியா என்று கூறப்படும் கண்டத்திலா? வேறு எங்கு இந்த தொல்தமிழகம் அமைந்திருந்தது? இதைப் பற்றி ஆராய்வதே இப் பகுதியின் நோக்கமாகும். தமிழரும் காற்றும்: காற்று இல்லையேல் பூமியில் உயிர்கள் இல்லை. நாம் உயிர் வாழத் தேவையான உயிர்வளியத்தையும் தாவரங்களுக்குத் தேவையான கரிவளியத்தையும் தந்து உதவுவதுடன் மழை பெய்விப்பதில் இன்றியமையாத பங்கினையும் இக் காற்றே வகிக்கிறது. மழையைப் போலவே காற்று ஆக்கவும் வல்லது; அழிக்கவும் வல்லது. தென்றலாய் தாலாட்டுவதும் காற்றே; புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்ப்பதும் இக் காற்றே. அதுமட்டுமின்றி, புவி மண்டலத்தின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது காற்று மண்டலமே ஆகும். விண்வெளியில் இருந்து வரும் எரிகற்கள் பூமியைத் தாக்காத வண்ணம் ஒரு கவசம் போல் இருந்து அந்தக் கற்களை வழியிலேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவதும் இந்த காற்று மண்டலமே ஆகும். இவ்வளவு சிறப்புக்களை அடக்கிய ஐந்து பூதங்களில் ஒன்றான காற்றுக்குத் தமிழர்களின் வாழ்வில் தனி இடம் உண்டு. காற்றின் தன்மைகளை அறிந்து அவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தமிழர்கள் திறமையானவர்கள். மிகப் பழங்காலத்திலேயே காற்றின் இயல்பறிந்து கப்பல்களை ஓட்டி கடல் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள். ' திரைகடல் ஓடியும் திரவியம் தேடு ' ' காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ' போன்ற பழமொழிகள் தமிழரின் காற்று பற்றிய அறிவினை நன்கு புலப்படுத்துவன. காற்றின் வகைகள்: காற்றுக்குப் பல தன்மைகள் உண்டு. மழைக் காற்று, வெப்பக் காற்று, ஊதைக் காற்று, தென்றல் காற்று என்று காற்று நால்வகைப் படும். இந்த நால்வகைக் காற்றுக்கும் தனித்தனியாக பெயரிட்டு அழைத்துள்ளனர் நம் முன்னோர். கோடை, கொண்டல், வாடை, தென்றல் என்பன காற்றுக்கு நம் முன்னோர் இட்ட பெயர்கள். காற்றின் வலிமைக்கேற்ப வரிசையாக இவை நான்கையும் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம். கோடை: கோடை என்பது மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் இட்ட பெயராகும். மேற்குத் திசைக்கு குடக்கு என்ற பெயரும் உண்டு. குடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கோடை என்ற பெயர் ஏற்பட்டது. குடக்கு ----> கோடை இதை வெப்பக் காற்று என்றும் கூறுவர். பாலைவனப் பகுதிகள் மற்றும் மழையின்றி வறண்ட நிலங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும். இவற்றில் இருந்து வீசும் காற்றானது வெப்பமுடையதாய் இருப்பதால் இதனை வெப்பக் காற்று என்று கூறுகின்றனர். கோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதாக சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கூறுகிறது. கோடை¹ kōṭai , n. < குடக்கு. [K. kōḍe.] 1. [M. kōṭa.] West wind; மேல்காற்று. கோடை தூற்றக் கூடிய வூழிலை (ஞானா. 28, 12). 2. Summer season, as the time of the west wind; வேனிற் காலம். (பிங்.) 3. Sunshine, intense heat of the summer season; வெயில். வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப (திருவாச. 3, 71). கோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதால் இச் சொல் பொதுவாக வீசும் வெப்பக் காற்றினைக் குறிக்காமல் கடும் வெயிலையும் வேனில் காலத்தையுமே பெரும் பொழுதாக உடைய பாலைநிலங்களில் வீசும் காற்றினையே துவக்கத்தில் குறித்திருப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் கோடைக் காற்று வீசிய பொழுது மணலையும் அள்ளிவீசி அதனால் மணற்குன்றுகள் தோன்றியதாக கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர நெடும்பனை குறியவாகும் - குறு : 248 பெரிய பனைமரங்களே சின்ன மரங்களாகத் தெரியும்படிக்கு கோடை காற்றினால் மணல்மேடுகள் உருவான நிலையினையே மேற்காணும் பாடல் காட்டுகிறது. ஆம், நால்வகைக் காற்றில் கோடைக் காற்றே மிக வலிமையானது ஆகும். இதுவே சூறாவளியாகவும் புயலாகவும் மாறுகிறது. கோடையின் தன்மை பற்றி எண்ணும் பொழுது கொடுமை என்ற சொல்லின் பயன்பாடு அத் தன்மையில் இருந்தே உருவாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கொண்டல்: கொண்டல் என்பது கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். கிழக்குத் திசைக்கு குணக்கு என்ற பெயரும் உண்டு. குணக்கில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கொண்டல் என்ற பெயர் ஏற்பட்டது. குணக்கு ---> கொண்டல் இதை மழைக் காற்று என்றும் கூறுவர். கடலுக்கு மேலே தோன்றி பஞ்சுப் பொதிகளாய் மிதந்த வெண்மேகங்கள் கருக்கொண்டதும் அவை சில்லென்ற காற்றை வீசுகின்றன. இதுவே கொண்டல் ஆகும். கொண்டல் வீசினால் மழை வரப்போகிறது என்று பொருள். கொண்டல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பல பொருட்கள் உள்ளதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. கொண்டல்¹ koṇṭal , n. < கொள்-. 1. Receiving, taking; கொள்ளுகை. உணங்கற் றலையிற் பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5). 2. [M. koṇṭal.] Cloud; மேகம். கொண்டல் வண்ணா குடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6). 3. Rain; மழை. (ஞானா. 43, 14, உரை.) 4. [prob. ஷை] Aries, a constellation of the zodiac; மேஷராசி. (சாதகசிந். காலநிக. 24.) 5. See கொண்டற்கல். (சங். அக.) 6. A girls' game; மகளிர் விளையாட்டுவகை. (W.), n. < குணக்கு. 1. East wind; கீழ்காற்று. கொண்டல் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22). 2. Wind; காற்று. (பிங்.) 3. East; கிழக்கு. Naut. மேற்காணும் பொருட்களே அன்றி கொண்டல் என்பதற்கு கடல் என்பதும் ஒரு பொருளாக இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதியில் கீழ்க்காணும் சொல்லும் பொருளும் வருகிறது. கொண்டலை koṇṭalai , n. perh. கொண்டல்¹. Seaside Indian oak. See சமுத்திரக்கடம்பு. (L.) மேற்காணும் சொல்-பொருள் தொடர்பில் இருந்து கொண்டல் என்பது சமுத்திரம் அதாவது கடலையும் குறிக்கும் என்பது தெளிவாகிறது. மேகங்கள் தோன்றுவது கடலில் இருந்தே என்பதால் மேகங்களைக் குறித்த கொண்டல் என்ற சொல் மேகங்கள் தோன்றும் கடலையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம். வாடை: வாடை என்பது வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயராகும். வடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இதற்கு வாடை என்ற பெயர் ஏற்பட்டது. வடக்கு -----> வாடை இதை ஊதைக் காற்று என்றும் கூறுவர். இது மிகவும் குளிர்ச்சியான காற்றாகும். இது கொண்டல் காற்றில் இருந்து வேறானது. கொண்டல் காற்றிலும் குளிர்ச்சி இருக்கும். ஆனால் அது இன்பமாய் இருக்கும். வாடைக் காற்றோ துன்பம் தரும். ஆம், வாடைக் காற்று உடலை நடுநடுங்கச் செய்யும் பனிக்காற்றாகும். பனி மிகுந்த பகுதிகளில் இருந்து வீசும் காற்றில் பனித்துகள்கள் கலந்திருப்பதால் அவை உடலை நடுக்குறச் செய்கின்றன. வாடைக் காற்றில் பனி கலந்திருப்பதைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது. அரும்பனி கலந்த அருளில் வாடை - ஐங்குறுநூறு - 479 பொதுவாக வாடைக் காற்று வீசும் பொழுது மென்மையான மலர்களின் இதழ் ஓரங்கள் சுருண்டு கொள்ளும். அதுமட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் கூட குளிர் தாங்காமல் சுருண்டு படுக்கும். வாடுதல் / வாட்டுதல் என்ற சொல்லின் பயன்பாடு வாடைக் காற்றின் சுருண்டு கொள்ளச் செய்யும் இத் தன்மையில் இருந்தே தோன்றி இருக்கக் கூடும். தென்றல்: தென்றல் என்பது தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் சூட்டிய பெயராகும். தெற்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்குத் தென்றல் என்ற பெயர் ஏற்பட்டது. தெற்கு ----> தென்றல் நால்வகைக் காற்றிலும் இதமான காற்று தென்றலே ஆகும். மென்மையாக வருடிக் கொடுத்து அருமையான சுகத்தை அளிப்பது தென்றல் காற்றே ஆகும். நால்வகைக் காற்றில் தென்றலே மக்களால் மிகவும் விரும்பப்படுவது. மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல்வேறு தடைகளையும் கடந்துவருவதால் தென்றலின் வேகம் மெதுவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி வரும் வழியில் பல மூலிகைகளையும் தடவிக் கொண்டு வருவதால் தென்றல் காற்று நோய் தீர்க்கும் மருத்துவக் காற்றாகவும் திகழ்கிறது. பலவித மலர்களின் நறுமணத்தைத் தென்றலானது அள்ளி வரும் பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டதாக இளங்கோ கூறுகிறார். வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - சிலம்பு - 2, 24 ஆனால் தென்றலைப் பற்றிய கவியரசு கண்ணதாசரின் கற்பனை வேறுவிதமாக இருக்கிறது. திரைப்பாடல் ஒன்றில் தென்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே' இப்படிப் புலவர்கள் நாவில் பொருந்திய தென்றல் காற்றே நால்வகைக் காற்றில் வலிமை குறைந்த ஒன்றாகும். தொல்தமிழக எல்லைகள்: இன்றைய இந்தியாவில் தொல்தமிழகம் எங்கே அமைந்திருந்தது என்னும் கேள்விக்கான விடையினை மேலே கண்ட நான்கு வளிகளே தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கின்றன. பொதுவாக மக்கள் தாம் வாழும் இருப்பிடத்தைப் பொருத்துத்தான் திசைச் சொற்களை உருவாக்குவார்கள். சான்றாக, தமது இருப்பிடத்திற்கு கீழ்த்திசையில் உள்ள நாட்டைத் தான் கீழை நாடு என்பார்கள். அதைப் போல தொல்தமிழரும் தாம் வாழ்ந்த நாட்டிற்கு, கிழக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கொண்டல் என்றார்கள். மேற்குப்பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கோடை என்றார்கள். வடக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் வாடை என்றார்கள். தெற்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் தென்றல் என்றார்கள். இப்படி அழைப்பது தான் இயல்பு வழக்காகும். அவ் வழக்கப்படியே தான் தொல்தமிழரும் அழைத்துள்ளனர். அதன்படி தொல்தமிழகத்தின், கிழக்குப் பகுதியில் கொண்டல் காற்றைத் தருகின்ற மேகங்களை உருவாக்கும் கடலும் மேற்குப் பகுதியில் கோடைக் காற்றை உருவாக்கும் பாலை நிலமும் வடக்குப் பகுதியில் வாடைக் காற்றை உருவாகும் பனிமலையும் தெற்குப் பகுதியில் தென்றல் காற்றை உருவாக்கும் காடு, மலைகளை உடைய நீண்ட நிலப் பகுதியும் இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கிழக்கில் கடலையும், மேற்கில் பாலைவனத்தையும், வடக்கில் பனிமலையையும், தெற்கில் நீண்ட நிலப்பகுதியையும் எல்லைகளாகக் கொண்ட நில அமைப்பு இன்றைய இந்தியாவில் எப் பகுதியில் அமைந்துள்ளது என்று காண்போம். இன்றைய இந்தியாவில் தொல்தமிழகம்: இன்றைய இந்தியாவின் புவி அமைப்பினை நோக்கும் பொழுது வடக்கில் பனிமலையும் மேற்கில் பாலைவனமும் கிழக்கில் கடலும் தெற்கில் நீண்ட நிலப் பகுதியும் கொண்ட தொல்தமிழகமானது, பனிமலையான இமயமலைக்குக் கீழேயும் இராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்திற்கு வலது புறத்திலும் வங்கக் கடலுக்கு இடது புறத்திலும் இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஆனால் இந் நிலத்தின் தெற்கு எல்லையைத் தெளிவாகக் கூற இயலவில்லை. ஏனென்றால் தெற்கே நீண்ட நிலப் பகுதி இருப்பதால் தொல்தமிழகத்தின் தெற்கு எல்லை எதுவரை பரவி இருந்தது என்பதை அறுதியாகக் கூற இயலவில்லை. மேலதிக ஆய்வுகள் மூலமே அதனை உறுதி செய்ய வேண்டும். தற்போதிய ஆய்வு முடிவுகளின் படி, தொல்தமிழகமானது, தற்போதிய மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளின் தொகுப்பாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. கீழ்க்காணும் படத்தில் தொல்தமிழக நிலப்பகுதியானது சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. கங்கை நதியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இந்த தொல்தமிழரின் நாகரீகம், தொல்காப்பியர் குறிப்பிட்டது போல ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியதாகவே தெரிகிறது. படத்தில் காட்டியுள்ளபடி, தொல்தமிழகத்தின் மத்தியில் மருத நிலமும் மேற்கில் பாலை நிலமும் கிழக்கில் நெய்தல் நிலமும் வடக்கில் குறிஞ்சி நிலமும் தெற்கில் முல்லை நிலமும் இருந்திருக்க வேண்டும். http://thiruththam.blogspot.com/2011/10/3.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக